Monday 9 September 2013

கம்ப்யூட்டர் தரும் பொதுவான பிரச்னைகள்!


உங்களிடம் உங்கள் அப்பா பயன்படுத்திய பழைய எக்ஸ்பி அல்லது விண்டோஸ் 98 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டராக இருந்தாலும், அல்லது புதிய கம்ப்யூட்டராக விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் இருந்தாலும், சில பிரச்னைகள் எல்லா வகை கம்ப்யூட்டர் செயல்பாட்டிலும் இருப்பதாக நாம் உணர்வோம். சில உண்மையிலேயே பிரச்னைகளாக இருக்கும். சில நாமாக எண்ணிக் கொள்பவையாக இருக்கும். இங்கு அத்தகைய பிரச்னைகள் குறித்தும், அவற்றிற்கான தீர்வுகள் சார்ந்தும் சில தகவல்களைப் பார்க்கலாம்.

1. முதலில் இதனை முயற்சிக்க: 

எந்தக் கம்ப்யூட்டராக இருந்தாலும், சிக்கல் கொடுப்பது எந்த புரோகிராமாக இருந்தாலும், அவற்றை மூடி, மீண்டும் இயங்க வைத்தால், எந்தப் பிரச்னைக்கும் தீர்வாக அது அமையும். கம்ப்யூட்டர் சிஸ்டம் செயல்பாட்டில் பிரச்னை என்றால், கம்ப்யூட்டர் இயக்கத்தினை முழுமையாக நிறுத்தி, மீண்டும் இயங்க வைப்பது நல்லது. அதே போல, கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட துணை சாதனமாக இருந்தால், அதன் இயக்கத்தினையும் நிறுத்தி, கம்ப்யூட்டர் இணைப்பையும் எடுத்துவிட்டு, பின்னர் இணைத்துச் செயல்படுத்திப் பார்க்கவும்.

2. மிகவும் மெதுவாக செயல்படுகிறது: 

கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கிச் சில ஆண்டுகள் ஆன பின்னர், எல்லாரும் கூறும் குற்றச்சாட்டு இது. கம்ப்யூட்டர் இயக்கம் முன்பு போல் இல்லாமல், மெதுவாக இருப்பதாகக் கூறுவார்கள். இந்தப் பிரச்னை இருந்தால், முதலில் இதற்கு உங்கள் கம்ப்யூட்டர் தான் பிரச்னை தருகிறதா எனப் பார்க்கவும். தரவிறக்கம் செய்யப்படுவது வீடியோவாக இருந்தால், பழைய இணைய தளமாக இருந்தால், அவை மெதுவாகத்தான் உங்கள் கம்ப்யூட்டரை அடையும். எனவே, உங்கள் கம்ப்யூட்டரில் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை. எனவே, எதனால் பிரச்னை ஏற்படுகிறது என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னையைக் கூறி தீர்வு கேட்ட பலர், பின்னர், இது இணைய இணைப்பின் வேகக் குறைவினால் வந்தது என்று ஒத்துக் கொண்டுள்ளனர். இணைய இணைப்பின் வேகத்தினை Speedtest.net என்னும் தளம் சென்று, பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பிரச்னை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் என்று உறுதியாகத் தெரிந்தால், கீழ்க்கண்டவற்றைச் சோதனை செய்திடவும்.
2.1 ஹார்ட் ட்ரைவில் தேவையான இடம் உள்ளதா? இல்லை எனில், பைல்களை நீக்கி இடம் அமைக்கவும்.

2.2 கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில், உங்களுக்குத் தேவைப்படாமலேயே, சில புரோகிராம்கள் இயக்கப்பட்டு ராம் நினைவகத்தில் தங்கிக் கொண்டு, கம்ப்யூட்டர் செயல்பாட்டினைத் தாமதப்படுத்தும். msconfig கட்டளை மூலம், சிஸ்டம் கான்பிகரேஷன் விண்டோ பெற்று, அதில் Startup என்ற டேப்பினைத் தட்டிப் பார்த்து, தேவையற்ற புரோகிராம்கள் தொடக்கத்தில் இயங்குவதனை நீக்கி அமைக்கலாம். இந்த செயல்பாட்டினை அவ்வப்போது மேற்கொள்வது நல்லது.

3. தரவிறக்கச் செயல்பாடு அதிக நேரம் எடுக்கிறது: 

ஸ்பீட் டெஸ்ட் டாட் நெட் தளம் மூலம், இணைய இணைப்பின் வேகத்தினைப் பார்க்கவும். உங்களுக்கு இணைய இணைப்பினை வழங்கும் நிறுவனம், உறுதி செய்த வேகத்தில், குறைந்தது 60% ஆவது வேகம் இருக்க வேண்டும். வேகம் சரியாக இருந்தால், நீங்கள் தேவை இல்லாமல், பெரிய பைல்களைத் தரவிறக்கம் செய்வதனை நிறுத்தலாம். உங்களுடைய நெட்வொர்க் இணைப்பில் உள்ள சாதனங்களுக்குப் புதிய ட்ரைவர் புரோகிராம்கள், அவற்றின் இணைய தளங்களில் இருந்தால், அவற்றை அப்டேட் செய்திடவும்.

4. தானாக ரீஸ்டார்ட் செய்திடும் பிரச்னை: 

கம்ப்யூட்டர், செயல்பாட்டில் இருக்கும்போதே, தானாக ரீஸ்டார்ட் ஆகும் பிரச்னையைப் பலர் எதிர் கொண்டுள்ளனர். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கிராபிக்ஸ் கார்ட், மதர்போர்ட், நெட்வொர்க் கார்ட் ஆகியவை, புதிய ட்ரைவர் புரோகிராம்களுடன் அப்டேட் செய்திருப்பதை உறுதி செய்திடவும். இவை சரியாக அப்டேட் செய்யப்பட்டிருந்தால், அடிக்கடி ரீஸ்டார்ட் செய்வதற்குக் காரணம், வைரஸ், மால்வேர், அட்வேர், மதர்போர்ட் சூடாவது ஆகியவை ஆக இருக்கலாம். மின் இணைப்பிலிருந்து கம்ப்யூட்டரை விடுவித்து, சிபியு டவரைக் கழற்றி, அதில் பொருத்தப்பட்டுள்ள சிறிய மின் விசிறிகளைச் சோதனை செய்திடவும். அதில் உள்ள அதிகமான தூசு அனைத்தையும் நீக்கவும். இப்போது வருகின்ற கம்ப்யூட்டர் சிஸ்டங்களில், சிஸ்டம் குறிப்பிட்ட அளவிற்கு மேலாக வெப்பச் சூழ்நிலையைச் சந்தித்தால், தானாக மூடப்படும் வசதியுடன் வருகின்றன.இவற்றால் கூட, கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் செய்யப்படலாம்.

5. டெஸ்க்டாப்பில் எதிர்பாராத நேரங்களில் பாப் அப் விளம்பரங்கள்: 

உங்கள் பிரவுசர் இயக்கப்படாத நேரங்களில் கூட, பாப் அப்பாக்ஸ் எழுந்து வந்து, வர்த்தக ரீதியான விளம்பரங்களைக் காட்டுகின்றனவா? அப்படியானால், அட்வேர் எனப்படும் தேவையற்ற புரோகிராம் ஒன்று, உங்கள் கம்ப்யூட்டரில் வந்து அமர்ந்து கோண்டுள்ளது என்று பொருள். இத்தகைய விளம்பரங்கள்,நமக்கு எந்த விதத்திலும் பயன் இல்லாததாகவே இருக்கும். இதனை நீக்க, சிறப்பாகச் செயல்படும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு ஒன்றினை இயக்கி, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களையும் ஸ்கேன் செய்திடலாம். சந்தேகப்பட்ட கோப்புகள் இருப்பின், அவற்றை நீக்கிவிடலாம்.

6. கூகுள் தவறும் வேளை: 

 பிரவுசரை ஹைஜாக் செய்து தங்கள் கட்டுப்பாட்டில் சில ஹேக்கர்கள், உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்றுவிடுவார்கள்.கூகுளில் நீங்கள் தேடும்போது, உங்களின் பெர்சனல் தகவல்களைத் தேடுவதற்காக, அவர்களாக வடிவமைத்த தளத்திற்கான லிங்க் தந்து, கிளிக் செய்திடச் சொல்வார்கள். உங்கள் பிரவுசர் ஹைஜாக் செய்யப்பட்டதனை உணர்ந்தால், அந்த பிரவுசரை அன் இன்ஸ்டால் செய்து, மீண்டும் பதிக்கவும். உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினையும் இயக்கி, மால்வேர் புரோகிராம்களை நீக்கவும்.

