Sunday 1 December 2013

கண்டுபிடிப்புகளும் - கண்டுபிடித்தவர்களும்!

 

• இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் - வில்டன் ஸர்ஃப்

• (WWW) World Wide Web – எனும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ

• World wide Web எனபதன் துவக்க கால பெயர் - என்க்வயர்

• கணினி வழி தகவல் பரிமாற்றத்தில் “புன்னகை தவழும் முகம்” எனபதைக் குறிக்க    எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன்முதலாக (1982)ல் பயன்படுத்தத் துவங்கியவர் - ஸ்காட் இஃபால்மன் எனும் பேராசிரியர்.

• கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்ர்ஜி ஃப்ரின்

• உலகின் முதல் மடிக்கணினி - டைனாபுக் என்ற பெயரால் அழைக்கப்பட்டது

• பிரபல விக்கிபீடியா வெப்சைட்டை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்

• பிரபலமான பேஜ் மேக்கர் எனும் பப்ளிஷிங் சாஃப்ட்வேரை உருவாக்கியவர் - ஃபால் பிரெயினார்ட்

• பெண்டியம் புராசஸர்களின் தந்தை எனப்படும் இந்திய விஞ்ஞானி - வினோத் தாம்

• பால் பிரெயினார்ட் என்பவை இந்தியாவின் சூப்பர் கம்யூட்டர் என அழைக்கப்படுகின்றன

• C++ எனும் கணினி மொழியை வடிவைமத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்

• லோட்டஸ் 1-2-3 எனும் மொழியை கண்டுபிடித்தவர் - மிச் கபோர்

• பிரபலமான (Dos) எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் - டிம் பாட்டர்ஸன்

• தனது 20 ஆம் வயதிலேயே லினக்ஸ் உருவாக்கிய விஞ்ஞானி - லினஸ் தோர்வாட்ஸ்

• ஆப்பிள் கணினியைத் துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்

• (CD) குறுந்தகடை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ரஸ்ஸல்

• Power by Intellect Driven by Values - என்ற முத்திரை வாக்கியம் பிரபல இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வாக்கியம்

• ஹாட் மெயிலை உருவாக்கிய இந்திய ஐ.டி விஞ்ஞானி - ஸபீர் பாட்டியா

• இந்தியாவில் ஐ.டி சட்டம் நிலுவையில் வந்த வருடம் - 2000 ஆம் ஆண்டு

• இந்தியாவில் மிக அதிகம் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் - டி.சி.எஸ்

• கணினி அறிவியலின் தந்தையார் - ஆலன் டூரிங்

உலகின் முதல் மைக்ரோபுராசஸர் இன்டெல் என்பதாகும்.

முதல் மைக்ரோபுராசஸரை உருவாக்கியவர் – டெட் ஹோப்

கணினி மவுஸை கண்டுபிடித்தவர் – மக்ளஸ் எங்கன்பர்ட்

கணினி வடிவை சிறிதாக்கிய IC சிப்பைக் கண்டுபிடித்தவர் – ஜாக் கில்பி

இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஜான் பார்டீனின் முக்கிய கண்டுபிடிப்புதான் டிரான்சிஸ்டர்

Computer Tabulating and recording Company என்பதுதான் இப்போது ஐ.பி.எம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது

உலக கணினி எழுத்தறிவு தினம் டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது

Center for Development of Advanced Computing என்பதன் சுருக்கம்தான் C-DAC எனப்படுவதாகும்

“புராஜெக்ட் சிகாகோ” என்பது விண்டோஸ் கண்டுபிடிப்பின் ரகசியப் பெயராகும்

கிரிக்கெட் பந்தின் வேகத்தை அளக்க ஹாக் ஐ (Hawk Eye) என்ற பிரபல ஐ டி தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது

கணினி வன் தட்டின் (HARD DRIVE) தந்தை என்றழைக்கப்படுபவர் – அலன் ஷூகர்ட்

ஹெர்பர்ட் சைமன் துவங்கிய கணினி அறிவியல் பிரிவின் கிளைதான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்பதாகும்

இன்டல் கம்பெனி நிறுவனர்கள் – கார்டன் மூர் மற்றும் ராபர்ட் நாய்ஸ்

கணினி செஸ் விளையாட்டை கண்டுபிடித்தவர் – ஸ்ட்ரிக் ஜி.பிரின்ஸ்

உலகின் முதல் கணினி விளையாட்டு Space War என்ற விளையாட்டாகும்

விலை குறைந்த (ரூ.4000) PC கணினி உருவாக்கிய இந்திய நிறுவனம் நொவாட்டியம் என்ற நிறுவனமாகும்

“Your Potential Our Passion” என்ற முத்திரை வாக்கியம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சார்ந்ததாகும்

Uniform Resource Location என்பதன் சுருக்கம்தான் URL முகவரியாகும்

மைக்ரோபுராசஸர் என்பதுதான் கணியின் மூளை என்றழைக்கப்படுகிறது

கணினியின் முக்கிய சர்க்யூட்டுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி – மதர் போர்ட்

கணினியின் ஈதர் நெட்டை கண்டுபிடித்தவர் – ராபர்ட் மெட்காஃப்

மிக வேகமான சூப்பர் கணினிகள் “ப்ளூ ஜூன்” என்றழைக்கபடுகின்றன

கேமரா மொபைல் ஃபோனை கண்டுபிடித்தவர் – ஃபிலிப் கான்

மைக்ரோபுராசஸரை நினைவகத்தோடு இணைக்கும் ஒயர்கள் Bar என்ற பெயரில் அழைக்கபடுகின்றன

Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்தையின் சுருக்கம்தான் VIRUS என்ற பிரபல வார்த்தையாகும்.

ஏலியன்ஸ் உண்மையா அல்லது பொய்யா ?

வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்களைப் பற்றி பல கதைகளும் ஃபிக்ஸன் மூவிகளும், விஞ்ஞான கட்டுரைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. என் சிந்தனையிலும் அப்படி வேற்றுக் கிரகவாசிகள் அடிக்கடி வந்து போவதுண்டு ஆனால் அவர்கள் முற்றிலும் வேறு பட்டவர்கள்.

பொதுவாக வேற்றுக்கிரக வாசிகள் என்றால் பெரிய ஓவல் தலையும் நீல முட்டைக் கண்களும் நீண்டு மெலிந்த கை கால்களும் கொண்டவர்கள். வேறு கிரகங்களிலிருந்து பறக்கும் தட்டு போன்ற வாகனங்களில் வான் வழியே வந்து இறங்குவார்கள் என்று தான் எண்ணுகிறோம். இது முழுக்க ஏதோ ஒரு ஓவியரின் கற்பனை தான்.

வேற்று உயிரினங்கள் மனிதச் சாயலுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனித சாயல் வருவதற்கு பூமியின் பல பருவமாற்றங்களை மனிதன் தாண்டி பரிணமத்தின் மூலம் பக்குவப்பட வேண்டியிருந்தது. எனவே இது போன்ற சத்தியக்கூறுகள இன்னொரு கிரக உயிருக்கு அமைவது மிக மிக அபூர்வம்.


வேற்று கிரக வாசிகள் பறக்கும் தட்டு போன்ற வாகனத்தில் வந்து இறங்க வேண்டுமென்றால் அவர்களுக்கு மனிதனைப் போன்ற உருவம் இருக்க வேண்டும். வாகனத்தை கட்டுப்படுத்த கைகள், எங்கே இருக்கிறோம் என்று பார்த்து இறங்க கண்கள், இறங்கி நடந்து வர கால்கள் எல்லாம் மனிதனை போல் அமைய வேண்டும். பறக்கும் தட்டு போன்ற வாகனத்தை வடிவமைக்க இயக்க மனிதனைப் போல் இயந்திர அறிவில் பரிணாமம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான சாத்தியம் வெகுவாக குறைவு. இதை விட வேறு பயண முறைகளை அவர்கள் உப்யோகிக்கலாம். teleportation என்றெல்லாம் நாமே மாற்று வழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

அயல் உயிரினங்கள் எப்படியெல்லாம் இருக்க வாய்ப்புண்டு என எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்

கெட்டியான பாறை போல் இருக்கலாம், கூழாங்கல் போல இருக்கலாம். அதனால் தான் காலில் கல் தட்டிவிட்டது என்கிறோமா?

பிசு பிசுவென்று போஸ்டர் ஒட்டும் பசை போல் இருக்கலாம். காலில் அப்படி ஏதாவது அப்படி மிதிபட்டால் ஒருமுறை நன்றாக பரிசோதிது பார்த்து விட்டு கழுவவும்.


கலர் கூல் ட்ரிங்ஸ் போல் இருக்கலாம், ஜெல்லியாக இருக்கலாம். குடித்தால் வயிற்றை பிராண்டுவது போலிருந்தால் அதற்கு காரணம் பாக்டீரியா. இரும்பு நட்டு போல்டு போல இருக்கலாம், மண் போல இருக்கலாம் தோசை இட்லி போலக்கூட இருக்கலாம்.


புதிய தனிமம்,புதிய கிரகம்,என்றெல்லாம் கூட அறியப்படலாம்.
அலைகளாக,கதிர் வீச்சாக கூட இருக்கலாம்
ஒளியாக ஒரு விசிட் அடித்து விட்டு போகலாம்.
வாயு வடிவத்தில் உலவிக்கொண்டிருக்கலாம். நான்கு பேர் கூடுமிடத்தில் திடீரென கெட்ட நாற்றம் வந்தால் அது ஓர் நபரின் வருகையாகக் கூட இருக்கலாம்.

பூமியில் காணப்படும் எல்லா உயிரினங்களும் கார்பன் எனும் கரிமத்தை அடிப்படையாகக் கொண்டது. இது போல மற்ற தனிமங்களை அடிப்படையாகக் கொண்டு கூட உயிரினங்கள் இருக்கலாம். தங்கம் , தாமிரம், கந்தகம், போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கூட உயிர்கள் இருக்கலாம்

ஒளியாக ,நெருப்பாக, நீராக எல்லாம் கூட உயிரினங்கள் ஆக்கப்பட்டிருக்கும் சாத்தியம் உண்டு. ஒளியால் படைக்கப்பட்ட வானவர்கள் தினமும் பூமிக்கு வந்து செல்கிறார்கள் என்றும் நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின்கள் இருப்பதாகவும் குர் ஆன் சத்தியம் செய்து கூறுவதை மறுக்க முடியவில்லை. தினம் எவ்வளவு நட்சத்திர ஒளி பூமியை தொடுகிறது. ஆனால் அதன் மனித வடிவமும் மனிதனோடு இன்டெராக்சனும் உறுத்துகிறது.
பழமையான இந்து மதக் கருத்துகளும் உயிர்கள் எல்லா இடமும் இருக்கின்றது என்று தான் சொல்கின்றன.

