Friday 6 December 2013

பெர்முடா முக்கோணம் - "மர்மங்கள்"




நிலவுல போய் பிளாட் வாங்கறேன்னு கிளம்பற அளவுக்கு இப்போ டெக்னாலஜி முன்னேறி இருந்தாலும்..சில விசயங்கள் இன்னும் புரியாத புதிராகவே இருக்கு.. அதுல பெர்முடா முக்கோணமும் ஒன்னு..


வட அட்லாண்டிக் கடலோட மேற்குப் பகுதியில் இருக்கற ஒரு குறிப்பிட்ட பரப்பை பெர்முடா முக்கோணம்னு சொல்றாங்க.. பஹாமாஸ், புளோரிடா நீரிணைப்பு மற்றும் கரீபியன் தீவுகள் முழுவதுமே இந்தப் பரப்புக்குள்ள அடங்குது.. அப்புறம் இன்னும் சில பகுதிகளும் இந்தப் முக்கோணத்துக்குள்ள வரும்னு சொல்றாங்க..


இந்தப் பகுதியில நிறைய கப்பல்களும் விமானங்களும் காணமப் போயிட்டதாக சொல்லப்படுது.. இந்த மர்மத்தை பற்றி முதன்முதலாக 1950 ஆண்டு ஒரு ஆர்டிகல் வெளியாகியிருக்கு.. அப்புறம் இரண்டு வருசம் கழிச்சு இந்த விசயம் பற்றி இரண்டாவது ஆர்டிகல் வெளியாச்சு.. பிளைட் 19 ரக விமானங்கள் ஐந்து.. அந்தப் பகுதியில பயிற்சி எடுத்துட்டு இருந்தப்போ காணாமப் போயிட்டதாகவும்.. அந்த விமானங்கள்ல இருந்த ஒரு கேப்டன்.. "நாங்க இப்போ வெள்ளைக் கலர்ல இருக்கற தண்ணிக்குள்ள போயிட்டிருக்கோம்.. இல்ல... இல்ல.. இந்தத் தண்ணி பச்சையா இருக்கு.. அப்படின்னு சொன்னதா ரெக்கார்ட் ஆயிருக்குன்னு சொல்றாங்க.. அந்த விமானங்களோட திசைகாட்டியும் தாறுமாறா அப்போ வேலை செய்திருக்கு.. அவங்களைத் தேடிக்கிட்டு ஒரு குரூப் இன்னோரு விமானத்துல போக அந்த விமானத்தையும் காணோம்.. இந்த விசயத்தை விசாரணை பண்ணின அதிகாரிகள்.. விமானங்கள் எல்லாம் செவ்வாய் கிரகத்துக்கு பறந்து போயிடுச்சு சொன்னதாகவும் கூறப்பட்டிருக்கு..


அப்புறமென்ன.. இந்த இடத்தைப் பற்றி ஆவி, புதம், பேய், ஏலியன்ஸ்ன்னு நிறையக் கட்டுக்கதைகள்..


உண்மையில.. கடல் பகுதியில ஏற்பட்ட பல விபத்துகள்.. பெர்முடா பகுதியில நடந்ததாக திரிச்சு சொல்லியிருக்காங்கன்னும் அதுக்கான நிறைய விளக்கங்களையும் பல ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்காங்க.. பல விசயங்கள் நடக்காமயே நடந்ததாகவும் கதை கட்டியிருக்காங்க.. உதாரணத்துக்கு.. 1937 ஆம் ஆண்டு புளோரிடா கடற்கரைப் பகுதியில் ஒரு பிளைட் விபத்துக்குள்ளானதை நிறையப் பேரு பார்த்ததாக சொல்லப்படுது.. ஆனால் லோக்கல் நியூஸ் பேப்பர்ல அந்த விபத்து பற்றின எந்த நியூஸுமே வெளியாகல..


இந்தப் பகுதிக்குள்ள நுழையற எந்த பொருளுமே காணமப்போகல.. அங்கேயே வேற வடிவத்துல இருக்குன்னும்.. எல்லாப் பொருட்களுமே ஒரு அணுவாக மாறி காற்றோட கலந்துடுதுன்னும் ஏகப்பட்ட கெஸ்ஸிங்..


விஞ்ஞான ரீதியாகவும் இந்த விசயத்துக்கு பல விளக்கங்களைக் கொடுத்திருக்காங்க..


மீத்தேன் ஹைட்ராய்டு அப்படிங்கற ஒரு இயற்கை எரிவாயு.. நீரோட அடர்த்தியைக் கம்மி பண்ணி.. கப்பல் தண்ணியில மிதக்க முடியாம மூழ்கடிக்கும்னு ஆஸ்திரேலியாவுல நடத்தப்பட்ட சோதனைகள்ல சொல்லியிருக்காங்க.. ஆனால் பெர்முடா பகுதியில மீத்தேன் ஹைட்ராய்டோட எந்த தாக்கமும் எப்போதும் இருந்திருக்கல..


கடல்ல உண்டாகற பயங்கர சூறாவளிகள் காரணமாக இருந்திருக்காலாம்னு சொல்லப்படுது..


சுனாமி அலைகள் மாதிரி இராட்சச அலைகள் உருவாகி.. கப்பல்களையும், விமானங்களையும் மூழ்கடிச்சிருக்கலாம்னும் சொல்றாங்க..


பெர்முடாப் பகுதியோட ஏதாவது மையப்பகுதியில.. ஈர்ப்புவிசை ரொம்ப அதிகமாக இருந்து.. எல்லாப் பொருட்களையும் உள்ளே ஈர்த்துக்குன்னும் ஒரு கெஸ்ஸிங்..


கடற்கொள்ளையர்கள் மேலயும் டவுட்டு இருந்திருக்கு.. ஆனால் அவங்க எப்படி விமானத்தைக் கொள்ளையடிப்பாங்க..


பெர்முடா முக்கோணத்தின் குறிப்பிடத்தக்க சம்பவங்கள்னு சொல்லனும்னா..


1. பிளைட் 19 காணாமப்போனதும்.. அந்த விமானங்களைத் தேடி மீட்பு பணிக்காகப் போன 13 பேர் கொண்ட குழுவும் காணாமல் போனது.. இந்த விசயத்துக்காக கொடுக்கப்பட்ட விளக்கங்கள் துல்லியமான உண்மைகளாகத் தெரியல..


2. மேரி செலஸ்டின்னு ஒரு கப்பல் 1872 ஆம் ஆண்டு மர்மமான முறையில் துலைஞ்சு போயிருக்கு.. பெர்முடா முக்கோணம்தான் இதுக்கு காரணம்னு சொல்லப்பட்டிருக்கு.. இதே பேர்ல இருந்த ஒரு கப்பல் 1860கள்ல மூழ்கிப் போனதை இந்தக் கப்பலோட இணைச்சு குழம்பியிருக்கலாம்னும் சொல்றாங்க..


3. 1881 ஆம் ஆண்டு எலன் ஆஸ்டின்னு ஒருத்தர்.. ஒரு கப்பல் கடல்ல அநாதையாக வர்றதைப் பார்த்திருக்கார்.. மீட்புப் பணியாட்களை அனுப்பி.. அந்தக் கப்பலையும் சேர்த்து நியூயார்க் ஓட்டிட்டு வந்துடலாம்னு அவர் எண்ணம்.. ஆனால்.. அந்தக் கப்பல் மீண்டும் பணியாட்களோட காணாமப் போனதாக சொல்லப்படுது..


இப்படி ஒரு பெரிய லிஸ்டே இருக்கு.. இது போதும்.. ..



பெர்முடா முக்கோணம் பற்றின தேடுதல்ல.. இன்னொரு விசயமும் தெரிஞ்சுக்க முடிஞ்சது.. ஜப்பான் பக்கத்துல ட்ராகன் ட்ரையாங்கில்னு இன்னொரு இடமும்.. சேம் பீஸ்தானாம்.. அந்தப் பகுதிகுள்ள நுழையற எந்த ஆப்ஜெக்டும் திரும்பறதில்லையாம்..

தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது?



புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, ரிபோஃப்ளோவின் எனப்படும் வைட்டமின் பி2, கொழுப்புச் சத்து எனப் பல சத்துகள் தயிரில் உண்டு. 100 மி.லி தயிரில் 60 கலோரி கிடைக்கிறது.


ஒல்லியாக இருப்பவர்கள், நுரையீரலில் பிரச்னை உள்ளவர்கள் நிச்சயம் தயிர் சாப்பிட வேண்டும். மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் செரிமானமாக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகள், பிரியாணி போன்ற உணவைச் சாப்பிடும்போது தயிர் அல்லது மோர் சாப்பிட்டால் நல்லது. ஏனெனில், இவை உணவு செரிக்கத் தேவையான பாக்ட்டீரியாக்களை உருவாக்குகின்றன.


அதனால்தான் தமிழர்கள் தங்கள் உணவில் கடைசியாக தயிர் அல்லது மோர் சேர்த்துக் கொள்கின்றனர். எடை அதிகரிக்க விரும்புபவர்கள், தயிரில் சர்க்கரை கலந்து லஸ்ஸி போல் சாப்பிடலாம்.


ஆனால், இரவில் தயிர் சேர்த்துக்கொண்டால், உடனடியாகத் தூங்க செல்லாமல், 10 நிமிடம் நடைப் பயிற்சி செய்தபின்னர்தான் படுக்கைக்குச் செல்லவேண்டும். உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் அதிக அளவு தயிர் சேர்த்துக்கொள்ளக் கூடாது

நகைச்சுவை!

ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு 

நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச 

விரும்புகிறேன்…”



இவன் : “ஓ மை காட்! .. ரம்யா ?”


அவள் : “இல்லை”


இவன் : “கீதா ?”


அவள் : “இல்லை”


இவன் : “உமா ?”


அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு 

ஆசிரியை...!!!

இதைப் படித்தால் பென்ஸ், BMW கார்களை நெனச்சிகூட பார்க்கமாட்டீங்க!



ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்து இருந்தார். பெங்களூரு அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு, “பென்ஸ்’ மோட்டார் தொழிற்சாலையில், “பிட்டர்’ ஆக வேலை செய்கிறார். உடைந்த தமிழில் பேசுவார்.


பிட்டராக இருந்தாலும் விபவரமானவர்; பல சப்ஜெக்ட்களிலும் ஞானம் உள்ளவர். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, பல அரிய தகவல்கள் கிடைத்தன. அது: தம்பி… இப்போது இந்தியாவுலே பென்ஸ் கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது… ஆஹா ஜெர்மன் நாட்டு கார்ன்னு பணக்காரங்களும், பெரிய தொழில் அதிபர்களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்கறாங்க. இந்தக் கார்ல இருக்கிற பல முக்கியமான பாகங்கள், கியர் பாக்ஸ் உட்பட, இந்தியாவுலே, “டாட்டா’ கம்பெனியிலே செஞ்சு, ஜெர்மனிக்கு வருது… நாங்க, அதை அங்கே பூட்டி, பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்! இதுக்கு காரணம் என்ன தெரியுமா?


ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு தான் ஆகிறது இந்தியாவில். நாங்கள், எங்களுக்குத் தேவையான டிசைன் மற்றும் மூலப் பொருட்களைக் கொடுத்து விடுகிறோம்… இங்கே லேபர், “சீப்!’ அது ஜெர்மானியர்களுக்கு பெரிய, “அட்வான்டேஜ்’ ஆகிப் போகிறது. இந்தியாவில் லேபர் எவ்வளவு, “சீப்’ என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்க தம்பி…’ என்றவர், தம் சட்டைப் பையில் இருந்து, ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக் காட்டினார்.


ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு குடுக்கற சம்பளத்திலே இரண்டு அமெரிக்க தொழிலாளியை வேலைக்கு அமர்த்தலாம்… இல்லே, தைவான் நாட்டுத் தொழிலாளி ஐந்து பேரையோ, பிரேசில் நாட்டு தொழிலாளி எட்டுப் பேரையோ வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்… ஆனா, இந்தியாவின் கதையோ அபாரம்… ஒரு ஜெர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் 128 இந்திய தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்ன்னா பாரேன்…


இந்திய தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 25 ரூபாய்ன்னா, ஜெர்மன் தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 1,150 ரூபாய்! அப்புறம் ஏன் ஜெர்மன் தொழில் அதிபர்கள், புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னே இங்கே மூலதனத்தைக் கொட்டத் தயங்கப் போறாங்க! கடந்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர் ஜெர்மானியர்கள்…


ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய பாதுகாப்பு அம்சங்கள் குறைந்த, ஜெர்மன் சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள் தான் இங்கு வந்துள்ளன,’ என்றார் அந்த நண்பர்.


புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் வெளிநாட்டு மூலதனத்தை இங்கே குவிப்பதை மட்டுமே அரசு கருத்தில் கொள்ளாமல், நம்நாடு குப்பைத் தொட்டிகளின் சங்கமமாகாமல் பார்த்துக் கொள்வதும் மிக, மிக அவசியம்.

திருமணப் பொருத்தங்கள்!

1) தினம்: பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9 ஆல் வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.


2) கணம்: ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு. பெண் மனுஷ கணமும் பிள்ளை ராட்சஷ கணமானாலும் பொருத்தம் உண்டு.


3) மகேந்திரம்: பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.


4) ஸ்திரீ தீர்க்கம்: பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.


5) யோனி: நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங்குகளின் விளக்கம் கீழே உள்ளது.


குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி - பூனை, கீரி - பாம்பு, மான் - நாய், ஆண் - பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.


6) ராசி: பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண்ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.


7) ராசி அதிபதி: பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதிக்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு.


8) வசியம்: பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காணலாம்.