7. என் வை-பி இணைப்பு துண்டிக்கப்படுகிறது: 

 வை பி மூலம், இணைய இணைப்பு கொண்டிருந்தால், அதில் பிரச்னை ஏற்படுகையில், எந்த சாதனத்தில் பிரச்னை என்று அறிவது பெரிய சவாலாக இருக்கும். கம்ப்யூட்டரா? ரௌட்டரா, இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்தின் சர்வரா? என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எதற்கும் உங்கள் இணைய இணைப்பு நிறுவனத்தை அழைத்து, பிரச்னையைக் கூறி, அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். ரௌட்டர், அவர்களின் சர்வர், இணைப்பின் நிலை ஆகியவற்றில் பிரச்னை இருந்தால், அவர்களால் துல்லியமாகக் கூற இயலும்.

அதே நேரத்தில், உங்கள் கம்ப்யூட்டர், வை பி இணைப்பின் எல்லைக்குள் இயக்கப்படுவதனையும் உறுதி செய்து கொள்ளுங்கள். சிக்னல்கள் மிகவும் குறைந்த சக்தியுடன் இருந்தால், இணைப்பு அடிக்கடி விட்டுப் போவது நடக்கும். இந்த பிரச்னையில் விண்டோஸ் சிஸ்டமும் கை கொடுக்கலாம். டாஸ்க் பாரில் உள்ள வை பி ஐகான் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். Troubleshoot problems என்பதனைத் தேர்ந்தெடுத்து இயக்கினால், இதன் மூலமும் பிரச்னை எங்குள்ளது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம்.

8. வெப்சைட் செக்யூரிட்டி சர்டிபிகேட்: 

சில வேளைகளில், பெரிய பிரச்னைகளை, மிக எளிய முறையில் தீர்த்துவிடலாம். பல பிரச்னைகள், நம் சிஸ்டம் கிளாக் சரியான முறையில் இயங்காததனால் ஏற்படுகிறது என்று தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறுவார்கள். ஒரு இணைய தளத்தின் செக்யூரிட்டி சர்டிபிகேட் கம்ப்யூட்டரின் கடிகாரத்துடன் இணைந்தே செயல்படும். எனவே, சீமாஸ் பேட்டரி செயல் இழந்து, சிஸ்டம் கிளாக் செயல்பாட்டினை நிறுத்தி இருந்தால், இந்த பிரச்னை ஏற்படலாம். எனவே, சிஸ்டம் ட்ரேயில் உள்ள கடிகார ஐகானைக் கிளிக் செய்து, கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் தேதி மற்றும் நேரத்தினைச் சரியாக செட் செய்தால், இந்த வெப் செக்யூரிட்டி சர்டிபிகேட் பிரச்னையைத் தீர்த்துவிடலாம்.

9. பிரிண்டர் அச்சடிக்கவில்லை:

  உங்களுடைய பிரிண்டரின் ட்ரைவர் புரோகிராம் அப்டேட் செய்யப்பட்டு, உங்கள் பிரிண்டரில் தாள், டோனர் அல்லது இங்க் காட்ரிட்ஜ் எல்லாம் சரியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், உங்கள் பிரிண்டரை மின் இணைப்பிலிருந்தும், கம்ப்யூட்டரிலிருந்தும் கழட்டி, பின்னர் இணைக்கவும். இதனை அடுத்து, உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து நீங்கள் அச்சடிக்கக் கொடுத்த பைல்களின் நிலை அறிய, பிரிண்ட் வரிசை (print queue) பார்க்கவும். இதில் ஏதேனும் ஒரு பைலில் பிரச்னை இருந்தால், பிரிண்டர் உங்கள் கட்டளைக்குப் பின்னணியில் காத்துக் கொண்டு, அச்சடிக்காமல் இருக்கலாம். இங்கு கிடைக்கும் மெனுவில், 'Use Printer Offline’ என்ற ஆப்ஷனில் டிக் அடையாளம் இல்லாமல் இருப்பதனை உறுதி செய்திடவும். அச்சடிக்கையில், உங்கள் பிரிண்டர் ஆப் செய்யப்பட்டிருந்தால், ‘Use Printer Offline’ ஆப்ஷன் இயக்கப்படும் நிலை ஏற்படலாம். இதனால், அதன் பின்னர், அச்சிடக் கொடுக்கப்படும் பைல்கள் அச்சடிக்கப்படாமல் இருக்கும் சிக்கல் ஏற்படும்.

10. இமெயில் இணைப்புகளைத் திறக்க இயலவில்லை: 

மின் அஞ்சல் செய்திகளுடன் இணைக்கப்பட்ட பைல்களைத் திறக்க இயலவில்லை எனில், அதனைத் திறப்பதற்கான புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. பொதுவாக பி.டி.எப். பைல்களில் இந்த பிரச்னை இருக்க வாய்ப்புண்டு. இதற்கான பி.டி.எப். ரீடர் புரோகிராமினை இலவசமாக இணையத்திலிருந்து டவுண்லோட் செய்து பதிந்து, பின்னர் திறக்கலாம். வேறு வகை பைல் எனில், பைலின் துணைப் பெயரினைக் கண்டறிந்து, அந்த வகை பைலைத் திறக்க என்ன புரோகிராம் வேண்டும் என்பதனைத் தேடி அறிந்து செயல்பட வேண்டும்.

11. புதிய கம்ப்யூட்டரில் என் பழைய ப்ரோக்ராம் செயல்படவில்லை: 

 இந்த பிரச்னை, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டருக்கு மாறுபவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலிருந்து, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுபவர்கள், இது குறித்து கடிதங்கள் மற்றும் தொலைபேசி வழியாகவும் தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணம், நீங்கள் குறிப்பிடும் புரோகிராம், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்காது. மேலும், விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம்கள், மேக் ஓ.எஸ். சிஸ்டத்தில் இயங்காது. மேலும், 32 பிட் சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம்கள்,64 பிட் சிஸ்டத்தில் இயங்கும். ஆனால், மாறாக 64 பிட் சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம்கள், 32 பிட் சிஸ்டத்தில் இயங்காது. ஆன்லைனில் இயங்கும் சில கேம்ஸ், புதிய கம்ப்யூட்டரில் இயங்காது. இதற்குச் சில ப்ளக் இன் புரோகிராம்கள் இல்லாததே காரணமாக இருக்கும். இதற்கு ஜாவா மற்றும் பிளாஷ் புரோகிராம்கள் காரணமாகவும் இருக்கலாம். பொதுவாக, பிரவுசர்கள், இவை தேவை எனில், உங்களுக்கு எச்சரிக்கை செய்திகளைக் கொடுத்து, இவற்றை இன்ஸ்டால் செய்திடச் சொல்லும்.
Click Here 
 

காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச் வெளியானது!


சென்ற வாரம், பெர்லின் நகரில், சாம்சங் நிறுவனம், தன் முதல் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச்சினை அறிமுகம் செய்துள்ளது. சோனி நிறுவனத்தை அடுத்து, இத்தகைய கடிகாரத்தை அறிமுகப்படுத்திய இரண்டாவது நிறுவனமாக, சாம்சங் பெயர் பெற்றுள்ளது. உடலில் சாதனத்தை அணிந்து கொண்டு, அதன் வழியே கம்ப்யூட்டிங் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற எண்ணப் பாங்கு, டிஜிட்டல் உலகில் வலம் வருபவர்களிடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மக்கள் பலரும் இத்தகைய சாதனங்களை எதிர்பார்ப்பதால், இதுநல்ல விற்பனையை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். மேலும், வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம் இதற்கு முழுமையாகக் கை கொடுக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச், இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போனுடன் இணைந்தே செயல்படும். இணையாக்கப்பட்ட ஸ்மார்ட் போனுடன், புளுடூத் வழி தொடர்பு கொண்டு இது இயங்கும்.


இந்த கடிகாரத்தில் வைத்து இயக்கவென, எந்த செல்லுலர் தொடர்பும் இருக்காது. இணையாக்கப்பட்ட போன், இரண்டு மீட்டர் தொலைவிற்குள்ளாக இருக்கவேண்டும். தற்போதைக்கு, இந்த ஸ்மார்ட் வாட்ச், சாம்சங் நோட் 3 சாதனத்துடன் இணைவிக்கப்பட்டே இயங்கும். பழைய சாம்சங் போன் அல்லது, மற்ற நிறுவனங்களுடன் இது இயங்காது என்றே தெரிகிறது.
ஸ்மார்ட் வாட்ச் முன்புறம், சதுர வடிவில் 1.6 அங்குல அகலத்தில் AMOLED டச் ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு பட்டன் மூலையில் தரப்பட்டுள்ளது. இதனை அழுத்தினால், ஹோம் ஸ்கிரீன் கிடைக்கிறது. இதனை ஸ்வைப் செய்து, பல அப்ளிகேஷன்களைப் பெறலாம். இதன் தொடக்க தோற்றம் ஒரு கடிகாரத்தினுடையதாகத்தான் இருக்கும். 


