Saturday 12 October 2013

குட்டீஸ்களுக்கான உணவு முறைகள்!


இபோதைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும்.


பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.



                                             13 - health food-guide-pyramid-for-children.mini

 


என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் “கொஞ்சமாக கொடுங்கள்” என்பார்கள், சிலர் “எல்லாமே கொடுக்கலாம்” என்பார்கள். ‘கொஞ்சமாக’ என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது ந்மது விருப்பம்.


இது குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயது வரை என்னென்ன உணவுகளை எப்படி கொடுக்க வேண்டும் என்று உலக அளவில் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் அமைப்பு (UNICEF) தெளிவாக வெளியிட்டிருக்கும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஏழைத் தாய்மாரும் செயல்படுத்தக் கூடிய வழி முறைகள்தான் இது என்பது கூடுதல் சிறப்பு. என்றாலும் குடும்ப மருத்துவருடன் கலந்தாலோசித்து இதை நடைமுறைப்படுத்துவது சாலச் சிறந்தது


முதல் ஆறு மாதங்கள் வரை:


குழந்தைக்கு தாய்ப்பால் எப்பொழுதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம், அதாவது, ஒரு நாளைக்கு குறைந்தது 8 முறை கொடுக்க வேண்டும். மற்ற உணவுகள் அல்லது திரவ உணவுகள் – ஏன் தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது. கோடைக்காலம் என்றாலும் தண்ணீர் அவசியமில்லை. குழந்தை நோய்வாய்ப்பட்டிருந்தாலும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது.


ஆறு மாதங்கள் முதல் ஒரு வயது வரை:


குழந்தை எப்பொழுதெல்லாம் விரும்புகிறதோ அப்பொழுது தாய்ப்பால் கொடுத்தால் போதும். மற்ற நேரங்களில் ஒரு கிண்ணம் உணவு, ஒரு முறை கொடுக்கலாம். நெய், எண்ணெய் கலந்த பருப்பு சாதம், கேழ்வரகு கஞ்சி, அரிசி கஞ்சி, பொட்டுக் கடலை கஞ்சி, உப்புமா, கிச்சடி, பொங்கல், மசித்த இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, வேக வைத்த மசித்த காய்கறிகள் (உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட்) ஆகியவற்றை கொடுக்கவும். வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி, சப்போட்டா ஆகிய பழங்களையும் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு ஒரு நாளைக்கு மூன்று முறையும், தாய்ப்பால் குடிக்காத குழந்தைக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறையும் உணவு கொடுக்க வேண்டும்.இந்த உணவையும் குழந்தையை மடியில் வைத்து தாய் தன் கையால் ஊட்ட வேண்டும். ஸ்பூன் அவசியமில்லை அல்லது தேவையில்லை. ஒவ்வொரு முறை ஊட்டும்போது தாய் தன் கை மற்றும் குழந்தையின் கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.


ஒரு வயது முதல் இரண்டு வயது வரை:


குழந்தை விரும்பும்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் உண்ணும் உணவையே குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். ஒரு வேளைக்கு ஒன்றரை கிண்ணம் உணவு என்ற அளவில் ஒரு நாளைக்கு ஐந்து வேளை கொடுக்க வேண்டும். குழந்தை சாப்பிடும் வரை பக்கத்தில் அமர்ந்திருப்பது நல்லது. அப்போதுதான் தேவைப்படும்போது உதவ முடியும். ஏனெனில் இந்த வயதில், தன் உணவை தானே எடுத்து சாப்பிட குழந்தையை பழக்கப்படுத்த வேண்டும். முடிந்தவரை ஊட்டக் கூடாது. சாப்பிடுவதற்கு முன்பு குழந்தையின் கையை சோப்பு போட்டு கழுவ பழக்கப்படுத்துங்கள்.


இரண்டு வயதுக்கு மேல்:


குழந்தை விரும்பினால் தாய்ப்பால் கொடுக்கலாம். என்றாலும் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கொடுக்க வேண்டும். அதே போல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பாட்டுக்கு முன் ஊட்டச்சத்து நிரம்பிய உணவான வாழைப்பழம், மாம்பழம், முட்டை மற்றும் தின்பண்டங்களை கொடுக்கலாம். இத்துடன் பணி முடிந்தது என்று நினைக்காமல் குழந்தை சாப்பிட்டு முடிக்கும் வரை உடனிருக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் கை கழுவ பழக்க வேண்டும்.


மூடநம்பிக்கை:


வாழ்வின் முக்கியமான வளர்ச்சி, குழந்தைப் பருவத்தில்தான் நிகழ்கிறது. குழந்தை பிறக்கும்போது தலையின் சுற்றளவு 35 செ.மீ. இருக்கும். இது குறிப்பிட்ட வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து குழந்தையின் ஒரு வயதில் 45 செ.மீ. ஆகிறது. ஐந்து வயதாகும்போது தலையின் சுற்றளவு 50 செ.மீ. இருக்கும். கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். காரணம், வளர்ந்த மனிதனின் தலை சுற்றளவு 50 செ.மீ.தான். ஐந்து வயதுக்கு மேல் தலைச்சுற்றளவும், மூளையின் புற வளர்ச்சியும் அதிகரிப்பதில்லை. அறிவு மற்றும் சுற்றுப்புற சூழல் தூண்டுதல்களால் மூளையின் செயல்திறன் மட்டுமே அதிகரிக்கிறது. எனவே, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குழந்தைப் பருவத்தில் சத்துணவு மிக மிக அவசியம். குழந்தை பிறந்தவுடன் தாயிடம் சுரக்கும் சீம்பால், குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களையும், அதிக அளவில் நோய் எதிர்ப்புச் சக்திகளையும் கொடுக்கக் கூடியது. இது குழந்தைக்கு செரிக்காது, வயிற்றுக்கு போதாது என்று சிலர் நினைக்கிறார்கள்.



அதனாலேயே சீம்பால் தருவதை தவிர்க்கிறார்கள். இது தவறு. அவசியம் சீம்பால் தர வேண்டும். தாய்ப்பால் தரும் தாய்க்கு வரும் பொதுவான நோய்களால் தாய்ப்பாலின் தரம் மாறாது. அவர்கள் உட்கொள்ளும் பொது வான மருந்துகளாலும் குழந்தைக்கு பாதிப்பில்லை. காச நோய், புற்று நோய், எய்ட்ஸ் நோய் வந்த தாய்மார்களும் தங்கள் குழந்தைக்கு பாலூட்டலாம். மிக அரிதான சில நோய்களாலும், மருந்துகளாலும் மட்டுமே குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும். மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகுதான் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அதே போல் தாயின் உணவுப் பழக்கங்களால் தாய்ப்பாலின் தரம் மாறுவதில்லை. எளிதில் செரிக்கக் கூடிய, எளிய சத்தான எல்லா உணவு வகைகளையும் தாய் உட்கொள்ளலாம்.


பழங்கள் மற்றும் பழச்சாறு உட்கொண்டால் தாய்க்கு சளி பிடிக்கும்; பலாப்பழம், மாம்பழம் மற்றும் முட்டையை பாலூட்டும் தாய் உட்கொண்டால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்… என்பதெல்லாம் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எளிதில் செரிக்கக் கூடிய எல்லா உணவுகளையும் அவரவர் வழக்கத்துக்கு தகுந்தபடி தாய் சாப்பிடலாம். 