அடிப்படை ஆதாரமாக நாம் அணுக்களால் தான் ஆக்கப்பட்டிருக்கிறோம் . அணுக்களுக்கு அடிப்படை எலெக்ட்ரான், புரோட்டான் எனும் சக்திகள் தான். எப்படி அணுக்கள் மூலக்கூறுகளாகி, அமினோ அமிலங்களாகி, செல்களாகி, மனிதனாக பரிணாமம் பெற்றானோ. இதே போல் வேறு கிளைகளிலும் ஏன் பரிணாமம் நிகழ்ந்து நம் கண்முன்னே இருந்தும் நம்மால் உணர முடியாத உயிர்கள் நம்மைச் சுற்றி இருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் முதியோர்களை ஓர் உயிர்களாக தெரியாதற்கு பெயர் வேறு,அது திமிர்.

முன்பெல்லாம் ஒரு சினிமா பார்க்க வேண்டுமானால் புரொஜெக்டரில் ஃபிலிம் இட்டு ஓட்ட வேண்டும். பின்னர் வீடியோ கேஸட்டுகளில் வேறு வடிவத்தில் சினிமா பதிவு செய்து காட்டப்பட்டது, பின்னர் சிடி க்கள், டிவிடி க்கள் என வேறு டெக்னாலஜியில் அதே "குலேபகாவலி " காட்டப்பட்டது. இப்போது ஹார்ட் டிஸ்க், ஃபளாஷ் மெமெரியில் divx ,mpeg, vob ஃபைலாக கிடக்கிறது. இணையம் வழி இன்னும் எத்தனையோ வடிவங்களில் எல்லாம் அதே சினிமா வெளிப்படுகிறது. இதே போல் உயிர் என்பது வெறும் ஒரு Data தான் ஒரு software போன்றது. அது இருக்கும் மீடியம் எப்படி வேண்டுமானாலும் இருக்கும் சாத்தியம் உண்டு. மின்சாரம் கண்டுபிடிக்கப் படாமல் இருந்தால் இப்போதைய செல் போன், லேப் டாப் , இணையம் எல்லாம் எந்த வடிவில் இருக்கும் ?

வேறு உயிர்கள் வானத்திலிருந்து தான் வர வேண்டுமென்பதில்லை. நாமே இன்னும் அறியாத வகையில் இன்னும் பூமியிலே கூட இருக்கலாம். நம்மைச் சுற்றி பல்லாயிரம் வருடங்கள் இருந்தும் "மரத்துக்கும் உயிருண்டு" என்று நிரூபித்துச் சொல்ல ஒரு ஜகதீச சந்திர போஸ் தேவைப்பட்டது. இன்னும் கல்லுக்கும் மண்ணுக்கும், பூமிக்கும் கூட உயிருண்டு என பின்னாளில் உணரப்படலாம். மண்ணின் அம்சம் தானே நம் உடலிலும். பூமியின் எல்லா உயிர்களும் பூமியின் அம்சம் தானே. உயிரற்றதாக கருதப்படும் பூமியில் உயிர் தோன்றுகிறது. உயிருள்ள உடம்பில் ரோமம். நகம் போன்ற உயிரற்றப் பொருள் தோன்றுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள உயிர் பொருள் நம் உடலில் சேர்வதில்லை. அதிலுள்ள உயிரற்ற பொருள் தான் நம் உடலில் சேர்ந்து உயிர் பொருளாகிறது.

பஞ்ச பூதங்கள், வானவர்கள், தேவர்கள், அசுரர்கள் எல்லாம் இப்படிப் பட்ட வேறு உயிர்களுக்கு மனித வடிவம் கொடுத்து புரிந்து கொண்டிருப்பதாலோ என்னவோ?

வேறு உயிரினங்கள் மனித கண்களால் அளக்கக்கூடிய சைசில் இருக்க வேண்டிய அவசியமில்லை. மலையளவாகவோ, வியாழன் கோள் அளவாகவோ, ஏன் சூரியனின் சைசில் கூட இருக்கக் கூடும். அது போல ஒரு பாக்டீரியா, வைரஸை விட சிறிதாகக் கூட இருக்கலாம். அணுக்களுக்குள் கூட குட்டி பிரபஞ்சங்களும் நட்சத்திரங்களும் கிரகங்களும் உயிர்களும் இருக்கக் கூடும். நம் பார்வையின் அறிவின் எல்லைகள் மிகக் குறுகியது. நம் அறிவின் பவுதீக விதிகள் செல்லுபடியாகாத இடத்திலும் வேறு உயிர்கள் இருக்கலாம். இடம், அளவு , காலம் இதெல்லாம் நம் மனதால் அமைக்கப்படும் ஒரு கருத்து அவ்வளவு தான்.பெரிது சிறிது எல்லாம் நமக்கு மட்டும் தான். நீங்கள் சாப்பிடும் போது பல உலகங்களை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கலாம். சிலர் மில்கிவே , ஆண்ட்ரமீடா போன்ற கேலக்ஸிகளையே டிபன் பண்ணக்கூடும்.

நம்மை போலவே அத்தகைய வேற்று உயிர்களுக்கும் நம்மை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்கலாம். வேறு கிரக உயிர்கள் நம்மை தாக்கி அழிப்பது எல்லாம் சினிமாவுக்கு தான் சரி. அவர்கள் தேவையும் நம் தேவையும் ஒன்று என்றால் தான் அந்த நிலை உண்டாகும். அதற்கு அவர்கள் நம்மைப் போல் இருக்க வேண்டும்.

பொன்மொழிகள்!

 


1. கோட்டையுள்ள நகரைக் காட்டிலும்

வலிமையுள்ளது இதயம்.

 - இங்கிலாந்து

 2. இதயம் பொய் சொல்லாது.

 - ஹாலந்து

 3. மறைத்து வைக்கப்பட்டுள்ள மனிதனின்

செல்வம் இதயம்.

 - பல்கேரியா


 4. இதயத்தின் மகிழ்ச்சியை முகத்தின் நிறத்தில் காணலாம்.

 - இங்கிலாந்து

 5. காயம்பட்ட இதயத்தைக் குணப்படுத்துவது

 கடினம்.

 - கதே


 6. இதயத்தின் சாட்சியம் அதிக வலிமை உள்ளது.

 - துருக்கி

 7. தன் இதயத்தை அறிந்து கொண்டவன்

 கண்களை நம்ப மாட்டான்.

 - சீனா



 8. ஏழைக்கும் ஒரு இதயம் உண்டு.

 - அமெரிக்கா


 9. வறுமையில்தான் மனம் திரும்பிப் பார்க்கும்.

- இத்தாலி


 10. மனமிருந்தால் மலையையும் சாய்க்கலாம்.

 - தமிழ்நாடு

பிறந்த நாளிலேயே பறக்கும் ஒரே பறவையினம்..

 

ஆஸ்திரேலியாவின் “மாலிபவுல்’ என்னும் பறவை
 ரொம்ப வினோதமானது. இந்தப் பறவைக்கு
 பெற்றோர் யார் என்றே தெரியாது.


ஏனெனில், தாய்ப்பறவை முட்டைகளை மண்ணுக்குள்
 போட்டு மூடிவைத்து விட்டு சென்று விடும்.
குஞ்சுகளோ பொரிந்து வெளியே வந்தவுடன் அப்படியே
 பறக்க ஆரம்பித்து விடும்.


அந்த அளவிற்கு அதற்கு இறகுகள் வளர்ந்து விடுகின்றன.


இதனால் அதன் பெற்றோர் யாரென்றே அந்தப்
 பறவைக்கு தெரிவதில்லை. தாய்ப்பறவையும் தனது
 முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வந்ததா என்று காண
 வருவதில்லை.


பொறுப்பில்லாத மம்மி. இந்தப் பறவை பற்றிய
 இன்னொரு விசேஷமான தகவல். பிறந்த நாளிலேயே
 பறக்கும் ஒரே பறவையும் இதுதான்.

அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்?

பட்டங்கள் கொடுப்பது பற்றி அமெரிக்க அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?

அரசியல் சட்டம் ஆர்ட்டிகிள் 1, பிரிவு 9:8


“அமெரிக்க அரசு எந்த பட்டத்தையும் யாருக்கும் வழங்க கூடாது. அமெரிக்க அரசில் பணியாற்றும் யாரும் எந்த வெளிநாட்டு மன்னர், அரசிடமும் எந்த பட்டத்தையும் பெறக்கூடாது…”


அமெரிக்க தேச தந்தையர் அன்றைய காலகட்ட ஐரோப்பாவில் “பிரபு, மை லார்ட், ஹிஸ் எக்சலன்சி” என அழைக்கும் மரபை கடுமையாக வெறுத்தார்கள்.


 தாமஸ் பெயின் அது குறித்து கூறுகிறார்:


“பட்டங்களும், அடைமொழிகளும், மைலார்ட் என்பதுபோன்ற விளிப்புகளும் அப்படி அழைக்கபடுபவரை பீடத்தில் வைத்து, அந்த ஆபாச விளிப்புகளில் மயங்கிய மக்கள் அவரை எந்த கேள்வியும் கேட்கமுடியாமல், விமர்சிக்க இயலாமல் செய்துவிடுகிறது”


அமெரிக்க ஜனாதிபதியை எப்படி விளிப்பது என்றும் ஒரு விவாதம் எழுந்தது. “ஹிஸ் ஹைனஸ், பிரசிடெண்ட் ஆஃப் தெ யுனைடெட் ஸ்டேட்ஸ்” என அழைக்கவேண்டும் என ஒரு சாரார் கூறினர். “ஹிஸ் எக்சலன்ஸி” என அழைக்கவெண்டும் என்றனர் சிலர். அரசியல் சாசன தந்தை ஜேம்ஸ் மேடிசன் அனைத்தையும் நிராகரித்துவிட்டார்.


அமெரிக்க ஜனாதிபதி “மிஸ்டர் பிரசிடெண்ட்” என மட்டுமே அழைக்கபடுவார்!!!!!!

ஒவ்வொன்றும் ஒருவிதம்!

 

புகழ்பெற்ற நாவலாசிரியர் அலெக்சாண்டர் டூமாஸ் விசித்திரமான மன இயல்புகளையும், வியப்படையச் செய்யும் கொள்கைகளையும் உடையவர். இவருடைய வாழ்க்கை மிகவும் சுவையானது.


-
இவர் எழுதும் காகிதம், மை, பேனா போன்றவைகளில்கூட சில பழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தார்.


-
நாவல் எழுதுவதானால் அதற்கென்றே பிரத்தியேகமாக உள்ள பேனாவினால் நீலநிறக் காகிதத்தில் மட்டுமே எழுதுவார். கவிதைகளை எழுதுவதற்குத் தனியாக சில பேனாக்களை வைத்திருப்பார். பத்திரிகைகளுக்கு எழுதும் கட்டுரைகளை ரோஜா நிறம்கொண்ட காகிதத்திலும், கவிதைகளை மங்களகரமான மஞ்சள் நிறக் காகிதத்திலும்தான் எழுதுவார்.