9) ரஜ்ஜு (மாங்கல்யம்): நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ்ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல்லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தமுண்டு.


10) நாடி: 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.


|) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.


||) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.


|||) கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.


பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரிவில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.


எனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிகளையும் கவனிக்க வேண்டும்.


1) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.


2) தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு - இந்த ஐந்தும் முக்கியமானப் பொருத்தங்கள்.


3) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.


4) பெண், பிள்ளை இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.


இவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.

அரிய தகவல்கள்!



 1.மனிதன் 4 வயதிலிருந்து பொய் சொல்ல ஆரம்பிக்கிறான்.!!


2.microcomputer- software இந்த இரண்டு வார்த்தைகளையும்சேர்த்து உருவானதே Microsoft ! பிரபல மைக்ரோசாப்ட் நிறுவன பெயரின் எளிய பின்னணி..!!!


3.ஒட்டகங்களால் பாலைவனத்தில் நீரில்லாமல் 3 மாதங்கள்வரை உயிர்வாழ முடியும்..!!


4.புரூஸ்லீ 15 குத்து குத்தி ஒரு எத்து எத்தி ஒருத்தன தோற்கடிச்சாராம்! இந்த போட்டி 11 வினாடிகளில் முடிஞ்சது...!!


5.ஒவ்வொரு நாளும் பேஸ்புக்கில் 250 மில்லியன் போட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன..!!


6.உலகிலேயே கோககோலா விற்பனை செய்யப்படாத நாடுகள் இரண்டே இரண்டு தான்! அவை வடகொரியா - கியூபா..!

என் முதல் காதலன்!

 


நான் செய்யும் சேட்டைகளை ரசிப்பவன்.


நான் தவறே செய்தாலும் எனக்கு ஆதரவாய் குரல் கொடுப்பவன்.


என்னிடம் சண்டையே போட்டாலும் ஒரு நொடியில் மறந்து விடுவான்.


நான் முதல் முதலில் அழுத பொழுது என்னை பார்த்து சிரித்தவன்.


நான் விழுந்தால் அவனுக்கு அடிபட்டது போல் துடிப்பவன்.


என்னை அவன் கையில் மட்டும் அல்ல நெஞ்சிலும் தாங்கியவன்.


ஆனால் அவனுடன் என் வாழ்நாள் முழுவதையும் செலவிட முடியவில்லை.....



என் முதல் காதலன் என் தந்தை என்பதால்.

அறிவுரை - யானை பாகனுக்கு....



கோடை வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க கேரளத்தில் பாகன்களின் மரணமும் அதிகரிக்கிறது. தனியார் தொலைக்காட்சிகளில் இதைப் பார்த்தவர்களுக்கு விலங்கு கொடூரமாகத் தெரியலாம்.


யானைகளின் தும்பிக்கை ஆசிர்வாதத்திற்கு, பயத்தையும் மீறி தலைகுனிபவர் பலர். பாகன்களுக்கு அது ஒரு பணவேட்டை. சூடாறுமுன் யானையின் சாணத்தை மிதித்தால் காய்ச்சல் வராது என்பது கேரளத்தவரின் நம்பிக்கை. யானை முடியை உடலோடு தொடுமாறு கட்டிக்கொண்டால், பேய் பிசாசு அண்டாது; ஐஸ்வர்யம் பொங்கும் என்பது ஐதீகம்.


கேரள மாநிலத்திலேயே அதிகப்படியான யானைகள் உள்ளன. எனவேதான் யானைச் செய்திகளும் அம்மாநிலத்தில் இருந்து அதிகம் வருகின்றன. அம்மாநிலக் கலாசாரப் பாரம்பரியத்தில் யானைகளுக்கு சிறப்பிடமுண்டு. பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் யானை எழுன்னுளிப்பு கட்டாயமானதாகும். பல யானைகள் நகையழகு பரிவாரத்துடன் பட்டங்கட்டி கஜகம்பீரத்துடன் தலையாட்டி நிற்பது கண்கொள்ளாக்காட்சி. யானை ஒன்றுக்கு ஒருநாள் வாடகை குறைந்தது ரூ. 5000.


யானை ஏன் பாகனைக் கொல்கிறது? யானைகளைப் புரிந்து நடக்க யானை ரசிகனாகிய மனிதனுக்குத் தெரியவில்லை என்பதே முதல் காரணம். இன்று யானைகளுக்குக் காட்டிலும் நாட்டிலும் பாதுகாப்பு இல்லை. யானை ஒரு காட்டுவிலங்கு. அடிக்கும் அச்சுறுத்தலுக்கும் பயந்தே அது சில காரியங்களைச் செய்கிறது. மற்ற விலங்குகளைவிட சற்று அதிகமாகவே யானைகள் மனித கொடூரத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன.


ஒரு யானைக்கு இரண்டு பாகன்கள் உண்டு. யானைகளை நல்லவர்களாக்குவதும் கொலை வெறியர்களாக்குவதும் பாகன்களையும் பாகன்களின் செயல்களையும் பொறுத்தே அமைகிறது. ஒரு நல்ல பாகன் எப்போதும் யானையின் நல்ல நண்பனாகவும் இருப்பார். யானைக்கும் இது புரிந்து அது திருப்தி தெரிவிக்கும். சம்பவங்கள் எதிர்மறையானால் விளைவும் எதிர்மறையாகவே இருக்கும். முதற்பாகனாக வருவதற்கு முன், இரண்டாம் பாகனாக இருந்து 5 ஆண்டுகள் தீவிர அனுபவம் பெற்றிருக்க வேண்டும். யானையைத் தொடாதவர்களும் யானைகளின் மனோபாவம் புரியாதவர்களும் தொழிலுக்காகப் பாகன்களாக மாறிவரும்போது, செய்கைகள் கொடூரங்களாக மாறி மனித ஓலங்கள் டி.வி. காட்சிகளில் தெரிய ஆரம்பிக்கின்றன.


தலைவர்கள் வருகையின்போது கொளுத்தும் வெயிலில் பள்ளிக்குழந்தைகள் வரவேற்க நிற்கும் ஒருநாள் காட்சி நம்மிடம் பல கண்டனங்களைப் பெறுகிறது. வெப்பத்தைக் கிரகிக்கும் கருப்புத்தோலையுடைய, மென்மையான பாதங்கொண்ட யானையைப் பலமணி நேரம், பல நாள்கள் தார் இளகும் சாலையில் நிற்கவைப்பதும் கொண்டுபோவதும், கொடூரம் இல்லையா? வனங்களுக்குள் குளுமையான சூழ்நிலையில் உலாவியும் குட்டைகளுக்குள் உருண்டு புரண்டும் சுகம் அனுபவித்த யானைகளை மனிதனின் சுய தேவைக்காக அடக்குமுறையில் அல்லலுறச் செய்வது நியாயந்தானா?


வெறிநாய் என்பது போல யானைக்கும் மதம்பிடித்தல் மனிதனுக்குக் கிலியை ஏற்படுத்துவதாகும். மதச்சுரப்பி என்பது யானைகளுக்கே உரியது. விஞ்ஞானத்தின்படி யானையின் தலையில் இருபுறமும் காதிற்கும் கண்ணிற்குமிடையே மதச்சுரப்பி அமைந்துள்ளது. வெளிப்புறத்தில் சிறுகீறல் போன்று இது காட்சியளிக்கும். இது செயல்படும் நாள்களில் அப்பகுதியைச் சுற்றி நீர்வீக்கம் ஏற்பட்டு பசைபோன்ற கருப்புத்திரவம் அதிலிருந்து வழியத் தொடங்கும். இம்மதக்காலத்தின் பராமரிப்பு முறையைப் பொறுத்தே மனித உயிர், குறிப்பாக பாகனின் உயிர்ப்பாதுகாப்பு அமைகிறது.
மதநீர் 15 நாள்கள் முதல் 90 நாள்கள் வரை ஒழுகுகிறது. கீழ்ப்படியாமை, தப்பித்து ஓடும் பழக்கம், மனிதருடன் பகை, எதையும் அழிக்கும் மனோபாவம் போன்றவை மதக்காலச் செயல்கள்.


சராசரியாக யானைகளுக்கு 20-25 வயதின் போதே மதம்பிடித்தல் உண்டாகிறது. தொடர்ந்து 60-65 வயது வரை ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ இது ஏற்படுகிறது. ஆசிய யானைகளில் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களிலேயே மதம் அதிகமாக ஏற்படுகிறது. காட்டுயானையிலும் நாட்டுயானையிலும் மதம் ஏற்படும். மதத்தின் உச்சநிலையை அடைந்த யானை யாரையும் அருகில்வர அனுமதிக்காது. தீவனம் உண்ணாது. கையில் கிட்டிய எதையும் எடுத்து எதிரில் நிற்பவரை நோக்கி எறியும். மனிதனைப் பொறுத்தமட்டில் மதக்காலமும் மற்ற காலமும் ஒரேகணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதாலேயே உயிருக்கும் உடைமைக்கும் இழப்பு ஏற்படுகிறது.


மதங்கொண்ட யானையின் உடலில் குளுமையை ஏற்படுத்த வேண்டும். குளிப்பாட்டியும் குடிநீர் அளித்தும் வரவேண்டும். வெயி#ல் கொண்டு செல்லக்கூடாது. வேலையில் ஈடுபடுத்தக்கூடாது. கட்டியிட்டு ஓய்வுகொடுத்து மூன்றுமாதம் பாரமரிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக விழா மற்றும் பண்டிகைக் காலங்களும் யானைகளுக்கு மதம்பிடிக்கும் காலமும் டிசம்பர் முதல் ஏப்ரலுக்குள்ளேயே அடங்குகின்றன. நாளொன்றுக்கு ரூ. 5000 நட்டம் வீதம் 3 மாதத்துக்கு ரூ. 4.5 லட்சம் எனக் கணக்குப் பார்க்கக்கூடாது. ரூ. 10 லட்சம், 15 லட்சம் எனக்கொடுத்து யானை வாங்கி வளர்ப்போருக்கு இந்நட்டம் பெரியதாக இருந்தாலும் மதம்கொண்ட யானையால் ஏற்படும் உயிருக்கும் உடைமைக்குமான இழப்பு அதைவிட அதிகமல்லவா!

காட்டில் விரும்பியவற்றை ருசித்து உண்டு, இளைப்பாறிய யானைகளுக்கு நாட்டில் அவை செய்யும் வேலையைக் கருத்திற்கொண்டு அரைவயிறு நிறையும் அளவுக்குக்கூட உணவு அளிக்கப்படுவதில்லை. பாகனே இதற்குக் காரணமென அறிவுக் கூர்மை உள்ள யானைகள் சினங்கொள்கின்றன. பாகனின் நிலைமையோ இதைவிட மோசம். நிரந்தரத் தொழிலோ, காப்பீடு வசதியோ இல்லை. இறுதியில் யானையின் சினம் பாகனின் கொலையில் முடிகிறது.


யானைச்சாவுகளையும் யானைகளின் மூலமான மனித மரணங்களையும் எவ்வாறு தவிர்ப்பது? வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் முதல் பிரிவில் சேர்க்கப்பட்ட விலங்கு யானையாகும். யானையைத் தொந்தரவு செய்தால் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையுண்டு. இச்சட்டத்தின்படி வெயிலில் அலைக்கழித்தல், பட்டினி போடுதல், காயமேற்படுத்துதல் போன்றவற்றை ஏற்படுத்துவோர் குற்றவாளிகளாவர்.


யானை வளர்ப்பில் முறையான அக்கறையுடையோரையும் பயிற்சி பெற்றோரையும் மட்டுமே பாகன்களாக ஆக்கவேண்டும். பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் யானைகளை உபயோகப்படுத்துமுன் அவற்றின் உடல்நிலை குறித்து கால்நடைமருத்துவரின் நலச்சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படவேண்டும். யானைகளுக்கு மதம் பிடித்துள்ளதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள இது உதவும். யானைகளைத் தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்துக்கு நடத்திச் செல்லக் கூடாது. நாள் ஒன்றுக்கு 30 கிலோ மீட்டருக்கு அதிகமாக நடத்திக் கொண்டு செல்லக்கூடாது. தினமும் குளிப்பாட்ட வேண்டும். பாகனுக்குக் காப்பீட்டு வசதியை யானை உரிமையாளர் செய்ய வேண்டும்.


யானை காட்டுவிலங்குதான். மனிதனின் சில சுய தேவைகளுக்கும் கொடூரங்களுக்கும் பயந்தே பல காரியங்களைச் செய்கிறது. உசுப்பேற்றிவிட்டால், யானைக்கல்ல, மனிதனுக்கே அடிசறுக்கும் என்பதை உணரவேண்டும்.

தமிழன் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி!

 

சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர்.


ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.


அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.


"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.


ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.


ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது


எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.


இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.


தமிழரோடு தமிழில் பேசுவோம்...

தமிழன் என்று சொல்வோம்....

தலை நிமிர்ந்து நிற்போம்.....

"தமிழன் இல்லாத நாடில்லை

தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..."

தவறு செய்தாள் மறக்காமல், மன்னிப்பு கேளுங்கள்!



‘சாரி… நான் உங்களை, ‘டீஸ்’ செய்திருக்கக் கூடாது…’ என, நீங்கள் கிண்டல் அடித்த பெண்ணிடம் கூறிப் பாருங்கள்; ‘பரவாயில்லை… ஐ டோன்ட் மைண்ட்’ என, உடனே பதில் வரும். இதே வார்த்தையை, நீங்கள் கிண்டல் அடித்த ஆணிடம் கூறிப் பாருங்கள்… ‘மவனே… இன்னொரு தடவை கிண்டல் பண்ணினே…’ என, மூக்கு விரிய, உங்களை அடிக்க வருவார்.


