Monday 9 December 2013

நம்முடைய நான்கு மனைவிகள்! குட்டிக்கதைகள்!


ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
 


அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான்.


அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தன...க்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.


ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டாள்.


ஒருநாள்...


அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.


தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.


அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.


பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.


நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போதுதான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’ நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள்.


ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.
 


உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.
 


1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
 


2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
 


3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
 
 

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?



அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?


1 ஏங்க எங்க போறீங்க?

2 யார்கூடப் போறீங்க?

3 ஏன் போறீங்க?

4 எப்படி போறீங்க?

5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?

6 ஏன் நீங்கமட்டும் போறீங்க?

7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?

8 நானும் உங்ககூட வரட்டுமா?

9 எப்ப திரும்ப வருவீங்க?

10 எங்க சாப்பிடுவீஙக?

11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?

13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?

14 பதில் சொல்லுங்க ஏன்?

15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

16 நீங்க என்னை அம்மாவீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா?

17 நான் அனி திரும்ப வரமாடடேன்

18 ஏன் பேசாம இருக்கீங்க ?

19 என்ன தடுத்த நிறுத்தமாட்டீஙகளா?

20 இதுக்கு முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்தமாதிரிபண்ணிருக்கீங்களா?

21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டமாதிரி நிக்கிறீங்க ?

22 இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???


இதுக்கு அப்புறமும் அவர் அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா?????

ஆசிரியரும் நானும்!


  ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆசிரியரின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறியாமலில்லை.   தன் ஆசிரியரை போலவே தானும் ஆசிரியன் ஆகவேண்டும் என்று  ஈர்க்கப்பட்டு தாங்களும் ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்து செம்மையாக பணியாற்றிவரும் மாணவர்கள் இப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.


    ஆனாலும்  நான் என்றுமே ஒரு ஆசிரியனாக ஆகவேண்டும் என்று நினைத்ததே இல்லை. என் அண்ணன் என்னை ஆசிரியருக்கான படிப்பு படி, நீ விரைவில் வேலைக்கு சேர்ந்துவிடலாம்  என்று என்னை எவ்வளவோ கட்டாயப்படுத்தியும்  நான் ஆசிரியராகிவிடக் கூடாது  என்பதில் மட்டும் பிடிவாதமாக இருந்துவிட்டேன்.  இவ்வளவிற்கும்,   மற்றவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதிலும் அவர்களின் வினாவிற்கு விடை அளிப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம்.  இப்படி கற்பித்தலில் ஆர்வம் இருந்தும் ஆசிரியர் பணி ஏன் என்னை ஈர்க்கவில்லை?.  இவை எல்லாவற்றிற்கும்  ஆசிரியர்களில் மேல் எனக்கிருந்த வெறுப்புதான் காரணம். என்னுடைய பள்ளி வாழ்க்கையிலும் சரி, கல்லூரி வாழ்க்கையிலும் சரி ஒரு உண்மையான ஆசிரியருக்கான குணங்களைக் கொண்ட ஆசிரியர் ஒருவரைக்கூட நான் சந்திக்கவே   இல்லை என்பதுதான்  இந்த சொல்லொண்ணா வெறுப்பிற்கான காரணம்.


     என் பள்ளி நாட்களில் ஆசிரியர் என்றாலே அவர் கையில் வைத்திருக்கும்  பிரம்பும் அவர் கொடுக்கும் அடிகளும் தான் என் நினைவிற்கு வரும்.  பள்ளிக்கூடம் ஒரு சிறைச்சாலையாக எனக்கு காட்சியளித்தது. பள்ளிக்கூடம் போகக்கூடாது  என்பதற்காக நான் சுடுகாட்டில் பதுங்கிக்கொண்ட அனுபவம் எனக்கு நிறையவே உண்டு.  சுடுகாட்டைவிட பள்ளிக்கூடம் எனக்கு அதிக பயத்தை அளித்தது.  ஏன் இப்படி? இவை எல்லாவற்றிற்கும் முதன்மையான காரணம் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து துன்புறுத்தும் அவலம்  என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த கட்டுரையை நான் எழுதுவதன்   நோக்கம் ஆசிரியர்களை குறைக்கூறுவதற்க்கன்று. மாறாக, ஆசிரியர்களிடம் என்னை போன்ற மாணவர்கள் எப்பண்புகளை எதிர்பார்கிறார்கள் என்பதை தெரியப்படுத்தத்தான்.


     ஒரு நல்ல ஆசிரியருக்கு கையில் பிரம்பு தேவையே இல்லை.  ஒரு மாணவனை அடிப்பதன் மூலம் அவனை படிக்க வைத்துவிடமுடியும் என்று நினைப்பது அறிவீனம்.  ஒரு மாணவனை அடிப்பதால் அவனுக்கு படிப்பின் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறோம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத சில ஆசிரியர்களை நான் நிறையவே பார்த்திருக்கிறேன். தன் இசையாலும், பாட்டாலும், சிரிப்பாலும், விளையாட்டாலும், ஆர்விமிக்க தகவல்களாலும் மாணவர்களை கவரத்தெரியாத ஆசிரியர்களே பிரம்பின் உதவியை நாடுகிறார்கள்.  மாணவரைக்கவரும்  இவ்வுத்திகளை  தெரியாதவர்களை ஆசிரியர் பணியில் அமர்த்துவது அபத்தம்.


     ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் பாடம்  மாணவனுக்கு   புரியாமல் போனால் அது    மாணவனின் குறையில்லை.  மாறாக, அது ஆசிரியரின் குறை. எந்த மாணவனுக்கு எந்த முறையில் விளக்கினால் அவனுக்கு  விளங்கும் என்பதை கண்டறிந்து அம்முறையில் கற்பிப்பதுதான்  கைதேர்ந்த ஆசிரியரின் கடமை. அதை விட்டுவிட்டு அடியாள் மாதிரி கம்பை கையில் எடுப்பது ஒரு சிறந்த ஆசிரியருக்கு அழகல்ல.


     ஒரு மாணவன் ஒழுக்கக் குறைவான செயல்களை செய்யும்போதும், பல முறை சொல்லியும் கேட்காமல் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யும்போதும் கண்டித்து தண்டிக்கபட வேண்டியவனாகிறான் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.  ஆயினும்,  "இம்மாணவன்  நான்  சொல்லிக்கொடுப்பதை விளங்கிக்கொள்வதே இல்லை",  "இவன் குறைவான மதிப்பெண் வாங்குகிறான்", "இவன் படிப்பில் மந்தம்"  என்ற இதுபோன்ற சில காரணங்களுக்காக மாணவர்கள் அடிக்கப்படுவதை  என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.  இக்காரணங்களை நானாக கண்டுபிடித்து எழுதவில்லை. இவை எல்லாமும்  என் பள்ளி வாழ்க்கையில் நான் கண்ணால் கண்டதும் காதால் கேட்டவையும் தான் .


     ஒரு நல்ல ஆசிரியரானவர்  மாணவரோடு  மாணவராக சேர்ந்து  தானும் ஒரு மாணவனாகவே மாறி அவர்களுக்கு பாடம் கற்பிக்கிறார்.  மாணவர்களுக்கு அவர் ஒரு முன் மாதிரியாக நடந்து மாணவர்களையும் அவ்வழியில் நடக்க அறிவுரை வழங்குகிறார். பாடப்புத்தகத்தில் இருப்பதை மட்டுமல்லாமல் வாழ்கைக்குவேண்டிய நெறிகளையும்  வேறு சில இன்றியமையாத செய்திகளையும்   சேகரித்து மாணவர்களுக்கு போதிக்கிறார்.  மாணவர்களிடம் எப்போதும் அன்பாகவே நடக்கிறார். இதை ஆசிரியர்கள் கவனிப்பார்களா?