-

ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பேனா உண்டு. எந்தச் சூழ்நிலையிலும் நீலநிற இங்க் – மையைப் பயன்படுத்தவே மாட்டார். ஏனென்றால், நீல நிற மை மனக்குழப்பத்தை – தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்பது இவருடைய ஆழ்ந்த நம்பிக்கை. இவர் எழுதிய நூல்கள் 1,200.

UNESCO அறிவித்த உலக நாடுகளின் சிறப்புக் கல்வித்தரம்!


1. பிழையின்றிப் படித்தல் – நியூசிலாந்து


2. குழந்தைப் பருவத்தில் கல்வி ஈடுபாடு – இத்தாலி


3. கணிதக் கல்வி – நெதர்லாந்து


4. விஞ்ஞானக் கல்வி – ஜப்பான்


5. பன்மொழிகளிலும் கல்வியறிவு – நெதர்லாந்து


6. கலை சம்பந்தப்பட்ட கல்விகள் – அமெரிக்கா


7. உயர்நிலைப் பள்ளிகளில் கல்வித்தரம் – ஜெர்மனி


8. ஆசிரியர் பயிற்சி – ஜெர்மனி


9. மேல்நிலைக் கல்வி – அமெரிக்கா


10. முதியோர் கல்வி – ஸ்வீடன்
-

சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

 

சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:

நச்சுக்களை அகற்றுபவை:

நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை.

எலும்புகளை வலுவாக்குபவை:

இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.

மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.

கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:

அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.

எளிதில் ஜீரணம்:

சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும்.அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.

ஆரோக்கியமான மேனி:

பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

இதுதான் தாம்பூலம்!

 

“இதுதான் தாம்பூலம்”…


வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மட்டும் தாம்பூலம்

 அல்ல…


தரமான தாம்பூலம் என்பது


 -ஒரு பாக்கு


ஐந்து வெற்றிலை



சிறிது கஸ்தூரி



பச்சைக் கற்பூரம்



சங்கச் சூரணம்



இரண்டு கிராம்பு



சிறிது ஜாதிக்காய்



மூன்று வால் மிளகு


இந்தக் கலவை முறையில் சேர்த்துப் போட்டுக்

 கொள்வதுதான் தரமான தாம்பூலம் ஆகும்.

நண்டுகள் பலவிதம்!

 

கடலிலோ, நிலத்திலோ வாழும் எந்த நிறத்திலும் இருக்கும் பக்கவாட்டில் நீந்தும், நடக்கும் தன் வீட்டை தானே சுமக்கும் அது என்ன? வேறென்ன? நண்டுதான்! சரியாய் யூகித்தீர்களா…(குட்டி நண்டுகளா!)

* நண்டு தன் பின் நான்கு ஜோடி கால்களை பக்கவாட்டில் வேகமாய் நகர பயன்படுத்துகிறது.* இந்த முதுகெலும்பு எட்டுக்கால் பூச்சி நண்டு பெரும்பான்மையான எதிரிகளிடமிருந்து அதன் ஓட்டினால் பாதுகாக்கப் படுகிறது.* கால்கள் தேய்ந்தோ, உடைந்தோ போனால் நண்டுகள் புதிதாய் வளர்த்து கொள்ளும்.

* அவைகளின் வலிமையான வளை நகங்களை சண்டை போட, மீன்களை கிழிக்க, சிப்பியை பிளக்க, தாவரங்களை உண்ண பயன்படுத்துகிறது.* இந்த ஓடு, “ஆமை ஓடு’ எனப்படுகிறது.* நண்டு தம் ஓட்டை விட பெரிதாகும் போது ஓட்டை உடைத்து திறந்து அவற்றை விட்டு விலகும். அந்த பழைய ஓட்டின் அடியில் புதிய, மிருதுவான ஓடு இருக்கும். இந்த புதிய மிருதுவான ஓடு கடினமாக மூன்று நாட்களாகும்.

* இந்த முதுகெலும்புக்கு கீழே இரண்டு உணர்வான்கள் ஆன்டெனாக்கள் இருக்கும். ஆன்டெனாக்களை சுற்றியுள்ள மெல்லிய முடிகளால் தொட, வாசனையை உணர மற்றும் சுவையை உணர செய்கிறது நண்டு.* நண்டுகள் தம் ஐந்து ஜோடி செதில்களால் சுவாசிக்கும். இவை ஓட்டின் உள்ளே, ஒவ்வொரு காலின் மேற் பகுதிக்கு அருகே இருக்கும்.

* இந்த நண்டு மிக அசிங்கமாய் தோற்றம் அளிப்பதால், அச்ச லிஸ்டில் இந்நண்டு வைக்கப்படுகிறது.

 * இதன் கொடுக்குகளுக்கு மனித விரலையே கட் பண்ணுமளவு பவர் உண்டு.

சிறந்த நண்பர்கள்:


தனியே வாழும் நண்டிற்கு வலுவான சிப்பி கிடையாது. அதனால் அது பழைய நத்தை ஓடுகளில் வாழும். விண்மீன் வடிவ நண்டும் இவ்விடத்தையே வாழ்விடமாக கொண்டுள்ளது. நகரமுடியும் நண்டு சாப்பிடும்போது விழும் உணவை விண்மீன் நண்டு உண்ணும். யாராவது எதிரி அருகில் வந்தால் கொடுக்கால் தாக்கும்.

மேல் தோலும், வலுவான ஓடும் உண்டு!: நண்டுகளுக்கு மேல் தோலும், வலுவான ஓடும் உண்டு. அதோடு ஐந்து ஜோடி கால்களும் உண்டு. இதுபோல அமைப்புடைய ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உண்டு. இதோ சில் பொதுவகை உயிரினங்கள்….

பெரும்பான்மையான நண்டுகள் 15 செ.மீ., அகலமுடையது. ஆனால், சில நண்டுகள் இவ்வளவை விட சற்று அதிகமாகவோ, குறைவாகேவா இருக்கும். ஜப்பானிய சிலந்தி நண்டுகள் கிட்டத்தட்ட 4 மீட்டர் நீளம் வளரும். பட்டாணி அளவு நண்டுகளும் உண்டு.

ஒருவர் உங்களைத் திட்டி விட்டால்?




ஒருவர் நம்மீது கோபப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

 நீங்களும் பதிலுக்கு அவரை விட அதிகமாகக் கோபப்படுவீர்கள். ஒருவர் உங்களைத் திட்டி விட்டால்….. அவரை விட அதிகமாக, அவரை மோசமாகத் திட்டுவீர்கள் இல்லையா? இது தான் நம்முடைய மனநிலை. இதனால் உங்களுடைய கோபத்திற்குத் தற்காலிக வடிகால் கிடைத்தாலும் இந்த மனநிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாத நபர்களிடம் இந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள். ஆனால் அலுவலகத்தில் உங்களுக்கு மிகமிகத் தெரிந்த நபர்களிடம் இம்மாதிரி நடந்து கொண்டால் ஏற்படும் விளைவுகளை யோசித்துப் பாருங்கள்.

உங்களை விட கீழ்நிலை வேலையில், இருப்பவர்களிடம் இவ்வாறு நடந்தால்….. அவரால் நேரடியாக உங்களைப் பழிதீர்க்க முடியாது. அதனால் அவருக்குத் தெரிந்தவர்களிடத்திலெல்லாம் உங்களைப் பற்றி மோசமாகச் சொல்லி பழிதீர்த்துக் கொள்வார்கள். இதனால் உங்களுடைய மதிப்புப் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இன்றைய சூழலில் பெரும்பாலான ஊழியர்கள் வேலை பார்க்கும் இடங்களில், எதிர்மறையான எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மன அமைதியை இழந்து தவிக்கிறார்கள். இதுபோன்றநிலையில், வேலை பார்க்கும் இடங்களில் மனஅமைதியை இழக்காமல் இருக்கவேண்டுமானால் ஒன்று தங்களின் அமைதியின்மைக்குப் பிறரையோ, சூழ்நிலையையோ குறைகூறுவதைத் தவிர்க்க வேண்டும். மற்றொன்று எதிர்மறையான அம்சங்களுக்கு அழுத்தம் கொடுப்பது என்ற இரண்டு செயல்களில் ஏதாவது ஒன்று உங்களிடம் காணப்பட்டாலும் அதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

மேலதிகாரிகளுடன் நல்லுறவு கொள்ளவேண்டும். பணியிடத்தில் சில விரும்பத்தகாத சூழ்நிலை உருவாகும்போது அச்சூழ்நிலை பற்றி அவ்வப்போது மேலதிகாரியிடம் அதுகுறித்தத் தகவல் அளித்து வரவேண்டும். உங்கள் பணியை பற்றிய உண்மை உங்களைவிட அவருக்குத்தான் நன்றாகத் தெரியும். இந்நிலையில் மேலதிகாரியுடனான தகவல் பரிமாற்றம் இல்லையெனில் 50% தவறுகளுக்கு அப்பணியாளர் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.

உங்கள் அதிகாரியுடன் முழுமையான நல்லுறவுக்கு மனதைத் தயார்படுத்திக் கொள்ள தவறவேண்டாம். முதுகுக்குப் பின்னால் குத்துவது, இரட்டை வேடம் போடுவது, வதந்திகளைப் பரப்புவது, வம்பு பேசுவது போன்றகுணங்களை முழுமையாக விட்டொழிக்க வேண்டும். இதனால் இன்று உங்களால் விமர்சிக்கப்படுபவர் இன்னொரு நாள் உங்களுக்குப் பாடம் கற்பிக்கும் நிலையை தவிர்த்திட இது வகைசெய்யும். உணர்ச்சிவசப்படும் நிலையை முழுமையாக குறைத்துக் கொள்ள வேண்டும்.

நம்மோடு அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் அடிப்படையில் மனிதர்கள் தான். அதன்பின்தான் அலுவலகத்தில் சக ஊழியர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எப்போதும் பிரச்சனைகளைத் தனித்தனியாக பிரித்துப் பார்த்து, அதை சரிசெய்ய முயற்சித்தால் எதிர்மறைஎண்ணங்கள் குறைவதற்கு வாய்ப்பு உண்டு.

மனோபாவத்தை மாற்றநீங்கள் தயாரா?


எதிர்மறைமனோபாவத்தை ஒருவர் வெளிப்படுத்தும் போது கீழ்க்கண்ட கேள்விகளைத் தங்களுக்கு தாங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

இந்த நபர் எனக்கு முக்கியமானவரா?


இதற்கு முன் இதே போன்றஒரு மனோபாவத்தை என்னிடம் வெளிப்படுத்தி இருக்கிறாரா?


அவரின் இந்த எதிர்மறை மனோபாவம் என்னை எந்த அளவிற்குப் பாதிக்கிறது?


இந்த நபரின் எதிர்மறை மனோபாவம் மாறும் வரை பொறுத்துப் பார்க்கலாம் என்னும் அளவிற்கு தன்னுடைய நேரத்தைச் செலழிக்கத் தயாராக இருக்கிறீர்களா?