வேலைக்கு செல்லும் தாய், சிலமணி நேரத்துக்கு மேல் பாலூட்டவில்லையெனில் அது கெட்டு புளித்திருக்கும், குழந்தைக்கு செரிக்காது என்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறு. இப்படி எண்ணி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். குழந்தை மார்பகத்தை சப்பிக் குடிக்கும்போது பால் சுரக்கிறது. சாதாரணமாக மார்பகத்தில் பால் சேமித்து வைக்கப்படுவதில்லை. பால் நாளங்களில் 10 – 20 மி.லி. பால் இருக்கும். அவ்வளவுதான். எனவே, தாய்ப்பால் புளித்துப் போக வாய்ப்பில்லை. இரு மாதங்கள் வரை பால் கொடுக்காமல் இருந்து, பிறகு கூட தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கலாம்.



பொதுவாக் குழந்தைக்கு தர வேண்டிய உணவுகள்:


முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று பார்த்தோம். அதன் பிறகு வீட்டில் தயாராகும் அவரவர் வழக்கத்துக்கு தகுந்த உணவை பழக்கலாம்.காலை 8 – 9 மணிக்குள் காலை உணவை கொடுக்க வேண்டும். சாப்பாட்டுக்கு இரண்டு மணி நேரங்களுக்கு பால் தரலாம். 


மொத்தத்தில் பசியுடன் இருந்தால்தான் உணவு உணபதில் குழந்தை ஆர்வம் காட்டும். மசித்த இட்லி, இடியாப்பம், மூடி வைக்கப்பட்ட ஆப்பம், மிருதுவான ஊத்தப்பம் போன்றவற்றை கைகளால் மசித்து சிறு சிறு கவளமாக தர வேண்டும். பருப்பு வேகவைத்த நீர், ரசம், புளிக்காத தயிர், பால் பயன்படுத்தி மசிக்கலாம். சர்க்கரை சேர்த்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், இனிப்பு சுவைதான் குழந்தைக்கு முதலில் புரியும்.


அதை ருசி பார்த்துவிட்டால் பிறகு காரம், உப்பு வகைகளை விரும்பாது. பேச்சு கொடுத்தபடியே ஊட்ட வேண்டும். காலை 11 – 12 மணியளவில் புதிதாக வீட்டில் ஆப்பிள், திராட்சை, மாதுளை ஆகியவற்றிலிருந்து தயாரான பழச்சாறை கொடுக்கலாம். திட உணவு பழகும்போது படிப்படியாக நிதானமாக செயல்பட வேண்டும். முதலில் 2 – 3 வாரங்களுக்கு காலை உணவு, பிறகு 2 – 3 வாரங்களுக்கு மதிய உணவு, பின்னர் 2 – 3 வாரங்களுக்கு மாலை உணவு… 


கடைசியாக இரவு உணவு. ஒவ்வொரு முறையும் புதிதாக சமைத்த உணவையே குழந்தைக்கு தர வேண்டும். ஆறிய உணவுகளை சுட வைத்து கொடுக்கக் கூடாது. ஊட்டும்போதும் உணவை வாங்கிக் கொள்ள, வாயைக் கூட்டி நாக்கை மடித்து விழுங்க… என்று படிப்படியாக பழக்கப்படுத்த வேண்டும்.


மதிய உணவில் சாதத்தை கையால் மசித்து சிறிது உப்பு, ஆறிய வெந்நீர் சேர்த்து ஊட்டலாம். பிறகு துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, சாம்பார், ரசம், கீரைச் சாறு என மாற்றி மாற்றி ஊட்டலாம். உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பரங்கி, பூசணி போன்றவற்றை நன்கு வேக வைத்து உப்பு சேர்த்து கொடுக்கலாம். 


புளிக்காத தயிரும், மோரும் குழந்தைக்கு நல்ல பயனளிக்கும். கடையில் விற்கும் இணை உணவுகளை வாங்கிக் கொடுக்காதீர்கள். அதே போல் பிஸ்கெட், ரொட்டி, கேக், சாக்லெட், நூடுல்ஸ், வறுவல்கள் (சிப்ஸ்) மாதிரியான ஜங்க் ஃபுட்டுக்கும் பழக்கப் படுத்தாதீர்கள். முடிந்தவரை இவற்றையெல்லாம் வாங்கிக் கொடுக்காமல் இருப்பதே நல்லது. 
 காரணம், அதிலுள்ள காரம் மற்றும் வேதிப் பொருட்கள் நச்சுத்தன்மையை அதிகரிக்கும். உடல் எடை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி குறையும். முக்கியமாக துரித உணவுகள் (ஃபாஸ்ட் ஃபுட்ஸ்) பக்கம் செல்லவே செல்லாதீர்கள்.

பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறது - வணக்கம் சென்னை!.

மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானத்தின் கலக்கல் காம்பினேஷனில் வெளியான படம் 'வணக்கம் சென்னை'.


தேனியில் இருந்து வேலைக்காக புறப்படும் சிவாவையும், லண்டனில் இருந்து புகைப்படம் எடுப்பதற்காக கிளம்பும் ப்ரியா ஆனந்தையும் அன்புடன் வரவேற்கிறது சென்னை.


இருவருக்கும் சென்னை புதிது என்பதால், தங்கள் குடியேறும் வீட்டின் ப்ரோக்கரின் தில்லு முல்லால் ஒரே வீட்டில் குடியேறும் சூழல் ஏற்படுகிறது.


பின் என்ன வந்தாரை வாழ வைக்கும் சென்னை, இவர்கள் இருவரையும் ஒரே வீட்டில் எலியும் பூனையுமாக டான்ஸ் ஆட வைக்கிறது கலகலப்புடன்.


ஹோலிப்பண்டிகையில் ப்ரியா ஆனந்த் பூசிய வண்ணத்தில் கலர்புல்லாக, காதலின் நிறம் தேட ஆரம்பித்து விடுகிறார் சிவா.


இந்நிலையில் இவர்களை ஏமாற்றி வீட்டு ப்ரோக்கராக நமது கொமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என்ட்ரி கொடுக்க. அதை தெரிந்தும், தெரியாததைப் போல் சிவா சமாளித்து விட்டு விடுகிறார்.


பின் தன் காதலை ப்ரியா ஆனந்துடன் சொல்ல முயற்சிக்கிறார். ஆனால், ப்ரியா ஆனந்துக்கு ஏற்கெனவே நிச்சயதார்த்தம் நடந்திருப்பது தெரிய வருகிறது.


இதனால் கோபமடைந்த சிவா, தங்களை ஒன்றாக தங்கவைத்து எஸ்கேப்பான சந்தானத்தை கண்டுபிடித்து மாறுகால் மாறுகை வாங்குகிறார்.


அதற்கு பரிகாரம் செய்வதற்கு இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக சிவாவிடம் சரண்டர் ஆகிறார் சந்தானம்.


வழக்கம் போல் சில முயற்சிகளில் மிஸ் ஆகி, இறுதில் ப்ரியா ஆனந்துக்கும் காதல் மலர்கிறது.