அரை மணி நேரத்திற்குப் பிறகு தான், ஆசுவாசப்படுவார்.ஒரு பெண்ணிடம் கோபமாகவோ, மனம் வருந்தும்படியோ நடந்து கொண்டால், நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என, அப்பெண் எதிர்பார்ப்பார் எனவும், அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால், அவருக்கு, ரத்த அழுத்தம் அதிகமாகி, இதய பாதிப்பே கூட ஏற்படும் என்றும், பிரிட்டன் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


எனினும், மன்னிப்பு கேட்ட அடுத்த நொடியே, அந்தப் பெண், சாதாரண மனநிலைக்கு வந்து விடுவார்; அவருடைய ரத்த அழுத்தமும் சாதா நிலைக்கு வந்து விடும் எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.இதே போல் ஒரு ஆணிடம் கோபமாகவோ, மனம் வருந்தும்படியோ பேசி விட்டு, அவரிடம் மன்னிப்பு கேட்டால், அவர் லேசில் பணிய மாட்டார்.


 மேலும், அவருடைய ரத்த அழுத்தம் சீரடையவும், கோபம் தணியவும் வெகு நேரம் ஆகும் என்றும், அந்த ஆய்வு தெரிவிக்கிறது.மன்னிப்பு கேட்பது, மாத்திரைகள் விழுங்குவதைத் தவிர்க்க சிறந்த மருந்து என்று, அந்த ஆய்வை நடத்திய பிரிட்டன் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டியவை!



 நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைய வழி சமூக வலைத்தளங்கள் மாறி விட்டன. ஃபேஸ்புக்கானது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பேருக்கும் மேலாக பயன்படுத்தப்படும் வலைத்தளமாக உள்ளது. உலகம் முழுவதும் ஃபேஸ்புக் வழியாக தொடர்பு கொள்வது மிகவும் எளிய விஷயமாக இருப்பதே இதன் காரணமாகும்.


இது நம்மை அனைவருடனும் தொடர்பில் இருக்க வைக்கிறது. சமூக வலைத்தளங்கள் உதவிகரமாக இருந்தாலும், தொந்தரவுகள் மற்றும் பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க அவற்றை கவனத்துடன் கையாள வேண்டும்.


இன்றைய ஃபேஸ்புக் மனிதர்கள் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், உங்களுடைய விபரங்களை வைத்தே உங்களைப் பற்றி கணிக்கவும் வகை செய்து விடும். நீங்கள் ஒரு உறவில் உறுதியாக இருக்கும் வேளைகளில் ஃபேஸ்புக்கில் சில அடிப்படையான தவறுகள் நடப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம்.


உங்கள் பெண் நண்பரின் விபரங்களை வேவு பார்த்தல், அனுமதியின்றி ஊடுருவுதல், அவருக்குத் தெரியாமலேயே அவருடைய நண்பர்களுடன் நட்பு பாராட்டுவது போன்ற செயல்களை இந்த தவறுகளில் சிலவாக குறிப்பிட முடியும். ஃபேஸ்புக்கில் நீங்கள் செய்யும் செயல்கள், உங்கள் துணைவருக்கு எதிராக திரும்பாத வகையில் செயல்பட வேண்டும்.


சில நேரங்களில், அவருடன் நெருக்கமாக இருக்கும் படங்களை முகநூலில் அவருக்குத் தெரியாமல் வெளியிட்டால் உறவில் விரிசல் ஏற்பட்டு, மீண்டும் இணைய வழியில்லாமல் போய் விடும். உங்கள் துணையின் விபரங்களை எப்பொழுதும் வேவு பார்க்க வேண்டாம். இது அவளுடைய கற்பனை உலக தனிமையை பாதித்து விடுகிறது.


தங்களுடைய திறமையை நிரூபிக்கவோ அல்லது வேறு ஏதாவது நோக்கத்துடனோ சில பேர் விளையாட்டுத் தனமாக செய்யும் அடிப்படையான தவறுகளில் ஒன்றாக இது உள்ளது.

உங்கள் துணைவர் எவ்வளவு தான் உங்களுக்கு நெருக்கமானவராக இருந்தாலும், அவருடைய சுய விபரங்களை அவருக்குத் தெரியாமல் ஊடுருவிப் பார்க்க உங்களுக்கு உரிமை இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் அவளுக்கும் தெரிந்த நண்பர்களுக்கு 'நட்பு கோரிக்கைகள்' அனுப்புவது நல்லது தான்.


ஆனால், அதே விஷயத்தை அவளுக்கு மட்டுமே தெரிந்து, உங்களுக்குத் தெரியாத அழகிய பெண்ணொருத்திக்கு அனுப்பினால், அது கொண்டு வரும் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள்.


நீங்கள் ஃபேஸ்புக்கை தொடர்ந்து பயன்படுத்துபவராக இருந்து, அவளுடைய 'அப்டேட்ஸ்'களை கவனிக்காமலும், 'லைக்' போடாமலும் இருந்தால் கூட பிரச்சனைகளாக உருவெடுக்கும். நீங்கள் தொடர்பில் இருக்கும் போது, அதுவும் ஃபேஸ்புக் வழியாகவும் தொடர்பில் இருக்கும் போது, நீங்கள் பதிவிடும் எதிர்வாதம் மிக்க மற்றும் கண்ணியமில்லாத பதிவுகளை சற்றே கவனத்துடன் பரிசீலனை செய்யுங்கள்.


பலருக்கும் தெரியக் கூடிய இது போன்ற பதிவுகளால், அவளுடைய நண்பர்களும் கூட கேலி செய்து மோசமான நிலைக்கு அவளை தள்ளி விடுவார்கள். உங்கள் காதலியுடன் நீங்கள் தனிமையில் செய்பவை அனைத்தும் தனிமையாகவே இருக்க வேண்டும்.


உங்கள் நண்பர்களிடம் ‘பாப்புலாரிட்டி' பெற வேண்டும் என்ற நோக்கில், இது போன்று நெருக்கமான படங்களை பதிவேற்றம் செய்வதை அறவே நினைத்தும் கூட பார்க்காதீர்கள். ஏனெனில், அது உங்கள் காதலியின் தனிமை மற்றும் உணர்வுகளை பாதிக்கும்.


நீங்கள் அவளுடைய பதிவுகளுக்கு அவ்வப்போது உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் அவளை கவனிக்கிறீர்கள் என்பது தெரியும். எனினும், எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் அவரை வெளிப்படையாக விமர்ச்சிப்பதை தவிர்ப்பது நல்லது.

உடல் வலிமை தரும் சைக்கிள் பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி!



 உடற்பயிற்சிக்கு மிகவும் சிறந்ததாக சைக்கிளிங் (சைக்கிள் ஓட்டுதல்) மற்றும் ரன்னிங் (காலில் ஓடுதல்) ஆகிய இரண்டும் உள்ளன. இவை இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியமானவை என்றாலும், இரண்டு உடற்பயிற்சிகளுமே உடலுக்கும், நல்வாழ்விற்கும் தனித்தனியான பலன்களை தருகின்றன.


ஓடுவதன் மூலம் சைக்கிள் ஓட்டுவதை விட அதிகப்படியான கலோரிகளை எரித்திட முடியும். ஆனால், ஓடுவதன் மூலமாக உங்கள் உடல் எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு கிடைக்கும் அதிகபட்ச அழுத்தம் காரணமாக ஏகப்பட்ட வலியும், தசைபிடிப்பும் வர வாய்ப்புகளும் உண்டு. நீங்கள் தொடர்ச்சியாக நடக்கும் போது உடலில் நிறைய காயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.


அடிப்படையில் திறன்களை மதிப்பிடும் போது, சைக்கிள் ஓட்டுவதற்கே அதன் ஆரோக்கிய விளைவுகள் மற்றும் பலன்கள் அதிகமாக உள்ளன. நீங்கள் சைக்கிளில் உங்கள் அலுவலகத்திற்கு செல்லும் போது, உடலிலுள்ள கலோரிகள் அதிகளவில் எரிக்கப்படுவதுடன், உங்களுக்கு குறைந்த அளவே சோர்வை ஏற்படுத்தும் ஒரு போக்குவரத்து சாதனமும் கிடைத்து விடும்.


நீங்கள் ஓட முடிவெடுத்தால் அதற்காக நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். செலவினங்களை கணக்கில் கொள்ளும் போது, செலவே இல்லாததாகவும், பராமரிப்பு தேவையற்றதாகவும் இருக்கும் ஓட்டம் முதலிடத்தை எளிதில் பிடிக்கிறது.


ஓடுவதை விட சைக்கிள் ஓட்டுவது அதிக மகிழ்ச்சியைத் தரும் உடற்பயிற்சியாக உள்ளது. தொலைவாக செல்லும் வேளைகளில் ஓடுவதை விட, சைக்கிள் ஓட்டுவது குறைந்த வலி தரும் விஷயம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை. குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிப்பதில் திறன் மிக்க உடற்பயிற்சியாக இருப்பது ஓடுவது தான்.


ஒரே கால அளவில் சைக்கிள் ஓட்டுவதை விட, ஓடுவதன் மூலம் 15-20% அதிக கலோரிகளை எரித்திட முடியும். இந்த ஒரு விஷயம் சைக்கிள் ஓட்டுவதை மிகவும் நிலைநிறுத்தும் காரணமாக உள்ளது.


இரண்டுமே உடற்பயிற்சி செயல்கள் என்றாலும் கூட, நீங்கள் சைக்கிளை பயன்படுத்துவதால் ஓடும் நேரத்தை விட குறைந்த நேரத்தை எடுத்துக் கொண்டு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், இரண்டு மடங்கு வேகத்திலும் தொடர்ந்து செல்ல முடியும். உங்கள் உடல் மற்றும் எலும்புகளில் ஏற்படும் நீண்ட கால விளைவுகளைக் கருத்தில் கொள்ளும் போது ஓடுவது சற்றே உங்களை பின்னோக்கி இழுக்கிறது.


குறிப்பாக உங்களுடைய மூட்டுகள் அதிகளவு வலியையும், ஓடுவதால் ஏற்படும் உராய்வையும் எதிர்கொள்கின்றன. சைக்கிள் ஓட்டும் போது அது உங்கள் மூட்டுகள் மற்றும் உடல் பகுதிகளை இதமாகவே வைத்திருக்கும் வகையில் பயன்படுவதால், காயங்கள் ஏற்படுவது மிகவும் குறைகிறது.

எளிய முறையில் சரும பராமரிப்பு வழிகள்!



 வெயில் காலங்களில் நமது சருமம் சீக்கிரமாக வாடிவிடும் அதேபோல் மழைக்காலங்களில் வறண்டு காணப்படும். இதற்கு வீட்டிலேயே எளிய முறையில் அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களைக் கொண்டே சருமத்தை பராமரிக்கலாம். உங்கள் சருமத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு முகம் முழுவதும் பருக்கள் வர பல காரணங்கள் இருக்கின்றன.


இந்த சரும பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது மனஅழுத்தம். சர்க்கரை மற்றும் சீஸ் வகைகளான சாக்லெட்களும் அழுக்கு சேர்தல் போன்றவையும் காரணமாக இருக்கலாம். உங்கள் அழகான முகத்தில் பருக்களும் அதனால் ஏற்படும் தழும்புகள் கொடுமையானவைகளாக இருக்கும்.


உங்கள் சருமத்தை சிறந்த வழியில் கவனமாக பாதுகாக்க வேண்டும். உங்கள் சருமத்தில் வெடிப்பு ஏற்பட்டாலோ அல்லது சிதைவு ஏற்பட்டாலோ வீட்டிலேயே சிகிச்சை செய்து இந்த சரும பாதிப்புகளுக்கு சிறந்த முறையில் தீர்வு காணலாம். பருக்களால் ஏற்படும் சரும பிரச்சனைகளை சிகிச்சை செய்வதற்கான வழிகளை பார்க்கலாம்.


• தேன் மற்றும் பட்டையை சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போடலாம். இந்த தேன் மற்றும் லவங்கப்பட்டையின் கலவை சரும பாதிப்புகளுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கும். லவங்கத்தில் உள்ள ஆண்டிபாக்டீரியல் தன்மை பாக்டீரியாக்களை அழிக்கும் மேலும் தேன் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு பொருளாகும். இந்த கலவையை சரும பாதிப்புகளுக்கு ஒரு சிறந்த தீர்வு என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா?


• முட்டையின் வெள்ளைக்கரு நமது டயட்டில் கால்சியத்தை சேர்ப்பதோடு மட்டுமல்லாது சரும பாதிப்புகளுக்கு தீர்வாக இருக்கும். முட்டை வெள்ளைக்கரு சரும பாதிப்புகளுக்கு ஒரு எளிமையான தீர்வாக இருக்கும்.


அதில் இருக்கும் ப்ரோடீன் மற்றும் கனிமங்கள் சரும பாதிப்பை எதிர்த்து செயல்பட்டு உங்கள் சருமத்தை மிளிரச்செய்யும். மலிவான விலையில் இந்த முறை உங்கள் சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். முட்டையின் வெள்ளைக்கருவை உங்கள் முகத்தில் சிறிது நேரம் தடவி காயவைத்து பின்னர் முகத்தை கழுவவும்.


• இன்று கடைகளில் கிடைக்கும் சரும கிரீம்களில் இருக்கும் முக்கியமான தாதுப்பொருள் பப்பாளிதான். இது உங்கள் சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும் வழிகளில் ஒன்றாகும். சிறிது பப்பாளியை மசித்து உங்கள் சருமத்தில் தடவவும். 15 -20 நிமிடங்கள் காயவிடவும். வெந்நீர் கொண்டு உங்கள் முகத்தை கழுவவும். இது உங்கள் சரும பாதிப்புகளுக்கு தீர்வுகாண சிறந்த வழியாகும்.