அவருடைய எதிர்மறை மனோபாவத்தை மாற்றுவதற்கான முயற்சியைச் செய்து பார்க்கத் தயாராக இருக்கிறீர்களா?



மேற்கண்ட கேள்விகளில் ஏதாவது ஒன்றிற்கு ‘இல்லை’ என்றபதில் உங்களிடமிருந்து வந்தால் அந்த இடத்தை விட்டு அமைதியாக வந்துவிடுங்கள். தயவு செய்து உங்களுடைய ஆத்திரத்தை, கோபத்தை வெளிப்படுத்தி விடாதீர்கள். அது தான் உங்களுக்கு நல்லது. மேற்கண்ட கேள்விகளுக்கு ஆமாம் என்று பதில் கூறினால் இரண்டாவது படிக்குச் செல்லுங்கள்.

உண்மையான காரணத்தைக் கண்டறியுங்கள்:

அந்த நபரைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர் திடீரென இவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணத்தைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள். ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகத்தான் உங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டாரா? என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் நிலையை விளக்குங்கள். ஆனால் சமயம் பார்த்து இதனைச் செய்ய வேண்டும். பொறுமையாக இருங்கள். உங்களின் அமைதி, மௌனம் நிச்சயமாக அவரைச் சோதிக்கும்.

நீங்கள் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொண்டால்….. எவ்வளவு உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட அவர்களுடைய கோபம் தணிந்தவுடன், மனநிலை மாற்றம் ஆனவுடன் உங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டதற்கு வருந்துவார். உங்களை அழைத்துப் பேசுவார். அவ்வாறு பேசத் தயாராகும் போது நீங்கள் இயல்பாக அவரை வரவேற்பது போல, உற்சாகப்படுத்துவது போலப் பேசவேண்டும். உங்களின் உண்மையான விளக்கத்தை இப்போது கூறலாம். இப்படியெல்லாம் நடக்கும் என்றநம்பிக்கை உங்களுக்கு இருந்தால் மூன்றாவது படிக்குச் செல்லுங்கள்.

மனநிலையை மாற்றுங்கள்:

இப்போது அவரது மனநிலையை உங்களுடைய நேர்மறைச் சிந்தனையால் மாற்றமுயற்சியுங்கள். பிரச்சனையைத் தெளிவாகப் பேசிவிடுங்கள். உங்களின் மேல் தவறுகள் இருந்தால் தாராளமாக மன்னிப்புக் கேளுங்கள். மீண்டும் நடக்காது என்பதை நிச்சயப்படுத்துங்கள். உங்களிடம் தவறு இல்லையென்றால் அது போன்றசூழ்நிலைக்கு யார்? அல்லது எது காரணம்? என்பதைக் கண்டறியுங்கள். ஏனென்றால் புரிதலின்மை (Misunderstanding) என்பது பெரும்பாலான உறவுகளைப் பிரிக்கிறது. இதனை சரியான புரிதல்கள் (Understanding) மூலம் தான் தீர்க்க முடியும். மனம் விட்டுப் பேசுவதன் மூலமும் கேள்விகள் கேட்டு உண்மைகளைக் கண்டறிவதன் மூலம் தான் அதைச் சரி செய்ய முடியும். ஆனால், அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்களைப் பற்றி ஒருவருக்குத் தவறான அபிப்ராயம் ஏற்படுகிறது என்றால் அதை மாற்றவேண்டியது உங்களின் கடமை. ஆனால் அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயமாய் ஏதாவது ஒரு விதத்தில் உங்களைப் பாதிக்கும்.

பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுங்கள்

o பிரச்சனைகளைக் கண்டறிந்த பிறகு அதற்கானத் தீர்வுகளைக் கண்டறியுங்கள்.

o என்ன செய்தால் ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்ய முடியும் என்று எண்ணிப் பாருங்கள்

o அதற்கு ஒத்து வருகிறாரா? என்று ஆராய்ந்து பாருங்கள்.

o இருவரும் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு ஒரு முடிவினை நோக்கிச்செல்லுங்கள்.

o ஆனால், தீர்வு காணாமல் விட்டு விடாதீர்கள்.

o ஏனென்றால் அது எப்போதாவது அதே பிரச்சனையை மீண்டும் கிளப்பும்.

பழைய நிலைக்குத் திரும்புங்கள்:

இப்போது அந்த மனநிலை மாறி விட்டதென நீங்கள் நினைத்தால், அந்த நபரை இயல்பான சூழ்நிலைக்கு நீங்கள் கொண்டு வந்து விட்டால், கசப்புகளை நிச்சயமாக மறந்து இயல்பாகப் பேசுங்கள். கசப்புகளை, கோபங்களை மனத்திற்குள் வைத்து வெறும் ஒப்புக்குச் சிரிக்காதீர்கள். இப்போது அவரும் நீங்களும் நிச்சயமாக பழைய, இயல்பான, சுமூகமான, நட்பான சூழ்நிலைக்கு வந்து விட்டால் அதை முழு மனத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அவருக்கு நீங்கள் உத்தரவாதம் கொடுத்த அந்த விஷயத்தைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

இது நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பை உயர்த்திக் கொள்வதற்குத் துணைபுரியும். இதனையே உங்களின் குடும்பத்திலும், நண்பர்களிடத்தும் கூடச் செயல்படுத்திப் பார்க்கலாம்.

மர்மத்தீவு ஒரு பார்வை!

நம்முடன் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் திடீரென பேசிக்கொண்டிருக்கும் போதே மாயமாய் மறைந்து விட்டால் எப்படி இருக்கும் ? பயமும், வியப்பும், திகிலும், பிரம்மையும் கலந்த அந்த நிகழ்வை எப்படி விளக்க முடியும்.

அப்படி மனிதர்களை மாயமாய் மறையச் செய்யும் ஒரு தீவே இருந்தால் ? திடுக்கிட வைக்கிறது இந்த கேள்வி. கூடவே ஒரு நல்ல ஹாலிவுட் திகில் படத்தைப் பார்க்கும் பரபரப்பையும் தருகிறது.

கென்ய ருடால்ஃப் ஏரியில் இருக்கிறது ஒரு குட்டி தீவு. என்வையிட்டினெட் தீவு என அழைக்கப்படும் அந்த தீவின் பொருள் “திரும்ப முடியாது” என்பது தான் என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.

ஒரு காலகட்டத்தில் நன்றாக, இயல்பாக இருந்த கிராமம் தான் அது. அங்கே இருந்த மக்கள் மீன் பிடித்தல், வேட்டையாடுதல் என பல தொழில்களை செய்து வந்தனர்.

அவர்கள் அடிக்கடி தீவை விட்டு வெளியே வந்து நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து அவர்களுக்கும் மீன், விலங்குகள் போன்றவற்றை அளிப்பதும் வழக்கமாக இருந்தது.

திடீரென சில நாட்களாக தீவிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல அந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என நினைத்த மக்கள் அந்தத் தீவுக்குச் சென்று தகவல் அறிந்து வர விரும்பினார்கள்.

தீவுக்குள் சென்ற மக்கள் அதிர்ந்தனர். அங்கே குடிசைகள் எல்லாம் காலியாய் கிடந்தன. வேட்டையாடப்பட்ட விலங்குகளும், பிடிக்கப்பட்ட மீன்களும் அழுகிப் போய் கிடந்தன. ஆனால் மக்களின் சுவடுகள் கூட மிச்சமில்லை.

என்னவானார்கள் இவர்கள் ? எங்கே போனார்கள் ? எதுவும் தகவல் இல்லை ! பயந்து போன மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினர் தங்கள் இருப்பிடம் நோக்கி. அதன் பின் பறவைகளைத் தவிர யாரும் அந்த தீவில் தங்கள் நிழல்கள் விழ அனுமதிக்கவில்லை.

இப்போது அந்த இடம் சாபத்துக்குள்ளான, மர்மத் தீவாக இருக்கிறது.

அந்த தீவில் யாருமே தங்குவதில்லை, அங்கே தங்குபவர்கள் மாயமாகி விடுவார்கள் எனும் நம்பிக்கை தான் அதன் காரணம். சில கிலோமீட்டர் அகலமே உள்ள அந்த தீவு சபிக்கப்பட்ட தீவாக மக்களிடையே பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அங்கே அப்படி என்ன மர்மம் தான் இருக்கிறது என யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

1935 களில் மார்டின் ஷெஃப்லிஸ் மற்றும் பில் டேசன் இருவரும் விவியன் என்பவருடைய தலைமையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருந்தனர்.

அந்த தீவில் இருக்கும் ரகசியம் என்ன என்று பார்த்து விடுவோமே என்று கங்கணம் கட்டிக் கொண்டு அந்தத் தீவில் இருவரும் சென்றனர்.

நாட்கள் நகர்ந்தன. போனவர்கள் திரும்பவில்லை. பதினைந்து நாட்கள் பொறுமையுடன் காத்திருந்தவர்களை பயம் பிடித்துக் கொண்டது. உடனே விவியன் பாதுகாவலர் குழுவை அந்தத் தீவுக்கு அனுப்பினார்.

பாதுகாவலர் படை காணாமல் போன இருவரையும் தேடி தீவுக்குள் நுழைந்தது. அக்கு வேறு ஆணி வேறாக தீவை சல்லடை போட்டுத் தேடியும் இருவரும் அகப்படவேயில்லை !

ஆளே இல்லாத ஒரு அமானுஷ்யக் கிராமமாக அது அமைதிக்குள் உறைந்து கிடந்தது.

திடுக்கிட்ட விவியன் அரசு உதவியுடனும், வாகனங்களுடனும் தீவை மீண்டும் ஒருமுறை தலைகீழாய் புரட்டித் தேடினார். ஊஹூம். ஒன்றும் கிடைக்கவில்லை.

தேடப் போனவர்கள் திரும்பி வந்ததே பெரிய விஷயம் என்று பேசிக் கொண்டனர் உள்ளூர் மக்கள்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

 

ஒன்றாக கல்லூரியில் படித்து, பட்டம் வாங்கி வேலை தேடி கொண்டிருக்கும் நண்பர்கள் நாங்கள். மாநகரில் மூலைக்கு மூலை வசித்தாலும், ஒரு குறிப்பிட்ட நாளில் சந்தித்து, உரையாடி, ஆறுதல் தேடுவது வழக்கம். எங்கள் குழு நண்பனொருவனை இரண்டு வாரங்களாக காணவில்லை. என்னமோ ஏதோவென்று பதறி, அவனைக் காண, அவன் வீட்டுக்கு சென்றோம். வீட்டில் அவன் இல்லை. இரண்டு தெரு தள்ளி, ஒரு வீட்டில் அவன் இருப்பதாக கூறினர். அங்கு சென்றோம்.