பயன்படுத்துபவர், இதனை ஸ்வைப் செய்து, பல பயனுள்ள அப்ளிகேஷன்களைப் பெறலாம். மெசேஜ் மற்றும் அழைப்பு குறித்த அறிவிப்பு இதில் கிடைக்கும். வரும் அழைப்புகளுக்கு, மணிக்கட்டில் உள்ள கடிகாரத்தில் உள்ள, பட்டனை அழுத்திப் பேசலாம். அல்லது அணைத்து ஒதுக்கலாம். இந்தக் கடிகாரத்தில் ஒரு ஸ்பீக்கர் மற்றும் மைக் தரப்பட்டுள்ளது. போனுக்கு வந்திருக்கும் அழைப்புகள் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ்களை இதில் பார்க்கலாம். ஆனால், ஜிமெயில், ட்விட்டர் போன்றவற்றிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகள், அறிவிப்புகளாகத்தான் காட்டப்படும். இவை குறித்து கூடுதல் தகவல்கள் அறிய, பயனாளர் போனைத்தான் பார்க்க வேண்டியதிருக்கும்.

இதில் டயலர் வசதி தரப்பட்டுள்ளது. எனவே,இதிலிருந்து அழைப்புகளை ஏற்படுத்தி பேசலாம். போனின் துணையுடன் இதனை ஒரு போனாகவும் பயன்படுத்தலாம். இதில் 1.9 மெகா பிக்ஸெல் திறனுடன் கூடிய கேமரா ஒன்று இயங்குகிறது. இது கடிகாரத்தில் இல்லாமல், தனியே அதனைக் கைகளில் கட்டும்
பட்டையில் உள்ளது. இந்த கேமரா, இதனை அணிந்திருப்பவரைப் பார்க்காது. வாய்ஸ் மெமோ ரெகார்டர், மியூசிக் பிளேயர், அழைப்புகளின் பட்டியல், போன் புக் மற்றும் பிற அப்ளிகேஷன்களுக்கான ஐகான்களைத் தரும் பக்கத்திற்கான ஐகான் என திரையில் காட்சி கிடைக்கிறது.


செப்டம்பர் 25 லிருந்து, இந்த காலக்ஸி ஸ்மார்ட் வாட்ச் 140 நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அக்டோபர் தொடக்கத்தில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும். மொபைல் போன் விற்பனை செய்பவர்கள் மூலம் இது விற்பனை செய்யப் படும்.இதன் விலை 300 டாலர் என்ற அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புளுடூத் 4 மட்டுமே இயங்கும் என்பதால், புதியதாக வந்துள்ள காலக்ஸி நோட் 3 மட்டுமே, தற்போதைக்கு இதனுடன் இணையாகச் செயல்பட முடியும். இந்த 5.7 அங்குல பேப்ளட் வாங்குவதற்கும் செலவு செய்திட வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வளவு செலவு செய்து இதனைப் பயன்படுத்த வேண்டுமா என்பது இன்றைய கேள்வியாக இருந்தாலும், இது போன்ற ஒன்று வேண்டும் என்பது இன்றைய நிலையில் ஒரு தேவையாகத் தரப்படவில்லை.எனவே, புதியதாக அறிமுகப்படுத்தப்படும் இதனை மக்கள் விரும்புவார்கள் என சாம்சங் எதிர்பார்க்கிறது. எப்படி, கம்ப்யூட்டரில் பார்த்துப் பழகிய மின்னஞ்சல்களை, ஸ்மார்ட் போனில் பார்த்துப் பயன்படுத்த நாம் மாறிக் கொண்டோமோ, அதே போல, மொபைல் போனில் மேற்கொள்ளும் செயல்பாடுகளை, இனி ஸ்மார்ட் வாட்சில் பார்க்கும் பழக்கம் வந்து விடும் என சாம்சங் தெரிவித்துள்ளது.


'முன்னேறிச்செல்'........குட்டிக்கதை



விறகு வெட்டி ஒருவன் விறகு வெட்ட காட்டிற்குச் சென்றான்..அதற்குமுன் தாய் தந்தையரை வணங்கினான் அவன். அவர்கள் ...'உன் வழியில் முன்னறிச் சென்றுக் கொண்டேயிரு...வெற்றிப்பெறுவாய்' என ஆசி கூறினர்.

அந்த வார்த்தைகள் அவன் மனதில் படிந்தது.

அவன் காட்டில் முன்னேறிச் சென்றபோது சந்தனமரங்களைப் பார்த்தான்...மனம் மகிழ்ந்து அவற்றை வெட்டிச் சென்று நிறைய பணம் சேர்த்தான்.

அடுத்தமுறை சென்றபோது..'முன்னேறிச்செல்' என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருந்தது....அப்படியே சந்தனக்காடுகளை கடந்து சென்றான்...வெள்ளிச்சுரங்கம் கண்ணில்
பட்டது.அது அவனை மேலும் பணக்காரன் ஆக்கியது....

மீண்டும் அவன் காட்டிற்குப் புறப்பட்டான்...இம்முறையும் வெள்ளிச்சுரங்கத்தையும் கடந்து முன்னேறிச்சென்றான்.அங்கு தங்கம்,ரத்தினம் எல்லாம் கிடைத்தன.

வாழ்க்கையில் முன்னேறிச் சென்று வெற்றி பெற்றால் போதும் என்று நில்லாது..மேலும் மேலும் முயன்றால் வெற்றிமீது வெற்றி நம்மை வந்து சேரும்.

முயற்சி திருவினையாக்கும்....முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்

குட்டி மீனும் ...அம்மா மீனும்........குட்டிக்கதை



ஒரு குளத்தில் அம்மா மீனும்....அதனுடைய குட்டி மீனும் இருந்தன...அம்மா மீன் குட்டி மீனுக்கு நீந்த கற்றுக்கொடுத்தது.

நாளாக ஆக... அம்மா மீனுக்கு வயதானதால்..அதனால் வேகமாக நீந்த முடியவில்லை..

ஆனால் குட்டி மீனோ..அதி வேகமாக நீந்த ஆரம்பித்தது...அதனால் அதற்கு கர்வம் ஏற்பட்டது...அம்மா மீனை கிண்டல் செய்தது...'உன்னால்..உன் உணவை பெறக்கூட நீந்த முடியவில்லை..ஆனால் என்னைப்பார்..எவ்வளவு அழகாக நீந்துகிறேன்...'என டைவ் எல்லாம் அடித்து நீந்தியது...அம்மா மீன் சொல்வது எதையும் குட்டி மீன் கேட்பதில்லை..

ஒரு நாள் ... மீன் பிடிப்பவன் ஒருவன் ...மீன் பிடிக்க தூண்டிலுடன் வந்தான்....கரையில் அமர்ந்து ...சிறு புழுவை தூண்டிலில் சொருகி ...குளத்தில் வீசினான்..

புழுவைத் தூண்டிலில் பார்த்ததும் ..அதை பிடித்து உண்ண குட்டி மீன் விரைந்தது...உடனே ..தாய் மீன் அதனிடம் போகாதே...அது உன்னைப் பிடிக்க வைக்கும் தூண்டில் ..அதில் மாட்டினால் நீ இறந்து விடுவாய் 'என்றது.

'உனக்கு முடியாததால்... எதைப்பார்த்தாலும் நீ சந்தேகப்படுகிறாய்..அந்தப் புழுவை நான் பிடித்து வருகிறேன் பார்' என்றது குட்டி மீன்.அதற்குள் வேகமாக வந்த வேறொரு மீன் தூண்டிலைக் கவ்வி அதில் மாட்டிக்கொண்டு உயிரிழந்தது..

பயத்துடன் குட்டி மீன் தாயைப்பார்த்தது....பின் 'அம்மா நீ சொன்னது உண்மை..உன் பேச்சைக் கேட்காமல் நான் தூண்டிலைக் கவ்வியிருந்தால் அந்த மீனுக்கு ஆன கதியே எனக்கும் ஆகியிருக்கும்..உன்னால் என் உயிர் காப்பாற்றப்பட்டது.தாய் சொல்லை மீறக்கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன்,,'என அம்மா மீனிடம் மன்னிப்புக் கேட்டது.

குழந்தைகளே.. நாமும் நம்மை விட மூத்தவர்கள் சொல்லும் அறிவுரைகளை கேட்டு நடக்கவேண்டும்.

கந்தனும் .. பாம்பும்.........குட்டிக்கதை



அது ஒரு அழகிய கிராமம்..அந்த கிராமத்தில் கந்தன் என்றொருவன் இருந்தான்.அவன் மிகவும் நல்லவனாய் இருந்தான்.யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் அவனை அணுகினால் அவன் செய்து முடிப்பான்.