• எலுமிச்சை சரும பாதிப்புகளுக்கான முக்கிய தீர்வாக இருக்கிறது. வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை சரும பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்கும். எலுமிச்சை சாற்றை உங்கள் சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும்.


மேலும் எலுமிச்சை உங்கள் சருமத்தை பக்குவப்படுத்தி செத்த அணுக்களை நீக்கும். சருமத்தை வெளுப்பாக்க இது உதவுவதால் உங்கள் சருமத்தை சிறந்த முறையில் பராமரிக்க உதவும்.

தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு!

 >> முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.


 >> முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.


 >> மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.


 >> மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங் காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாக மாறும்.


 >>மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் தடவி வந்தால் முடிவளரும்.


 >> பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்.

ஓரெழுத்து சொற்கள் தமிழில்!

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன, அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.


அ -----> எட்டு

 ஆ -----> பசு

 ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி

 உ -----> சிவன்

ஊ -----> தசை, இறைச்சி

 ஏ -----> அம்பு

 ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

 ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

 கா -----> சோலை, காத்தல்

 கூ -----> பூமி, கூவுதல்

 கை -----> கரம், உறுப்பு

 கோ -----> அரசன், தலைவன், இறைவன்

 சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்

 சீ -----> இகழ்ச்சி, திருமகள்

 சே -----> எருது, அழிஞ்சில் மரம்

 சோ -----> மதில்

 தா -----> கொடு, கேட்பது

 தீ -----> நெருப்பு

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு

 தூ -----> வெண்மை, தூய்மை

 தே -----> நாயகன், தெய்வம்

 தை -----> மாதம்

 நா -----> நாக்கு

நீ -----> நின்னை

 நே -----> அன்பு, நேயம்

 நை -----> வருந்து, நைதல்

 நொ -----> நொண்டி, துன்பம்

 நோ -----> நோவு, வருத்தம்

 நௌ -----> மரக்கலம்

 பா -----> பாட்டு, நிழல், அழகு

 பூ -----> மலர்

 பே -----> மேகம், நுரை, அழகு

 பை -----> பாம்புப் படம், பசுமை, உறை

 போ -----> செல்

 மா -----> மாமரம், பெரிய, விலங்கு

 மீ -----> ஆகாயம், மேலே, உயரம்

 மு -----> மூப்பு

 மூ -----> மூன்று

 மே -----> மேன்மை, மேல்

 மை -----> அஞ்சனம், கண்மை, இருள்

 மோ -----> முகர்தல், மோதல்

 யா -----> அகலம், மரம்

 வா -----> அழைத்தல்

 வீ -----> பறவை, பூ, அழகு

 வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

 வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

உலகின் முதல் ஆம்புலன்ஸ்!

நெப்போலியன் படைப்பிரிவில் பணியாற்றிய தலைமை டாக்டர் டொமினிக் ஜின்லாரேதான் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார். (பயன்படுத்தினார்) இது பிரெஞ்சு வார்த்தை, ‘ஹோபிடல் ஆம்புலன்ட்’ என்னும் வார்த்தைக்கு ‘நகரும் மருத்துவமனை’ என்பது பொருள். முதல் ஆம்புலன்ஸ் வண்டி 200 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

முதலில் குதிரை பூட்டிய வண்டியில் இருந்த ஆம்புலனஸ் இரயில்கள், கப்பல்கள், விமானங்கள் ஆம்புலன்ஸில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, பலர் இறக்க நேரிட்டதால் ஆம்புலன்ஸிலேயே ஆக்சிஜன், ஸ்ட்ரெச்சர், மருந்துகள் முக்கியமானதை கொண்ட குட்டி மருத்துவமனை போல் ஆக்கப்பட்டது. மோட்டார் வாகனங்களில் அமைக்கப்பட்ட உலகின் முதல் ஆம்புலன்ஸ் நியுயார்க் நகரில் உள்ள பெவில்யூ மருத்துவமனையில் 1869 ஆம் ஆண்டில் போது மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது. உலகின் முதல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இரண்டாம் உலகப் போரில் செயல்பட்டன.

1970க்குப் பிறகு ஆம்புலன்ஸிற்காகவே பயிற்சி அளிக்கப்பட்ட டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் அமர்த்தப்பட்டனர். ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை ஆம்புலன்ஸிலேயே அளிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் வேன் பிரிட்டனில் உள்ளது. 59அடி நீளமுள்ள 44 படுக்கை வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அமெரிக்காவில் உள்ளது.

நர்சுகள் அறிமுகமான விதம்


நியூடிரிலியா என்னும் லத்தீன் சொல்லிருந்து நர்ஸிங் என்னும் வார்த்தை பிறந்தது. மருந்து, உண்வு, முதலியவற்றை அன்புடன் ஊட்டி நம்மை உற்சாகப் படுத்துவர் என்று பொருள். கிரேக்க, ரோமானியர்கள் காயங்களுக்குக் கட்டுவதற்காக மட்டும் இத்தகைய பெண்கள் இருந்தனர். ரோமானியர்கள் ஆண் நர்சுகளை தங்கள் இராணுவத்தில் சேர்த்தனர். அவர்கள் அடிபட்ட வீரர்களுக்கு மருந்து வைத்து தானே கட்டிவிட்டனர்.

டாக்டருக்கு தண்டனை...!


பழங்காலத்தில் பாபிலோனியாவில் அறுவைச் சிகிச்சையின் போது ஒரு நோயாளி இறந்துவிட்டால் அறுவை சிகிச்சை செய்த டாக்டரின் வலது கையை துண்டித்துவிடுவார்கள். பாரசீகத்தில் அறுவை சிகிச்சையில் மும்முறை தொடர்ந்து தோல்வி கண்டால் அந்த மருத்துவர் அந்த நாட்டில் வைத்தியமே செய்யக்கூடாது என்ற சட்டம் இருந்தது.

முதல் மருத்துவ உடை...


அறுவை சிகிச்சை செய்யும்போது கையுறைகள், முக உறைகள், கெளன்கள் போன்றவற்றை அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணியும் முறை 1875 ஆம் ஆண்டு அறிமுகமானது.

ஆராய்ச்சிக்கு உதவியவர்...


ஜான் ஹன்டர் என்பவர் புகழ்பெற்ற ஆங்கிலேயே அறுவை சிகிச்சை நிபுணர். அந்த உடலியல் நிபுணர், ஈ முதல் திமிங்கலம் வரை சுமார் 14 ஆயிரம் பிராணிகளின் சடலங்களை சேமித்து வைத்தார். அவற்றுள் அபூர்வ உருவமுள்ள மனிதர்கள், மிருகங்களும் இறந்தன. மருத்துவத்துறை முன்னேற்றத்திற்கு அந்த 14,000 பிராணிகளின் உருவ உள்ளமைப்புகளும் மிகவும் பயன்பட்டன.

முதல் மருத்துவ பத்திரிகை...

அறிவுத் தாகமும், விஞ்ஞான ஆராய்ச்சிகளும் வளர்ந்ததால் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளின் விவரங்களை பரிமாறிக்கொள்ள விஞ்ஞான பத்திரிகைகளையும், மருத்துவ இதழ்களையும் தொடங்கினர். பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மருத்துவ இதழ்கள் வெளிவர ஆரம்பித்தன. முதல் மருத்துவப் பத்திரிகை ‘மெடிசினா குரிஸோ’ என்பதாகும். இது ஆங்கிலப் பத்திரிகை. இதன் பிறகே பல மொழிகளிலும் மருத்துவப் பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது.

சுத்தமான தண்ணீரை அருந்தச் சொன்ன முதல் மனிதர்கள்...

நோய் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் சுத்தமான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென பாபிலோனியர்கள் சொன்னார்கள். இவர்கள் நெருப்பைப் போல் நீரையும் இறைவன் என போற்றி வணங்கினார்கள். இவர்கள் தண்ணீர்க் கடவுளுக்கு EA என்னும் பெயர் சூட்டி வணங்கினார்கள். அத்துடன், மருத்துவக் கடவுளாகப் பாம்பையும் வணங்கினார்கள்.


கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்??



கணவன் பால் எனில் அதில் கலக்கப் படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி. பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும்,தண்ணீரை தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை. பாலை தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை.


தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதை தாங்காத முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும். பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் தெளிக்க தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.


ஒரு வேளை அப்படி தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில் பால் பொங்கி ஊற்றி அடுப்பையே அணைத்துவிடும்.


கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும்.

அன்றுபோல் இன்று இல்லையே!

 

அன்று போல்
 இன்று இல்லையே…
நீ உண்மை
 மட்டுமே
 பேசிக் கொண்டிருக்க!

அன்று போல்
 இன்று இல்லையே…
நீ நல்லதை
 மட்டுமே
 எண்ணிக் கொண்டிருக்க!

அன்று போல்
 இன்று இல்லையே…
நீ சொந்தங்களோடு
 சேர்ந்து
 வாழ்ந்து கொண்டிருக்க!

அன்று போல்
 இன்று இல்லையே…
நீ உள்ளூரிலே
 உல்லாசமாய்
 உலா வந்து கொண்டிருக்க!

அன்று போல்
 இன்று இல்லையே…
எதிலும் நீ
 போட்டிகளின்றி எளிதில்
 வெற்றிகள் பெற்று கொண்டிருக்க!

அன்று போல்
 இன்று இல்லையே…
நீ கல்வியறிவின்றி
 கலைகள் பல
 கற்றுக் கொண்டிருக்க!
அன்று போல்
 இன்று இல்லையே…
எதையும் நீ
 முழுமையாக நம்பி
 ஏற்றுக் கொண்டிருக்க!

அன்று போல்
 இன்று இல்லையே…
நீ நல்லவனாக
 மட்டுமேயிருந்து
 வழிகாட்டி கொண்டிருக்க!

அன்று போல்
 இன்று இல்லையே…
நீ வல்லவனாகவும்
 இருந்தாக வேண்டும்
 உன் வாழ்வதனை
 தக்கவைத்துக் கொண்டிருக்க!

குளிர்கால ஆலோசனைகள்!

* காய்கறிகளை சூப்பாகத் தயார் செய்து அருந்துவது
 குளிர் காலத்திற்கு பொருத்தமானது.


* வெங்காயம், பூண்டு, வெந்தயம் போன்றவற்றை
 உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் குளிர்கால
 நோய்கள் ஏற்படாது.


* ஆப்பிள், திராட்சை, தக்காளி, கேரட் போன்றவற்றில்
 ஏதாவது ஒன்றை தினசரி பச்சையாகச் சாப்பிட்டு வர
 குளிரால் ஏற்படும் சளி, இருமல் தொல்லைகள் மாறும்.


 * குளிர்காலத்தில் சளியைக் கூட்டும் மற்றும் உடம்பில்
 குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவுகளை ஒதுக்கிவிட
 வேண்டும். அதிக இனிப்புகளைத் தவிர்த்துவிட வேண்டும்.
சற்று காரமான உணவு வகைகளை உண்ணலாம்.
கிரீம் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.


* குளிர்காலத்தில் சிலருக்கு மூக்கில் நீர் ஒழுகிக் கொண்டே
 இருக்கும். இதற்கு ஓமத்தை சிறிதளவு எடுத்து ஒரு
 வெள்ளைத் துணியில் முடிந்துகொண்டு உறிஞ்சி வர
 மூக்கு நீர் நிற்கும். தலைபாரம், ஜலதோஷம் மாறும்.


* குளிர்பானங்கள், தயிர், மோர் போன்றவற்றை அருந்த
 வேண்டியதற்கு மாறாக இளஞ்சூடான பானங்கள்,
தேயிலை போன்றவற்றை அருந்துதல் நல்லது.


* இரவில் தூங்கப் போகும் முன் கோல்டு கிரீமை
 தடவலாம். உதடு வெடிப்பைத் தவிர்க்க வெண்ணெய்
 அல்லது தேங்காய் எண்ணெயை உதடுகளில் பூசலாம்.


 * காபி, டீ, பால் இவற்றில் இஞ்சி சேர்த்தல் நல்லது.
இது தொண்டை சம்பந்தமான பிரச்னையைத் தீர்க்கும்.


* மழைக்காலத்தில் தோல் செருப்பு, கவர் ஷுக்களைப்
 பயன்படுத்தாமல் ரப்பர் செருப்புகளையே அணியவும்.


 * அதிக சூடான நீரில் குளித்தால் சருமத்தின் இயற்கையான
 எண்ணெய் பசை மாறிவிடும். எனவே இளஞ்சூடான நீரில்
 குளித்தலே நல்லது.


* குளிர்காலத்தில் இரவு கால்களில் சாக்ஸ் மாட்டிக்
 கொண்டால் நல்லது. வயதானவர்களுக்கு அதிக குளிர்
 தாக்காது.

பாண்டவர்கள் வெட்டிய குளம்!



ஆமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ள “கோலியாக்’ என்னும் கிராம கடற்கரை வியப்பையும், பக்தியையும் அளிக்கக் கூடியது.


ஆம். அந்த ஊரில் காலை 8 மணிக்கெல்லாம் கடல் உள்வாங்கி நெடுந்தூரம் சென்றுவிடுகிறது. கரையில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் பழமையும், வரலாறும் கலந்த சிவலிங்கங்கள் எழுந்தருளியிருக்கும் மேடு கண்ணில் தென்படுகிறது.