தனிமனிதனும் சமுதாயமும்!



இந்த உலகில் பிறக்கின்ற அந்த நொடியில் மட்டுமே உரிமைப் பறவையாக இருக்கிறான். பிறந்த மறுநொடி முதல் சமுதாயச் சிறையில் அடைபட்டு கூண்டுப் பறவையாகின்றான் என்கிறார் ரூசோ. எவ்வளவு எதார்த்தமான உண்மை இது!


சிறைப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையைக் கூட உணராமல் மனிதன் வேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறான். எதை நோக்கி ? பணம் , புகழ், அதிகாரம், அந்தஸ்து இப்படி பட்டியல் நீள்கிறதே அதை நோக்கி.


எவரும் தம்முடைய வாழ்க்கையை தாம் தீர்மானிப்பதாக தெரியவில்லை. அதிலும் இந்தியா கலாச்சாரம் மிக்க நாடு என்ற பெருமை கொண்டுள்ளது. சமுதாயம் கலாச்சாரம, பண்பாடு என்று பழம் பெருமை பேசியே தனிமனித சுதந்திரத்தை காலங்காலமாய் விழுங்கி வருகிறது.


புதியதாய் மணம் முடித்துக் கொண்ட இளம் தம்பதியினர் சந்தோஷமாய் இருக்கின்றனர். சுற்றி இருப்பவரோ ‘ என்னது ‘ இரண்டு வருடங்களாகியும் ஒரு புழு பூச்சி இல்லாமல் போயிற்றே ? என ஆரம்பித்து அவர்களை கேள்வி கேட்டே அழ வைத்துவிடுவர்.


கல்வித் துறையில் உள்ள சீர்கேட்டை பெரும்பாலோர் அறிவர். இருந்தும் பட்டம் பெற்ற இளைஞனைப் பார்த்து மக்கள் இன்னும் வேலைக்கு போகலையா? என்றே 90 வயது முதியவர் வரை கேட்டுக்கேட்டே தனிமனிதனை அழித்துவிடுகின்றனர்.


தந்தை சொல்கிறார் ” நாள் சொல்கிற படிப்பே படி. நாள் முழுவதும் பணம் சம்பாதிக்கலாம். வாழ்க்கை என்றால் பணம் தான். மற்ற விஷயங்கள் பணம் வந்துவிட்டால் தாமாக வந்துவிடும். ” மகன் தனக்கு விருப்பமானதை படிக்க முடிவதில்லை. நாங்கள் சொல்கிற பெண்ணை கல்யாணம் கட்டிக்கொள். இல்லையேல் என்னை பிணமாகத்தான் பார்ப்பாய் . இது அன்னையின் வாக்கு.


சொத்தில் சல்லிக் காசும் தரமாட்டோம். இது அப்பா. இது எனக்கு பிடிக்காத சங்கீதம். இதை நீ எப்போதும் கேட்கக் கூடாது – இது கணவன்.


நீங்கள் பொதுச் சேவையில் இனி ஈடுபட்டால் நான் என் அம்மா வீட்டுக்கு போய்விடுவேன் – இது மனைவி


நாம் முதலாளியாக இருந்து கொண்டு இன்று நறுக்கென்று நாலு வார்த்தை திட்டிப் பேசினால்தான் நாளை அவன் நம்மை மதிப்பான். பயம் வரும், – இது முதலாளியின் மனம்.


குறைவான வருமானம் இருந்தும் கலர் டி.வி. வாங்க திட்டமிட்டு தவனை முறையில் வாங்கி சமுதாய அந்தஸ்து வேண்டுமாம்.


கடன் வாங்கியாவது ஆடம்பர திருமணம் நம்மலையும் நாலு பேர் மதிக்க வேண்டுமாம்.


நன்கு தெரிந்த பையனுக்கு தம் பெண்ணைத் தர விரும்பியும் முடியவில்லை. ஜாதகம் பொருந்தவில்லையாம்.


ஆம் இன்றைய நிலையில் சமுதாயம் ( மற்றவர்கள் ) தனி மனிதனை நெருக்குகின்றன. உண்மையில் நாம் நாமாக வளரவில்லை. வாழவில்லை. பிறர் தீர்மானிப்பதை நாம் செய்து வருகிறோம். பெற்றோர் சொல்வதை குழந்தைகள் பின்பற்றுவது மாதிரியே வயது வந்த பின்னும் பிறருடைய விருப்பங்களுக்கே வாழ்கிறோம். எப்படி வாழ்வது என்ற கேள்விக்கு பகவான் ஓஷோ சொல்கிறார். உங்களுடைய வாழ்க்கையை பிறர் தீர்மானிக்க விட்டு விடாதிர்கள். உங்களுடைய வாழ்க்கை உங்களுக்கு மட்டுமே சொந்தம்.


நான் லிங்கனைப் போன்றோ, நெப்போலியனைப் போன்றோ ஆவதல்ல என்னுடைய விருப்பம் என்னுடைய விருப்பம் என்னுடைய பலம் எவ்வளவு செயலாக்கப்படுகிறது பலவீனம் எப்படி சரிகட்டப்படுகிறது என்பதில்தான் என்னுடைய வாழ்க்கை உள்ளது.


டாக்டர் மு. வரதராசனார் சொல்கிறார் ” இந்த சமுதாயத்துக்கு பயந்தவன் தனக்கும் சரி, தன்னைச் சுற்றி இருப்போர்க்கும் சரி ஒரு நாளும் நன்மையானதைச் செய்ய மாட்டான்”.


செம்மறியாடுகள் போன பாதையிலேயே போய் மாயட்டும். சிந்தனை மிக்க இளஞ்சிங்கங்களாகிய நாம் பண்பாட்டில், கலாச்சாரத்தில் இருக்கும் சில மாணிக்கங்களை மட்டும் பொறுக்கிக் கொண்டு எஞ்சியவற்றை கரியாக்கி விடுவோம்.


என்னுடைய சந்தோஷத்தில் அடுத்தவரின் அடிப்படை உரிமை பாதிக்கப்படும்போது மட்டும் சமுதாயம் பேசட்டும். அந்த மொழியை என் காதுகள் பணிவோடு கேட்கும். அன்போடு அதனை பரிசீலனை செய்வேன். சமுதாயத்தின் குரல் சரியென்றால் அந்த நிமிடமே நான் என்னை மாற்றிக் கொள்வேன். என்றெண்ணி எந்நாளும் இன்பமாய் வாழ்வோம்.

மனைவிக்கு முக்கியமாக தெரிய வேண்டியது!


கணவனுடைய சுபாவங்கள், அவனுடைய ஆசைகள், விருப்பங்கள் ஆகியவை குறித்து மனைவிக்கு திட்டமான கருத்து இருக்க வேண்டும். உணவு வகைகளில் மட்டுமல்ல எந்த விஷயத்திலுமே கணவனுக்கு எது பிடிக்கும். அவனுடைய ஆழ்ந்த விருப்பம் என்ன? எதைச் செய்தால் அவன் மகிழ்ச்சி அடைவான். என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பது போதாது. அவனுக்கு எது பிடிக்காது, எந்த மாதிரி விஷயங்களை வெறுக்கிறான், எதைச் செய்யும் போது அவனுடைய மகிழ்ச்சி குறைகிறது என்ற விஷயந்தான் ஒரு மனைவி முக்கியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


கணவன் தவறு செய்தால்...