ஒரு நாள் அவன் நடந்து செல்கையில்....
குளிரில் விறைத்துப்போய் மயங்கிய நிலையில் பாம்பு ஒன்றைப் பார்த்தான்..உடனே அதன் மீது பரிதாப்பட்டு அதை எடுத்து தன் உடலுடன் அணைத்துக் கொண்டான்.

அவன் உடல் சூட்டில் பாம்பின் குளிர் அகன்றது...கண் திறந்த பாம்பு...தன் இயற்கைக் குணப்படி 'சுருக்'என கந்தனை கடித்தது..

கந்தனுக்கு உடலில் விஷம் ஏறியது..'ஒரு கொடிய வஞ்சகப் பிராணிக்கு நான் இரக்கம் காட்டியதற்குத் தகுந்த பரிசு எனக்கு கிடைத்தது' என்று கூறியபடியே உயிர் விட்டான் அவன்.

நன்றி கெட்டவர்களுக்கு உதவி செய்வது நல்லதல்ல..மேலும்..நம் முன்னோர்கள்..'பாத்திரமறிந்து பிச்சை இடு' எனக் கூறியுள்ளதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.

புறாவும் எறும்பும்... குட்டிக்கதை



ஒரு எறும்பிற்கு தாங்க முடியாத தாகம்...தண்ணீர் குடிக்க ஒரு நதிக்கு சென்றது.அது தண்ணீர் குடிக்கும் சமயத்தில் வெள்ளம் வந்து அதை அடித்துக்கொண்டு போயிற்று.தண்ணீரில் மூழ்கும் தறுவாயில்

இருந்த எறும்பை அருகாமையில் மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.உடனே அது மரத்திலிருந்த ஒரு இலையை பறித்து எறும்புக்கு அருகே தண்ணீரில் போட்டது.இலையின் மேல்

எறும்பு மெதுவாக ஏறி கரையைஸ் சேர்ந்தது.சிறிது நேரத்திற்குப் பிறகு....வேடன் ஒருவன் வந்து ...மரத்தின் மேல் அமர்ந்திருந்த புறாவைப் பிடிக்க எண்ணி....அதை நோக்கி...வில்லில் அம்பைப் பொருத்தி

குறி பார்த்தான்.அதை கவனித்துக் கொண்டிருந்த எறும்பு வேடனின் காலில் கடித்தது.அதனால் ஏற்பட்ட வலியில் வேடனின் குறி தப்பியது.புறாவும் அங்கிருந்து "சட்" என பறந்தோடி தப்பியது.

ஒருவர் நமக்கு செய்த உதவிக்காக அவரிடம் நன்றியுள்ளவனாக இருப்பதோடு.....சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவருக்கு உதவவும் வேண்டும்.

இதையே திருவள்ளுவர்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்கிறார்.

ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறக்கக்கூடாது.அதே சமயம் யாரேனும் நமக்கு தீமை செய்தால் அதை மறந்துவிடுவது நல்லது

தீபாவளிக்கு மோதத் தயாராகும் படங்கள் : ஸ்பெஷல் ஸ்டோரி!!


இந்த ஆண்டு வருகிற நவம்பர் 2ந் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. ஒரு காலத்தில் தீபாவளி என்றால் புத்தாடை, பலகாரம், பட்டாசுக்கு அடுத்த இடத்தில் இருந்தது சினிமா. தீபாவளி அன்று தன் அபிமான நடிகரின் படம் ரிலீசானால்அதிகாலையிலேயே தியேட்டர் வாசலில் பட்டாசு கொளுத்தி முதல் ஷோவை முண்டியடித்து பார்த்து வியர்வையுடன் தியேட்டருக்குள் நுழைந்து கைதட்டி, விசிலடித்து படம் பார்த்து திரும்பிய காலமெல்லாம் இப்போது இல்லை. தீபாவளிக்கு ரசிகர்கள் சினிமாவை பெரிதாக எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.

கடந்த சில வருடங்களாவே தீபாவளிக்கு பெரிதாக படங்கள் ரிலீசாகவில்லை. ஒரு காலத்தில் தீபாவளிக்கு பத்து படங்கள் 12 படங்கள் வரை ரிலீசாகும். அதில் நான்கைந்தாவது பெரிய ஹீரோக்கள் நடித்த படமாக இருக்கும். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் தீபாவளிக்கு ரிலீசானால் ரசிகனுக்கு அது டபுள் தீபாவளியாக இருக்கும். அதன் பிறகு ரஜினி, கமல் படம் ஒரே தீபாவளிக்கு ரிலீசானால் அது ரசிகர்களுக்கு ஜாக்பாட் அடித்த மாதிரி இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அஜீத், விஜய் படங்கள் வெளியானால் தியேட்டர்கள் கொண்டாட்டமாக இருக்கும். இப்போது அது எல்லாமே மாறிவிட்டது. இப்போது ஒரு சில டாப் நடிகர்களுக்கு மட்டுமே கொண்டாட்டமான ஓப்பனிங் இருக்கிறது. மற்ற நடிகர்கள் நடித்த படங்கள் நன்றாக இருப்பதாக மவுத்டாக் வந்தால் மட்டுமே தியேட்டருக்கு கூட்டம் திரள்கிறது. இப்படி காலம் மாறிவிட்டதால் சினிமா தீபாவளி கொண்டாட்டமும் குறைந்து விட்டது.

இதை எதிரொலிக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளிக்கு படங்கள் வெளிவருவது குறைந்து விட்டது.  ஒன்றிரண்டு பெரிய படங்களும் சில சிறிய படங்களும் மட்டுமே ரிலீசாகிறது. பெரிய ஹீரோக்களும் தீபாவளிக்கு தங்கள் படம் ரிலீசாக வேண்டும் என்று ஆர்வம் காட்டுவதில்லை. இப்படித்தான் கடந்த சில ஆண்டுகள் கடந்தது.

ஆனால் இந்த ஆண்டு அந்த நிலையில் பெரிய மாற்றம் வந்திருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு இதுவரை 5 படங்கள் வெளிவரப்போவதாக அறிவித்துள்ளார்கள். அஜீத் நயன்தாரா நடித்துள்ள ஆரம்பம், ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள இரண்டாம் உலகம், கார்த்தி காஜல் அகர்வால் நடித்துள்ள ஆல் இன் ஆல் அழகுராஜா, சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள வாலு, விக்ரம் பிரபு நடித்துள்ள இவன் வேற மாதிரி ஆகியவை அந்த 5 படங்கள்.

இதுதவிர விஸ்வரூபம்-2 தீபாவளி ரிலீஸ் என்று கூறப்படுகிறது. வில்லங்கம் எதுவும் இல்லை என்றால் தீபாவளி ரிலீஸ் உறுதி என்கிறார்கள். ஆனால் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் ரஜினியின் கோச்சடையானை தீபாவளிக்கு கொண்டு வருகிறோம் என்று அதன் தயாரிப்பு நிறுவனம் முன்பே அறிவித்திருந்தது. அதை நோக்கியே பணிகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இரண்டில் ஒரு படம் கட்டாயம் ரிலீசாகும் என்றும், இரண்டுமே ரிலீசானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. அப்படி இரண்டு படங்களும் ரிலீசானால் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு அட்டகாச தீபாவளியாகத்தான் இருக்கும்.

இதிலும் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. முன்பு ஒரு படம் தமிழ்நாடு முழுவதும் அதிகபட்சம் 150 தியேட்டர்களில் ரிலீசாகும், 200 தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணுவதையே பெருமையாக சொல்வார்கள். இப்போது அப்படி இல்லை கியூப், பிஎக்டி, ஹெச்டி போன்ற டிஜிட்டல் டெக்னாலஜி வந்து விட்டதால் சின்ன படங்களே 300 தியேட்டர்களில் ரிலீசாகிறது. அந்த வகையில் பார்த்தால் ரஜினி படம், அஜீத் படம், கமல் படத்துக்கு இருக்கிற தியேட்டர்கள் போதாது பிறகு எப்படி மற்ற படத்தை ரிலீஸ் செய்ய முடியும். அதனால் எப்படிப் பார்த்தாலும் இரண்டு பெரிய படங்கள், மூன்று சிறிய படங்கள் என 5 படங்களுக்குள்தான் ரிலீசாகும் என்கிறார்கள். அதோடு இதுபோன்ற கலெக்ஷனை அள்ளும் காலங்களில் தியேட்டர்காரர்கள் யு சான்றிதழுடன் வரிவிலக்கு பெற்ற படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள்.