அங்கதான் கதையில ஒரு ட்விஸ்ட்... ஒன்னுமில்லைங்க நம்ம ப்ரியா ஆனந்துக்கு நிச்சயம் பண்ண அந்த அமெரிக்க மாப்பிள்ளை... ஆ..சாரி..சாரி... இதில் லண்டன் மாப்பிள்ளையாக ராகுல் ரவிந்திரன் என்ட்ரி கொடுக்கிறார்.

அப்புறம் என்ன, இவங்க காதல் கைகூடுச்சா..? இல்ல பிரிஞ்சுட்டாங்களா..? என்பது மீதிக்கதையின் சுருக்கம்.


சிவா வழக்கம்போல் ஒரே ஸ்டைலில் வந்து ஏதோ நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பிரதர்!


ப்ரியா ஆனந்த் தனது கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ, அதை கச்சித்தமாக செய்திருக்கிறார். கேட்ஸ் ஆப் ப்ரியா!


சந்தானம் கொஞ்சம் இடைவெளிவிட்டு(படத்தில்) வந்தாலும், கொமெடி சரவெடியை கோலாகலமாகவே வெடிக்கவைத்திருக்கிறார்.


ராகுல் நவிந்திரன், லண்டன் மாப்பிளையின் தேவைக்கேற்ப நடித்துள்ளார்.

பின், நிழல்கள் ரவி, ரேணுகா, ப்ளாக் பாண்டி, ஊர்வசி, நாசர், மனோபாலா, சுவாமிநாதன், ஆர்த்தி என்று அவரவர்கள் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியுள்ளனர்.


அறிமுக பெண் இயக்குனரான கிருத்திகா உதயநிதிக்கு வாழ்த்துக்கள். தான் நினைத்ததை பெர்பக்ஷனோடு எடுத்திருக்கிறார்.


கதையில் சில இடங்களில் ஓட்டை, உடசல்கள் தெரிந்தாலும் அதை தனது கொமெடிக் கலந்த திரைக்கதையால், நம் கண்களை மறைத்து விடுகிறார்.


அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இப்படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது.


லண்டன், சென்னை, தேனீ ஆகிய இடங்களுக்கு நம்மை பிக்னிக் கூட்டிச் செல்கிறது ரிச்சர்ட்.எம்.நாதனின் ஒளிப்பதிவு.


அதுவும் 'ஓ பெண்ணே..பெண்ணே' பாடல் கமெரா வெவ்வேறு கோணங்களில் நகர்வது மிக அழகு. சல்யூட் ரிச்சர்ட்!


படத்தின் திரைக்கதை நீண்ட நேரம் பயணித்தாலும்... பார்ப்பவர்களின் பார்வைக்கு சற்றும் சலனம் தராமல், தத்தம் தனது பணியை வெகு சிறப்பாக செய்திருக்கிறார் எடிட்டர் டி.எஸ்.சுரேஷ். சூப்பர் பாஸ்!


மொத்தத்தில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி, லாஜிக் விதிகளையும் மறந்து திரையரங்குக்கு வருவோரை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறது இந்த வணக்கம் சென்னை.

நடிகர்கள்: சிவா, சந்தானம், ராகுல் ரவிந்திரன்

நடிகைகள்: ப்ரியா ஆனந்த், ஊர்வசி, ரேணுகா, ஆர்த்தி


ஒளிப்பதிவு: ரிச்சர்ட்.எம்.நாதன்



இசை: அனிருத்


இயக்கம்: கிருத்திகா உதயநிதி


தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின்



அறிவியல் பின்னணியில் அப்புச்சி கிராமம்!


அறிவியல் சார்ந்த பின்னணியுடன் அப்புச்சி கிராமம் என்ற புதிய படம் உருவாகிறது.


எ கன் அன்ட் எ ரிங் என்ற கனடா நாட்டுப் படத்தைத் தயாரித்த விஷ்ணு முரளி என்பவர் இந்த அப்புச்சி கிராமத்தைத் தயாரிக்கிறார்.
கட்டடக்கலை நிபுணரான வி.ஆனந்த் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகிறார்.


இவர், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ஹோசிமின், பிரதாப் போத்தன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.


ஜி.எம்.குமார், கும்கி ஜோசப், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு என கைதேர்ந்த நடிகர்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.


விஷால்.சி இசையமைக்கும் இப்படத்தை பிரசாத் ஜிகே ஒளிப்பதிவு செய்கிறார்.


இதுகுறித்து இயக்குனர் வி.ஆனந்த் கூறுகையில், எப்பொழுது ஒரு படம் மனித உறவுகளின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் பற்றி பேசுகிறதோ அது மக்களின் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக இருக்கும்.


அதுபோல் தன் படமும் இந்த வரையறைக்குள் வரும் என அழுத்தமாக கூறியுள்ளார்.

iPhone 5S கைப்பேசியில் புதிய பிரச்சினை - iPhone 5s Blue Screen Of Death Bug!!!

                        




பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அப்பிள் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 5S ஸ்மார்ட் கைப்பேசியில் Blue Screen of Death பிரச்சினை ஏற்படுவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.


விண்டோஸ் எக்.பி போன்ற இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளிலேயே இவ்வாறான பிரச்சினை இதுவரையில் காணப்பட்டு வந்தது.


இந்நிலையில் தற்போது முதன்முறையாக கைப்பேசிகளில் இப்பிரச்சினை ஏற்பட ஆரம்பித்துள்ளது.


எனினும் இந்தப் பிரச்சினைக்கான தீர்வு இதுவரையில் முன்வைக்கப்படவில்லை என்பதுடன் iPhone 5S கைப்பேசிகள் iOS 7 இயங்குதளத்தில் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



நாமக்கல் மாவட்டத்தின் வரலாறு!



ஒரு பக்கம் கோட்டை, இன்னொரு பக்கம் எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பேட்டை. நடுவில் உயர்ந்து நிற்கும் நாமகிரிமலை. 


இதுதான் நாமக்கல் கிழக்கே கோட்டையும் மேற்கே பேட்டையுமாகப் பிரிந்து கிடக்கும் இந்த நகரம் தற்போது கோழிப்பண்ணைகளுக்குப் பெயர் போனதாக உள்ளது. ஆனால் இயற்கை எழிலும் வரலாற்றுச் சிறப்பும் கொண்டது. 


நாமக்கல்லைச் சுற்றியுள்ள ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பரமத்தி வட்டங்களைச் சேர்த்து கடந்த 1.1.97 முதல் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய நாமக்கல் மாவட்டம் முன்பு சேலம் மாவட்டத்துடன்  இணைந்திருந்தது.


'நாமகிரி' என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர்  'ஆரைக்கல்' என்பதாகும்.



 இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாறையின் மீது ராமச்சந்திர நாயக்கர் கட்டிய கோட்டை உள்ளது. பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார். 



மகாத்மா காந்தி அவர்களின் பொதுக்கூட்டம் 1933ல் இப்பாறை அருகே நடைபெற்றது.


இப்பாறையின் ஓரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது.




நாடு வளம்பெற காடுகளை காப்போம்!!