குறிப்பிட்ட வீடு பூட்டப்பட்டிருக்க, நண்பனும் இன்னும் சிலரும், கையில் உருட்டுக் கட்டைகளோடு காவல் காத்துக் கொண்டிருந்தனர்.
"என்னடா விஷயம்?' என வினவினோம்...

"அது ஒண்ணுமில்லடா... இந்த வீட்டுல இருக்கிறவங்க, ஒரு வாரம் வெளியூர் போயிருக்காங்க. அவுங்க திரும்பி வர்ற வரைக்கும், வீட்டோட பாதுகாப்பை, எங்க பொறுப்புல ஏத்துக்கிட்டிருக்கோம். சும்மா,வெட்டியா ஊரை சுத்தி, வம்பு பேசிகிட்டுத் திரியுற நேரத்துல, இது மாதிரி ஏதாவது உருப்படியா செஞ்சா, "அட்லீஸ்ட்' நாம அப்ளிகேஷன் போடுற செலவுக்காவது ஆகுமே... அதுக்குத் தான்...' என்றான்.

ஆச்சரியமடைந்து, "இதுக்கு எவ்ளோடா சார்ஜ் பண்ணுவீங்க?' என்றோம்
"அது ஆளோட வசதியை பொறுத்தது. இது மிடில் கிளாஸ் பேமிலி. அதனால், இரண்டாயிரம் ரூபா சார்ஜ். இதே, ஹை கிளாஸ் வீடாக இருந்தால், ஐயாயிரம் முதல் ஏழாயிரம் ரூபாய் வரை வாங்குவோம். மேலும், பாதுகாக்க வேண்டிய நாளுக்கு ஏத்த மாதிரி, சார்ஜ் பண்ணுவோம். உள்ளுர் பிள்ளைகளாதலால், நம்பிக்கையாக ஒப்படைக்கின்றனர்...' என்று சொன்னான்.

"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு'ன்னு சும்மாவா சொன்னாங்க... எங்கள் ஏரியாவில், நாங்களும் ஒரு காவல்படை துவங்க முடிவு செய்து விட்டோம்.

தாயன்பு!

தாய் இல்லாமல் நாம் இல்லை; தாய் இன்றி உலகில் எவரும் பிறப்பதில்லை. என்பது உலகறிந்த உண்மை. தாய் எனும் சொல் நாடு, மண் ஆறு, கடல், இயற்கை…… மேலும் பலவற்றிற்கு உவமையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் தாய் மீது அன்பு செய்வது போல் நாட்டின் மேலும், மனிதர்கள், இயற்கை மற்றும் இதர உயிரினங்கள் மீதும் அன்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே. இவ்வலைப் பூ தாய் மடியின் இதத்தையும், தாய் நாட்டின் மடியை பங்கிடுவதில் சகோதர இனங்களுக்கிடையே வலுப்பெற்ற ஆயுதக் கலாச்சாரத்தையும், இதனால் தாய் நாட்டிற்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளையும், கடல் தாயின் கோர தாண்டவம், கலாச்சார சீரழிவுகள், பெண்ணுரிமை மற்றும்; சிறுவர் உரிமைகளையும் எடுத்துரைப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது.

அ.. ன்.. பு.. எனும் இந்த மூன்று எழுத்துக்கள் இரத்தத்தில் கலந்து, நரம்புகளை மீட்டி, ஊணர்சிகளை மெருகூட்டி வார்தையாக வரும் பொழுது இந்த உலகையே கட்டி வைக்கும் வல்லமையைப் பெறுகிறது. இத்தகைய அன்பிற்காக ஏங்குவோர் எத்தனை பேர், கிடைக்காமல் இறந்தவர் எத்தனை பேர், கிடைத்ததை இழந்தவர் எத்தனை பேர் அனுபவித்தவர் எத்தனை பேர், ஆசை காட்டி மோசம் செய்வதை போல் அன்பை காட்டி துவம்சம் செய்பவர்கள் எத்தனை பேர் உண்மையான அன்புடன் ஒருவர் பழகினாலும், அதைனை உரசிப் பார்த்து உண்மை, பொய் அறிய வேண்டிய சூழல்.

நம் கண்ணாடி மனதில் கல் வீசி விளையாடும் சமூகத்திலிருந்து நம்மை பாதுகாப்பவள் தாய். சோற்றோடு அன்பையும் சேர்த்தே ஊட்டியவள். வைரத்தைப் போலவே தாயும் பன்முகம் கொண்டவள். கணவனுக்காகவும், குடும்பத்திற்காகவும், குழந்தைக்காகவும், தன் தேவைகளை தியாகம் செய்தவள். இப்படித்தாங்க chemistry பாடத்தில் fail- ஆகி டீச்சரிடம் செமத்தியா, அழாம (ஏனெண்டா நான் படிச்சது coeducation School) அடி வாங்கிட்டு அப்படியே நேரா வீட்டுக்கு வந்து அப்பாட்ட நாலு குட்டு வாங்கிட்டு ஆள விட்டா போதும் சாமியோவ் எண்டு ஓடிப்போய் அம்மா மடியில தலைய வச்சு ஓன்னு அழுதா இருக்கிற சுகம் இருக்கே.

நான் அழ, அம்மா ஆறுதல் சொல்ல, அப்பாவுக்கு வீடே போர்க்களமாயிரும். திரும்பி வந்து என்னை தவணை முறையில் அடிச்சுப் போட்டு என்ட சத்தம் தாங்கமுடியாம புறமுதுகிடுவார் அப்பா. இப்படி அடிக்கடி அப்பாவை புறமுதுகிட வைத்துள்ளேன். அப்பொழுதெல்லாம் என்னை தலைகோதி, தன்னோடு அணைத்து, கண்ணீரைத் துடைத்து சிறந்த தளபதியாக இருந்தவர் தாய். அப்பாவின் அடிக்கு பயந்து எத்தனையோ குழந்தைகள் வீட்டை விட்டே ஓடுகிறார்கள். அவர்களை ஓடாமல் கட்டிப்போடும் அன்புச் சங்கிலி தாயிடமே உள்ளது.

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்..!



நடிகர் : விமல், பார்த்திபன்

நடிகை : மனிஷா, பூர்ணா

இயக்குனர் : கரு.பழனியப்பன்

இசை : வித்யாசாகர்

ஓளிப்பதிவு : அர்பிந்து சாரா



பழனி-பண்ணக்காடு வழித்தடத்தில் செல்லும் ஒரு அரசு பேருந்தை மையமாக வைத்து கதை ஆரம்பிக்கிறது. இந்த பஸ் பழனியில் இருந்து தினமும் மாலை பண்ணக்காடுக்கும், மறுநாள் காலை பண்ணக்காட்டில் இருந்து பழனிக்கும் செல்லும். இந்த பஸ்சின் டிரைவர் பார்த்திபன் சீனியர். கண்டக்டராக வரும் விமல் வேலைக்கு புதுசு.

இந்த பஸ் ஒரு தடவை மட்டும் செல்வதால், டிரைவர்-கண்டக்டர் இரவில் பண்ணக்காடு பகுதியில் தங்குவது வழக்கம். இதனால் அப்பகுதி மக்களுடன் நண்பர்களாக பழகி வருகின்றனர். இவர்களுக்கு பண்ணக்காட்டில் தங்குவதற்கு இடம், உணவு அனைத்தையும் பொதுமக்களே செய்து தருகிறார்கள்.

பார்த்திபன் சீனியர் டிரைவர் என்று சொல்லிக் கொண்டு எப்போதும் போதையில் வண்டி ஓட்டுகிறார். இந்த பஸ்சில் தான் பண்ணக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் வழக்கமாக பழனிக்கு செல்வார்கள். அதில் ஒரு பெண்ணாக மனிஷா வருகிறார். அவளை பார்த்தவுடன் மயங்குகிறார் விமல். அவருடைய காதலை அவளிடம் சொல்ல முயற்சிக்கிறார். மனிஷாவும் காதலை ஏற்றுக் கொள்கிறார்.

அண்ணா சார் என்ற பள்ளி வாத்தியாராக வருகிறார் ராஜேஷ். இவர் தன் நண்பரின் மகளான பூர்ணாவை தன் மகள் போன்று வளத்து வருகிறார். ஆசிரியையான பூர்ணாவை தன் வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறார்.

அந்த ஊரில் வசிக்கும் ரமணா, தன் தாயுடன் ராஜேஷ் வீட்டிற்கு சென்று பூர்ணாவை தனக்கு திருமணம் செய்து தரும்படி கேட்கிறார். அதை மறுக்கும் ராஜேஷ், “என் மகனுக்கு பூர்ணாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறேன். அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். மகன் ஊர் திருவிழாவுக்கு வரும் பொழுது திருமண நடத்த போகிறேன்” என்று கூறுகிறார்.

இதற்கிடையே அந்த ஊரின் டேம் பொறுப்பாளரான விதார்த், அந்த வேலையை மட்டும் செய்யாமல் ஊரில் உள்ள அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறார். ராஜேஷ் மகனுக்கு நண்பர் என்பதால், அவரது வீட்டில் உள்ள அனைத்து வேலையையும் செய்கிறார்.

ஒரு கட்டத்தில் பழனியில் இருந்து பண்ணக்காடுக்கு பஸ் செல்லும் பொழுது வண்டி இன்ஜின் கோளாறு காரணமாக பாதி வழியில் நிற்கிறது. அதனை சரிசெய்யும் மெக்கானிக்கான சந்தான பாரதி, வண்டியை தன் உதவியாளரை சரி செய்ய சொல்லிவிட்டு பார்த்திபனுடன் சேர்ந்து மது அருந்துகிறார்.

இருவரும் நிலை தெரியாத அளவுக்கு மது அருந்திக்கொண்டிருக்கும் பொழுது வண்டி சரியாகி விடுகிறது. பார்த்திபனால் வண்டி ஓட்ட முடியாத சூழ்நிலையில் இருக்க, பஸ்சை விமல் ஓட்டிச் செல்கிறார். இருவரும் பாட்டுப் பாடிக்கொண்டி செல்கிறார்கள். அந்த நேரத்தில் ஒருவன் வண்டி முன்பு வந்து விழுந்து விடுகிறான். தலையில் பலத்த அடிபட்டு கிடக்கும் அவனை அந்த வழியில் வரும் ஒரு ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறுகிறார்கள்.

நான் தான் அவன்மீது ஏற்றி விட்டேன் என்று நினைக்கும் விமல், பயத்துடன் அடிப்பட்டவன் பையை எடுத்துக் கொண்டு பண்ணக்காடு செல்கிறார். அந்த பையை திறந்து பார்க்கும் விமல், அடிப்பட்டவன் ராஜேஷின் மகன் என்று தெரிந்து கொள்கிறான். அதை ஊர் மக்கள் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று பார்த்திபன் சொல்ல, சொல்ல முடியாமல் விமல் தவிக்கிறான்.

இறுதியில் அடிப்பட்டவன் நிலை என்ன? விமல் ஊர் மக்களிடம் உண்மையை சொன்னானா? உண்மையாக அவன் எப்படி அடிப்பட்டான் என்பதே மீதிக்கதை.