கொடிமரம் மற்றொரு சூலம் கொண்ட தூண் நன்கு வெளிப்படுகிறது. கடலலை உள் வாங்காத நேரத்தில் கொடியும், தூணும் கடல்நீரால் சூழப்பட்டிருக்கும்.


அந்தக் கோயில் அந்த மேடு “நிஷ்களங்க மகாதேவர்’ எனப் போற்றப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணிய பூமி.


கடல்நீர் வற்றியதும், அவரை வணங்கிப் போற்ற, மக்கள் கரையில் கூடுவர். காலையில் உள்வாங்கிய கடல், மதியம் 2 மணியளவில் மீண்டும் நீர்ப்பரப்பாகிவிடும். இடைப்பட்ட ஐந்து மணி நேரத்திற்குள், கடலுக்குள் சென்று, இறைவனை வழிபட்டுத் திரும்ப வேண்டும்.


அந்தக் கோயிலைக் கண்டு வணங்குதல் அவ்வளவு எளிதல்ல. கடல்நீர் வற்றியதும், கடலுக்குள் குறுக்கே நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழி, பள்ளமும், சேறும் நிறைந்த பாதை. ஒன்றரை கி.மீ. நடக்க வேண்டும். விழுந்து, எழுந்து, ஆடையெல்லாம் நனைந்து, சேறாகி அடிபட்டு, கால்தடுமாறி, ஒரு வழியாய்ச் சமாளித்துச் செல்ல வேண்டும்.


ஆயினும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத மக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் வழிபட வருகிறார்கள்.


நடுவே கோயிலாய் விளங்கும் அம்மேட்டில் ஐந்து சிவலிங்கங்கள் தனித்தனியே காட்சி அளிக்கின்றன. நந்தியும் உண்டு. பெரிய கோயில் அளவு பரப்பு கொண்ட அந்த இடத்தில், சிறிய சுனை (குளம்) உள்ளது.


பாண்டவர்கள், போரிலே கௌரவர்களை அழிக்கின்றனர். உறவினர்களையே அழித்ததால், பாண்டவர்களுக்குக் களங்கம் ஏற்படுகிறது. களங்கத்தைப் போக்கிக் கொள்ள, சிவபெருமானை ஐவரும் வழிபடுகின்றனர்.


கடல் நடுவே மேட்டு நிலத்தை உருவாக்கி, சிவலிங்கம் அமைத்து வழிபடுகின்றனர். மகிழ்ந்த சிவபெருமான், அவர்களது களங்கத்தைப் போக்குகிறார். பாண்டவர்களது களங்கத்தைப் போக்கியதால், “நிஷ்களங்க மகாதேவர்’ என அழைக்கப்படுகிறார். பாண்டவர்கள் போற்றிய லிங்கங்கள், வெட்டிய குளம், கொடிமரம் எல்லாம் அங்கே இன்றும் காட்சி தருகின்றன.

"சார்லி சாப்ளின்" ஹைக்கூ பார்வையில்!

யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம் The great dictator. இந்த படத்தை ஹிட்லர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருந்தானாம்! 'சார்லி-ஹெட்டி'யின் காதல் கூட உருக்கமானது, உயவர்வானது...! தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ அம்மாவிற்கு, தன் கணவனை விட, பிள்ளைகளின் மீது உள்ள பாசம் வலுவானதாக இருக்கிறது.

 ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பாவுக்கு இரண்டாவது மகனாக சார்லி சாப்ளின் 1889 ஆம் ஆண்டு பிறந்தார். முழுப்பெயர் 'சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின்'. லண்டன் மதுவிடுதிகளில் பாடும் பெண் ஹென்னா தான் சார்லியின் அம்மா. இசைநிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம். இன்னொரு அப்பாவுக்கு பிறந்தவன் அண்ணன் ஸிட்னி. ஒரு நாள் மேடையில் பாடும்போது தொண்டையில் பிரச்னை; பாட முடியவில்லை! ஒரே கூச்சல்! அவமானம் கண்ணீராகக் கரைய மேடையை விட்டு கீழே இறங்கினாள், ஹென்னா. ஆறு வயது சிறுவன் சார்லி என்ன நினைத்தானோ மேடையேறினான். அது ஒரு மகா கலைஞனின் முதல் கலைப் பயணம் என்று யாருக்கும் தெரிந்திருக்காது! தன் அம்மா சொல்லிக் கொடுத்த பாடலைப் பாடி, தன் பிஞ்சு கால், கைகளை அசைத்து நடனமாடத் துவங்கினான். விசில், கைத்தட்டல் அரங்கமே அதிர்ந்தது! சில்லறைகள் சீறிப் பறந்தன. சில்லறைகளை பொறுக்கினான், சார்லி. பாடச் சொல்லி கூச்சலிட்டது கூட்டம்!

'சில்லறைகளை பொறுக்கிய பிறகுதான் பாடுவேன்; ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை என்னால் செய்ய முடியாது!' மீண்டும் கொல்லென்று எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்தது! தன் தாய் பாடமுடியாமல் தவித்ததை நடித்துக் காட்ட மீண்டும் காது கிழியும் சிரிப்பொலி... மேடைப்பாடல், துணி தைத்து கொடுப்பது என்று வந்த வருமானம் போதுமானதாக இல்லை! பசிக்கு முன்னால் மூவரும் தோற்றுப்போனார்கள். வேறு வழியில்லாமல் ஹென்னா சார்லியின் அப்பா மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தாள், தீர்ப்பு இழுத்தது. தன் பிள்ளைகள் இங்காவது வசதியாகப் படிக்கட்டும் என்று மூவரையும் அநாதை விடுதி ஒன்றில் சேர்த்தாள். தனித் தனியாக பிரிக்கப்பட்டார்கள். காலக்கொடுமை! அதனால்தானோ என்னவோ ஹென்னாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.

சார்லி, ஸிட்னியையும் சார்லியின் அப்பா தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்பா தன் இன்னொரு மனைவி லூஸி வீட்டுக்கு கூட்டிப்போனார். அங்கேயும் பசி சார்லி, சிட்னியையும் வீதிக்குத் துரத்தி சிரித்தது. 'அம்மா, அம்மா' என்று கதறி அழுதான் சார்லி. அங்கே அவனுக்கு அழுகையைத் தவிர ஆறுதல் சொல்ல யாரும் இல்லை! ஒரு நாள் வீட்டு வாசலில் அந்த அதிசயம் நடந்தது! அம்மா ஹென்னா வந்திருந்தாள்!! சார்லி, சிட்னி ஓடிப்போய் ஒட்டிக்கொண்டார்கள்! மீண்டும் மூன்று உயிர்களும் ஓர் உயிரானது.

சாப்ளின் அப்பாவிடம் இருந்து கொஞ்சம் பணம் வந்தது. பள்ளிப் படிப்பு தடையில்லாமல் தொடர்ந்தது. பள்ளிகளில் நடக்கும் நாடகம், நடனங்களில் தனக்கென்று ஒரு நல்ல பெயரை சார்லி சம்பாதிக்கத் தவறவில்லை! அவன் சார்ந்த நடன, நாடகக்குழு அமெரிக்காவிற்குப் போகும் சந்தர்ப்பம் வந்தது. அங்கு போன சாப்ளின் அமெரிக்க சுதந்திரதேவி சிலை நோக்கி தன்னை மறந்து கத்தினான் 'ஏய்! அமெரிக்காவே பத்திரமாக இரு! இன்னும் கொஞ்ச நாளில் உன்னை முழுவதுமாக கொள்ளையடிக்க இங்கே ஒருவன் வருவான் வந்து கொண்டிருக்கிறான்!' என்று. அடுத்த அய்ந்தாண்டுகளில் அதுதான் நடந்தது. உலகத்தையே கொள்ளையடித்தான், சாப்ளின்.

தன் முதல் காதலி ஹெட்டியை சார்லியின் ஏழ்மையைக் காட்டி பிரித்தான், அவளின் அண்ணன். அந்தத் தோல்வியை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவரை வாழ்நாள் முழுக்க சித்திரவதை செய்தது! பிற்பாடு அவர் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்ட எண்ணற்ற திருப்தியற்ற திருமண வாழ்க்கைகளுக்கும் அதுவே காரணமாக அமைந்தது. தன்னை துன்புறுத்தும் ஹெட்டியின் நினைவுகளில் இருந்து தப்பிக்க, பொய்யாக தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு... தீவிர வாசிப்பை மேற்கொண்டார். தனக்கான சிந்தனைகளை செதுக்கிக் கொண்ட கால கட்டம் அது! முதல் படம் newspaper reporter. ஒரு நாள் ஏதாவது நடித்துக்காட்டு என்று நடிக்க வாய்ப்புக் கேட்ட சார்லியை பார்த்துச் சொன்னார் சென்னட் என்னும் தயாரிப்பாளர். அவர் சைசுக்கு உடைகள் இல்லை என்பதால், பெரிய சைஸ் தொள தொள பேண்ட், பொருத்தமே இல்லா சிறிய மேல் சட்டை, ஷு, தொப்பி, கைத்தடி. இப்படித்தான் உருவானது சார்லி சாப்ளினின் உருவ முத்திரை!

இந்த உருவ முத்திரை பதித்த பொருட்கள் இன்றும் கூட விற்று தீர்ந்து கொண்டிருக்கும் அதிசயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது! அப்படியே மேடையேறி நடித்துக் காட்ட சிரிப்பால் மேடை அதிர்ந்து அடங்கியது! என்னிடம் கதை ஒன்று இருக்கிறது, நானே நடித்து நானே இயக்க விரும்புகிறேன் என்றார் சென்னடிடம் சார்லி. முதலில் ஒத்துக்கொள்ளாத சென்னட், மக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கை மனதில் கொண்டு ஒரு நிபந்தனை விதித்தார். "அந்த படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பு செலவு அனைத்தையும் வட்டியும் முதலுமாக நீங்கள் திருப்பித் தரவேண்டும் சம்மதமா?" என்று கேட்டார். அதற்கு சாப்ளின் சொன்னார் "முழுப்பணத்தையும் திருப்பித் தருவேன். அந்தப் படம் தோல்வியடைந்தால், நான் இந்த சினிமாவை விட்டே வெளியேறி விடுகிறேன்" என்று அப்படி இயக்கி வெளிவந்த முதல் வெற்றிப்படம் caught in the rain.

ஒரு முறை சாப்ளின் படப்பிடிப்பு முடிந்து நியூயார்க் நோக்கிப் போன தகவல் எப்படியோ தெரிய வர... மலர்கொத்துக்கள், பேண்டு வாத்தியங்கள், உயரமான கம்பம், மரங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம்! பசியும், அவமானங்களும் இதற்கு தானா? நம் வாழ்க்கை மனிதகுலம் பயனுறும் காவியமாக வேண்டாமா? யோசிக்க ஆரம்பித்தார். அமெரிக்காவிற்கு குடியேற வரும் மனிதர்களிடம் அரசு நடத்தும் கெடுபிடிகளை கடுமையாகச் சாடி the immigrant படம் வெளியானது. அமெரிக்க பிணந்தின்னும் கண் சார்லியை கண்காணிக்க உத்தரவு போட்டது, இப்படித்தான்! சார்லி ஏழைகளைப் பற்றியே படம் எடுத்ததால், பணக்காரர்கள் எதிரிகளானர்கள். வேறு வழியில்லாமல் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டியதாயிற்று!

இக்கால கட்டத்தில்தான் தன் காதலி ஹெட்டியைப் போலவே இருக்கிறாள் என்று மில்ட்ரெட் ஹாரிஸ் என்பவளை திருமணம் செய்து கொண்டார். ஆண் குழந்தை பிறந்து இறந்தது, அவன் நினைவாக தயாரான படந்தான் the kid. லிட்டா கிரே, பவுலட் கோடர்ட், ஊநா ஓ நீல் போன்றவர்கள் மேல் காதல் வயப்பட்டதும் காயப்பட்டதும் துன்பியல் வரலாறு! அவர்கள் அனைவரும் தோற்றத்தில் ஹெட்டியைப் போலவே இருந்தார்கள் என்பது இன்னொரு அதிசய தகவல்! புகழின் உச்சியில் இருந்த நேரம்.. "என்னை நினைவிருக்கிறதா? நான் தான் ஹெட்டி! நான் ஒரு முட்டாள், அபாக்கியசாலி. நீங்கள் எவ்வளவு உயரமானவர் என்பதை உங்கள் படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நீங்கள் லண்டன் வருவதாக இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். கடைசியாக உங்களின் கைகளைப் பிடித்து கதறி அழு வேண்டும். என் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்!" என்ற கடிதம் படித்து தான் பார்த்த எல்லா வேலைகளையும் ரத்து செய்தை விட்டு லண்டனுக்குப் பயணமானர் சாப்ளின்.

பஞ்சையாய், பராரியாய், பிச்சைக்காரனாய் துரத்தியடித்த அதே லண்டன் தெருக்கள் வெட்கமே இல்லாமல் விழாக்கோலம் பூண்டது சார்லியை வரவேற்க; வெறி பிடித்த மக்கள் வெள்ளம்! இந்த தடவையும் ஹெட்டி ஏமாற்றித் தான் போயிருந்தாள்! அவளின் மரணச்செய்தியைத் தான் கேடக முடிந்தது! அவளின் நினைவாக கொஞ்ச கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த சார்லி இந்த இடி செய்தி கேட்டு இன்னும் ஒரு முறை செத்துப் போனார்! கடவுளைப் போலவே காதலும் சரியாக புரிபடாமலேயே இந்த பூமியை ஆண்டு கொண்டுதான் இருக்கிறது! ஓவென கதறி அழக்கூட முடியவில்லை. அவ்வளவு மக்கள் வெள்ளம்! நடு இரவில் முகத்தை மப்ளர் கொண்டு மூடி, பசியால் கதறி அழுது சுற்றி அலைந்து திரிந்த வீதிகளுக்கு மீண்டும் ஒருமுறைப் போய் மவுனமாக அழுது விட்டு வந்தான், அந்த மகா கலைஞன்! கூடவே தன் தாயின் மரணமும் சுனாமியாக வந்து தாக்கியது, "இந்த தோற்கும் அன்பு அவளுடையது! அவளது தியாகம், திறமைகள், அவள் பட்ட வேதனைகளுக்கு முன்னால் நானும் என் படங்களும் அவளின் கால் தூசுக்குச் சமம்!" என்று சாப்ளின் நெஞ்சு வெடிக்க கதறி அழதார்!