திருவள்ளுவர் “நாடு’ அதிகாரத்தில் மலையைப் பற்றி “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.அதாவது, ஊற்று நீரும், மழை நீரும், இவை அமைந்த மலையும், அதிலிருந்து வரும் ஆற்று நீர் வளமும் வலிய அரணும் ஒரு நாட்டிற்கு நல்லுறுப்புகள். தென் மேற்கு பருவமழையின் போது தமிழகம், கேரளாவிற்கு இடையில் மேற்குத் தொடர்ச்சி மலை தடுப்பாக நின்று கேரளாவிற்கு அதிக மழையை தருகிறது. தமிழகம் மழை மறைவு பிரதேசம். நீலகிரி, கோவையின் சில பகுதி, கன்னியாகுமரி மாவட்டம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையால் பயனடைகிறது.


                                   13 - save_our_forest_

 


உலகில் ஆறுகள் அனைத்தும் பனிமலை அல்லது மலைப்பகுதியில் உற்பத்தியாகின்றன. பனிமலை( இமயமலை)யில் கங்கை உற்பத்தியாகிறது.காவிரி, பெரியாறு, வைகை, தாமிரபரணி போன்றவை மலைப்பகுதியில் உற்பத்தியாகிறது. மழைப்பொழிவு ஏற்படும் அனைத்து நிலப்பகுதியும் நீர்ப்பிடிப்பு பகுதிகள். இதில் பெய்யும் மழை நீர் காடாக இருந்தால், அது பூமியில் உள்ளிழுக்கப்பட்டு சிறு, சிறு நீருற்றுகளாக வெளிப்படும். பின், அவை ஓரிடத்தில் ஒன்று கூடி சிற்றோடைகளாகவும், அவை நீரோடையாகவும், பல ஒன்று சேர்ந்து ஆறாகவும் மாறுகிறது. இந்த மழை நீர் பாறை அல்லது விவசாய நிலத்தில் விழுந்தால், மழை பெய்த அன்றே (நிலத்தில் உறிஞ்சியது போக மீதம்) வடிந்து நீரோடை வழியாக ஓடி, நீர் நிலையை சென்றடைகிறது.



காடுகள் ஒரு வங்கியில் இருக்கும் முதலீடு போல் செயல்படுகிறது. காலப்போக்கில் நாம் பெறும் பயன் (வட்டி) போல், வற்றாத நீரோடை, ஆறுகளை தருகிறது. இதனால், ஒவ்வொரு நாட்டின் நிலப்பரப்பிலும் மூன்றில் ஒரு பங்கு காடாக இருக்க வேண்டும் என்பது நெறிமுறை
அத்துவானக் காட்டுக்குள்ளே ஒரு சிங்கம் இருந்ததாம். அந்தச் சிங்கம் அந்தக் காட்டில் கம்பீரமாக நடந்து வருமாம். இது நமக்கு பாட்டி சொன்ன ஒரு கதையின் தொடக்கப் பகுதி. மீசைக்கார அண்ணாச்சி ஒருவர் சுமார் 600 சதுர கி.மீ. காட்டுப் பகுதியில் ஒளிந்து இருந்ததாகவும், அப் பகுதியில் நிலத்தில் சூரிய வெளிச்சம் படாத அளவுக்கு காடுகள் அடர்ந்து இருந்ததாகவும் கூறப்படுவதுண்டு. இன்றைய காடுகளின் நிலை என்ன?


நீலகிரி மாவட்டத்தில் நிலச் சரிவால் போக்குவரத்து பாதிப்பு. கேரளம் – தமிழகச் சாலையில் நிலச் சரிவால் போக்குவரத்து பாதிப்பு. ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், ஊட்டி-மேட்டுப்பாளையம் ரயில் போக்குவரத்து நிறுத்தம் போன்ற செய்திகளை அடிக்கடி பத்திரிகைகளில் படித்து வருகிறோம். ஏன் இந்த நிலை? நாம் நமது சுயநலத்துக்காகவும் தேவைக்காகவும் காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு, நிலச் சரிவு, காட்டுத் தீ, புவி வெப்பமடைதல் போன்றவை நிகழ்கின்றன.
“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடும் உடையது அரண்’ என திருவள்ளுவர் கூறியுள்ளார். நீல மணிபோன்ற நீரையுடைய அகழியும் வெட்ட வெளியான நிலப்பரப்பும் உயரமான மலையும் மரநிழல் செறிந்த காடுகளும் கொண்டுள்ளதே அரண் என்பது இதன் பொருளாகும்.


சர்வதேச அளவில் இந்தியாவில் காடுகளின் வளத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. அடர்த்தியான பல்லுயிர்ப் பெருக்க காட்டுப் பகுதிகள் உலகில் 25 உள்ளதாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 3 இந்தியாவில் உள்ளன. கிழக்கு இமயமலைத் தொடர், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் மற்றும் மேற்கு இமயமலைத் தொடர் ஆகியவையே இம்மூன்றாகும். மேலும், உலகில் காணப்படும் பன்னிரண்டு பல்லுயிர்ப் பெருக்க மையங்களில் இந்தியாவும் ஒன்றாகும். ஆனால், சமீப காலமாக இந்தியாவில் காடுகளின் வளம் குறைந்து வருகிறது.


இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நாட்டின் காடுவளம் 60 சதவீதமாக இருந்தது. 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி, இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் காடுகளின் பரப்பு 23.41 சதவீதமாகும். நாட்டில் பாதிக்கு மேல் உள்ள காடுகளை கடந்த 66 ஆண்டுகளில் அழித்து விட்டோம். கட்டடம் கட்டுவது, சாலைகள் அமைப்பது, தொழிற்சாலைகள் அமைப்பது என பலவற்றுக்காகவும் நாம் காடுகளை அழித்துவிட்டோம். நாட்டின் வளர்ச்சிப் பணி என்பது முக்கியமானதுதான். அதற்காக பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை அன்னை கழுத்தை நெரிக்கலாமா?


அழிக்கப்பட்ட காடுகளுக்கு சமமாக தரிசு நிலங்களில் காடுகளை உருவாக்கத் தவறி விட்டோம். தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது.


தேசிய அளவில் தமிழகத்தின் காடு வளம் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது, மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழகத்தின் மொத்த காட்டுப் பகுதி 22,877 சதுர கி.மீ. ஆகும். இது மாநில நிலப்பரப்பில் 17.59 சதவீதமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சுற்றுச்சூழல் திட்டத்தின்படி, ஒவ்வொரு நாட்டிலும், அந்த நாட்டின் மொத்தப் பரப்பளவில் 33 சதவீதம் காடு வளம் இருக்க வேண்டும். எனினும், தமிழகத்தில் 5 தேசிய பூங்காக்கள், 10 வனவிலங்கு சரணாலயங்கள், 14 பறவைகள் சரணாலயங்கள், 4 புலிகள் காப்பகங்கள், 4 யானை பாதுகாப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.


தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில்தான் காடுகளின் பரப்பு உள்ளது. இந்த மாவட்டத்தில் காடுகளின் பரப்பு 81.84 சதவீதமாகும். இந்தியாவில் காணப்படும் 17,672 பூக்கும் தாவரங்களில் 5,640 தாவரங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. இந்த தாவரங்களில் பெரும்பாலானவை மிகவும் அரிதானவையாகும்.