கருப்பு என்னும் பார்த்திபன், நக்கல், நையாண்டி என அவருக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார். சுப்பையாவாக வரும் விமல் நல்ல கண்டக்டராக நடித்திருக்கிறார். இவருக்கும் மனிஷாவிற்கும் இடையேயான காதல் காட்சிகளில் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சாமி கதாபாத்திரத்தில் வரும் விதார்த்துக்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் கிடைத்திருக்கிறது. அதை திறமையாக செய்திருக்கிறார்.

பாவாடை தாவணியில் வரும் மனிஷாவுக்கு கிராமத்து வேடம் பொருந்தவில்லை. டீச்சரான பூர்ணாவும் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ரமணா, சிங்கம்புலி, மோனிகா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் சிலர் மட்டுமே மனதில் பதிகிறார்கள்.

யுகபாரதியின் பாடல் வரிகளில் வித்யாசாகரின் இசையில் ஒரு சில பாடல்கள் மட்டுமே ரசிக்க முடிகிறது. அர்பிந்து சாரா ஒளிப்பதிவில் மலைப்பகுதிகளை அழகாக நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். இதுவரை நேரடி தமிழ் படங்களையே எடுத்து வந்த கரு.பழனியப்பன் முதல் முறையாக மலையாளத்தில் இருந்து இப்படத்தை தமிழுக்கு கொண்டு வந்து வெற்றி பெற முயற்சித்திருக்கிறார்.

பேருந்தில் நடக்கும் சம்பவங்களை அதிகப்படியாக வைத்திருந்தால் ரசிகர்கள் இன்னும் ரசித்திருக்கலாம்.

மொத்தத்தில் 'ஜன்னல் ஓரம்'  மிதமான காற்று வருகிறது.

மருந்துக் கடையின் பொறுப்பான செயல்!

 
 நான், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். சமீபத்தில், உடல் நல குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரின் ஆலோசனையை பெற்று, அவர் அளித்த மருந்து சீட்டுடன், அருகில் இருந்த மருந்து கடைக்கு சென்றேன்.


மருந்து சீட்டை பெற்ற கடை ஊழியர், குறிப்பிட்ட மருந்து, மாத்திரைகளை எடுத்து வைத்து, ஒவ்வொரு மருந்து அட்டையின் பின்புறமும், ஸ்டிக்கர் ஒன்றை ஓட்டினார். அதை கவனித்த எனக்கு ஆச்சரியம். அந்த ஸ்டிக்கரில், காலை, மதியம், இரவு என, தமிழில் எழுதி இருந்தது.


இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "மருத்துவர்களின் கையெழுத்து புரியாத சிலர், காலையில் எடுக்க வேண்டிய மருந்தை இரவிலும், மதியம் எடுக்க வேண்டிய மருந்தை காலையிலும் உட்கொள்கின்றனர். வெறும் வாய் வார்த்தையால் நாங்கள் சொன்னால், அதை அவர்கள் மறந்து விடுவர். இதைத் தவிர்க்கவே, இந்த ஸ்டிக்கரை ஒட்டுகிறோம். என்னென்ன மாத்திரை எந்தந்த வேளைக்கு சாப்பிட வேண்டும் என, இதில் குறிப்பிட்டு விட்டால், குழப்பம் இருக்காது...' என்றார்.


தெருவிற்கு தெரு மருந்து கடைகள் முளைத்து விட்ட இக்காலத்தில், வெறும் வியாபார நோக்கோடு மட்டும் அல்லாமல், கடமை உணர்வோடு, மற்ற மருந்து கடைக்காரர்களும் இதை பின்பற்றலாமே!

பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்!



1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.

2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.

3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.

4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)

5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.

6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.

7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.

8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.

9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.

10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.

11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.

12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.

13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:


1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

சளிதொல்லையிலிருந்து விடுபட!


பாதுகாப்பு முறை:

சளி பிடித் திருந்தால் நோய்த் தொற்றைத் தடுக்க திறந்த வெளிகளில் விற்கும் உணவு மற்றும் பழ வகைகள், பழச்சாறுகள் சாப்பிடக் கூடாது. பனியால் ஏற்படும் தோல் வறட்சியை விரட்ட வெளியில் சென்று வந்த பின்னர் தண்ணீரில் முகம் கழுவவும். மாய்சரைசிங் சோப்பை மட்டுமே பயன்படுத்தவும்.


வெயில் மற்றும் பனியால் தோலுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க தரமான கிரீம்களை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் முடி கொட்டும். இதைத் தடுக்க முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். குளிர் காலத்தில் அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்படும். தாகம் தீர நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அவற்றை சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். தலைவலி மற்றும் சளித் தொல்லையின் போது டீ, காபி தவிர்க்கவும்.


சில தீர்வுகள் :

 * எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.

 * எலுமிச்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

 * கடல் அழிஞ்சில் பட்டை, திப்பிலி, தாளிசபத்திரி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்து சாப்பிடலாம். சளி, இருமல், தும்மல் மற்றும் அலர்ஜியில் இருந்து தீர்வு கிடைக்கும்.

 * கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்.

 * அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல்
 தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

 * அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும்.

 * ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.

 * ஆலமர விழுதை பொடி செய்து காலை, மாலையில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

சைகோடிரியா எலாட்டாக்கு முத்தம் கொடுக்க வாரீகளா!

 

பெண்களின் உதடுகள் போன்று, மிக அழகாக, சிவப்பாக இருக்கும் இந்த இதழ்கள், "சைகோடிரியா எலாட்டா' எனும், ஒரு வகை தாவரத்துடையது. இவ்வகை செடிகள், மழை அதிகம் பொழியும் கொலம்பியா, கோஸ்டாரீகா, பனாமா போன்ற நாடுகளில், அதிகமாக காணப்படுகின்றன.


இதனை, "ஊக்கர்ஸ் லிப்ஸ்' என்று அழைப்பர். இந்த இதழ்கள், சின்ன சின்ன பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளை தன் பக்கம் இழுத்து விடும் தன்மை கொண்டது.


பார்த்ததும், நம்மை முத்தம் கொடுக்கத் தூண்டும் இவ்விதழ்கள், நீண்ட நேரம் இப்படியே இருக்காது. காரணம், இரண்டு இதழ்களுக்கு இடையிலிருந்து குட்டி குட்டி பூக்கள் பூக்கும் என்பது தான், ஆச்சரியமான விஷயம்.

சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்!


இலைகளை உதிர்த்துவிட்டு வெள்ளாடை கட்டாத விதவையாய் மரங்களெல்லாம் வாடி நிற்கிறபோது இதோ அவை துளிர்த்து சிரிக்கிற வசந்த காலத்தை நினைத்தால் மகிழ்ச்சியளிக்கிறது.

ஆற்றுப் படுகையின் வெடிப்புகளைப் பார்க்கிறபோதெல்லாம் நாளை அங்கு ஈரவாடையோடு பசுமை நம்பிக்கைக் கோலங்கள் வரைவதை நினைத்தால் உற்சாகம் உள்ளூர ஊற்றெடுக்கிறது.

கோடை காலத்தில் வெப்பம் தகித்து வியர்வை ஆறு ஓடுகிறபோது தை மாத சுகந்தமான குளிர்க்காற்று மனத்திற்கு சுகாமாயிருக்கிறது.

வெப்பமும், வெதுவெதுப்பும், குளிரும், கூதலும் ஒரு வருடத்தின் பருவங்கள் அதுபோலத்தான் மனிதவாழ்விலும் சுகமும் துக்கமும் வந்து போகும்.

இன்றைய இரவு நாளை விடிந்து விடும்; துன்பங்கள் துயரங்கள் மடிந்து விடும். நடக்கிறவரை நட பாலைவனப் பயணத்திலும் ஒருநாள் பசுஞ்சோலை தென்படும் என்ற நம்பிக்கையோடு நட.

முள்செடியின் கீறல்களை சகித்துக்கொள்ளாவிட்டால் தேன் எப்படி எடுக்க இயலும்?. கல்லிலும் கால் நடக்காது; முள்ளிலும் வதைபடாது ஒரு காலும் முன்னேற்றத்தை முத்தமிட முடியாது தோழா.

உயர்வின் உச்சியிலே ஒளி வீசிக்கொண்டிருக்கும் உயர்ந்த மனிதர்களின் உயரத்தை மட்டுமே நம்மில் பலர் எண்ணி வியக்கின்றோமேயொழிய அந்த நிலைக்குயர அவர்கள் பட்ட துன்பங்களையும் எடுத்தத் தொடர் முயற்சிகளையும் எண்ணிப்பார்ப்பதில்லை.

தந்தையின் திருவாக்கைக் காப்பதற்கு பதினான்கு ஆண்டுகள் கானகம் செல்ல துணியாவிட்டால் இன்று இராமன் நாமமில்லை
தோளிலே சிலுவை சுமந்து கல்வாரிக்கு நடக்காவிட்டால் இயேசு பிரானுமில்லை; கபிலவஸ்துவைவிட்டு வெளியேறாவிட்டால் போதிமர புத்தனுமில்லை.

கல்லடி, சொல்லிடி, கொலை மிரட்டல் போன்ற எதிர்ப்புகளை பொறுமையோடும் நம்பிக்கையோடும் சமாளித்தப் பின்னரே நபிகள் இஸ்லாத்தை உலகுக்குப் பரப்பினார்.


வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியையே தழுவிய ஆப்ரகாம் லிங்கன் பின்னாளில் அதிபராக எழவில்லையா?

எத்துணை தோல்விகளையும் வெற்றியாக உருமாற்றிய எடிசனை உலகம் கொண்டாடவில்லையா? உடல் பழுதுபட்டாலும் உயர் எழுத்துக்களால் எலன் கெல்லர் பிரகாசிக்கவில்லையா?


இன்றும் நம்மோடு வாழும் சிலர் புயலையும் கடந்து வெள்ளி நிலவாய் பிரகாசிக்க நாம் மட்டும் இயலாமைகளையே வாழும் இலக்கணமாய் வைத்துக்கொண்டு வாழ்வது தகுமா?

நமது சொந்தச் சிறைகளிலிருந்து முதலில் வெளியேற வேண்டும். காட்டு யானையைப் பழக்குவதற்காக முதலில் அதன் காலை சங்கிலியால் பிணித்துத் தூணில் கட்டுவார்கள்.

காலப்போக்கில் எதிலும் கட்டப்படாத சிறிய சங்கிலி மட்டுமே அதன் காலில் தொங்க அந்த யானை நினைவால் வாழ்நாள் முழுவதும் சிறைப்பட்டிருக்கும்.
நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகிறோம் என்பது மாபெரும் உண்மை. நம்பிக்கையோடு நாள்களை நடத்திக் கொண்டிருப்பவர் வெள்ளி நட்சத்திரமாகிறார். நம்பிக்கை நலிந்து போனவர் தம்முள் நரகத்தை உருவாக்கி தம்மையே பலியிட்டுக் கொள்கிறார்.