சில விஷயங்களை ஜீரணிக்க வேண்டும். சில விஷயங்களை அலட்சியப்படுத்த வேண்டும். பெற்ற பிள்ளையோ, கணவனோ தவறு செய்து விட்டால் அதை ஜீரணித்து அவர்களை திருத்த வேண்டும். அடுத்தவர்கள் உங்களைப்பற்றி அவதூறு பேசினால் அலட்சியப்படுத்துங்கள். கத்தரிக்காயை ஜீரணியுங்கள் அதன் காம்பை அலட்சியப்படுத்துங்கள்.


குற்றங்குறைகள் இருந்தால்...


உண்மையாக இருந்தாலும், பிறர் உள்ளம் வருந்துமாறு எதையும் சொல்லாதீர்கள். ஒரு முடவனைப் பார்த்து நீ ஏன் முடவன் ஆனாய் என்று கேட்காதீர்கள். எவரும் தம் குற்றங்குறைகளை மற்றவர்கள் சுட்டிக் காட்டுவதை விரும்புவதில்லை. உடற்பயிற்சி செய்யும் போது இதயம் நிதானமாய் துடிக்கிறது. இதனால் உடம்பின் எல்லா பாகங்களுக்கும் அதிக இரத்தம் கிடைக்கிறது. அதிக அளவு பிராணவாயு கிடைக்கிறது. ஞாபக சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு ஏற்படும். உங்கள் குழந்தைகளை உடற்பயிற்சியை தினசரி செய்ய பழக்குங்கள். சிறுமிகள் கீழ்கண்டவற்றை செய்யலாம்.


தசைகள் இயக்கும் பயிற்சி...


சம தரையில் கைகளை பின்னால் நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பின்பு தலையையும், கைகளையும் உயர்த்தி, உட்காரும் நிலைக்கு வந்து கால் விரல்களை கை விரல்களால் தொட வேண்டும். இவ்வாறு 5 தடவை செய்யலாம்.


தோள் பயிற்சி...


கால்களை அகல வைத்தபடி கைகளால் கால்களுக்கு இடையில் தரையைத் தொட வேண்டும். இடது கை கீழே இருக்கும் போது வலது கையையும் உயர்த்தி பயிற்சியை செய்ய வேண்டும்.


மார்பகப் பயிற்சி...


மல்லாந்து படுத்துக் கொண்டு இரண்டு கைகளையும் உயர்த்தி மார்புக்கு நேராக கொண்டுவர வேண்டும். பின்பு கைகளை தாழ்த்தும்போது உள்மூச்சு வாங்க வேண்டும். கைகளை பழையபடி மார்புக்கு மேலே வருமளவும் மூச்சிவிடக் கூடாது. நான்கு தடவைகள் செய்யவும் மார்பகம் நன்றாக வளர்ச்சி பெறும்.


கால்கள் மெல்லியதாக இருக்க பயிற்சி...


ஒரு வாசற்படியின் மேலே ஏறி ஏறி இறங்க வேண்டும். ஒரு காலை மேலே வைத்து இன்னொரு காலை கீழே வைத்து மாறி மாறி ஏறி இறங்க வேண்டும். சைக்கிள் கூட விடலாம்.


இருதயநோய் ஆபத்தை தடுக்க...


ஒரு நாளைக்கு 30 முதல் 60 நிமிடங்கள் வரை சாதாரணமாக நடந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் இருதய நோய், மற்றும் புற்று நோய் அபாயத்தை தடுக்கலாம் என அமெரிக்க ஆராய்ச்சி நிலையத்தில் கண்டு பிடித்துள்ளார்கள். நடை பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன் படுகிறது.


உடலழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க...


உடலழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது மிக எளிது. இதற்காக பத்து நிமிடம் ஒதுக்கினால் போதும். அன்றாட வேலைகளில் ஒன்றாக உடற் பயிற்சியை கருதினால் நாம் வாழ்வில் வளமாக வாழலாம். நோய்கள் நிச்சயம் நம்மை நெருங்காது.


தோள்கள் வலிமை பெற...


கைகளை மாற்றி, மாற்றி மேலே உயரத் தூக்கி பயிற்சி செய்ய வேண்டும். இப்பயிற்சி செய்தாள் தோள்கள் வலிமை பெறும்.


வயிற்றுப் பகுதியில் உள்ள சதைகள் மறைய...


மல்லாந்து படுத்துக் கொண்டு வலது காலையும் இடது காலையும் மாற்றி மாற்றி மேலே உயர்த்தி இறக்கி பயிற்சி செய்ய வேண்டும். சைக்கிள் ஓட்டுவது போலவும் கால்களை இயக்கலாம். இப்படிச் செய்வதால் வயிற்றுப் பகுதியில் உள்ள சதைகள் குறைந்து அழகிய தோற்றம் ஏற்படும்.


கழுத்து வலிமை பெற...


தலைப்பகுதியை மட்டும் பக்கவாட்டில் அசைக்க வேண்டும். இப்படிச் செய்தால் கழுத்துப்புறம் வலிமை பெறும்.

இதுக்கு கொடுக்கலாம் மானியம்!



நான் சமீபத்தில், சி.எப்.எல்., பல்பு வாங்க, கடைக்குச் சென்றேன். 5 வாட்ஸ் பல்பு விலை கேட்டேன், ரூபாய் 110 என்று சொன்னார் கடைக்காரர். தூக்கி வாரிப் போட்டது. மேலும், 15 வாட்ஸ் பல்ப்பின் விலை ரூபாய் 175; 20 வாட்ஸ், ரூபய் 225; 30 வாட்ஸ், ரூபாய் 370; 40 வாட்ஸ், ரூபாய் 450 என்று, கடைக்காரர் கூறியதும் தலைசுற்றி விட்டது.


மின்சாரத்தை மிச்சப்படுத்த சி.எப்.எல்., விளக்கை பயன்படுத்த அரசு சொல்கிறது. ஆனால், அதன் விலை, ஏழை மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அரசு, சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க மானியம் கொடுக்கிறது. இது ஏழை மக்களை சென்றடைய பல காலம் ஆகும். ஆகவே, சி.எப்.எல்., தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி, மலிவு விலையில், மக்களுக்கு கிடைக்குமாறு அரசு செய்தால், மக்கள் குண்டு பல்பை விட்டு, சி.எப்.எல்., பல்புக்கு மாறுவர்.


ஆந்திராவில், அரசே வீட்டுக்கு வீடு குண்டு பல்பை கழட்டி விட்டு, சி.எப்.எல்., பல்பை, இலவசமாக போட்டுச் கொடுக்கின்றனர். தமிழ்நாட்டில் அப்படி செய்ய வாய்ப்பே இல்லை. அதனால், எது எதற்கோ மானியம் வழங்கும் அரசு, மின்சார சிக்கனத்திற்காக சி.எப்.எல்., பல்புக்கு, மானி யம் அளிப்பது காலத்தின் கட்டாயம்.

இவர்கள் தேவையா?



"வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் செய்துப்பார்' என, ஒரு பழமொழி உண்டு. அதுவும், இன்று மண்டபம், சாப்பாடு மற்ற செலவுகள் என, லட்சக்கணக்கில் பணம் செலவாவதால், பெற்றோர் விழிபிதுங்கிப் போகின்றனர். இந்த நிலையில், சில பண முதலைகளோ... தங்களுடைய டாம்பீகத்தை காட்ட, கல்யாண விழாவில் கலந்து கொள்ள, சினிமா நட்சத்திரங்களை அழைக்கின்றனர்.


இதற்கு, பல லட்ச ரூபாய் செலவு செய்கின்றனர்.


பிரபல இந்தி நடிகர் ஒருவர், கல்யாணங்களில் கலந்து கொள்ள, ஐந்து கோடி ரூபாய் கேட்கிறார். இவர்கள், ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சி நடத்துவர் அல்லது முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு, அளவளாவுவர். இப்படி, இவர்களுக்கு கொட்டிக் கொடுக்கும் பணத்தை, ஏழை, எளிய மக்களை வாழ வைக்கும் சேவை நிறுவனங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் கொடுத்தால், அந்த உள்ளங்களாவது மகிழ்ந்து, ஆசீர்வாதம் செய்யும். நாம் செய்த, பெரிய செலவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.


சமீபகாலமாக, தமிழ் சினிமா நட்சத்திரங்களையும் அழைக்கத் துவங்கியுள்ளனர். அதிர்ஷ்டம் என்ற ஏணியின் மூலம், புகழின் உச்சியை தொட்ட இவர்களை அழைத்து, காசை வீணாக்குவதை விட, நல்ல செயல்களுக்கு உதவி செய்து, மனத்திருப்தி அடையலாமே!

முல்லாவை அறிந்து கொள்ளுங்கள்!



இன்றும் உலகம் முழுக்க முல்லாவைப் பற்றிய நூற்றுக்கணக்கான கதைகள் படித்து ரசிக்கப்படுகின்றன. முல்லா நஸ்ருதீன் என்னும் நகைச்சுவை ஞானியை துருக்கியர்களும் கிரேக்கர்களும் ஹோஜா நஸ்ருதீன் என்றழைக்கின்றனர். கஸாக்கியர்களால் அவர் கோஜா நஸ்ரெதீன் என்றழைக்கப்படுகிறார். சிலர், முல்லா நஸ்ருதீன் ஒரு கற்பனை கதாபாத்திரம் எனவும் சொல்கின்றனர். முல்லா நஸ்ருதீன் 1208_ம் ஆண்டு துருக்கிய கிராமத்தில் பிறந்து 1284_ம் ஆண்டுவாக்கில் இறந்துபோனார் என்பது பொதுவான நம்பிக்கை. துருக்கியில் முல்லாவைப் புதைத்த நகரத்தில், ஜூலை 5 முதல் 10 வரை எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை நிகழ்த்தியும் திரையிட்டும் முல்லாவின் நினைவைக் கொண்டாடும் நிகழ்வு இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அஸர்பைஜானில் முல்லா நஸ்ருதீனின் குட்டிக் கதைகள் இப்போதும் அங்கு நடக்கும் விருந்துகளிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் இயற்கையாகவே பேச்சினூடாக இடம் பெறுகின்றன. சில முக்கியமான அனுபவங்கள் நிகழும்போது சரியான நேரத்தில் முல்லா கதைகளைப் பொருத்திப் பார்க்கும் பழக்கமும் அவர்களிடம் நிலவுகிறது.


முல்லாவின் கதைகள் எல்லாக் காலத்திற்குமானவை. மனிதனின் அடிப்படை இயல்புகளில் உருவாகும் முரண்கள், சமூக நீதியின்மை, வகுப்புப் பிரிவு, சுயநலம், கோழைத்தனம், சோம்பேறித்தனம், அறியாமை, குறுகிய புத்தி இவை எல்லாவற்றையும் முல்லாவின் கதைகள் பரிசீலனை செய்கின்றன. 13_ம் நூற்றாண்டின் பின்னணியில் தேநீரகங்களிலும் பொதுக்குளியலறைகளிலும் சந்தைகளிலும் இக்கதைகள் பொதுவாய் நிகழ்கின்றன. இக்கதைகளிலுள்ள மனித இயல்பைப் பற்றிய முல்லாவின் அவதானிப்புகள் தரிசனத் தன்மையுடையவை. நூற்றாண்டுகள் கழிந்தபின்னும் நம்மைப் பற்றி ஈர்க்கும் காந்தத் தன்மை கொண்டவையாக அவை இருக்கின்றன.


வாழ்க்கையின் எல்லா நிலைகளிலுமுள்ள மனிதர்களும் முல்லாவின் கதைகளில் இடம்பெறுகிறார்கள். யாசகர், மன்னர், அரசியல்வாதி, குமாஸ்தா, அறிஞர், வியாபாரி... முல்லாவின் மனைவியும் கழுதையும் அவருடைய நிரந்தரமான உதவியாளர்கள். முல்லா கதைகளில் முல்லா முட்டாள்போல் தோற்றமளித்தாலும் அவை தந்திரமாக மற்றவர்களின் முட்டாள்தனத்தை அவிழ்த்து விடுவதாகவே இருக்கின்றன. வாய்மொழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பரப்பப்பட்ட முல்லாவின் கதைகள் கீழைத்தேய நாட்டுப்புறவியல் கதை மரபில் மிகப் புகழ்பெற்ற அங்கத நகைச்சுவைக் கதைகள். முல்லா நஸ்ருதீன் தன் சமாதியிலிருந்து கூட நகைச்சுவையை எழுப்புபவர்.


முல்லா தனது உயிலில் தன் சமாதி மீது பூட்டிய கதவு ஒன்றைத் தவிர வேறெதுவும் இடம்பெறக் கூடாதென்றும், பூட்டிய பின்பு சாவிகளை சமுத்திரத்தில் எறிந்து விட வேண்டுமென்றும் விருப்பப்பட்டார். ஏன் அவர் அப்படிச் சொன்னார்? இன்னமும் மக்கள் அவர் சமாதியைப் பார்க்கின்றனர். கதவைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர். அங்கே சுவர்கள் இல்லாமல் ஒரு கதவு மட்டும் பூட்டப்பட்டு நிற்கிறது. முல்லா நஸ்ருதீன் சமாதிக்குள், நிச்சயமாய் சிரித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.


இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறிய காலகட்டத்திற்குள் வாழ்ந்து மடிந்து போகும் மனிதன், தன் வாழ்வை நகர்த்த எத்தனை எத்தனை அல்பமான காரியங்களில் ஈடுபடுகிறான் என்பதை தெரிவிப்பவை முல்லாவின் கதைகள். முல்லாவின் கதைகளில் முல்லாவும் எல்லா மனிதர்களைப் போல்தான் தன் கதைகளில் நகையாடப்படுகிறார். சில அபத்தத் தருணங்கள், முரண்களில் எளிய உண்மைகளை சத்தமின்றி சொல்லிப் போகிறது முல்லாவின் கதைகள்.