சினிமா பேச தொடங்கிய போதும் கூட பேசாத படங்களையே எடுத்தார்! தான் எடுக்கும் பேசாத படம் மக்களைப் பேச வைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு எடுக்கப்பட்ட படந்தான் city lights. எதிரிகள் சதி செய்ததால் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் திரையிடப்பட்டு கட்டுக்கடங்கா கூட்டத்தைக் கூட்டி எதிரிகளை பணிய வைத்த படம்! இந்தியாவிலிருந்து வரும் காந்தியைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்தார்! உலகம் இயந்திரமாகி வருவதையும், மனித பண்புகள் நசுக்கப்படுவது பற்றியும் சாடி வந்த modern times வெளி வந்த பிறகு மனித குலத்தை மேம்படுத்த வந்தவனை சரியாகத் தான் அடையாளப்படுத்தியது அல்ப புத்தி அமெரிக்க அரசு "கம்யூனிஸ்ட்!" என்று. அமெரிக்க அரசு லண்டனுக்குப் புறப்பட்ட சார்லியிடம் தெரிவித்து, "உங்கள் சொத்து பறிமுதல் செய்யப்படுகிறது. அமெரிக்காவில் காலடி வைத்தால் கைது செய்யப்படுவீர்கள்!" ஸ்விட்சர்லாந்து குடிபெயர்ந்து அங்கும் இரண்டு படங்களை இயக்கினார். 1972 ஆம் வருடம் கலையுலகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவப்படுத்தியது! 1977இல் ஒரு கிறிஸ்துமஸ் நாளில்.... எல்லோரையும் கண்ணீர் வர சிரிக்க வைத்த அந்த மகா கலைஞனின் மரணம் முதன்முறையாக அழவைத்தது!

குழந்தை!



* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.


* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.


* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.


* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.


* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.


* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.


* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.


* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.


* நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.


* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.


** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்.

ரிமோட் கண்ட்ரோல் எப்படிச் செயல்படுகிறது!


   
நீங்கள் தினசரி சாதாரணமாகத் தொலைக்காட்சி ரிமோட் கண்ட்ரோலை பயன்படுத்துகிaர்கள். அது எப்படிச் செயல்படுகிறது என்று தெரியுமா?

ரிமோட் கண்ட்ரோல் அமைப்பு, ஒரு தொடர்பு ஆகும். அதில் மூன்று விஷயங்கள் முக்கியமாக அடங்கி இருக்கின்றன.

1. டிரான்ஸ் மிட்டர்

2. சிக்னல்

3. ரிசீவர்

தொலைக்காட்சிக்கான ரிமோட் கண்ட்ரோல் அமைப்பை பொறுத்த வரை, நீங்கள் டிரான்ஸ் மிட்டர் என்று சிறு உபகரணத்தைக் கொண்டு டிவியில் தேவைக்கேற்ப மாற்றம் செய்கிறீர்கள். டிரான்ஸ்மிட்டரின் ஒவ்வொரு பட்டனையும் நீங்கள் அழுத்தும் போது அதிலிருந்து ஒரு சிக்னல் டிவியை நோக்கிச் செலுத்தப்படுகிறது. அந்த சிக்னல் டி.வி. பெட்டியில் பெறப்படுகிறது. பின்னர் உங்களின் உத்தரவுக்கு ஏற்ப மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.

சிக்னல் என்றால் என்னவென்று அறிவோம். பல்வேறு வகையான ரிமோட் கண்ட்ரோல் அமைப்புகளுக்கு ஏற்ப சிக்னல் வேறுபடுகிறது. டிவியை பொறுத்த வரை அகச்சிவப்புக் கதிரானது சிக்கலாகப் பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் கண்ட்ரோல் பொம்மைகள் போன்றவற்றில் சிக்கலானது சோனிக் அல்லது அல்ட்ரோசோனிக் அலைகளாக இருக்கும்.

ரிமோட் கண்ட்ரோல் அமைப்பு செயல்படும் தூரம் அதிகமாக இருக்க வேண்டிவரும் போது சக்தி வாய்ந்த ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆளில்லா தொலைக்கட்டுப்பாட்டு விமானங்கள், விண்கலன்கள் ஆகியவற்றில் அந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

டிவி ரிமோட் கண்ட்ரோல் அமைப்பில் ஒவ்வொரு பொத்தானுக்கும் வெவ்வேறு பணி இருக்கிறது. ஒரு பொத்தான் பிரகாசத்தைக் கூட்டும் என்றால் மற்றொரு பொத்தான், பிரகாசத்தைக் குறைக்கும். ஒரு பொத்தான், ஒலியைக் கூட்டினால், மற்றொரு பொத்தான் அதைக் குறைக்கும்.

இவற்றைப் போல வண்ணம், சேனல்களுக்கு என்று பல்வேறு பொத்தான்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஒவ்வொரு பொத்தானும் அழுத்தப்படும் போது அது குறிப்பிட்ட அலைநீளத்தில் ஒரு அலையையோ சிக்னலையோ அனுப்புகிறது. ஒவ்வொரு சிக்னலும் டிவியில் உள்ள ரிசீவரால் வெவ்வேறு விதமாகப் பெறப்படுகின்றன. ரிசீவரானது குறிப்பிட்ட கட்டளையை அதைக் கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட பகுதிக்குப் பிரித்து அனுப்புகிறது.

ஆக கண்ணுக்குத் தெரியாத சிக்னல்கள் மூலம் உங்களால் உட்கார்ந்த இடத்தில் இருந்தே டிவியை இயக்க முடிகிறது.

தமிழில் சைக்கிள் பாகங்களின் பெயர்கள்!



Tube - மென் சக்கரம்

Tyre - வன் சக்கரம்

Front wheel - முன் சக்கரம்

ear wheel (or) Back wheel - பின் சக்கரம்

Free wheel - வழங்கு சக்கரம்

Sprocket - இயக்குச் சக்கரம்

Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்

Training wheels - பயிற்சிச் சக்கரங்கள்

Hub - சக்கரக் குடம்

Front wheel axle - முன் அச்சுக் குடம்


Rear wheel axle - பின் அச்சுக் குடம்

Rim - சக்கரச் சட்டகம்

Gear - பல்சக்கரம்

Teeth - பல்

Wheel bearing - சக்கர உராய்வி

Ball bearing - பந்து உராய்வி

Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு

Cone cup - கூம்புக் கிண்ணம்

Mouth valve - மடிப்பு வாய்

Mouth valve cover - மடிப்பு வாய் மூடி


Chain - சங்கிலி

Chain link - சங்கிலி இணைப்பி

Chain pin - இணைப்பி ஒட்டி

Adjustable link - நெகிழ்வு இணைப்பி

Circlip - வட்டக் கவ்வி

Chain lever - சங்கிலி நெம்பி

Frame - சட்டகம்

Handle bar - பிடி செலுத்தி

Gripper - பிடியுறை

Cross Bar - குறுக்குத் தண்டு


Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை

Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு

Dynamo - மின் ஆக்கி

Head light - முகப்பு விளக்கு

Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி

Rearview Mirror - பின்காட்டி

Back Carrier - பொதி பிடிப்பி

Front Carrier Basket - பொதி ஏந்தி

Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள்

Side box - பக்கவாட்டுப் பெட்டி


Stand - நிலை

Side stand - சாய்நிலை

Speedo meter (Odo meter) - வேகம்காட்டி

Fender - வண்டிக் காப்பு

Derailleurs - பற்சக்கர மாற்றி

Peg - ஆப்பு

Air pump - காற்றழுத்தி

Shock absorber - அதிர்வு ஏற்பி

Break - நிறுத்தி

Break shoes - நிறுத்துக்கட்டை


Break wire - நிறுத்திழை

Break Lever - நிறுத்து நெம்பி

Front break ankle - முன் நிறுத்துக் கணு

Back break ankle - பின் நிறுத்துக் கணு

Disc brake - வட்டு நிறுத்தி

Break connecting links - நிறுத்தி இணைப்பிகள்

Pedal - மிதிக்கட்டை

Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை

Pedal cover - மிதிக்கட்டை உறை

Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ்


Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு

Spindle - சுழலும் மிதிக்கூடு

Seat (Saddle) - இருக்கை

Seat Post - இருக்கை தாங்கி

Baby Seat - குழந்தை இருக்கை

Seat cover - இருக்கை உறை

Leather Seat - தோல் இருக்கை

Cushion seat - மெத்திருக்கை

Washer - நெருக்கு வில்லை

Tension washer - மிகுநெருக்கு வில்லை


Screw - திருகுமறை

Nut - ஆணி இறுக்கி

Bolt - திருகாணி

Spring - சுருள்

Bush - உள்ளாழி

Lever - நெம்பி

Rust - துரு

Balls - பொடிப்பந்துகள்

Crank - வளைவு அச்சு

Rivet - கடாவு ஆணி

Axle - அச்சு

Spring chassis - சுருள் அடிச்சட்டம்

Nose spring - சுருள் முனை

Fork - கவை

Horn - ஒலியெழுப்பி

Cable - கம்பியிழை

Knuckles - மூட்டுகள்

Clamp - கவ்வி

Ring - வளையம்

Hole - ஓட்டை

Hook - கொக்கி

Spokes - ஆரக்கால்கள்

Spoke guard - ஆரக் காப்பு

Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி

Spanner - மறைதிருகி

Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி

Screw driver - திருப்புளி

Tools - கருவிகள்

Pocket tools - பையடக்கக் கருவிகள்

Front Mud Guard - முன் மணல் காப்புறை

Back mud guard - பின் மணல் காப்புறை

Chain Guard - சங்கிலிக் காப்புறை

Dress Guard - ஆடைக் காப்புறை

Gloves - கையுறை

Head set - தலைக்கவசம்

Wrist band - மணிக்கட்டுப் பட்டை

Bell - மணி

Bell lever - மணி நெம்பி

Bell cup - மணி மூடி

Bell spring - மணிச் சுருள்

Bell frame - மணிச் சட்டகம்

Bell rivet - மணி கடாவி

Bell fixing clamp - மணிப் பொருத்தி


Lock - பூட்டு

Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி

Key - சாவி

Key chain - சாவிக் கொத்து

Chain lock - சங்கிலிப் பூட்டு

Inner wire - உள்ளிழை

Electrical parts - மின்னணுப் பாகங்கள்

Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால்

Spokes with balls - மணிகோத்த ஆரக்கால்

Extra fittings - கூடுதல் பொருத்திகள்

Foot rest - கால்தாங்கி

Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி

Water bottle - தண்ணீர்க் குடுவை


Racing cycle - பந்தய மிதிவண்டி

Mini cycle - சிறு மிதிவண்டி

Mountain cycle - மலை மிதிவண்டி

Foldable cycle - மடக்கு மிதிவண்டி

Wheel chair - சக்கர நாற்காலி

Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி

One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி

High-tech bike - அதிநுட்ப வண்டி

Kid cycle - சிறுவர் மிதிவண்டி

Ladies cycle - மகளிர் மிதிவண்டி

Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி

Cycle with motor - உந்து மிதிவண்டி

Inflating - காற்றடித்தல்

Patch - பட்டை

Patching - பட்டை வைத்தல்

Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை


Over hauling - முழுச் சீரமைத்தல்

Painting - வண்ணம் தீட்டல்

Lubrication - எண்ணெய் இடல்

Wheel bend removal - கோட்டம் எடுத்தல்

Puncture - துளை

Puncture closure - துளைமூடல்

Puncture lotion - துளைமூடு பசை

Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)

Wooden mallet - மரச் சுத்தி

Grease - உயவுப் பசை

Lubricant oil - உயவு எண்ணெய்

Waste oil - கழிவு எண்ணெய்

ஆபிரகாம் லிங்கன் - ஜான் எப். கென்னடி!

ஆபிரகாம் லிங்கன் - ஜான் எப். கென்னடி ஒற்றுமைகள்

அமெரிக்காவின் ஜனாதிபதிகளாக இருந்த ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஆச்சரியப்படும் வகையில் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன.

லிங்கனின் மகன்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு, எட்வர்டு மூன்று வயதில் இறந்து போனார், ராபர்ட் உயிரோடு வாழ்ந்தார்.

ஜான் எப், கென்னடியின் சகோதர்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு ராபர்ட் கொல்லப்பட்டார், எட்வர்டு உயிரோடு வாழ்ந்தார்.

இரண்டு ஜனாதிபதிகளுமே தங்கள் மனைவியருடன் இருக்கும் போதுதான் கொல்லப்பட்டார்கள். இருவருக்கும் பின் தலையில்தான் குண்டடிபட்டது. இருவருமே வெள்ளிக்கிழமையன்றுதான் சுடப்பட்டார்கள்.

லிங்கனைக் கொன்ற ஜான் வில்கிஸ் பூத், கென்னடியைக் கொன்ற லீ ஹார்வி ஆஸ்வால்ட் இருவருமே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், இருபது முதல் முப்பது வயதிற்குள் இருந்தவர்கள்.