அப்போதுதானே அம்புட்டு காசையும் அவர்களே அள்ள முடியும். இல்லாவிட்டால் 30 பர்சென்டை கவர்மெண்டுக்கு கொடுக்க வேண்டுமே. இத்தனை சிக்கல்களையும் மீறி சினிமா பட்டாசு எப்படி வெடிக்கப்போகிறது என்பது தீபாவளி  அன்றைக்குத்தான் தெரியும்.

தமிழில் வருகிறது தி கான்ஜுரிங்!


 

சமீபத்தில் வெளியாகி உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் படம் தி கான்ஜுரிங். நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் பயங்கரமான திகில் படம். அதிக ரத்தம், கொலை இல்லாமல் வெறும் காட்சி அமைப்புகள், பின்னணி இசை மூலமே மிரட்டியிருக்கிறார்களாம். வழக்கமான பேய்பட கதைதான். ஒரு பழைய வீட்டுக்கு புதிதாக குடிபோகிறது ஒரு குடும்பம். அந்த வீட்டுக்குள் இருக்கும் தீயசக்தி அவர்களை எப்படி ஆட்டிப்படைக்கிறது. அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்கிற கதை. ஜேம்ஸ் வான் டைரக்ட் செய்திருக்கிறார். வேரா பார்மிங்கா, பேட்ரிக் வில்சன் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை பார்துவிட்டு ரஜினி மகள் ஐஸ்வர்யா நான் இரண்டு நாள் இரவில் வீட்டைவிட்டே வெளியில் வர பயந்தேன். இரவில் தூக்கம் இல்லாமல் தவித்தேன் என்று டூவிட்டரில் எழுத ஏகத்துக்கு படம் எகிறிவிட்டது. சென்னை மால் தியேட்டர்களில ஒரு வாரத்துக்கு ஹவுஸ்புல்லாகி இருக்கிறது.


ஆரம்பத்தில் சாதாரண திகில் படம்தானே என்று ரிலீஸ் பண்ணியவர்கள், இப்போது படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்துவிட்டு தமிழில் வேகவேகமாக டப் செய்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் தமிழில் ரிலீசாக இருக்கிறது. எல்லோரும் பயப்பட தயாராக இருங்கள்.

ரஜினியின் கோச்சடையான் டீசர் வெளியானது!!

 

ரஜினியின் கோச்சடையான் படத்தின் முதல் டீசர் வெளியானது. எந்திரன் படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். அவரது இளைய மகள் சவுந்தர்யா இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்துள்ளார். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர் தவிர சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெரப், நாசர், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மீடியா ஒன் குளாபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

அனிமேஷன் படமாக அவதார், டின் டின் போன்ற ஹாலிவுட் படங்களின் பாணியில் மோசன் கேப்ட்சரிங் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள முதல் இந்திய 3டி திரைப்படம் இதுவாகும். இப்படத்தின் முதல் டிரைலரை சமீபத்தில் நடந்த கேனன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்டமாக வெளியிட இருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் அது முடியவில்லை. இந்நிலையில் கடந்தவாரம், கோச்சடையான் படத்தின் முதல் டீசர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என செளந்தர்யா கூறியிருந்தார். அதன்படி இன்று(செப்.,9ம் தேதி) முதல் டீசரை ‌இணையளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி டீசரில், நிறைய ஹீரோக்கள் இருக்கலாம், நிறைய சூப்பர் ஹீரோக்கள் இருக்கலாம், ஆனால் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் மட்டும் தான் என்ற அடைமொழியுடன் ஒரு பெரிய கோட்டை சுவரின் கதவை உடைத்து கொண்டு வருகிறார் ரஜினி. ரசிகர்கள், இதுவரை பார்த்திராத ரஜினியாக முற்றிலும் வித்தியாசமாக வருகிறார் இந்த கோச்சடையான்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு கோச்சடையான் படத்தின் முதல் டீசரை வெளியிட்டு இருக்கிறோம் என்று படத்தின் இயக்குநர் செளந்தர்யா தனது டுவிட்டரில் கூறியிருக்கிறார். மேலும் படத்தின் ஆடியோ ரிலீஸ் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று டிரைலரில் கூறப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம், ஜப்பான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் கோச்சடையான் படம் வெளியாக இருக்கிறது. தீபாவளி அல்லது டிசம்பரில் கோச்சடையான் படம் வெளியாகும் என தெரிகிறது.

திரை விமர்சனம் » தங்கமீன்கள்!


‘‘கற்றதுதமிழ்’’ திரைப்படத்தின் இயக்குநர் ராம், கதையின் நாயகராக நடித்து, இயக்கியும் இருக்கும் திரைப்படம் தான் ‘தங்கமீன்கள்’. காசு கொடுத்தால் தான் கல்வி எனும் இன்றைய நிலையை எள்ளி நகையாடியிருக்கும் இப்படத்தில், தனியார் பள்ளி கல்வி டீச்சர்களுக்கும், மிஸ்களுக்கும், மேடம்களுக்கும் மட்டுமல்ல, தங்களது குழந்தைகளின் தரம், திறம் தெரியாமலே படி, படி என படுத்தி எடுக்கும் பெற்றோர்களுக்கும் சரியான திரைப்ப(பா)ட‌மாக அமைந்திருக்கிறது ‘தங்கமீன்கள்’ என்றால் மிகையல்ல!

கதைப்படி ரோகிணி -‘பூ’ ராமு தம்பதிகளின் வாரிசு ராம். ராமின் செல்லமகள் ‘செல்லம்மா’ எனும் சிறுமி சாதனா! ரிட்டர்யர்டு ஹெட்மாஸ்டர் அப்பாவான ‘பூ’ ராமுவின் பணத்திலும், வீட்டிலும் காலம் தள்ளும் ராம், மகள் கேட்பதை எல்லாம் வாங்கித்தர நினைப்பதுடன் விரும்புவதை எல்லாம் செய்யவும் நினைக்கிறார். மற்ற குழந்தைகளைக் காட்டிலும் சற்றே மந்தமான குழந்தையான செல்லம்மாவை மேலும், மேலும் செல்லம் கொடுத்து கெடுத்து குட்டிச்சுவராக்கி விடப்போகிறான் மகன் ராம் எனும் பயத்தில் அடிக்கடி ‘பூ’ ராமு, ராமிடம் பேத்திக்காக பேச, அதுவே அப்பா - பிள்ளையிடம் பிரிவை உண்டாக்குகிறது. அதன் விளைவு மொத்த குடும்பத்தில் இருந்தும் ராம் பிரிந்து கேரளா - கொச்சிக்கு வேலைக்கு போகிறார். அப்பாவும், மகளும் பிரிவு தாங்காமல் அடிக்கடி போனில் புலம்பி அழ, தியேட்டரில் நாமும் சேர்ந்து அழுவது மாதிரியான உருக்கமான காட்சிகள் ஒரு பக்கம் உலுக்கி எடுக்கிறது. மற்றொரு பக்கம், இன்றைய காசு கல்வியும், அதன் கண்டிப்பும், தன் மகளின் வாழ்க்கையை பாழ் பண்ணி விடும் என நம்பும் ராம், அவளை, அவள் விரும்பும் எவிட்டா மிஸ் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் அரசு பள்ளியில் சேர்த்து விட்டு மகள் விரும்பும் கல்வியை தருகிறார். மக்களுக்கு பாடம் நடத்துகிறார்! இதுதான் ‘தங்கமீன்கள்’ படத்தின் ஜொலி ஜொலிக்கும் மொத்த கதையும்.

இதனூடே மகள் விரும்பும் உயர் ஜாதி நாய்க்காக ராம், நாயாய், பேய்யாய் நாக்கு வெளித்தள்ள ஏழுமலை, ஏழுகடல் தாண்டும் சுவாரஸ்ய காட்சிகள், தனியார் பள்ளி டீச்சரின் கண்டிப்பு, அதனால் சக மாணவர்கள் செல்லம்மா சாதனாவை ‘‘டபிள்யூ’’ என பட்டப்பெயர் வைத்து கூப்பிடும் கலாட்டா, ஆஸ்திரேலியா ரிட்டன் ராமின் தங்கை குடும்பத்தின் அலட்டல், இல்வாழ்க்கைக்குப் போன எவிட்டா மிஸ்ஸின் மாற்றம், செல்லம்மாவால் அவருக்கு கிடைக்கும் ஏற்றமும்... என ஏகப்பட்ட சுவாரஸ்யங்களை கலந்து கட்டி தங்கமீன்களை தகதகவென ஜொலிக்கவிட்டிருக்கும் ராமின் துணிச்சலுக்கு ஒரு ‘ராயல் சல்யூட்’ அடித்தே ஆக வேண்டும்!