முல்லாவின் நவீன தொடர்ச்சியெனப் பார்த்தால் வைக்கம் முகம்மது பஷீரிடம் அந்த இயல்புகளைக் காணமுடியும். பஷீரின் கதை சொல்லி உடலும், எல்லா மனிதர்களின் அல்பத் தனங்களோடும், சிறிய எண்ணற்ற தந்திரங்கள், மனத்தடைகளில் திளைப்பவையே. ஆனால் கதைக்குப் பின்னால் உள்ள பஷீரின் கண்கள், உடல் ஏந்தியிருக்கும் களங்கம் எதையும் ஏற்காதவை. எக்காலத்திலும் நடந்து கொண்டிருக்கும் மனித நாடகத்தை ரசிப்பவை. அதன் மேல் ஒரு புன்னகையை பரவவிடுவதன் மூலம் உலகை எல்லா களங்கங்களோடும் ஏற்றுக்கொண்டு, ஆற்றுப்படுத்தும் வல்லமை கொண்டவை. பஷீரின் இப்புன்னகைதான் அவரின் விமர்சனமும். அவரது ‘பாத்துமாவின் ஆடு’ கதையில் கதை சொல்லி எல்லோரையும் ஏமாற்ற முயல்கிறார். ஏமாற்றப்படுகிறார். நடுவில் உலவும் ஆடு எல்லாவற்றையும் சமன் செய்யும் உயிரியாக வீடு முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறது. அது அபோதத்தில் பஷீரின் சில புத்தகங்களையும் தின்றுவிடுகிறது. பஷீரின் புன்னகை எல்லாவற்றின் மீதும் படர்ந்திருக்கிறது. உடலின் மரணத்திற்குப் பின்னும் இமை திறந்தால் உயிர்த்திருக்கும் விழிகள் போன்றது பஷீரின் அப்புன்னகை.


ஓஷோ, முல்லாவின் கதைகளில் சிறந்தவற்றைத் தொகுத்து ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார். அதில் சில கதைகளும் வண்ணமயமான சித்திரங்களும், ஓஷோவின் குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளன. ‘‘முல்லா நஸ்ருதீனின் மேல் எனக்கிருக்கும் விருப்பம், இந்த உலகின் யார் மீதும் இல்லை’’ என்கிறார் ஓஷோ. அவரது எல்லா பேச்சுகளிலும் முல்லா நஸ்ருதீன் இடம் பெறுகிறார். ஓஷோ முல்லாவைப் பற்றி பேசும்போது, ‘‘மதத்தையும், சிரிப்பையும் ஒருங்கிணைத்தவர் முல்லா நஸ்ருதீன். அதுவரை மதமும், நகைச்சுவையும் ஒன்றுக்கு எதிரான ஒன்றாகவே இருந்தன. அதன் பழைய பகைமை மறந்து மதத்தையும், நகைச்சுவையையும் சேர்த்து நண்பர்களாக்கிய சூஃபி முல்லா நஸ்ருதீன். மதமும் சிரிப்பும் சந்திக்கும் போது, தியானம் சிரிக்கும்போது, சிரிப்பு தியானமாகும் போது அற்புதங்களுக்கு மேலான அற்புதம் ஒன்று நிகழ்கிறது. இந்தியர்கள், கடவுள் மற்றும் பிற விஷயங்களில் மிகத்தீவிரமாக இருப்பவர்கள். அங்கு சிரிக்கும் கௌதம புத்தாவைப் பற்றி யோசிக்க இயலாது. சங்கராச்சாரியார் சிரிப்பதோ, மகாவீரர் சிரிப்பதோ அசாத்தியமான காரியம்’’ என்கிறார்.


கள்ளமற்ற சிரிப்பு என்பது வித்தியாசமானதொரு அனுபவம். அது களைப்பாற்றும் எந்திரவியல் மட்டும் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. இந்தியர்களின் நகைச்சுவை பற்றிப் பேசும் குஷ்வந்த் சிங், ‘‘இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் மற்றவர்களைப் பார்த்து நன்கு சிரிக்கத் தெரிந்தவர்கள். ஒரு சிலர் மட்டுமே தன்னையே பார்த்து சிரிக்கத் தெரிந்தவர்கள். இதனாலேயே இந்தியர்களிடமிருந்து மகத்தான நகைச்சுவையாளர்கள் யாரும் உருவாகவில்லை. உலகத்தின் மிகச் சிறந்த நகைச்சுவையாளர்கள் என்றால் யூதர்களைத் தான் சொல்வேன். ஹிட்லரும் நாஜிகளும் அவர்களை விஷவாயுக் கிடங்குகளில் அடைத்த கொடுமையான நிலைகளில்கூட ஹிட்லருக்கு எதிரான நகைச்சுவைக் கதைகளை உருவாக்க அவர்களால் முடிந்திருக்கிறது. தத்துவவியலாளர்களில் ஓஷோவுக்கு நல்ல நகைச்சுவைத்திறன் உண்டு. ஓஷோவுக்கு வசீகரமானவராக முல்லா நஸ்ருதீன் ஏன் இருக்கிறார் எனப் பலமுறை யோசித்துள்ளேன். முல்லா தன் கதைகளில் தன்னையே பகடிக்கு உட்படுத்திக்கொள்வதுதான், முல்லா கதைகளின் பிரத்யேக அழகு எனத் தோன்றுகிறது’’ என்கிறார்.


வாழ்க்கையைக் கவனித்துப் பார்த்தால், அது அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்றல்ல என்று நமக்குத் தெரியும். சிரிப்பதற்காகவே எஞ்சியிருப்பது. எதையும் வெற்றிகொள்ளவில்லையே என்ற கேள்வியை உங்களிடம் எழுப்பலாம். ஆனால், வெற்றி என்பதன் அர்த்தம் என்ன? ஒருவன் வெற்றி பெற்றவனாகி விட்டாலும் எதை அவன் அடைகிறான்? ஓஷோவின் கேள்வியிலும் புன்னகையே மிஞ்சி நிற்கிறது.

எல்லார் மனதையும் ஜெயித்துவிட்டார்!



கென்யா நாட்டு வீராங்கனை ஓட்டப்பந்தயத்தில் தன்னுடன் ஓடி வந்த சீனா நாட்டு மாற்று திறனாளி தாகத்தால் தவிப்பதை பார்த்து அவருக்கு தண்ணீர் குடிக்க உதவி செய்து விட்டு ஓடினார்.



இதனால் அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது அது மட்டும் இல்லாமல் US $ 10,000 பணத்தையும்  இழந்தார்.போட்டியில் ஜெயிப்பது மட்டுமே வெற்றி இல்லை.



தங்கம் மட்டுமே ஆப்ரிக்காவில் கிடைப்பதில்லை.சில தங்கமான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை நிருபித்து விட்டார் இந்த பெண். இவர் போட்டியில் ஜெயிக்கவில்லை ஆனார் எல்லார் மனதையும் ஜெயித்துவிட்டார்.

6 "ஆறு' தகவல்கள்!



 * வாலிபால் விளையாட்டில் ஓர் அணியில் 6 பேர் இடம் பெற்றிருப்பர்.


 * யானைக்கு பற்கள் 6 முறை விழுந்து முளைக்கும்.
ரத்தம் தண்ணீரைவிட 6 மடங்கு கனமானது.


 * மத்திய அமெரிக்க நாடுகளான ருவாண்டா, புருண்டியில் உள்ளவர்கள்தான் உலகின் மிக உயரமான மனிதர்கள். இவர்களின் சராசரி உயரமே 6 அடி இருக்கும்.


 * புளூட்டோ கோளிலிருந்து புறப்படும் ஒளி பூமியை அடைய 6 மணி நேரமாகும்.


 * சராசரியாக 6 விநாடிகளுக்கு ஒருமுறை நாம் கண்களை இமைக்கிறோம்.


 * நயாகரா நீர்வீழ்ச்சியில் நிமிடத்துக்கு 6 மில்லியன் கன அடி நீர் பாய்கிறது.