மேற்கு தொடர்ச்சி மலை, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை மற்றும் பழனி மலைத் தொடர்களில் எண்ணிலடங்கா மூலிகைத் தாவரங்கள் காணப்படுகின்றன. காடுகளைக் காப்பது நமது தலையாய கடமையாகும்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு நாம் முழு ஒத்துழைப்பு கொடுத்து, காடுகளைக் காக்க வேண்டும். ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவனிடம், “காடுகளை காப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?’ எனக் கேட்டார். அதற்கு அந்த மாணவன், “சும்மா இருந்தாலே போதும் சார்’ என பதில் கூறினான். மற்ற மாணவர்கள் சிரித்தார்கள். ஆனால் ஆசிரியர், “இவன் கூறியது சரியான பதில்தான். காடுகளைப் பாதுகாக்க, நாம் காடுகளை அழிக்காமல் சும்மா இருந்தால் போதுமானது என்பது அதன் பொருளாகும்’ என்றார். மற்ற மாணவர்கள் புரிந்து கொண்டார்கள். நாமும் புரிந்துகொள்ள வேண்டும்!

மத்திய அரசுத் துறைகளில் ஸ்டெனோகிராபர் பணிக்கான எஸ்எஸ்சி தேர்வு!

தலைநகர் தில்லியில் உள்ள மத்திய அமைச்சரவை அலுவலகங்கள்/ மத்திய அரசு துறைகள் மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஸ்டெனோகிராபர் (கிரேடு சி மற்றும் டி) பிரிவு பணிகளில் ஏற்பட்டு உள்ள காலியிடங்களை Staff Selection Commission நடத்தும் அகில இந்திய அளவிலான தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம்.

                                     13 - vazhikatti ssc
 
தேர்வு பெயர்: Stenographer (Grade C & D) Examination -2013

பணியின் பெயர்: Stenographer (Grade C & D)

காலியிடங்கள்: இறுதி செய்யப்படவில்லை.

வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும்.


கல்வித்தகுதி:


 +2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது இந்தியில் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100/80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் கனிணியில் ஆங்கிலம், இந்தியில் டைப் செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி:
29.12.2013


எழுத்துத்தேர்வு நடைபெறும் மையங்கள் கோடு எண்: சென்னை – 82012, கோயம்புத்தூர் – 8202, மதுரை – 8204, திருச்சிராப்பள்ளி – 8206, திருநெல்வேலி – 8207, புதுச்சேரி – 8401

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
 
26.10.2013

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Reginal Director(SR), Staff Selection Commission, 2nd Floor, College Road, Chennai – 600006.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பதைக்க வைத்த பாலைவன மலர்!


1965ம் ஆண்டு சோமாலியாவில் உள்ள ஒரு பாலைவன கிராமத்தில் பிறந்தவர் வாரிஸ் டைரி. கொளுத்தும் வெயிலில் ஆடுகளை மேய்ப்பது, உணவு தயாரிப்பது, வீட்டைப் பராமரிப்பது என்று ஓர் ஆப்பிரிக்க பெண்ணின் கடின உழைப்பு வாரிஸிடமும் இருந்தது. 


துறுதுறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் பறந்து திரிந்த பட்டாம் பூச்சி, அந்தக் கொடூரத்தின் உச்சத்தைச் சந்தித்த போது வயது 5.ஆரம்பத்தில் நல்ல உணவு கொடுக்கப்பட்டு, அன்பாகப் பேசி அழைத்துச் செல்லப்பட்டார் வாரிஸ். 



அதிகாலை மருத்துவச்சியின் பிளேடால் அவரது பிறப்புறுப்பு வெட்டி எடுக்கப்பட்டு, முள்களால் தைக்கப்பட்டது. உடல் முழுவதும் ரத்தம்… வலியின் உச்சம்… அந்தச் சின்னஞ்சிறிய பாலைவன மலர் வதங்கிப் போனது.


                           12- lady deset wariyors

 


மதத்தின் பெயரால் ஆப்பிரிக்கப் பெண்களின் கற்பைக் காப்பதற்காக, இந்தக் கொடிய செயல் பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்கா உள்பட உலகின் 28 நாடுகளில் பெண்களுக்கு இந்தக் கொடூரம் இன்னும் நடக்கிறது. பெருகும் குருதி, நோய்த்தொற்று போன்ற காரணங்களால் நான்கில் இரு பெண்கள் மரணத்தைச் சந்தித்துவிடுவார்கள்.



தைக்கப்பட்ட பிறப்புறுப்பு திருமணத்தின் போது வெட்டிவிடப்படும் (இப்படிச் செய்யப்பட்டவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் தாம்பத்ய இன்பம் கிடைக்காது என்பது இன்னொரு கொடூரம்). அதுவரையிலும், தைக்கப்பட்ட பிறப்புறுப்பின் மிகச்சிறு துளை வழியே சிறுநீர் கழிப்பதும் மாதவிடாய் ரத்தம் வெளியேறுவதும் கொடுமையாக இருக்கும். அம்மாவின் அரவணைப்பில் தைரியம் மிக்க வாரிஸ் தேறினார். 



வழக்கமான வேலைகளைச் செய்து வந்தார். 13 வயதில் திடீரென ஒருநாள் வாரிஸின் அப்பா, தன்னை விட வயதில் பெரிய முதியவரை அழைத்து வந்து, ‘வாரிஸின் கணவன்’ என்றார். ‘திருமணம் வேண்டாம்’ என்று வாரிஸ் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.



ஒரு நாள் இரவு உணவு, தண்ணீர், செருப்பு எதுவுமின்றி, அம்மாவின் சம்மதத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார் வாரிஸ். பகல் முழுவதும் கொடுமையான பாலைவன வெயில். இரவு கொடுங்குளிர். வெற்றுக்காலில் ஓடிக்கொண்டே இருந்தார் வாரிஸ். கொஞ்சம் தாமதித்தாலும் அப்பாவால் பிடித்துச் செல்லப்படுவோம் என்ற உணர்வு, ஓட்டத்தின் வேகத்தை அதிகரித்தது. 



களைப்பில் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கும்போது, மூச்சு விடும் சத்தம் கேட்டு விழித்தார் வாரிஸ். அருகில் ஒரு சிங்கம். இனி பிழைக்க வழியில்லை. சிங்கத்துக்கு இரையாகத் தயாரானார் வாரிஸ். அருகில் வந்த சிங்கம், அவரை முகர்ந்து பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டது.



மீண்டும் ஓட்டம்… பல நாள்கள் பயணம் செய்து, ஏறக்குறைய 480 கிலோமீட்டர் கடந்து வந்திருந்தார் வாரிஸ். அது அவருடைய அக்கா மற்றும் சில உறவினர்கள் வசிக்கும் மொஹதீஸு என்ற இடம். அக்கா வீட்டில் வீட்டு வேலைகள் முழுவதையும் செய்தார். குழந்தையைப் பார்த்துக்கொண்டார். அக்காவோ வாரிஸை தங்கையாக நினைக்காமல் வேலைக்காரியாகவே நடத்தினார். அங்கிருந்து வெளியேறி, சித்தப்பா வீட்டில் தஞ்சம் புகுந்தார். அங்கும் வீட்டு வேலைகளைச் செய்தார்.