இயக்குநராக மட்டுமல்லாமல் இக்கதையின் நாயகராகவும் ராம் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்! கடன் கேட்டுபோன இடத்தில் ஐந்தாறு முறை அலையவிட்டு அல்லல்படுத்துவதுடன், அட்வைஸூம் பண்ணும் நண்பனை ராம் எச்சரிக்கும் இடத்தில் ஆகட்டும், டபிள்யூவை சிம்பிளாக குழந்தைக்கு புரியும்படி எழுத கற்றுத்தராது, அதையே அவளது பட்டப்பெயராக காரணமாகும் டீச்சரிடமும், ஸ்கூல் பிரின்ஸ்பாலிடமும் நியாயம் கேட்டு ராம் போராடும் இடத்திலாகட்டும், மனிதர் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். அதேமாதிரி மகளை பிரிந்து வாடும் இடங்களில் கரையாதோர் நெஞ்சையும் கரைக்கும் இடங்களில் நம்மை உலுக்கி எடுத்து விடுகிறார். ராமுக்கு நிறைய விருதுகள் நிச்சயம்!

சிறுமி செல்லம்மாவாக சாதனா, அப்பாவி மகளாகவும், அப்பாவின் மகளாகவும் அசத்தி இருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கே குளத்தில் விழுந்து தங்கமீன் ஆகிவிடுவாரோ எனும் திகிலுடனேயே நம்மை படம் பார்க்கும் இவரது பாத்திரம் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் பாத்திரமென்றாலும் ‘பலே’ சொல்ல வைக்கும் பாத்திரம் என்றாலும் மிகையல்ல! அம்மணிக்கும் விருதுகள் நிச்சயம்!

இன்னிக்கு ராத்திரி பூரி சுடுறாங்க எங்க வீட்டுல... அதனால நாளைக்கு வீட்டுல கோவிச்சுகிட்டு செல்லலாமுனு இருக்கேன் எனும் பேபி நித்யஸ்ரீ சஞ்சனாவில் தொடங்கி, ஸ்டெல்லா மிஸ்ஸாக கர்ண கொடூரமாக வரும் லிஸி வாரியார், எவிட்டா மிஸ் பத்மபிரியா, ராமின் மனைவியாக, செல்லம்மாவின் தாய் வடிவாக வரும் ஷெல்லி கிஷோர், ஓய்வுபெற்ற தலைமையாசிரியராக, செல்லம்மாவின் தாத்தாவாக வரும் ‘பூ’ ராம் அவரது மனைவியாக, செல்லம்மாவின் பாட்டியாக வரும் நடிகை ரோகிணி உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது ‘தங்கமீன்கள்’ படத்தின் பெரும்பலம்!

யுவன்சங்கர்ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும், அர்பிந்து சாராவின் ஓவிய ஒளிப்பதிவும், ஒரு தந்தைக்கும், மகளுக்கும் இடை‌யேயான உணர்வுப்பூர்வமான பாசத்தையும், பணகல்வி தரும் மோசத்தையும் ரசிகர்களுக்கு புரியும்படி சொல்ல இயக்குநர் ராமிற்கு பெரிதும் ஒத்துழைத்திருக்கின்றன! வயசுக்கு வர்றதுன்ன என்னம்மா? உள்ளிட்ட ஒரு சில வசனக்கோளாறுகள், குறைபாடுகள் இருந்தாலும் ‘தங்கமீன்கள்’ ஜொலிக்கும் உணர்வுப்பூர்வமான ‘வைரமீன்கள்’!!

வறுமையில் வாடும் தன் ஆசிரியைக்கு உதவிய ரஜினி!!



சூப்பர் ஸ்டார் ரஜினி தன் பால்ய பருவத்தில் பெங்களூரில் உள்ள கவிபுரம் அரசு பள்ளியில் படித்தார். அப்போது அவருக்கு கன்னடம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களை சொல்லிக் கொடுத்தவர் சாந்தம்மா என்ற ஆசிரியை. தற்போது 78 வயதாகும் சாந்தம்மா தனது கணவருடன் ஜலஹள்ளி பகுதியில் வசித்து வருகிறார். வருமானம் எதுவும் இன்றி வறுமையில் சிறு குடிசையில் அந்த முதிய தம்பதிகள் வசித்து வருவது பற்றி ரஜினிக்கு தகவல் கிடைத்தது. அதனால் ரஜினி அவர்களை நேரில் சந்திக்க விரும்பினார். கோச்சடையான் படப் பணிகளில் பிசியாக இருப்பதால் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.

சமீபத்தில் ஆசிரியர் தினவிழா வந்தபோது திடீரென ரஜினிக்கு இது நினைவுக்கு வந்திருக்கிறது. உடனே தனது உதவியாளரை அழைத்து "சாந்தம்மாவை மீட் பண்றது மிஸ்சாகிட்டே போவுதுல்ல... அவுங்களோட பேங் அக்கவுணட் நம்பரை வாங்கி அவுங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னு கேட்டு அதை அவுங்க கணக்குல டெபாசிட் பண்ணிடுங்க. நான் அடுத்த முறை பெங்களூர் வரும்போது அவுங்களை மீட் பண்றதா சொல்லிடுங்க" என்று கூறியிருக்கிறார்.
இதையொட்டி பெங்களூரில் உள்ள ரஜினி மன்ற தலைவர் ரஜினி முருகனை அழைத்து விசயத்தை சொன்னார் உதவியாளர். அவரும் சாந்தம்மா வீட்டுக்கு சென்று சந்தித்திருக்கிறார். அவர்கள் கேட்ட மூன்று லட்சம் ரூபாயை உடனே அவர்களது வங்கி கணக்கில் செலுத்தினார் ரஜினியின் உதவியாளர்.

"சிவாஜிராவுக்கு நான் 5 முதல் 7ம் வகுப்பு வரை பாடம் நடத்தினேன். அப்போ அவன் குடும்பம் ரொம்ப கஷ்டத்தில் இருந்தது. அதை வகுப்பில் காட்டிக் கொள்ளாமல் படிப்பான். படிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் நிறைய சேட்டை பண்ணுவான். அவனோட கையெழுத்து நல்லா  இருக்கும். அப்பவே இவனோட தலையெழுத்தும் நல்லா இருக்கும்னு நினைப்பேன். அதுமாதிரியே அவன் யாரும் நினைச்சு பார்க்க முடியாத உசரத்துல இருக்கான். நான் எவ்வளவு கேட்டாலும் தருகிற நிலைமையில் அவன் இருந்தாலும் எனக்கு என்ன தேவையோ அதைக் கேட்டேன் கொடுத்திருக்கான். மவராசன் இன்னும் நல்லா இருக்கணும். ஆண்டவன் அவனுக்கு நீண்ட ஆயுள கொடுக்கணும்" என்ற நெகிழ்ந்திருக்கிறார் சாந்தம்மா.

சொத்து கணக்கு காட்டாத பிரதமர் உள்பட 56 மத்திய அமைச்சர்கள்!


மத்திய அமைச்சர்கள் தங்களின் சொத்து விபரங்கள் மற்றும் தாங்கள் வகிக்கும் பொறுப்புக்களின் விபரங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் பிரதமரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 76 உறுப்பினர்களில் 19 பேர் மட்டுமே தங்களின் 2012-2013ம் ஆண்டு நிதிநிலை விபரங்களை அளித்துள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங் இன்னும் இந்த கணக்கை தாக்கல் செய்யவில்லை.இது தவிர 56 மத்திய மந்திரிகளும் நடப்பு ஆண்டுக்கான சொத்துக்கணக்கை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

sep 9 - manmohan singh

 


இதற்கிடையில் தற்போதுஅமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. அதிலுல் சிதம்பரம், சரத்பவார், வீரப்ப மொய்லி போன்ற முக்கிய அமைச்சர்கள் தங்கள் மனைவிகளின் பெயர்களில் அதிகளவில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
நிதியமைச்சர் சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ.11.96 கோடியில் இருந்து ரூ.12.70 கோடியாக அதிகரித்துள்ளது. அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.17.79 கோடியில் இருந்து ரூ.19.48 கோடியாக அதிகரித்துள்ளது. இதே போன்று சிதம்பரத்தின் குடும்ப சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது. 