 * யானையின் காலடித் தடத்தின் குறுக்களவை 6-ஆல் பெருக்கினால் அந்த யானையின் உயரம் தெரிந்துவிடும்...

விவசாயி ; படிச்சவன் - நகைச்சுவை!


படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்.., அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கு..


அவனுக்கு ஆச்சரியமா இருக்கு.., பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்…


படிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?


விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,


படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?


விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..


படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?


விவசாயி : இதுக்குதான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!


படிச்சவன்: ? ? ? ? ?

சமையலின் போது செய்யும் 5 மோசமான தவறுகள்..!




சமையலில் உப்பை அதிகமாக சேர்த்து விடுவதோ, காரத்தை அளவு தெரியாமல் போட்டுவிடுவதோ தவறு அல்ல. அது அப்போதைய சமையல் ருசியை மட்டுமே கெடுக்கும்.


ஆனால்.. அதையும் விட நமக்கு தவறு என்று தெரியாமல் வெறும் ருசிக்காகவும், அழகுக்காகவும் சில தவறுகளை செய்து விடுகிறோம். அதனால் நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கிறது.


1. எந்த உணவு பொருளையும் கழுவாமல் பயன்படுத்தவே கூடாது. உதாரணத்துக்கு சிலர் புளியை தண்ணீர் ஊற்றி கரைப்பார்கள். ஆனால், அதையும் ஒரு முறை தண்ணீர் சேர்த்து அலசி கீழே ஊற்றிவிட்டு, அடுத்து நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம். இதே போல, முட்டைகளை நன்கு கழுவிவிட்டு வேக வைக்க வேண்டும். கீரையை 2 முறையாவது கழுவ வேண்டும்.


2. கோழிக்கறியை சமைக்கும் முன்பு அலசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது, கோழிக்கறியில் தண்ணீரை ஊற்றும் போது அதில் இருந்து தெளிக்கும் தண்ணீர் படும் இடங்களில் எல்லாம் பாக்டீரியாக்கள் பரவும் என்பதை மறக்கக் கூடாது. மேலும், கோழிக்கறியை அலசி கீழே விடும் தண்ணீர் நேராக வெளியேற்றப்பட வேண்டும். அதில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் கவனமாக அந்த நீரை வெளியேற்ற வேண்டும்.


3. எந்த உணவு பொருளையும் அதிக நேரம் வதக்கவோ, கருக வைக்கவோ கூடாது. எல்லோருக்குமே உணவு பொருள் என்பது நன்கு சிவந்து இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அது உடல் நலனுக்கு தீமையை ஏற்படுத்தும். எனவே, எந்த உணவையும் அதிகமாக வதக்கி கருக வைக்க வேண்டாம். கருகிய அல்லது தீய்ந்த உணவு பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும்.


4. காலையில் வேகமாக சமைக்க வேண்டும் என்பதால் பலரும் வெங்காயத்தை இரவே நறுக்கி வைத்துக் கொள்வார்கள். அது மிகப்பெரிய தவறாகும். வெங்காயத்துக்கு கிருமிகளை கவர்ந்திழுக்கும் குணம் உள்ளது. அதனால், வெங்காயத்தை நறுக்கியதும், அது காற்றில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் கவர்ந்திழுத்து வைத்துக் கொள்ளும். கிருமிகள் நிறைந்த வெங்காயத்தைத் தான் நாம் மறுநாள் உணவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதை மறவாதீர்.


5. மேலும், இஞ்சியை தோலோடு சமைக்கக் கூடாது. கீரையோடு புளி சேர்க்கக் கூடாது. கோழிக்கறியை எடுத்து வைத்து மறு நாள் சாப்பிடக் கூடாது. நான்ஸ்டிக் தவாவை இரும்பு தேய்ப்பானைப் பயன்படுத்தி தேய்த்துக் கழுவக் கூடாது. விரத நாட்களை தவிர்த்து, சமைத்து ருசி பார்த்துவிட்டுத்தான் சமையலை முடிக்க வேண்டும்.

கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு!







கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வான நீர்த்தாரை எனப்படும் ‘டோர்னடோ'வை தனது செல்போன் உதவியுடன் புகைப்படம் எடுத்துள்ளார் தமிழக மீனவர் ஒருவர்.


கடலூர் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த மீனவர்களான மதியழகனும் அவரது தம்பியும் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய விசைப்படகில் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.


அப்போது, திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக கடல் அருகே இறங்கியும், கடல் நீர் சுழல் போல் மேலெழுந்து மேகங்களுக்குள் இழுக்கப்படும் அதிசய காட்சியை அவர்கள் கண்டுள்ளனர்.


சுமார் அரை மணிநேரம் நீடித்த இந்த அதிசய நிகழ்வை உடனடியாக தனது செல்போனில் படம் எடுத்துள்ளார் மதியழகன். மதியழகனின் படகிற்கு மிக அருகில் இந்த நிகழ்வு நடந்ததாக தெரிவித்துள்ளார் அவர்.


மீனவர்கள் மொழியில் இந்த நிகழ்வை ‘யானை தும்பிக்கையை இறக்கி இருக்கிறது' எனச் சொல்வார்களாம்.ஆனால், அறிவியல் மொழியில் இதனை ‘டோர்னடோ' என பெயரிட்டு அழைக்கிறார்கள். அதாவது தமிழில் நீர்த்தாரை.


மீனவர்கள் கண்ட இந்த டோர்னடோ குறித்து, கடலூர் துறைமுக அதிகாரி கேப்டன் அன்பரசன் கூறுகையில், ‘கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் நீர்த்தாரைகள் எனப்படும் அதிசய நிகழ்வு ஏற்படும்.


பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, நீர்த்தாரைகள் மறைந்து விடும். இந்த விநோத நிகழ்வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். இதன் வேகம் பல கிலோ மீட்டராக இருக்கும்.


இதற்கு ஆங்கிலத்தில் "டோர்னடோ" என்று பெயர். இவைகள் ஐரோப்பா போன்ற பகுதிகளில் அதிகம் காணப்படும். இவை அனைத்தும் பருவகாலம் மாறும் போது நடைபெறும் நிகழ்வுகள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் வாழ்வியல் இலக்கணம்!




தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர்என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன.மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர்.


தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது..தான் தோன்றிய கால மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சுர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை நமக்குக் காட்டி நிற்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழர் பண்பாட்டை நன்கு அறிகிறோம். பண்பாட்டின் கூறுகள் சிலவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

வீரம்:

பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது.


காதல்:


தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும்.இது களவு, கற்பு என இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள்.அறிவும், செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள். இக்காதல் நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும்.



மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
 நன்கலம் நன்மக்கட் பேறு





 என்று வள்ளுவரும் காதல்வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்.

நட்பு:

சங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார்.




முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
 அகநக நட்பது நட்பு



 உள்ளன்புடன் மனம் மகிழ்ந்து நட்பு கொள்வதே உண்மையான நட்பாகுமென்றார்.


விருந்தோம்பல்:

‘விருந்து’ என்ற சொல்லுக்குப் ‘புதுமை’ என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை ‘விருந்து’ என்றனர் தமிழர். அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர்.


செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
 நல்விருந்து வானத் தவர்க்கு



” என்கிறார் திருவள்ளுவர். விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர்,


விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
 மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று



” என்று கூறுவதிலிருந்துவிருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய முடிகிறது.