லிங்கன் தியேட்டரில் உட்கார்ந்திருக்கும் போது அவரைச் சுட்ட பூத் பண்டக சாலை (வேர் ஹவுஸ்) யில் பதுங்கியிருக்கையில் பிடிபட்டான். கென்னடி பண்டக சாலையில் இருக்கும்போது அவரைச் சுட்ட ஆஸ்வால்ட் தியேட்டரில் பதுங்கியிருக்கும்போது பிடிபட்டான்.

லிங்கன் 1860-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். கென்னடி 1960ல் பதவியேற்றார்.

லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி, கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்.

மேரி லிங்கனும், ஜாக்கி கென்னடியும் வெள்ளை மாளிகையில் வாழ்ந்த காலத்தில் தான் தங்கள் மகன்களை மரணத்திற்கு பரிசளித்தார்கள்.

லிங்கனை அடுத்து பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் 1808-ல் பிறந்தவர். கென்னடியை அடுத்துப் பதவியேற்ற லிண்டன் ஜான்சன் 1908-ல் பிறந்தவர். இவர்கள் இருவருமே அமெரிக்க செனட்டில் பதவி வகித்தவர்கள்.

கென்னடி-லிங்கன்- பெயரில் ஏழு எழுத்துக்கள். அவர்களை அடுத்துப் பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் - லிண்டன் ஜான்சன் இருவரின் பெயரில் 13 எழுத்துக்கள் இருக்கும்.

கென்னடி - லிங்கனை கொலை செய்த ஜான் வில்கிஸ் பூத் - லீ ஹார்வி ஆஸ்வால்ட் இருவருக்கும் பெயரில் 15 எழுத்துக்கள்.

பெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருப்பதற்கு! ! ! !



தயவு செய்து நண்பர்களுடன் இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்....

படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் மேலே இருந்து பெட்ரோல் நிரப்புமிடத்தில் நீங்கள் பெட்ரோல் போட்டுக்கொள்கிறீர்களா...?

உங்களுக்கான எச்சரிக்கை இது...

நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்...

இது போன்ற இடங்களில் மீட்டர் பெட்ரோல் நிரப்பும் நாசில் மீது இருக்கும்...

பெட்ரோல் நிரப்பும் நபர் உங்களிடம் எவ்வளவு என்று கேட்பார்...

நீங்கள் 100.00 ரூபாய் அல்லது 200.00 ரூபாய் என்று கூறுவீர்கள்...

மீட்டரில் இரண்டு வரிசைகளில் எண்கள் ஓடும்...

முதலில் உள்ளது லிட்டர் அளவு...

அதற்குக் கீழே உள்ளது தொகை...

பெட்ரோல் நிரப்பத் தொடங்குகையில் 0.0000 என்று இரண்டு வரிசைகளிலும் இருக்கும்...

நீங்கள் நூறு ரூபாய் என்று கூறினால்
பெட்ரோல் நிரப்பத் தொடங்கியதும்
லிட்டர் அளவு வருமிடத்தில் 1.0000 என்று வந்ததும் பெட்ரோல் நிரப்பும் நபர் நிறுத்தி விடுவார்...

நமக்கு அது ஒரு லிட்டர் என்பது தெரியாமல் நகர்ந்துவிடுவோம்...

அவ்வளவுதான் 100.00 ரூபாய்க்கு 30.00 ரூபாய் உங்களிடமிருந்துஉங்கள் அனுமதியுடன் திருடப்பட்டுவிட்டது...

200.00 ரூபாய்க்கு 60.00 ரூபாய் உங்களிடமிருந்துஉங்கள் அனுமதியுடன் திருடப்படும்...

நீங்கள் கூறும் 100.00-இன் மடங்குகளுக்கு ஏற்ப நீங்கள் ஏமாறும் தொகை 30.00-இன் மடங்குகளில் அதிகரிக்கும்...

ஏற்கனவே பெட்ரோல் விலை சுமை போதாதென்று இது வேறு...

சென்னையில் உள்ள நண்பர்கள் (குறிப்பாக பத்திரிகை நண்பர்கள்)யாரேனும் டெமோ பார்க்க ஆசைப்பட்டால்...

சென்னை, ஈக்காடுதாங்கல்,ஐ சி ஐ சிஐ வங்கிக்கு (ICICI BANK ) அருகில்,
VIRTUSA TOWER -க்கு எதிரில் (காசி தியேட்டர் பாலம் அருகில்) உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுங்கள்...

இன்று நண்பரும் நானும் அனுபவப்பூர்வமாகஇதனை உணர்ந்தோம்...

உரிமையுடன் கேட்டு மீதத்தொகைக்கு பெட்ரோல் வாங்கினோம் ...

மேலும் யாரும் ஏமாறாமல் இருப்பதற்கு...

என் சவ அடக்கத்தில் ... - மார்ட்டின் லூதர்!

தன் சவ அடக்கத்தின்போது என்ன பேச வேண்டும் என்பதை மார்ட்டின் லூதர் கிங் இவ்வாறு கூறியுள்ளார்.


“என் சவ அடக்கத்தின்போது என்ன பேசப்பட வேண்டும்? இன்று காலை அதைப்பற்றிச் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன். என் சவ அடக்கத்தின்போது நீண்டபொழுதைச் செலவிட வேண்டாம். சீக்கிரமே அது நடந்து முடியட்டும். என் சவ அடக்கத்தின் இறுதிக்கட்டமாக அனுதாப வார்த்தைகளைப் பேசுவதற்காக சிலரை நீங்கள் அழைத்து வரும்போது நீண்ட நேரம் பேசவேண்டாம், சுருக்கமாக உங்கள் உரை இருக்கட்டுமென்று அவர்களிடம் சொல்லுங்கள்.


உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்காக எனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி எதுவும் குறிப்பிட வேண்டாம், அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.


பல்வேறு சேவைகளுக்காக முந்நூறு, நானூறு பரிசுகளைப் பெற்றவன் நானென்பதைக் குறிப்பிட வேண்டாம். அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.


அந்த நாளில் அவர்கள் மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றவர்களுக்குத் தொண்டு புரிவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தானென்று குறிப்பிட வேண்டும். மார்டின் லூதர் கிங் ஜூனியர் எல்லாரையும் நேசிக்க முயன்றான் என்று சிலர் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.


அந்த நாளில் பசித்தவர்களுக்கு உணவளிக்க நான் பாடுபட்டேனென்று நீங்கள் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். நிர்வாணமாக நின்றவர்களுக்கு எல்லாம் உடையளிக்க உயிர் உள்ளவரை உழைத்தவன் நானென்று அந்தாளில் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். சிறையில் வாடியவர்களை எல்லாம் உயிர் உள்ளவரை நான் தேடிச்சென்று பார்த்து ஆறுதல் கூறியவன் என்று நீங்கள் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.


மனித குலத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவன் நானென்று அந்த நாளில் என்னைப் பற்றி நீங்கள் குறிப்பிட வேண்டும். நீதிக்காகத் தமுக்கடித்தவன் நானென்று தாராளமாகச் சொல்லுங்கள். உலக அமைதிக்காக தமுக்கடித்தவன் நானென்று சொல்லுங்கள்.”

காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.....



* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.



* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்



* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்



* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.



* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.



* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
* ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்



* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்



* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.



* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.



* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.



* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.



* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.



* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.



* பல மணி நேர தொலைபேசி உரையாடல்
* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.



* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

காதலர்களுக்கு, நோ ஐஸ்கிரீம்!



அண்மையில், என் நண்பரோடு கோவையில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றேன். இரண்டு கப் ஐஸ்கிரீம் வாங்கி திரும்பும் போது, அக்கடையில், "இங்கு காதலர்களுக்கு அனுமதி இல்லை...' என, பெரிய போர்டு இருந்தது. ஆச்சரியமடைந்து, அந்த போர்டு பற்றி கடைக்காரரிடம் கேட்டேன். "அதை ஏன் சார் கேட்கறீங்க... முளைச்சு மூணு இலை விடாத, ஸ்கூல் மற்றும் காலேஜ் படிக்கற பசங்க, இங்கே ஜோடி ஜோடியா வர்றாங்க. ஒரு சின்ன கப் ஐஸ்கிரீம் வாங்கிட்டு, இங்கேயே இரண்டு மணி நேரம், டேரா போட்டு அரட்டை அடிக்கிறாங்க. அரட்டை அடிச்சாலும் பரவாயில்லை. ஒருத்தர் தொடையில் ஒருத்தர் கை போடறதும், முத்தம் கொடுக்கறதும், ஊட்டி விடறதும்... பார்க்க சகிக்கலே.


"ஆம்பளை பசங்க அடங்கி போனாலும், இந்த பொண்ணுங்க எல்லாத்துக்கும், தாராளமா இடம் கொடுக்கறாங்க. இவங்களை பார்த்து, மற்ற பெண்களும், குடும்பத்தோடு வருவோரும் கடைக்கு உள்ளே வர தயங்கறாங்க. இவ்வளவு, வெட்ட வெளிச்சத்திலும், இந்த இளசுகள் யாரையும் மதிக்காம, கொஞ்சம் கூட பயப்படாம, ரொம்ப மோசமா நடந்துக்கறாங்க. அதனால தான், "காதலர்களுக்கு அனுமதி இல்லை'ன்னு போர்டு வச்சுட்டேன். ஆளுங்களை பார்த்த உடனே, கண்டுபிடிச்சு, திருப்பி அனுப்பி விடுவேன். அவுங்களால வர்ற வியாபாரமும், பணமும் எனக்கு முக்கியமில்லை. ஒழுக்கம் தான் முக்கியம்...' என்றாரே பார்க்கலாம்.


பள்ளி, கல்லூரி காதல் ஜோடிகளே... என்னதான் வயதுக் கோளாறு இருந்தாலும், பொது இடங்களில் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கலாமா? உங்கள் வாழ்வில் அதற்கு என்று ஒரு நேரம், காலம் உண்டு. அப்போது காட்டுங்க உங்க வித்தைகளை. அதுவரை, எல்லாவற்றையும் கொஞ்சம் அடக்கி வாசிக்க கற்றுக் கொள்ளுங்களேன்.

மண்டேலா என்ற மாணிக்கம் - சிறப்புக்கட்டுரை!



நெல்சன் மண்டேலா... ஜூலை 18, 1918-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள  முவெசோ என்ற ஊரில் பிறந்தார். முழுப் பெயர் 'நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா’  ரோலிஹ்லாலா என்றால், தொல்லைகள் கொடுப்பவன் என்று அர்த்தம். இவரது தந்தை சோசா, பழங்குடி இன மக்களின் தலைவர்.

ஆடு மாடு மேய்த்துக்கொண்டே  குத்துச் சண்டையையும், பல்வேறு போர்க் கலைகளையும் பயின்றார். அவற்றை, ஆடு மாடு மேய்க்க வரும் மற்ற பிள்ளைகளுடன் பயிற்சி செய்வார். அப்போது ஏகப்பட்ட பழங்குடியினர் கதைகளைக் கேட்டு, தன் நாடு எப்படி ஆங்கிலேயர் வசம் போனது என அறிந்துகொண்டார்.

ஒன்பது வயதிலேயே தந்தையை இழந்தார். பின்னர் உறவுக்காரரான ஜோன்கின்தபா என்பவரின் பாதுகாப்பில் வளர்ந்தார். தன் இனத்திலேயே முதன் முதலில் பள்ளிக்குச் சென்ற மண்டேலா, படிப்பில் சுட்டியாக இருந்தார்.

ஜோன்கின்தபா இவருக்கும் இவரின் தம்பிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தார். இதை விரும்பாத நெல்சன் மண்டேலா, வீட்டைவிட்டு ஓடிப்போய் சுரங்கத்தில் காவலாளியாகவும் தோட்டக்காரராகவும் வேலைபார்த்தார்.

நெல்சன் மண்டேலா, கல்லூரிக் காலத்தில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ராணுவப் பிரிவை உருவாக்கினார். கல்லூரியில் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி, ஆயுதக் கலகம் விளைவிக்க முயன்றார். அதனால் கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டார்.

  ஒரு வழியாக சட்டம் பயின்று முடித்தார். அப்போது கறுப்பின மக்களை அடக்கி ஆளும் தேசியக் கட்சி, தேர்தலில் வென்றதால், பல்வேறு போராட்டங்களில் கல்லூரித் தோழர்களுடன் ஈடுபட்டார்.  இலவசமாக சட்ட மையம் ஒன்றை ஆரம்பித்து, ஏழை மற்றும் அப்பாவிக் கறுப்பின மக்களுக்குச் சட்ட உதவி செய்தார்.

முதலில் அமைதி வழியில் செயல்பட்ட மண்டேலா, பிறகு ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்தார். அதனால், குற்றம்சாட்டப்பட்டு ஐந்து வருடங்கள் வழக்கு நடைபெற்றது. அப்போது பல மாறுவேடங்களில்  சுற்றினார். இங்கிலாந்து மக்களைப் ஃபிரான்ஸில் இருந்து காப்பாற்றிய நாயகன் பிம்பெர்னல் போல மாறுவேடம் பூண்டபோது, மக்கள் கறுப்பு பிம்பெர்னல் என அழைத்தனர்.

தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 1964 ஜுன் 12-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. கடந்த நூற்றாண்டில் அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்த அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாதான். 27 வருடங்கள் சிறையில் இருந்தார். உடன் இருக்கும் கைதிகளுடன் பேசவும் அனுமதி இவருக்கு இல்லை.