மத்திய விவசாயத்துறை மந்திரி சரத்பவாரின் சொத்து மதிப்பு ரூ.7.86 கோடியில் இருந்து ரூ.8.75 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இவரது மனைவி பிரதீபாவின் சொத்து மதிப்பு ரூ.13.46 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய மந்திரி வீரப்ப மொய்லி மனைவியின் சொத்து மதிப்பு ரூ.3.08 கோடியில் இருந்து ரூ.3.10 கோடியாக அதிகரித்துள்ளது. வீரப்ப மொய்லிக்கு ரூ.25.55 லட்சம் மதிப்புள்ள சொத்து இருப்பதாக கணக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி சொத்து மதிப்பு தாக்கல் செய்து இருக்கிறார். இதில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. மத்திய மந்திரி குமாரி செல்ஜாவின் சொத்து மதிப்பு ரூ.19.54 கோடியில் இருந்து ரூ.29.56 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

கிராமப்புற வளர்ச்சி மந்திரி ஜெய்ராம் ரமேஷ் சொத்து ரூ.3.13 கோடியில் இருந்து ரூ.4.78 கோடி ஆகி இருக்கிறது. இவரது மனைவியின் சொத்து ரூ.11 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக குறைந்து இருக்கிறது.
உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டேயின் சொத்து மதிப்பு ரூ.7.42 கோடியில் இருந்து ரூ.10.83 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இருவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.4.53 கோடியில் இருந்து ரூ.5.77 கோடியாக உயர்ந்து உள்ளது..

சிகிளீனர் வழியாக டூப்ளிகேட் பைல் நீக்கம்



கம்ப்யூட்டர் போல்டர்களில், ஒரே பைல் இரண்டுக்கு மேற்பட்ட இடத்தில் இருப்பது நமக்கு எரிச்சலைத் தரும் இடமாகும். காரணங்கள் - தேவையின்றி, இவை ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. அடுத்ததாக, இவற்றைக் கையாள்வது மிகவும் சிரமமான செயலாக அமைகிறது. ஒரு சில போட்டோக்கள், மீண்டும் மீண்டும் வெவ்வேறு போல்டர்களில் இருந்தால், எதனை அழிப்பது, எந்த போல்டரில் வைத்துக் கொள்வது என்பது நமக்கு எரிச்சல் தரும் செயல் தானே. அதிர்ஷ்டவசமாக, நமக்கு சிகிளீனர் புரோகிராம், டூப்ளிகேட் பைல்களை நீக்கும் எளிய வழி ஒன்றைத் தருகிறது.

சிகிளீனர் புரோகிராமினை, நிச்சயமாக அனைவரும் தங்கள் கம்ப்யூட்டரில் வைத்திருப்பார்கள். விண்டோஸ் சிஸ்டத்தில், தேவையற்றவற்றை நீக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ள இந்த புரோகிராமினை நாம் அனைவரும் பயன்படுத்தலாம். தற்காலிக இண்டர்நெட் பைல்கள், விண்டோஸ் சிஸ்டம் ஏற்படுத்தும் தற்காலிக பைல்கள், லாக் இன் சம்பந்தப்பட்ட பைல்கள், குக்கீஸ் என தற்காலிக பைல்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம். இவை எல்லாவற்றையும் தானாக சிகிளீனர் நீக்குகிறது.

அது மட்டுமின்றி, விண்டோஸ் இயங்கும்போது, இயக்கப்படும் புரோகிராம்களை, ஸ்டார்ட் அப் விண்டோவில் சிகிளீனர் சரி செய்கிறது. தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்து நீக்க உதவுகிறது. ரெஜிஸ்ட்ரியில் உள்ள தேவையற்றை வரிகளை, குறியீடுகளை நீக்குகிறது. பைல்களை அழிக்கும் போது, அவற்றின் சுவடு தெரியாமல் முழுமையாக அழிக்கிறது. இதன் மூலம் நமக்கு ஹார்ட் டிஸ்க்கில் இடம் கிடைக்கிறது. 



தற்போது வெளியிடப்பட்டுள்ள சிகிளீனர் புரோகிராம், டூப்ளிகேட் பைல்களை இனம் கண்டு நீக்குகிறது. இதனைச் செயல்படுத்த, சிகிளீனர் புரோகிராமினை இயக்கி, டூல்ஸ் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். டூப்ளிகேட் பைல் அறியும் டூலினைப் பெற, இதன் விண்டோவில், File Finder என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். ஏற்கனவே, சில ஆப்ஷன்கள் நமக்காக, சிகிளீனர் இன்ஸ்டால் செய்திடுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். அவை அப்படியே இருக்கட்டும். ஆனால், மிக முக்கியமாக, Ignore என்னும் வகையில், Modified Date under Match By என்பதிலும், File Size Under என்பதிலும், டிக் அடையாளம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். சிஸ்டம் பைல்ஸ் என்று இருக்கும் இடத்தில் Ignore ஆப்ஷனில் டிக் அடையாளம் கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், பல சிஸ்டம் பைல்கள், இரண்டு டைரக்டரிகளில் அல்லது இரண்டு போல்டர்களில் இருக்க வாய்ப்புண்டு. இவை, நீக்கப்பட்டால், சிஸ்டம் இயங்குவதில் பிரச்னை ஏற்படலாம்.

இனி, கம்ப்யூட்டரில் உள்ள டூப்ளிகேட் பைல்களை எப்படி நீக்கலாம் என்பதனைப் பார்க்கலாம். மாறா நிலையில், சிகிளீனர், அனைத்து ட்ரைவ்களையும் தேர்ந்தெடுத்துக் காட்டும். கம்ப்யூட்டரே, சிகிளீனர் மூலம் ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டால், அந்த வேலை அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, டூப்ளிகேட் பைல்கள் உள்ள போல்டர்கள் அல்லது ட்ரைவ்கள் எவை என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். 


போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுக்க, பிரவுஸ் பட்டன் கிளிக் செய்து, வழக்கமான முறையில், போல்டர்களையும் பைல்களையும் தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுத்த பின்னர், Search பட்டனில் கிளிக் செய்தால், ஸ்கேன் தொடங்கப்படும். ஸ்கேனிங் முடிந்த பின்னர், சிகிளீனர், அது கண்டறிந்த டூப்ளிகேட் பைல்களைப் பட்டியலிடும். இரண்டு அல்லது அதற்கும் மேலான இடத்தில் உள்ள பைல்கள் தொடர்ச்சியாக இணைத்தே பட்டியலிடப்படும். எந்த பைலை நீக்க வேண்டுமோ, அவற்றை, அதன் அருகே உள்ள செக் பாக்ஸில், டிக் செய்து தேர்ந்தெடுக்கவும். சிகிளீனர் மீண்டும் ஒருமுறை, உங்களிடம், நீங்கள் தேர்ந்தெடுத்த பைல்களை உறுதியாக நீக்கவா என்றுகேட்கும். சரி என்று சம்மதத்திற்கென கிளிக் செய்தவுடன், டூப்ளிகேட் பைல் நீக்கப்படும்.
Click Here

148 ஆண்டு நோக்கியாவை தனதாக்கிய மைக்ரோசாப்ட்!


மொபைல் போன் தயாரிப்பவராக, ஒரு காலத்தில், உலகில் முதல் இடத்தில் இயங்கி வந்த, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த, நோக்கியா நிறுவனத்தின், மொபைல் போன் மற்றும் பிற சாதனங்கள் தயாரிப்பு பிரிவினை, மைக்ரோசாப்ட் சென்ற வாரம் வாங்கி யுள்ளது. தயாரிப்பு பிரிவுகள் மற்றும் காப்புரிமைகளுக்கும் சேர்த்து, மைக்ரோசாப்ட் இதற்கென 717 கோடி டாலர் வழங்குகிறது.

மொபைல் போன் தயாரிப்பில் முதல் இடத்தில் இயங்கி வந்த நோக்கியா, தன் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக, ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களிடம் இழந்த போது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் போன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஒதுக்கித் தள்ளி, விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து விற்பனை செய்தது.

சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமாக, உலகில் முதல் இடத்தில் இயங்கும், மைக்ரோசாப்ட், இனி சாப்ட்வேர் மட்டுமே தனக்கு புகழும் பணமும் தராது என்று திட்டமிட்டு, தற்போது பெருகி வரும் ஸ்மார்ட் போன்களை இலக்கு வைத்து, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அடுத்து, விண்டோஸ் 8 போன் சிஸ்டத்தினையும் வழங்கியது. பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன்களின் இயக்கத்தினை, ஓர் இயற்கையான ஒருங்கிணைந்த இயக்கத்தில் கொண்டு வரத் திட்டமிட்டது. மொபைல் போன் விற்பனைச் சந்தையில் தன் தடத்தினை ஆழப் பதிக்க தீவிரமாக எண்ணியது. நிதிச் சுமையில் தள்ளாடிய நோக்கியா, சரியான சந்தர்ப்பத்தினைத் தர, தற்போது அதனைத் தனதாக்கியுள்ளது.