அப்போது லண்டனில் உள்ள சோமாலியா தூதரகத்தில் வேலை செய்த சித்தப்பா, வீட்டுவேலை செய்ய ஆள் தேடி வந்தார். தானே வருவதாக விருப்பத்துடன் கூறினார் வாரிஸ். உடனே பாஸ்போர்ட் பெறப்பட்டு, லண்டன் வந்து சேர்ந்தார். அங்கும் சமையல் வேலை, வீட்டுவேலைகளைச் செய்துகொண்டிருந்தார்.



அந்த வீட்டுக் குழந்தையைப் பள்ளியில் விடும்போது, அங்கு ஒரு குழந்தையின் அப்பா, வாரிஸைப் பார்த்து அடிக்கடி புன்னகை செய்வார். ஒருநாள் தன்னுடைய பிசினஸ் கார்டை கொடுத்தார். ஆங்கிலம் அறியாத வாரிஸ் அதை வாங்கி வைத்துக்கொண்டார்.




சோமாலியாவில் உள்நாட்டுக் கலவரம் வெடிக்க, சித்தப்பாவை சோமாலி யாவுக்கு வரச் சொல்லிவிட்டனர். மீண்டும் சோமாலியா செல்வதில் வாரிஸுக்கு விருப்பம் இல்லை. தன் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது என்று சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் சித்தப்பா குடும்பம் மட்டும் கிளம்பிச் சென்றது.



வாரிஸின் தோழி ஒருவர் அடைக்கலம் கொடுத்தார். அவர் மூலம் பிசினஸ் கார்ட் கொடுத்தவரிடம் தொடர்புகொண்டார். அவர் டெரன்ஸ் டொனொவன். புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர். வாரிஸை புகைப்படம் எடுக்க விரும்பினார். தனக்கும் வாழ பணம் வேண்டும்… அம்மாவுக்கும் பணம் அனுப்ப வேண்டும் என்று நினைத்த வாரிஸ் மாடலிங் செய்ய சம்மதம் தெரிவித்தார்.



அவருடைய அழகான புகைப்படங்கள் பலரின் பாராட்டுகளைப் பெற்றன. பணம் சேர்ந்தது. மருத்துவரிடம் சென்று, தைக்கப்பட்ட பிறப்புறுப்பை பிரித்தார். பல ஆண்டுகள் அனுபவித்து வந்த சித்திரவதையில் இருந்து மீண்டார். விரைவில் பைரலி காலண்டரின் முகப்பை வாரிஸின் படம் அலங்கரித்தது. குறுகிய காலத்திலேயே பிரபல மாடலாக வலம் வந்தார். 



உலகின் மிக முன்னணி நிறுவனங்கள் பலவும் போட்டி போட்டுக்கொண்டு அவரை பிராண்ட் அம்பாசிடராக கொண்டாடின. அதைத் தொடர்ந்து ஜேம்ஸ் பாண்ட் படத்திலும் (The Living Daylights) நடித்தார். இவரது வாழ்க்கையே 2009ல் ‘Desert Flower’ என்ற பெயரில் ஜெர்மன் திரைப்படமாக வெளியானது.



உலகப் புகழ்பெற்றவராக ஆகிவிட்டாலும் வாரிஸின் மனம் அமைதியடையவில்லை. தான் அடைந்த சித்திரவதையை இனி எந்தப் பெண்ணும் அனுபவிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் ‘டெசர்ட் ஃப்ளவர் ஃபவுண்டேஷன்’ அமைப்பை உருவாக்கினார். பெண்களின் பிறப்புறுப்பு சிதைக்கப்படுவதை எதிர்ப்பதும் தடுப்பதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். அதோடு, சோமாலியா நாட்டின் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம் போன்றவற்றையும் அளித்து வருகிறது இந்த அமைப்பு.



1997ல் மாடலிங் செய்வதை நிறுத்திவிட்டு, முழு நேரத்தையும் சமூக சேவையில் செலவிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டார் வாரிஸ். 2003ம் ஆண்டு வரை இந்தப் பணியைத் திறமையாகச் செய்து முடித்தார்.



 1998ல் வாரிஸ் தன் வாழ்க்கையை ‘டெசர்ட் ஃப்ளவர்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணின் வலி மிகுந்த வாழ்க்கையையும் ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணின் வெற்றியையும் வெளிப்படுத்திய இந்தப் புத்தகம், உலகம் முழுவதும் 1 கோடியே 10 லட்சம் பிரதிகளை விற்று சாதனை படைத்திருக்கிறது.



‘டெசர்ட் சில்ட்ரன்’, ‘லெட்டர் டூ மை மதர்’ உள்பட இன்னும் 4 முக்கிய நூல்களையும் எழுதியிருக்கிறார். ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி உள்பட பல நாடுகளும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளும் வாரிஸுக்கு விருதுகளை வழங்கியிருக்கின்றன. மாடல், நடிகை, பெண்ணுரிமைப் போராளி என்று தானும் உயர்ந்து, சமூகத்தையும் உயர்த்திய இந்த வாரிஸ் டைரி பாலைவன மலர் அல்ல… பாலைவனச் சோலை!

பூசணிக்காய் நம்பிக்கை உயிர்!






 நாளை ஆயுத பூஜை. எது நடக்கிறதோ இல்லையோ.. திருஷ்டி கழிக்க பூசணி சுற்றி உடைக்கும் நிகழ்ச்சி எல்லா இடங்களிலும் நடக்க போகிறது. அக்டோபர் மாதம் மழை காலத்தில் பெரும்பாலும் சாலைகளும் தெருக்களும் சகதியாக மாறிவிடும். இந்த நேரத்தில் பூசணிக்காய் சிதறல்கள் வாகனங்களில் நசுங்கி சாலைகளை கொழ கொழ என்று மாற்றி விடுகின்றன. வழுக்கி விழுவதற்கு இதை விட வேறு என்ன வேண்டும். 


பூசணி உடைப்பது அவரவர் நம்பிக்கையாக இருப்பதில் தவறில்லை. ஆனால், மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில் கவனம் தேவை. தெருக்கள், சாலைகளில் உடைக்கப்படும் பூசணிக்காயால் என்னென்ன நடந்திருக்கிறது என்பதை சொல்ல தேவையில்லை. பைக்கில் செல்பவர்கள் எத்தனை பேர் பூசணிக்காயால் சறுக்கி விழுந்துள்ளனர். பலர் உயிரை துறந்துள்ளனர் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். 


சுற்றுப்புறத்தை நாமே கெடுத்துவிட்டு, துப்புரவு ஊழியர்கள் அப்புறப்படுத்தவில்லை என்று குற்றம் சொல்வது எந்த வகையில் நியாயம்.பூசணிக்காயால் பைக்கில் வழுக்கி விழுபவரின் உயிர் போகும் போது, மெதுவாக சென்றிருந்தால் நடந்திருக்காது. பார்த்து சென்றிருந்தால் நடந்திருக்காது, குடித்துவிட்டு ஓட்டாமல் இருந்திருந்தால் நடந்திருக்காது.  ஹெல்மெட் அணிந்திருந்தால் நடந்திருக்காது.. என்று பல காதுகளை காரணம் சொல்லி ஆறுதல் அடைவதே வழக்கமாகி விட்டது. 