இவரது மூத்த மகன் விபத்தில் இறந்தபோது,  'மன்னிப்புக் கேட்டால் வெளியே விடுகிறோம்’ என்ற நிபந்தனை விதித்தது அரசு. கம்பீரமாக மறுத்தார் மண்டேலா. காந்தியின் சத்திய சோதனையைப் பொறுமையாக வாசித்தார். காந்தி மீது அபிமானம் ஏற்பட்டது. 'எனக்கு எல்லை இல்லாத மன தைரியம் வழங்கியது காந்திஜியின் சத்திய சோதனைதான்’ என்றார். 1990-ல் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி கிளார்க் முயற்சியால் விடுதலை ஆனார்.

அரசாங்கத்துடன் நடந்த பல்வேறுகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, அனைத்து மக்களும் இணைந்து ஓட்டு அளிக்கும் முறைக்கு ஒப்புக்கொண்டனர். அப்போது நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஜனாதிபதி ஆனார்.  இவருக்கு 1993-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ''நான் கறுப்பின மக்களின் விடுதலையை விரும்புகிறேன். அதே சமயம் வெள்ளையர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் வெறுக்கிறேன். நிறங்களைக் கடந்து மனிதர்களாக அன்பு செய்பவர்களாக என் நாட்டு மக்கள் திகழ வேண்டும்'' என்றார் மண்டேலா.

கார் டிரைவர்கள் விவரங்களை போலீஸ் நிலையத்தில் தாக்கல் செய்ய உத்தரவு!



ஜனவரி 15ஆம் தேதிக்குள் சென்னையில் இயங்கும் வாடகை கார் டிரைவர்கள், புகைப்படம் மற்றும் விவரங்களை போலீஸ் நிலையத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


வாடகை கார் மற்றும் கால்டாக்சி டிரைவர்கள் குற்றப்பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும், அதற்காக வாடகை கார் மற்றும் கால் டாக்சி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கமிஷனர் ஜார்ஜ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இதன்பேரில், நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.


இந்த கூட்டத்தில், ''வாடகைகார் மற்றும் கால்டாக்சி டிரைவர்கள் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் போலீஸ் நிலையங்களில் தங்களது புகைப்படம் மற்றும் விவரங்களை தாக்கல் செய்து போலீஸ் நன்னடத்தை சான்றிதழை பெற வேண்டும். புதிதாக வேலைக்கு சேரும் டிரைவர்கள் போலீஸ் சான்றிதழ் கொடுத்தால்தான் வேலைக்கு சேர்க்க வேண்டும். வெளி மாநில டிரைவர்களாக இருந்தாலும் அவர்களது மாநில போலீசில் பெற்ற உரிய சான்றிதழுடன் வந்தால்தான், வேலை கொடுக்க வேண்டும்'' என போலீஸ் தரப்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டன.


இதுகுறித்து வாடகை கார் உரிமையாளர்கள் தரப்பில், ''இந்த திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், சான்றிதழ்களை போலீஸ் நிலையங்களில் காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். வாடகை கார் டிரைவர் மட்டும் அல்லாது, சொந்தமாக கார் வைத்திருப்பவர்களிடம்  டிரைவர்களாக இருப்பவர்களும், போலீஸ் சான்றிதழ் பெறும் திட்டத்தையும் கொண்டு வரவேண்டும்'' என கோரிக்கை விடுக்கப்பட்டது.

உலகின் கவர்ச்சியான ஆசியப் பெண் நடிகை கத்ரினா கைஃப்: 4–வது முறையாக தேர்வு!



பிரபல இந்தி நடிகை கத்ரினா கைஃப். இவரை உலகிலேயே கவர்ச்சியான ஆசிய பெண் என லண்டனில் இருந்து வெளிவரும் வார பத்திரிகை ஒன்று தேர்வு செய்துள்ளது.


நடிகை பிரியங்கா சோப்ரா, டி.வி. நடிகை திரஷ்டிதாமி, தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகைகள் மாடல் அழகிகள் என 50 பேர் பெயர் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவர்களில் கத்ரினா கைஃப் அதிக வாசகர்கள் ஆதரவுடன் முதல் இடம் பிடித்தார். அவர் இந்தப் பட்டத்தை தொடர்ந்து 4–வது முறையாக தட்டிச் சென்றுள்ளார். கத்ரினா கைஃப் கடந்த ஒரு ஆண்டாக எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை. விளம்பர படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.


சமீப காலமாக பிரபல நடிகர் ரிஷிகபூரின் மகன் ரன்பீர் கபூருடன் கத்ரினா கைஃப் இணைத்து பேசப்பட்டு வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் மும்பை சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.


கவர்ச்சியான ஆசிய பெண்கள் வரிசையில் நடிகை பிரியங்கா சோப்ரா 2–வது இடத்தையும், டி.வி. நடிகை தாமி 3–வது இடத்தையும் பிடித்தனர். நடிகை தீபிகா படுகோனேக்கு 4–வது இடம்தான் கிடைத்தது.


மற்ற வரிசையில் உள்ள நடிகைகள் விவரம்:– சோனம்கபூர் (5), பரிநீதி சோப்ரா (14), ஷோபிசவுத்ரி (21), மெக்ரன் சயத் (22), சுனிதி சவுகான் (28), அங்கிதா லோகன்டே (29), ஹீனாகான்(31), ஸ்ரேயா கோசல் (43).

மரணத்துக்கு முன் வெளியான மண்டேலா சினிமா படம் வசூலை வாரி குவித்தது!




தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கருப்பர்களின் உரிமைக்காக நிறவெறி போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்காக 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி இயக்குனர் ஆனந்த்சிங் சினிமா படமாக தயாரித்துள்ளார். இதற்காக அவர் நெல்சன் மண்டேலாவுடன் 20 ஆண்டுகள் கழித்துள்ளார்.


சுதந்திரத்துக்காக மண்டேலாவின் நீண்ட பயணம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் மண்டேலா மரணம் அடைவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் ரிலீஸ் ஆனது. இது ரிலீஸ் ஆன ஒரு வாரத்தில் வசூலை வாரி குவித்தது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. முதல் வாரத்தில் மட்டும் ரூ.2 கோடியே 60 லட்சம் (4 லட்சத்து 23 ஆயிரம் டாலர்) வசூல் ஈட்டியுள்ளது. இந்த படம் பல நாடுகளில் தலைவர்களுக்கு விசேஷமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.


அமெரிக்க அதிபர் பராக் ஓபாமாவுக்கு வெள்ளை மாளிகையில் திரையிடப்பட்டது. லண்டனில் நடந்த சிறப்பு காட்சியில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேத்மிடில்டன், மண்டேலாவின் மகள், ஷிண்ட்ஷி மண்டேலா ஆகியோர் பங்கேற்றனர். மண்டேலா மரணம் குறித்து அவரது வாழ்க் கையை சினிமா படமாக எடுத்த ஆனந்த்சிங் கூறும்போது ‘‘நாங்கள் எங்களது தந்தையை இழந்து விட்டோம்’ அவர் உலகின் ‘ஹீரோ’ ஆக திகழ்ந்தார்’’ என தெரிவித்துள்ளார்.

பூமி எப்போது தோன்றியது?

 

வற்றாத நீரும், வளமான நிலமும், வாயு மண்டலமும் சூழ்ந்த உயிரினமும், பயிரினமும் கொண்ட அண்டகோளமானது நாம் வசிக்கும் இந்த பூகோளம். இந்த கோளம் சுற்றிவரும் சூரியன் ஒரு சுய ஒளி விண்மீன். அவ்வாறாக கோடான கோடி விண்மீன்களைக் கொண்டது ஒளிமய மந்தை எனப்படும் "கேலக்ஸி" (Galaxy). இந்த "கேலக்ஸியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் கிரகமானது நம் பூமி.

அறிவியலாளர்கள் பல மூலங்களைப் பயன்படுத்தி பூமி தோன்றிய காலத்தை பல வகையாக கணித்திருக்கின்றனர். பெரிய பாறைகள், பூமியில் விழுந்த விண்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு பல ஆய்வுகளை நடத்தி, பூமி இப்பொழுதுதான் தோன்றிய காலைத்தைப் பற்றிய சில முடிவுகளை நமக்குக் கொடுத் திருக்கின்றனர்.

பூமி சுமார் 4.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்பது விஞ்ஞானி களின் ஒருமித்த கருத்து. பூமி தோன்றிய நாள் முதலாக, பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்று வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பூமியிலிருக்கும் மிக்க முதுமை யான பாறையைக் கொண்டு அறிவியலாளர் கள் ஓர் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வின்போது அப்பாறையின் மூலத்தின் கதிரியக்கத் தேய்வை (Radioactive Decay of Elemets) ஆராய்ந்து, பூமியின் வயது 3.8 மில்லியன் என்று கணிக்கிட்டிருக்கிறார்கள்.

ஆனால், பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் (Meteorites) மூலக் கதிரியக்கத் தேய்வை ஆராய்ந்த போது, மீண்டும் சூரியக் குடும் பத்தில் பூமியின் வயது 4.6 மில்லியன் என்று கணித் திருக்கின்றனர். விண்வெளி விஞ்ஞானம் பேரளவில் விருத்தி அடைந்து கொண்டிருக்கும் இந்த மகத்தான யுகத்திலே, வானியல் நிபுணர்கள் பிரபஞ்சத்தின் வயதைக்கூட கணக்கிட பல்வேறு முறைகளையும் ஆய்வுகளையும் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இருப்பினும் பிரபஞ்சத்தின் உண்மையான வயதை தெரிந்து கொள்ள இன்றும் முடியவில்லை.

பூமிக்கடியில் புதைந்திருக்கும் புராதனப் பாறைகளில் உள்ள மூலங்களின் கதிரியக்கத் தேய்வை கணக்கிட்டு பூமியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்று அறியப்பட்டது.

வான்மண்டலத்தில் ஒளிமிக்க விண்மீன்களின் ஒளித்திரட்சியையும் அதன் உஷ்ணத்தையும் பல மாதங்களுக்குப் பதிவு செய்து விண்மீனின் தூரத்தோடு ஒப்பிட்டு பிரபஞ்சத்தின் வயதை 12 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டது. இதைத் தவிர, சூரியன் தோற்றுவித்த காலத்தையும் சில ஆய்வுகளின் மூலம் தெளிவு செய்துள்ளனர். சூரிய பரிதியின் பிளாஸ்மா (Plasma) எனப்படும் ஒளிப்பிழம்பின் வெப்பத்தையும், அதன் வாயுக்களையும் கொண்டு செய்த ஓர் ஆய்வில் சூரியன் 10 பில்லியன் வயது கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

பூமி தோன்றிய காலத்தைப் பற்றிய ஆய்வுகளின் முடிவுகள், குத்துமதிப்பாக பூமி மேற்குறிப்பிட்ட காலத்தில் தோன்றியிருக்கும் என்றுதான் கூறுகின்றன. ஆனால் மனிதன் எப்போது தோன்றினான், அவனின் மொழி எப்படி தோன்றியது என்பதனைப் பற்றிய ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொள்வதை விடவில்லை. இதற்கும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இறுதியில் இதற்கான பதிலையும் அறிவியலாளர்கள் கணித்தனர். மனிதன் தோன்றிய காலத்தில் அவன் தனது இனத்தோடு தொடர்பு கொள்ள தற்போது இருக்கும் தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம், கிரேக்கம், அரபு மொழிகள் அல்லது இதர மொழிகளைப் பயன்படுத்தவில்லை. இவைகளெல்லாம் மனிதன் தோற்றுவித்து பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டவை என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


விஞ்ஞானிகளின் கூற்றுப்படி மனிதர்கள், விலங்கினக் கூட்டத்தில் சேர்ந்த ஒரு இனமே. ஆறாவது அறிவு எனக்கூறப்படும் பகுத்தறிவு கொண் டவன் என்பதே அவனை மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டு காட்டுகிறது. விலங்குகள் மனிதர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை.


ஏறக்குறைய மனிதனை ஒட்டிய குணாம்சங்கள் அவைகளுக்கு உண்டு. பரிணாம வளர்ச்சியின் போக்கில் குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் என்று சொல்கிறது அறிவியல். மனிதர்களின் ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.


வாய் வழி ஒலி எழுப்பி மற்றவர்களோடு தொடர்பு கொண்ட மனிதன், காலப்போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கலாம் என்பது தெளிவு. ஆனால் மனிதன் முதலில் சைகைகளையும், உடல் அசைவுகளையும் மூலமாகக் கொண்டு செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருப்பார்கள் என்பதனை ஆதாரப்பூர்வமாகக் கூறுகின்றனர் நம் அறிவியலாளர்கள்.


மனிதர்கள் இயல்பாகவே அதிகமாக அங்க அசைவுகள் சைகைகள் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியவர்கள். மனித மொழி இத்தகைய அங்க அசைவுகளை முக்கியமாகக் கொண்ட சைகை மொழியாகவே முதலில் தோன்றியது. பிறகு பரிணாம வளர்ச்சிக்கிணங்க மனித மூளையின் மொழியைச் சார்ந்த பகுதிகள் நன்றாக வளர்ச்சியடைந்த பின், பேச்சு மொழியானது உருவாகியிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.


மேலும் மனிதன் சைகைகளுக்கு வலது கைகளையே அதிகம் பயன்படுத்துகிறான். வலது கையைக் கட்டுப்படுத்துவது இடது பக்க மூளையாகும். மனித மொழிக் கட்டுப்பாட்டு மையம் அமைந்திருப்பதும் இடது பக்க மூளையில்தான் என்பதன் மூலம் மனித இனத்தின் மொழி சைகைகளில் உருவாகியது என்பதில் சந்தேகமில்லை.