கம்ப்யூட்டிங் வேலையைச் செய்திட வசதியான ஒரு மேடையாக மொபைல் ஸ்மார்ட் போன் தற்போது உருவாகி, பயனாளர் எண்ணிக்கையிலும் பெருகி வருவதால், சாப்ட்வேர் துறையில், உலகை வழி நடத்தும் மைக்ரோசாப்ட், அந்த மேடையைக் கைப்பற்ற நினைத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அதன் இலக்குக்கு ஏற்ப, நோக்கியாவின் நிலை இருந்ததால், இந்த நிறுவன மாறுதல், தகவல் தொழில் நுட்ப உலகில், இயற்கையான ஒன்றாகக் கருதப்படுகிறது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில், நோக்கியா முழுமையாக, மைக்ரோசாப்ட் வசம் செல்கையில், உலகெங்கும் இயங்கும் நோக்கியா தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரும் மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களாக மாறுவார்கள். இவ்வகையில் 32 ஆயிரம் பேர் உள்ளனர். நோக்கியாவின் தலைமையிடமான பின்லாந்தில் மட்டும் 4,700 பேர் பணியாற்றுகின்றனர்.
பத்து ஆண்டுகள் யாரும் அசைக்க முடியாத இடத்தை, மொபைல் போன் சந்தையில் கொண்டிருந்தது நோக்கியா. முதலில் ஆப்பிள், அதன் பின்னர் சாம்சங் அதன் கோட்டையைத் தகர்த்தன. கொஞ்சம் கொஞ்சமாக தன் இடத்தை இழந்த நோக்கியா, தன் ஸ்மார்ட் போன்களில், தன்னுடைய சிஸ்டத்தை நவீனப்படுத்த முயற்சி எடுக்கவில்லை. மற்ற மொபைல் போன் நிறுவனங்கள் தத்தெடுத்த ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒதுக்கித் தள்ளியது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் சிஸ்டத்தைக் கொண்டு வந்து, இழந்த இடத்தைப் பிடிக்கத் திட்டமிட்டது. ஆனால் அதன் நிதி வசதியும் தொழில் நுட்ப வல்லமை இல்லாத நிலையும் இடம் கொடுக்காததால், இறுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆசைக்கு இணங்கிவிட்டது.

சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடன், மொபைல் போன் சந்தையில் போட்டியிடும் அளவிற்கு நிதிச்சுமையில், நோக்கியா தத்தளித்ததை, மைக்ரோசாப்ட் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இரண்டு நிறுவனங்களுக்குமே,இந்த உடன்பாடு, அவற்றின் பிரச்னைகளைத் தீர்க்க உதவியுள்ளது. ஆனால், மொபைல் போன் வரலாற்றில், நோக்கியாவின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

முதலில் பேப்பர் தொழிற்சாலையைத் தொடங்கி, பின்னர் எலக்ட்ரிக் சாதனங்கள், ரப்பர் பூட்கள் என விற்பனை செய்து, உலகில் அதிக ஏற்றுமதி செய்திடும் நிறுவனமாக வலம் வந்து, பின்னர் மொபைல் போனில் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது நோக்கியா. ஒரு கால கட்டத்தில், இந்த உலகம் அடுத்து எந்த மொபைல் போனை வாங்க வேண்டும் என்பதனை நோக்கியாவே தீர்மானித்தது. அத்தகைய நோக்கியாவின் 148 ஆண்டு கால சரித்திரம், தற்போது ஒரு முடிவிற்கு வந்துவிட்டது.

நோக்கியா தன் நிறுவனத்தை விற்பனை செய்தது சரியா? தவறா? என்ற கேள்விக்கு, நிறுவனத்தை விற்பனை செய்திட நோக்கியாவிற்குக் கிடைத்த கடைசி சந்தர்ப்பம் இதுதான் என்றும், இல்லையேல், நோக்கியா தரை மட்டத்திற்குத் தானாகவே சென்றிருக்கும் எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மைக்ரோசாப்ட் ஏன் நோக்கியாவை வாங்கியது? தன் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த நோக்கியாவிற்கு மைக்ரோசாப்ட் அனுமதி அளித்தது. நோக்கியா மட்டுமே, விண்டோஸ் சிஸ்டம் போன்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனமாக எழுத் தொடங்கியது. அத்துடன் பயனாளர் தேவைகளுக்கேற்ப, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மாறுதல்களைச் செய்திட, நோக்கியா அனுமதி பெற்றது. இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது தன் கட்டுப்பாட்டினை இழக்கும் நிலை வந்தது. இது, மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் சரித்திரத்தில், இதுவரை சந்தித்திராத நிலையைக் காட்டியது. விழித்துக் கொண்ட மைக்ரோசாப்ட், இப்போது அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

மைக்ரோசாப்ட், நோக்கியா நிறுவனத்தை வாங்கியே ஆக வேண்டும் என்ற முடிவிற்கு வரக் காரணம், விண்டோஸ் இயக்கம் கொண்ட, நோக்கியாவின் ஆஷா வரிசை போன்களே. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்ற இந்த வரிசை போன்களைக் கொண்டே, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மேடையை பரவலாக விரிக்க இருக்கிறது.
பூஜ்யமாக இருந்த விண்டோஸ் சிஸ்டம் ஸ்மார்ட்போன் விற்பனையை, நோக்கியா 74 லட்சம் என்று உயர்த்தி, தற்போது மைக்ரோசாப்ட் கைகளில் தந்துள்ளது. இதனை மைக்ரோசாப்ட் சாதுர்யமாகக் கையாண்டு, வெற்றி ஈட்ட வேண்டும்.

நோக்கியாவின் சாதனைகள்

1871 - டயர், பூட் மற்றும் கேபிள்களைத் தயாரித்தது.
1987 - முதல் மொபைல் போன் மொபிரா சிட்டிமேன் வெளியானது எடை 1 கிலோ.
1992 - முதல் டிஜிட்டல் ஜி.எஸ்.எம். போன் நோக்கியா 1011 வெளியானது.
2003 - பேசிக் 1100 என்ற மொபைல் போனை வெளியிட்டது. 25 கோடி போன்கள் விற்பனை செய்யப்பட்டன. நோக்கியா அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்த மொபைல் இதுதான். மக்களிடையே அதிகம் பிரபலமான எலக்ட்ரானிக் சாதனம் என்ற பெயரினைப் பெற்றது.

2011 - தன் சிம்பியன் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஒதுக்கி, விண்டோஸ் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது.
2013 - இறுதியாக 41 மெகா பிக்ஸெல் திறனுடன், நோக்கியா லூமியா 1020 என்ற போனை வெளியிட்டது.

நோக்கியா தொடாத நபரே இல்லை

கடந்த 15 ஆண்டுகளாக, நீங்கள் மொபைல் போனைப் பயன்படுத்தி இருந்தால், நிச்சயம் அதில் நோக்கியா போன் ஒன்று இருக்கும். 2000 ஆம் ஆண்டில் நோக்கியா போன் ஒன்றை நீங்கள் வைத்திருந்தால், அது நிச்சயம் நோக்கியா 5110 என்ற மாடலாகத்தான் இருந்திருக்கும். இதே போல புகழ் பெற்ற நோக்கியாவின் போன்கள் 8210, 3210 மற்றும் 3310 ஆகியவை ஆகும். 2003ல் வந்த நோக்கியா 1100 மாடல், அதிக விற்பனையை மேற்கொண்டு, சரித்திரத்தில் இடம் பெற்றது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் விற்பனை செய்யப்பட்ட மொபைல் போன்களின் எண்ணிக்கை

சாம்சங் - 10 கோடியே 75 லட்சம் - 24.7%
நோக்கியா - 6 கோடியே 9 லட்சம் - 14%
ஆப்பிள் - 3 கோடியே 19 லட்சம் - 7.3%
எல்.ஜி. - 1 கோடியே 70 லட்சம் - 3.9%
இஸட். டி.இ. - 1 கோடியே 52 லட்சம் - 3.5%
மற்ற நிறுவனங்கள் - 20 கோடியே 23 லட்சம் - 46.5%

நம்பிக்கை தருவாரா நவநீதம் பிள்ளை: இன்று மனித உரிமைமாநாடு!



ஐ.நா. மனித உரிமை அமைப்பின் 24-வது கூட்டம் இன்று ஜெனிவா நகரில் நடக்கிறது. இக்கூட்டத்தில் 20 நாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் இலங்கையில் உள்நாட்டு போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையினை, ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவர் நவநீதம்பிள்ளை சமர்பிக்கிறார். கடந்த மாதம் 7 நாள் பயணமாக இலங்கை சென்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை குறித்தும், அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ள மறுவாழ்வு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். இதற்கான அறிக்கையினை இன்று தாக்கல் செய்கிறார். இன்று துவங்கும் மாநாடு 27-ம் தேதி வரை நடக்கிறது.போருக்கு பின்னர் முதன்முறையாக, நவநீதம் பிள்ளை இலங்கை சென்று இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததால், அவரின் அறிக்கையில், இலங்கை அரசின் மீதான மனித உரிமை குற்றச்சாட்டு பலமாக எதிரொலிக்கும் என தெரிகிறது.