ஆனால், சுற்றுப்புற கேடு, விபத்து என்று பல விஷயங்களுக்கு மூல காரணம் பூசணிக்காய் சிதறல்கள் என்பதை மறந்து விடுகிறோம்.பூசணிக்காய் இறப்புகளை தடுக்க தொடர்ந்து பிரசாரம் நடத்தப்படுகிறது. எனினும் விழிப்புணர்வுதான் முழுமையாக ஏற்படவில்லை. பூசணி உடைக்கலாம். உடைத்த பின் அதன் சிதறல்களை ஓரமாக தள்ளி வைத்தால் நடப்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும். 



இதை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் சிந்தித்தால்தான் விபத்துகளை தடுக்க முடியும். மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள யாருக்கும் உரிமையில்லை. அப்படி நடந்தால் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க சட்டமும் இருக்கிறது. அந்த அளவுக்கு யோசிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் நம் வீட்டு முன்போ, கடை முன்போ உடைக்கப்படும் பூசணிக்காயே பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தாலே போதும். திருஷ்டி கழித்த பின் அதன் சிதறல்களை ஓரமாக பெருக்கி தள்ளும் எண்ணம் வரும். அப்போதுதான் உண்மையாகவே திருஷ்டி கழியும்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாறு !



தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்று. இன்றும், மன்னராட்சி இருந்ததற்கான சுவடுகளோடு காட்சியளித்துக் கொண்டிருக்கும் புதுக்கோட்டை, தொல்லியல் மற்றும்

வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கொடும்பாளூர், நார்த்தமாலை, குடுமியான் மலை, குன்னாண்டனார் கோயில், சித்தன்ன வாசல், திருமயம், ஆவுடையார் கோயில் போன்ற

தொன்மைச் சிறப்பு வாய்ந்த இடங்களைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டம், சங்கப் பாடலிலும் இடம் பெற்றுள்ளது. ஜனவரி 14, 1974ல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுகை

(புதுக்கோட்டையின் சுருக்கமான பெயர்) மாவட்டம் உருவாக்கப்பட்டது.

ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து

வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.

இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச்

சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள்,

அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை நீளும் என்று கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள்

சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம்.

இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள்,

கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களில் நாகரீகம் படிப்படியாக

உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து

சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக்

குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலக்கட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க

காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.


ஒற்றுமை.... (நீதிக்கதை)!



 
நாலு மாடுகள் மிகவும் நண்பர்களாய் இருந்தன.


அவை தினமும் காட்டுப்பகுதிக்குச் சென்று புல் மேய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன.


நன்கு கொழுத்துக் காணப்பட்ட அவற்றை அடித்து உண்ண சிங்கம் ஒன்று விரும்பியது.


அதற்காக அது ஒரு முறை முயன்றபோது ...நாலு மாடுகளும் சேர்ந்து சிங்கத்தைத் தாக்கி...அதற்கு காயத்தை
ஏற்படுத்த ....தப்பினால் போதும் என அவைகளிடமிருந்து சிங்கம் ஓடியது.


பின் ஒரு நாள்..தனக்கு ஆலோசனைகள் கூறும் நரியைப் பார்த்து சிங்கம் அந்த மாடுகள் பற்றிக் கூறியது.


அதற்கு நரி...'சிங்க ராஜாவே....அவைகள் ஒற்றுமையாய் இருப்பதாலேயே பலமுள்ளதாய் தெரிகிறது. அவற்றை பிரித்தால் ...தனித்தனியாக அவற்றை அடித்து உண்ணலாம்' என்று தெரிவித்ததோடு ...அவற்றை பிரிக்கும் பணியையும் ஏற்றது.


ஒரு நாள் நான்கு மாடுகளில் ஒன்று சற்று தனியாக இருந்தபோது ...நரி அதைப் பார்த்து ' உங்கள் நால்வரில் நீயே பலசாலி...ஆகவே நீ தனித்து புல் மேயப்போனால் உனக்கு அதிக புற்கள் கிடைக்கும் ....மேலும் உன்னுடைய பலமும் அப்போதுதான் மூன்று பேருக்கும் புரியும்' என்றது.


அப்படியே மற்ற மூன்று மாடுகளிடமும் சொன்னது.


நரி சொல்வதை உண்மை என்று நம்பிய மாடுகள்...அடுத்த நாள் தனித்தனியாக புல் மேய தனி இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தது.


தினமும் ஒன்றாக...அவற்றை சிங்கம் அடித்து உண்டது.


மாடுகள் ஒற்றுமையாய் பிரியாமல் இருந்தால் பலமுள்ளதாக இருந்திருக்கும். பிரிந்ததால் பலமற்றுப் போய் மடிந்தன.


ஒற்றுமையாய் இருந்தால் நம்மால் பல சாதனைகளை சாதிக்கமுடியும்.ஒற்றுமையின்மையால் நாம் செயலற்று போவோம். 
 
 

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 2...!

                   கடந்த பதிவில் ஏழாம் நூற்றாண்டு வரை உள்ள உலக வரைபடங்களைபார்த்தோம் இந்த பதிவில் எட்டாம் நூற்றாண்டு வரைபடத்திலிருந்து பார்ப்போம் அதற்கு முன் நண்பர்கள் சிலர் ஈமெயில் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு விடையளித்து விட்டு 
தொடர்கிறேன் ஏனெனில் அந்த கேள்வி உங்களுக்கும் தோன்றியிருக்கும். 


உலகின் முதல் வரைபடம்னு குறிப்பிட்டிருக்கும் வரைபடத்தில் உலகம் முழுவதும் இல்லையே? என்பதே அந்த கேள்வி.


விடை:   மனித நாகரிகம் முதன் முதலாக தோண்டியதாக கருதப்படும் மெசபடோமியாவை (பாபிலோனியர்கள்) சுற்றி மட்டுமே அந்த வரைபடம் இருந்திருக்கும் ஏனெனில் மனிதன் உலகம் என்று நினைத்தது அந்த பகுதியை மட்டுமே. மனிதன் பயணம் செய்ய செய்ய உலகம் எவ்வளவு பெரியது என்பதை அறிந்தான், உணர்ந்தான்.


எட்டாம் நூற்றாண்டு உலக வரைபடம்:










Albi or Merovingian இன மக்களால் வரையப்பட்ட உலக வரைபடம் வரையப்பட்ட ஆண்டு தெரியவில்லை

 


   திபெத்தியர்களால் கி.பி 733 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்.


ஒன்பதாம் நூற்றாண்டு உலக வரைபடம்:




                   .

அரேபியர்களால் கி.பி 804 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம் 




பெர்சியா நாடு Balkhi என்பவரால் கி.பி 816 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக காலநிலை வரைபடம்.


பத்தாம் நூற்றாண்டு உலக வரைபடம்:




Anglo-Saxon Cottonian களால் கி.பி 900 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்





அரேபியர்களால் கி பி 980 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்

பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்து அடுத்த பதிவில் தொடர்வோம்.....

ஒவ்வொரு தங்க நகைக்கும் பிரத்யேக தரச் சான்றிதழ் -புதிய சட்டம் அமலாகிறது!


மக்கள் வாங்கும் ஒவ்வொரு தங்க நகைக்கும் பிரத்யேக தரச் சான்றிதழ் வழங்கும் திட்டம் வரும் 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.இதனால் திருட்டு நகைகளை அதிகாரபூர்வமாக கடைகளில் விற்கும் போக்கு குறையும் என்பதுடன் தங்கம் வாங்குதல் மற்றும் நகை விற்பனை தொடர்பான தில்லுமுல்லு கணக்குகள் முடிவிற்கு வரும் என அரசு கருதுகிறது.