எல்லா இரவுகளும் விடிந்திருக்கின்றன; நாளை விடியல் இல்லையென்று யார் கூறினாலும் நாம் ஏற்கப் போவதில்லை.


மனிதர்கள் வெறும் காற்றைச் சுவாசிப்பதால் வாழவில்லை; நம்பிக்கையைச் சுவாசிப்பதால்தான் வாழ்கிறார்கள். பிழைக்கவே மாட்டேன் என நினைக்கும் நோயாளிக்கு எத்தகைய மருந்து கொடுத்தும் பயனென்ன?

தூந்திர வெளிகளில் துயரத்தையே சுவாசித்துக் கொண்டிருக்கின்ற எஸ்கிமோக்களை வாழவைப்பதே என்றேனும் ஒரு பொழுது சூரியக் கதிர் எட்டிப் பார்க்குமென்ற நம்பிக்கைதான்.


எப்போதும் வெளிச்சத்தை நோக்கி நடக்க வேண்டும். நிதமும் எதிர்காலம் ஒளிமயமானது என்கிற நம்பிக்கையைச் சுமந்து நடைபயில வேண்டும். அப்போதுதான் இந்த வாழ்க்கையின் மீது சலிப்போ வெறுப்போ இருக்காது.

பாதைகள் பசுமையானவை; பயணங்கள் இனிமையானவை என்று நிதமும் எண்ண வேண்டும். துன்பங்கள் எதிர்பட்டாலும் அதைக் கண்டு துவண்டுவிடாமல் மேலே மேலே முன்னேற வேண்டும்.
துன்பம் தொடாத மனிதன் யாரேனும் உண்டா? துன்பத்தைத் தாங்கிக்கொண்டு நம்பிக்கையோடு பயணம் செய்தால் இன்பம் தானாக நம்மை வாழ்த்தும்.

சுடச்சுடத்தான் தங்கம் ஒளிரும்; பட்டை தீட்டத் தீட்டத்தான் வைரம் ஒளி வீசும். அதுபோல நம்மை வருத்தும் துயரம் யாவும் நம்மை பக்குவப்படுத்தி சிறந்த மனிதனாக உருவாக்குகின்றது. வாழ்க்கையை வளப்படுத்தும் நோக்கிலே எதிர்படும் சவால்களை நம்பிக்கையோடு போராடி வெல்ல வேண்டும்.

‘சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்’ என்ற கவிஞர் வைரமுத்து கூற்றுக்கிணங்க முன்னேற்றத்தைத் தரிசிக்க முட்டுக்கட்டைகளை எல்லாம் தகர்த்தெறிந்து போராடுகிறவனே மனிதன்.
நமது முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு. பசுமையான நிலத்தில் தூவப்பட்ட விதைகள் முளைக்காமல் போனதில்லை. நம்பிக்கை நம்மை மனிதர்களாக்கின்ற மகாமந்திரம்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. அதை எப்போதும் நெஞ்சிலே வைத்து வளர்த்தாக வேண்டும்.

‘காலம் இருண்டிருந்தாலும் இதயத்தையே தீபமாகப் பிடித்துக்கொண்டு தீர்க்க தரிசனத்தோடு முன்னேறுவோம், உழைப்புச் செங்கோலை உயர்த்திப் பிடிப்போம், நம் காலடிச் சுவடுகளால் எதிர்காலங்கள் பிரகாசிகட்டும்’ என்ற சூரிய காந்தன் வரிகளை துவழும் போதெல்லாம் நினைவு கொள்வோம்

எது இன்பம்...?


நம்முடைய தேவைகளே நமது சொர்க்கங்களை உருவாக்குகின்றன. நம் தேவைகளின் மாறுதலுக்கேற்ப,நமது சொர்க்கங்களும் மாறுகின்றன.


புலன்களின் மகிழ்ச்சி வாழ்க்கையின் எல்லா விசயங்களிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் நிர்மாணிக்கும் சொர்க்கத்தை போன்றதொரு சொர்க்கம் அமைந்தால் நாம் முன்னேறவே இயலாது!


நாம் அடையக்கூடியது இவ்வளவுதானா?


சிறிது காலம் அழுகின்றோம்;


சிறிது காலம் சிரிக்கின்றோம்;


கடைசியில் எல்லாம் இழந்து இறந்து போகின்றோம்!


உலக வாழ்க்கையின் இன்பங்களை துரத்திக்கொண்டே போகின்றோம் எது உண்மையான இன்பம் என்று தெரியாமலே....?


இன்பத்தை விட்டுவிடச்சொல்லி நம்மை தத்துவங்கள் ஒருபோதும் வற்புறுத்துவதில்லை.மாறாக எது உண்மையான இன்பம் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள் என்றே கூறுகிறது.

திருட்டு மொபைலை மோப்பம் பிடிக்கும் ஸ்மார்ட் சிம்!

 

மொபைல் திருட்டு போனால் ஒரே வழி அதை மறந்து விட வேண்டும் ஏன் என்றல் எடுத்தவன் டக்குனு ஆஃப் பண்ணி விடுவதுதான்.

 அப்புறம் ஆஃப்லைன்ல சிம்மை எடுத்திட்டு ரீஸெட் பண்ணி ஒன்று அவன் உபயோகிப்பான் அல்லது விற்று விடுகிறார்கள். அதனால் ஐ எம் ஐ வைத்தெல்லாம் கண்டுபிடிப்பது மிகுந்த சிரமத்துக்குள்ளாகி விடுகிறது.

அதனை போக்க ரஷியாவின் மாஸ்கோ மெட்ரோ போலீஸ் ஒவ்வொரு மெட்ரோ ஸ்டேஷ்னிலும் ஒரு மோப்பம் பிடிக்கும் சிம் போல நிறுவ உள்ளனர். இது எங்கே எங்கே நிறுவபட்டிருக்கிறது என்ற தகவல் போலீஸுக்கு மட்டும் தான் தெரியும்.

 இதனால் நீங்கள் தொலைத்த மொபைல் ஃபோனை உடனே போலீஸில் தெரிவித்தால் அவர்கள் திருட்டு ஃபோன் டேட்டாபேஸில் இந்த ஃபோனை லிஸ்ட் செய்து விடுவார்கள்.

பின்னர் இதை எடுத்த நல்லவன் வேறு சிம்மோ அல்லது சைலைன்ட்டாய் யூஸ் பண்ணினால் உடனே சங்கூதி போலீஸுக்கு அலெர்ட் செய்து விடும்.

அது போக அவர் மெட்ரோ ஸ்டேஷனுக்குள் இருக்கும் வரை அலெர்ட் செய்து அவரது தற்போதைய மூவென்ட்டை லைவாய் காட்டி விடுமாக்கும்.அப்புறம் என்ன காப்பு காப்புதான்.!

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்!

 

உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?


அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.


அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.


அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.


ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.


ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான், அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.


அடிபட்டுக் கிடக்கிறான் செட்டி, அவனை அழைத்து வா, பணம் பாக்கி என்கிறான் பட்டி.


ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?


இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்


இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்.


இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.


இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?


உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.


உதடு மன்றாடப் போய் உள்ளிருந்த பல்லும் போனாற் போல.


உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?


பசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொல்வான்.


 ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி


கடுங்காற்று மழை கூட்டும். கடும் சினேகம் பகை கூட்டும்.


வீட்டு வாசலில் காவேரி, முழுக மாட்டாளாம் மூதேவி.


குண்டு பட்டு சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்


பண்ணிய பாவத்தைப் பட்டுத் தான் தொலைக்க வேண்டும்.


காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.


தலைக்குத் தலை அம்பலம். உலைக்கு அரிசி இல்லை.


நீரிலும் நனைய மாட்டான். நெருப்பிலும் வேக மாட்டான்.


அசை போட்டுத் தின்பது மாடு; அசையாமல் தின்பது வீடு.


ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் நொண்டிக்குப் கோபம்.


அஞ்சு காசுக்குக் குதிரையும் வேணும். அது ஆற்றைக் கடந்து பாயவும் வேணும்.


அறுவடைக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.


மேய்த்தால் கழுதை மேய்ப்பேன். இல்லா விட்டால் பரதேசி ஆவேன்.


அன்ன நடை நடக்கப் போய் தன்னடையும் கெட்டுப் போச்சு.


குதிரை செத்ததும் இல்லாமல் குழி தோண்ட மூணு பணம்.


எண்ணம் எல்லாம் பொய், எமன் ஓலை மெய்.


என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருகிறாய்?


கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டா?


எள் எண்ணெய்க்குக் காய்கிறது. எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது?


கோழி களவு போனதற்கு ஆடு வெட்டியா பொங்கல் இடுவார்கள்?


பூனைக்குப் பயந்து புலியிடம் போகலாமா?


சத்திரத்து சோத்துக்கு தாத்தய்யங்கார் உத்தரவு எதற்கு?


வேகாத சோத்துக்கு விருந்தாளி இரண்டு பேர்.


தானாகக் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி.


தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தெரியும்.


பறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.


உடையவன் பாராத வேலை உருப்படாது.


தூங்குகிற மணியக்காரனை எழுப்பினால் பழைய கந்தாயம் கேட்டானாம்.


எடுக்கிறது எருமைச்சாணி, படுக்கிறது பஞ்சு மெத்தை


ஆசை தீர அனுபவித்தவனும் இல்லை, அள்ளிக்கொடுத்து கெட்டவனும் இல்லை.


இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்


அஞ்சினவனைக் குஞ்சும் விரட்டும்.


தாய் அறியாத சூல் இல்லை. மனம் அறியாத பொய் இல்லை.


வைத்தியன் பிள்ளை மருந்தினால் சாகும்.


ஆயிரம் காக்கையை ஓட்ட ஒரு கல் போதும்.


காற்றில்லாமல் தூசு பறக்காது.


காவடிப்பாரம் சுமப்பவனுக்குத் தான் தெரியும்.


எகிறி எகிறி குதித்தாலும் எட்டு பத்தாகாது.


சாட்டை அடியும் சவுக்கடியும் தாங்கலாம்
மூட்டைக் கடியும் முணுமுணுப்பும் ஆகாது.


பனி பெய்து குளம் நிரம்பாது.


பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.


நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டி சுமப்பது புல் சுமையே.


பொன்குடத்திற்குப் பொட்டு தேவையில்லை.


இழவுக்கு வந்தவளா தாலி அறுப்பாள்?


மூன்று செவிக்கு எட்டின செய்தி மூடுமந்திரம் ஆகாது.


    காலம் போகும் வார்த்தை நிற்கும். கப்பல் போகும் துறை நிற்கும். (துறை=துறைமுகம்)
 

  அறிந்தவன் என்று கும்பிட்டால் அடிமை என்று சொல்லுவதா?


    ஆற்றிலே நின்று அரகரா என்றாலும் சோற்றிலே இருக்கார் சொக்கலிங்கம்.