12 -  jewellery gold.

 

தற்போது தங்க நகைகளின் தரத்திற்கு இந்திய தர நிர்ணய கழகம் (பீ.ஐ.எஸ்.,) ‘ஹால்மார்க்’ முத்திரை வழங்குகிறது. நகைகளில் பதிக்கப்பட்டுள்ள இந்த முத்திரையில் தங்கத்தின் தூய்மையை குறிக்கும் எண் (22 காரட்டிற்கு – 916), விற்பனையாளர் குறியீடு வருடத்தை குறிக்கும் சங்கேத எழுத்து உள்ளிட்டவை அடங்கியுள்ளன.


இவற்றுடன் மேலும் பல விவரங்களை மக்கள் படித்து தெரிந்து கொள்ளும் நோக்குடன் ‘நகை சான்றிதழ்’ திட்டத்தை செயல்படுத்த பீ.ஐ.எஸ்., திட்டமிட்டுள்ளது. 



இதன் முதற்கட்டமாக, சென்னை, டில்லி, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய பெரு நகரங்களில் வரும் புத்தாண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது. இதன் படி மக்கள் வாங்கும் ஒவ்வொரு ‘ஹால்மார்க்’ நகையுடன் அதன் தரம், பயன் படுத்தப்பட்ட இதர உலோகம், பதிக்கப்பட்டுள்ள கற்கள் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்ட சிறிய அட்டை வழங்கப்படும்.இந்த சான்றிதழ் அட்டையில், குறிப்பிட்ட நகையின் படமும் இடம் பெற்றிருக்கும்.



இத்தகைய நடைமுறை நகை மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவும் என்பதோடு சுலபமாக மறு விற்பனைக்கும் உதவும்’ என பீ.ஐ.எஸ்., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த விதிமுறை அமலுக்கு வரும்பட்சத்தில் குறிப்பாக பெரு நகரங்களில் கடைகளில் திருட்டு நகைகளை விற்பது கட்டுப்படுத்தப்படும். சான்றிதழ் இருந்தால் தான் நகைகளை விற்பனை செய்ய முடியும் என்ற நிலை ஏற்படும்.


அதே சமயம் கடத்தி வரப்படும் நகைகளை விற்பதும் குறையும். இதனால் நகைக் கடைக்காரர்கள் தாங்கள் வாங்கும் தங்கம், தயாரித்த நகைகள் அவற்றின் விற்பனை குறித்த விவரங்களை துல்லியமாகவும், வெளிப்படையாகவும் பராமரிக்கும் நிலை ஏற்படும்.



தற்போது இந்த திட்டம் பெருநகரங்களில் மட்டுமே அமலுக்கு வரஉள்ளது. இதர பகுதிகளில் நடைமுறைப்படுததப்பட மாட்டாது.எனினும் இந்த புதிய விதிமுறையால் பெரு நகர நகைக் கடைக்காரர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் வர்த்தகம் இதர சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று விடுமோ என அஞ்சுகின்றனர்.

இந்திய இளைஞருக்கு ஐ. நா. விருது - இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதற்கு!!


பள்ளிக்கல்வி திட்டம் உருவாக்கியதற்காக ஐ.நா.வின் சிறப்பு விருதுக்கு இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதை பாராட்டி அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.

12 - varon arora u n award winner

 


உலக அளவில் தொழில் நுட்ப துறைகளில் சிறந்த திட்டங்களை உருவாக்கும் இளைஞர்கள் 10 பேரை, சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன்(ஐ.டி.யூ.) தேர்வு செய்து ஐ.நா. சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கிறது. இதற்கான போட்டியில் 88 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


18 வயது முதல் 26 வயதிற்குட்பட்டவர்களே பங்கேற்க முடியும். இந்த விருதுக்கு தேர்வு பெற்ற 10 பேரின் பெயர் விவரத்தை ஐ.டி.யூ. அமைப்பின் பொதுச்செயலாளர் ஹாமாடோவின் தோரே நேற்று அறிவித்தார்.
இந்த விருதுக்கு இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா தேர்வு பெற்றார். தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதை பாராட்டி அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.


மேலும் வியட்னாம், டிரினிடாட் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் தேர்வாகி இருக்கிறார்கள். வெற்றி பெற்ற 10 பேரும் நவம்பர் மாதம் பாங்காக்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Indian youth wins UN award

*********************************************
 


A young man from India is among 10 people from around the world selected for a prestigious United Nations award in recognition of their work as entrepreneurs and use of technology to change the world. 

நம் மரணத்தை கணித்து சொல்லும் ‘கடிகாரம்’!


ஒருவர் எப்போது மரணமடைவார் என்பதை அவர் மரணமடையும் நேரத்திற்கு நெருங்கிய செகன்ட வரை கணித்து கூறக்கூடிய கைக்கடிகாரமொன்றை ஸ்வீடன் நாட்டு கண்டுபிடிப்பாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார். மேலும் விபத்து மற்றும் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் இறந்த நேரம் என்பது விசாரணைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


ஆனால், தற்போதுள்ள முறையில் இறந்த நேரம் உத்தேசமாகவே ‌ கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இறந்த நேரத்தை துல்லியமாக கணக்கிட இக்கடிகாரம் உதவும் என்றும் கூற்ப்படுகிறது.




12 - tec deathwatch-

 


பிரெடிக் கொல்டிங் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரம் ‘மரண கைக்கடிகாரம்’ என அழைக்கப்படுகின்றது. இந்தக் கைக்கடிகாரம் மரணமடையப் போகும் நேரத்தை கணித்துக் கூறுவது மட்டுமல்லாது மரணமாகும் கணத்தை கவுண்ட்- டவுன் செய்யவும் ஆரம்பிக்கிறது.


இந்த கைக்கடிகாரம் அதனை அணிந்துள்ளவரின் வயது, மருத்துவ பிரச்சினைகள் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கங்கள் என்பன தொடர்பான பல்வேறு கேள்விகளை உள்ளடக்கியுள்ளது. அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பயன்பாட்டாளர் பதிலளித்ததும் அது அத்தகவல்களை பகுப்பாய்வு செய்து அவர் மரணமடையும் தருணத்தை கணக்கிட்டு எண்ண ஆரம்பிக்கிறது. இந்த ரிக்கர் கைக்கடிகாரத்தின் விலை 59 அமெரிக்க டாலராகும். இந்த கைக்கடிகாரமானது எஞ்சியுள்ள நம் வாழ்வின் அளவை அறிந்து அதனை பயனுள்ளதாக வாழ பயன்பாட்டாளர்களுக்கு உதவும் என பிரெடிக் கூறுகிறார்.


அத்துடன் விபத்து மற்றும் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் இறந்த நேரம் என்பது விசாரணைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.ஆனால், தற்போதுள்ள முறையில் 
இறந்த நேரம் உத்தேசமாகவே  ‌கொடுக்கப்படுகிறது. 


இந்நிலையில் இறந்த நேரத்தை துல்லியமாக கணக்கிட இக்கடிகாரம் உதவும் என்றும் கூறுகிறார்.