    சுடுகாடு போன பிணம் வீடு திரும்பாது.


    இட்டது எல்லாம் பயிராகாது. பெற்றது எல்லாம் பிள்ளையாகாது.


    வாய் நல்லதானால் ஊர் நல்லது.


    கேடு வரும் பின்னே. மதி கெட்டு வரும் முன்னே.


    காரியம் பெரிதேயன்றி வீரியம் பெரியதல்ல.


    மயிர் சுட்டுக் கரியாகாது.


    ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.


    விசாரம் முற்றினால் வியாதி. (விசாரம்=கவலை)


    திரு உண்டானால் திறமையும் உண்டாகும். (திரு=செல்வம்)


    பல்லக்கு ஏற பாக்கியம் உண்டு; உந்தி ஏற சீவன் இல்லை. (சீவன்=உடல் சக்தி)


    ஆசை இருக்குது தாசில் பண்ண; அம்சம் இருக்குது கழுதை மேய்க்க.


    ஞானிக்கு இல்லை நாளும் கிழமையும்.


    ஆற்று மணலில் கிடந்து புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.


    தலையை சிரைப்பதால் தலையெழுத்து மாறாது.


    அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்.


    அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.


    தின்னப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.


    எட்டினால் சிண்டைப் பிடி; எட்டாவிட்டால் காலைப் பிடி.


வாழைப்பழம் கொண்டு வந்தவள் வாசலிலே. வாய் கொண்டு வந்தவள் வீட்டுக்குள்ளே.


    சாமி காட்டுமே தவிர ஊட்டாது.


    அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.


    இளமையில் கல்வி, சிலையில் எழுத்து.


    உலக்கைப் பூசைக்கு அசையாதவள் திருப்பாட்டுக்கு அசைய மாட்டாள்.


    கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான்.


    தெய்வம் பாதி திறமை பாதி.


    தளுக்கும் மினுக்கும் தாம்பத்தியம் ஆகாது.


    ஆங்காரத்தினால் அழிந்தவர்கள் ஆயிரம் பேர்.


    சனப்பலம் இருந்தால் மனப்பலம் வரும்.


    தாய் இல்லாத போது தகப்பன் தாயாதி.


    அரசன் குடுமியையும் அம்பட்டன் பிடிப்பான்.


    மனசாட்சியை விட மறுசாட்சி வேண்டாம்.


    கடல் வற்றிக் கருவாடு தின்ன ஆசைப்பட்டு குடல் வற்றி செத்ததாம் கொக்கு.


    கூத்தாடி கிழக்கே பார்ப்பான். கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.


    பாராத உடைமையும் பாழ், கேளாத கல்வியும் பாழ்.


    குயவனுக்குப் பல நாள் வேலை, தடியனுக்கு ஒரு நிமிட வேலை.


    பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்.


    அரைக்காசுக்குப் போன வெட்கம் ஆயிரம் கொடுத்தாலும் திரும்பாது.


    எழுதிப் பாராதவன் கணக்கு கழுதை மேய்ந்த களம்.


    அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.


    முடியுள்ள சீமாட்டி எப்படியும் முடிப்பாள்.


    கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

    அக்காள் இருந்தால் மச்சான் உறவு.


முரட்டுத்தனத்துக்கு முதல் தாம்பூலம்.

காட்சியும் அதன் கவிதையும்!


 
இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!!
******************************
உன் சிரிப்பின் அர்த்தம் ...
புரியாமல் தனிமையில் ....
தவிர்க்கிறேன் .....!!!
இவன் என்னிடம் ...
ஏமார்ந்து விட்டானே ...?
என்று சிரிக்கிறாயா ...?
நான் உன்னிடம் காதல் ..
சொல்ல தாமதமாகியதற்கு ...
சிரிக்கிறாயா ...?
ஒற்று மட்டும் உன் சிரிப்பில் ...
நன்றாக தெரிகிறது ...!!!
இது காதல் அரும்பும்....
சிரிப்பல்ல ...!!!



நீங்கள் உணவு தந்தால் கூட
நாங்கள் சாப்பிடும் சக்தியை
இழந்து விட்டோம் ....!!!

அப்படியென்றால்
எதற்காக கைநீட்டுகிறாய்...?
என்று கேட்கிறீர்களா ...?

நீட்டி நீட்டியே எங்கள்
கைகள் தானாக நீண்டு
விட்டன ....!!!



செல்கிறோம்
வருத்தி வருத்தி
உழைக்க செல்கிறோம்
எதிர் பார்க்கையுடன்
செல்கிறோம் ....!!!

செல்லவதை மட்டுமே
சொல்கிறோம்
வருவதை மனிதநேயம்
தான் சொல்ல வேண்டும் ....!!!

நாங்கள் விடும் கண்ணீர்
கடல் அன்னைக்கும்
புரியாது கண்ணீரின்
சுவையும் உவர்ப்புத்தானே ....!!!



இந்தா பெண்ணே ...
இப்போது என்றாலும்
இதய கதவை திறந்து
கொள் ....!!!


சகோதரியே ...!!!
இந்தவயதில் இருந்து
சுற்றியல் பிடித்திட்டோமே
சுற்றியலைவிட
வண்மையாகிவிடும்
நம் கைகள் -எம்மை
வேலைக்கு அழைத்த
முதலாளி எதையுமே
பிடிக்காமல் எப்படி
இதயம் இரும்பாகியது ..?
அவருக்கு...?





கட்டிட கலையின்
அற்புத கலை நாங்கள்...!!!

கட்டப்பட்ட கட்டிடத்தை
ரசிப்பவர்களே ....!!!!

கற்களை இப்படி
அடுக்குவதும்
ஒரு கலைதான் ...!!!

மாயக்கண்கள்
எம்மை கூலியாக தான்
பார்க்கும் ....!!!



அழகையும்
சிரிப்பையும்
பார்க்கும்
உள்ளங்களே
ஆபத்தும் உண்டு ....!!!
மறந்து விடாதே ....!!!




தனிமையில் இருந்தேன்
தானாக வந்தாய்
காதல் கொண்டாய்
இப்போ
தனிமைப்படுத்தி
சென்று விட்டாய் ....!!!
இரு எண்ணத்துடன் ..
தனிமையாக
இருப்பதில் சுகம்
உண்டுதான் கண்ணே ....!!!




அன்புக்கு கட்டுப்பட்டால்
அது உனக்கொரு விலங்கு...!!!

ஆசைக்கு கட்டுப்பட்டால்
அதுவும் உனக்கு விலங்கு ....!!!

கோபப்பட்டால் தானாக வரும்
விலங்கு .....!!!

வாழ்க்கையில் ஒரு
விலங்கு வந்தே தீரும்
விலக்கிக்கொண்டவன்
ஞானி ....!!!




தயவு செய்து எம்
வீட்டை கலைக்காதீர்
அழகுக்காக எம் வீட்டை
அபகரிப்பவர்களே
உங்கள் செயலால்
அருகி வரும் இனத்தில்
நாங்களும்
ஒன்றாகி விட்டோம் ....!!!

அழகு!

அழகு எங்கு இருக்கிறது? பார்பவர்களின் கண்களிலும் அதை ரசிக்கும் மனதிலும் தன இருக்கிறது. எனக்கு அழகு என்று தெரியும்  ஒரு பொருள் மற்றவர்களுக்கு அசிங்கமாகத் தெரியலாம். மற்றவர்களுக்கு அழகில்லாதது எனக்கு அழகாய் தோன்றலாம்.

ஒரு பெண்ணை நிறுத்தி அந்தப் பெண்ணிடம் எது அழகு என்று கேட்டுப் பாருங்கள். ஒருவன் அவள் வலை வீசும் கண்கள் அழகு என்று சொல்வான் இன்னொருவன் அவள் தேன் சிந்தும் உதடுகள் அழகு என்று சொல்வான். மற்றொருவன் அவள் இடை அழகு என்பான். இன்னொருவன் அவள் நடை அழகு என்று சொல்வான். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அழகாய் தெரியும். அழகு பார்வைக்கு பார்வை வேறுபடும்.

இப்படி பார்வையில் அழகு வேறுபடுவதால் தான் அழகான பெண்ணுக்கு அழகில்லாத ஆணும், அழகான அணுகு அழகில்லாத பெண்ணும் வாழ்க்கைத் துணையாக அமைகிறார்கள். இது இறைவன் செயல், காதலித்து தங்கள் துணையை தாங்களே தேடிக் கொள்பவர்களில் கூட இந்த புதுமை நடக்கத் தானே செய்கிறது.

 எத்தனயோ அழகு சுந்தரிகள் அழகில்லாத காற்றடித்தால் பறந்துவிடும் வாலிபர்களை காதலிப்பது இல்லையா? அதை போல எத்தனையோ கட்டிளம் காளையர்கள் அழகில்லாத ஒட்டடை குச்சி பெண்களைக் காதலிப்பது இல்லையா? இவை அனைத்துக்கும் காரணம் அவர்கள் பார்வை மனம் இரண்டிலும் உள்ள வித்தியாசங்கள் தான்.

அழகில்லாத பெண்ணிடம் உள்ள நல்ல குணமோ அல்லது அவர்கள் தூய்மையான அன்போ சிலருக்கு அழகாக தெரிவதால் அந்த பெண்களுக்காக எதையும் இழக்கத் தயார் ஆகுகிறார்கள். பெண்களும் அதே போலத் தான். அன்ன அழகில்லாவிட்டாலும் அவனிடம் இருக்கும் பேச்சுத்திறனோ அல்லது கம்பிரமோ நல்ல குணமோ அழகாக தெரிந்தால் அவனுக்காக உயிரைம் விடத் தயாராக இருகிறார்கள். இதற்கெல்லாம் மனம் தானே காரணம்.

கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி…


கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும்.

கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.

வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.

இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும். இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது. கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும். தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.

கத்திரிக்காயின் மருத்துவ பயன்கள்…

 

கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்..

மேலும் ஃபைபர் 11%, மாங்கனீசு 10%, பொட்டாசியம் 5.3%, ஃபோலேட் 4.5%, வைட்டமின் கே 3.5%, செம்பு 3.5%, வைட்டமின் பி 63.5%, டிரிப்தோபன் 3.1%, வைட்டமின் சி 3%, மெக்னீசியம் 2.8%, வைட்டமின் பி 32.6%, கலோரி 1%.
ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் உடல் சூட்டை தக்க வைத்துக்கொள்ள விரும்புபவர்களும் இவ்வாறு சாப்பிடலாம். சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், மேலும் அரிப்பை தூண்டும்..

அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது. கத்தரிக்காய் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் நீரிழிவை கட்டுப்படுத்த கத்தரிக்காயை பயன்படுத்துகின்றனர்.

நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். கொழுப்பின் அளவை கட்டுபடுத்தி இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும், ரத்த அழுத்தத்தை குறைக்கும். நீல நிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.