இவை மட்டுமன்றி ஈகை,கொடை,கற்புடைமை,உலக ஒருமைப்பாடு ஆகியவற்றையும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்.

2013ல் அதிகம் பேசப்பட்ட ஹீரோயின்கள்!




2013ல் புதுமுக நடிகைகள் அதிகம் கவர்ந்தனர். நயன்தாரா, காஜல் அகர்வால், த்ரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, அமலாபால் போன்றோர் மார்க்கெட்டை நிலையாக தக்க வைத்துக் கொண்டனர்.


நயன்தாரா இந்த வருடமும் தமிழ், தெலுங்கில் நம்பர் ஒன் ஹீரோயினாக இருக்கிறார். காதல் சர்ச்சைகளால் ஒரு வருடம் இடைவெளி விட்டு வந்தாலும் நயனுக்கு அதே கிரேஸ் இருந்தது ஆச்சர்யம்.


ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த ‘ராஜா ராணி’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. அஜீத்துடன் நடித்த ‘ஆரம்பம்’ படமும் ஹிட்டானது.


தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘அனாமிகா’ படத்தில் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார். இது இந்தியில் வித்யாபாலன் நடித்து பரபரப்பாக ஓடிய ‘கஹானி’ படத்தின் ‘ரீமேக்’ . இதில் நயன்தாராவுக்கு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உதயநிதி ஜோடியாக ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் நடிக்கிறார். சிம்பு படம் உள்பட மேலும் மூன்று படங்களில் நடிக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கிறார்.


காஜல் அகர்வாலை கடந்த வருடம் ரிலீசான ‘துப்பாக்கி’ படம் முன்னணி நடிகையாக்கியது. ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தில் நடித்தார். தற்போது விஜய்யுடன் மீண்டும் ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார்.


அனுஷ்கா நடித்து இந்த வருடம் ‘அலெக்ஸ் பாண்டியன்‘, ‘சிங்கம் 2’, ‘இரண்டாம் உலகம்’ படங்கள் வந்தன. இதில் ‘சிங்கம் 2’ அதிக வசூல் குவித்தது. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘ருத்ரமாதேவி’, பாஹுபலி ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்டவை.


ஹன்சிகாவுக்கு இந்த வருடம் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம் 2’ படங்கள் கைகொடுத்தன. கார்த்தி நடிக்கும் 'பிரியாணி' படம் டிசம்பர் 20ல் ரிலீஸ் ஆக உள்ளது. 'வாலு', 'அரண்மனை', 'வேட்டை மன்னன்', 'மான் கராத்தே', 'உயிரே உயிரே' என நிறைய படங்கள் ஹன்சிகாவின் கவைசம் உள்ளன.


'தலைவா'வில் விஜய் ஜோடியான அமலாபால், இப்போது ஜெயம் ரவியுடன் ‘நிமிர்ந்து நில்’ தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி’ படங்களில் நடிக்கிறார்.


த்ரிஷாவுக்கு ‘சமர்’ படம் மட்டும் ரிலீஸ் ஆனது, ஜீவாவுடன் நடித்த 'என்றென்றும் புன்னகை' டிசம்பர் 20ல் ரிலீஸ் ஆகிறது. ஜெயம் ரவியுடன் 'பூலோகம்' படத்திலும் நடித்து வருகிறார்.


'நேரம்' படத்தில் அறிமுகமான நஸ்ரியா, 'ராஜா ராணி' படத்திலும் கவனம் ஈர்த்தார். 'நையாண்டி' படம் சரியாகப் போகாவிட்டாலும் நஸ்ரியா முன்னணி நடிகையாக இருக்கிறார்.


'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் ஊதா கலரு ரிப்பனால் பிரபலமாகிவிட்டார் ஸ்ரீதிவ்யா. இப்போது 'பென்சில்'. 'வீர தீர சூரன்', 'ஈட்டி' எனும் மூன்று படங்களைக் கையில் வைத்திருக்கிறார்.


தமன்னா, ஸ்ருதி, இலியானா, சமந்தா , அஞ்சலி போன்றோருக்கு தமிழில் இந்த வருடம் படங்கள் இல்லை.

அஜித்துடன் இணையும் சிம்பு!



கௌதம் மேனன் சிம்பு, பல்லவி நடிப்பில் புதிய படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார். 'சட்டென்று மாறுது வானிலை' என்று முதலில் டைட்டில் வைத்தார்கள்.


இப்போது அந்த டைட்டில் இல்லை. ஏற்கனவே ரவிராஜ் என்பவர் அதே டைட்டிலில் படம் இயக்கி முடித்து 'யு' சான்றிதழ் பெற்றுள்ளார்.


இதனால் வேறு டைட்டில் வைக்கலாம் என்று தீவிர யோசனையில் இருக்கிறார் இயக்குநர் கௌதம்.


இதற்கிடையில், பிப்ரவரியில் தொடங்க இருக்கும் புதிய படம் குறித்து அஜித்திடம் பேச கௌதம் சென்றிருக்கிறார்.


'சிம்புவும் இந்தப் படத்தில் நடிக்கட்டுமே' என்று அஜித்தே முன்வந்து கேட்டதோடு, உடனே சிம்புவுக்குப் போன் போட்டு பேசினாராம்.


சிம்பு, அஜித்துடன் நடிக்க உடனே ஓ.கே.சொல்லிவிட்டாராம். இப்போது சிம்புவுக்கான போர்ஷனை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார் கௌதம்.


சிம்பு தல பேசிய உற்சாகத்தில் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார் . ஆர்யா, விதார்த்தைத் தொடர்ந்து இப்போது சிம்புவும் அஜித் படத்தில் நடிக்கிறார்.

ரஜினி பிறந்தநாளில் ஹீரோவாகும் ஜூனியர் விஜயகாந்த்!



விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் ஹீரோ ஆகிறார்.


விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரன், பி.ஈ. ஆர்க்கிடெக்ட் படித்து வருகிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கிறார்.


பிரபாகரன் ஆரம்பத்தில் சினிமா ஆசையில் இருந்தார். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.


இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசையிலும் ஆர்வத்திலும் இருந்து வருகிறார்.


சண்முக பாண்டியனின் திரையுலக அறிமுகம் அனைத்து தரப்பினரும் வரவேற்கும் வகையில் இருக்க வேண்டும் என்று விஜயகாந்தும், பிரேமலதாவும் விரும்பினார்கள்.


இதற்காக அவர்கள் தனது மைத்துனர் சுதீஷுடன் சேர்ந்து, சண்முக பாண்டியனுக்காக கதை கேட்க ஆரம்பித்தார் விஜயகாந்த்.


நல்ல கதை கிடைத்திருக்கிறதாம். படத்துக்கு 'சகாப்தம்' என டைட்டில் வைத்திருக்கிறார்கள். ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ல் விஜயகாந்த் தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருக்கிறார்.

இன்பம் எங்கே?


இன்பமாக வாழவே எல்லாரும் விரும்புகின்றனர். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர் என்று யாரும் இருக்க முடியாது. அதே போல் துன்பத்திலேயே துவண்டு போனவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. எனவே இன்பத்தின் முடிவில் துன்பமும், துன்பத்தின் எல்லையின் இன்பமும் இருக்கும். இரவு, பகல், மேடு, பள்ளம், உயர்வு தாழ்வு, மேல், கீழ் என்று வருகின்ற இணைகள் இவை.


ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் இன்னொருவருக்குத் துன்பம் தருகிறது. பாகற்காய் பொதுவாகக் கசக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிக்கு "இனிக்கிறது".


ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் எல்லாருக்கும் இன்பம் தர வேண்டுமல்லவா? விளையாட்டுப் பொம்மை குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சியளிக்கிறது. குமரப் பருவத்தில் விளையாட்டுப் பொம்மை மகிழ்ச்சியளிக்குமா? இன்று மகிழ்ச்சியளிக்கும் பொருள்களோ நாளை துன்பம் தரும் சூழலை உருவாக்கிட வாய்ப்பு உண்டு. எனவே இன்பம் உலகியல் பொருள்களில் இல்லை.


சில நேரங்களில் நமக்குத் துன்பம் உண்டாகிறது. நாம் விரும்பிய பொருள் கிட்டவில்லை. உலகியல் ஆசை நிறைவேறவில்லை. துன்பத்தால் மனம் இடிந்து போய் விடுகிறது. உடல் பிணியாலும், பொருள் இன்மையாலும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவராலும் ஒவ்வொரு பிரச்சினை உண்டாகிறது. பிரச்சினை தொடர் கதையாகிறது.


நாம் இன்பம் அடைய நாமே காரணம் என்று மார்தட்டுகிறோம். ஆனால் துன்பம் வந்தால் எதிரே இருப்பவர் தான் காரணம் என்று கருதுகிறோம்.


"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்றார் சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார். இதனால் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்குப் பிறர் காரணம் அல்லர். நாமே தான் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே தான் பாரதியார் "துன்பம் நெருங்கி வந்த போதும் - நாம் சோர்ந்து விடலாகாது பாப்பா" என்று எச்சரிக்கை செய்கிறார்.


பிரச்சினைகள் தாம் இன்ப துன்பத்திற்குக் காரணம், பிரச்சினை ஏதும் இல்லாவிட்டால் வாழ்க்கை ஒளிமயமாகும் என்று பலர் கருதுவர். பிரச்சினை யாருக்குத்தான் இல்லை? சிலர் தமக்கு ஏற்பட்ட பிரச்சினையை எண்ணி எண்ணி பயந்து சிறு விவகாரத்தைப் பூதாகரமாக்கி அலைந்து திரிவர்.


எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என அமைதி அடைய வேண்டும். அடுத்தடுத்து வரும் அலைகள் போல் பிரச்சினை வந்து கொண்டேதான் இருக்கும். சில நேரங்களில் தீவிரமாக இருக்கும். பின்னர் அழுத்தம் குறைந்து போகும். நாம் வருந்தும் வரை பிரச்சினையின் தாக்கம் இருக்கும். புயலுக்குப்பின் அமைதி, என்பது போல் பிரச்சினையின் முடிவில் நிறைவு உண்டாகும்.


ஒரு மனிதனுக்கு பகைவன் இன்னொரு மனிதன் மட்டும் அல்லன், பிரச்சினை, பதற்றம், அச்சம், அருவருப்பு, அவநம்பிக்கை போன்ற தீய பண்புகளும் தாம்.


இப்படிப்பட்ட பகைவர்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். தொடர்ந்து நாமும் போரிட்டு இப்பண்புகளை வெற்றி கொள்ள வேண்டும். இச்செயலிலும் உள்ளார்ந்த மகிழ்ச்சி உண்டு. பிரச்சினை இல்லா வாழ்வு சுவைக்காது. இறந்து விட்ட பிணத்திற்குத்தான் பிரச்சினை ஏதும் இல்லை.


நாம் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நமக்கு அனுபவம் என்ற பாடத்தைப் போதிக்கவே வருகின்றன. சிற்பி தேர்ந்தெடுத்த கல்லில் உளியால் செதுக்குகிறான். தேவையான பகுதியைச் செதுக்கி வைத்துத் தேவையில்லாத பகுதியை நீக்குகிறான். சாதாரண கல் சிற்பியின் சிற்றுளி பட்டுச் சிந்தை கவரும் அழகுச் சிலையாய்ப் பரிணமிக்கிறது. எனவே துன்பங்களால் ஒருவன் பட்டை தீட்டப் பட்ட வைரமாய் - பக்குவமாய் பதப்படுகிறான்.


உலகத்தை இன்பமாகவோ துன்பமாகவோ அமைத்துக் கொள்ள மனிதனுடைய மனப்பக்குவம் காரணமாகிறது.


இரண்டிலும் பாதிக்கப்படாத சமநிலை பெற வேண்டும். உலகியல் வாழ்வில் பொதுநல நாட்டம் கொண்டவன் எப்போதும் இன்பத்தில் இருப்பான். சுயநல நோக்கம் கொண்டவன் பெறுவது துன்பமே. நாம் பிறருடன் உறவு ஏற்படுத்தப் பாலம் அமைப்போம். எனவே துன்பத்தைக் கண்டு கலங்காமல் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று இறுமாப்புடன் எதிர் கொள்வோம்.

இது என்ன?


படத்தை பார்த்ததும், கிளைக்கு, கிளை தாவிக்கிட்டும், உர்... உர்... உர்... என்று உறுமிக் கொண்டு இருக்கும் குரங்குகள் என்றுதானே நினைத்தீர்கள்,


அவை, குரங்குகள் இல்லை.


ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளில் வளரும் மிக அபூர்வமான, "மங்கி ஆர்கிட்' எனப்படும் மலர்கள்.


இயற்கையிடம் தான் எத்தனை, ஆச்சரியங்களும், அழகும் கொட்டிக் கிடக்கின்றன!




உங்கள் சந்தோஷம் மற்றவரின் அமைதி!



குடும்பத்தில் தலைமைப் பெண்ணின் ஆரோக்கியமான மனநிலையும், அடிப்படை சந்தோஷமும் மிகவும் முக்கியம்.


"ஒரு குடும்பத்தின் மொத்த ஆரோக்கியம் மிகவும் நல்லபடியாய் அமைய, அந்த வீட்டு தலைமைப் பெண்ணின் ஆரோக்கியமான மனநிலையும், அடிப்படை சந்தோஷமும் மிகவும் முக்கியம்" என்று லக்னோவில் உள்ள மனநல மருத்துவர் கூறியதாக ஒரு ஆங்கில மாத இதழில் வெளியாகி உள்ளது. இந்த மருத்துவரின் கூற்று எந்த அளவு உண்மை என்பது, ஒவ்வொரு வீட்டின் ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும், மற்ற பெண்களுக்கும் மிக நன்றாகவே தெரியும்.


திருமணத்திற்குத் தயாராகும் பெண்கள், மனதளவில் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நினைத்தே "டென்ஷனாகி" விடுகின்றனர். புகுந்த வீட்டில் கணவனின் மனநிலையை அறிந்து கொள்வது முதல் தொடங்கி, அனைவறிடமும் நன்மதிப்பு பெற வேண்டும் என்ற கவலை; தனது எண்ணங்களுக்கு அவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற கவலை; இதில் சிக்கல் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என்ற மன உளைச்சல்... இப்படி கவலைப்பட்டே தனது முதல் 10 ஆண்டு மணவாழ்க்கையை பாழடித்து விடும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.


இடையே ஒன்றோ, இரண்டோ குழந்தைகளும் பிறந்து விடுகின்றன. அவற்றை சரியான முறையில், நோய் நொடி இல்லாமல் வளர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, வீட்டில் உள்ள வேலைகளே முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொள்ள, வேலைக்குச் செல்லும் பெண்களின் பாடு, "கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு..." என்று மற்றவர் பரிதாபப்படும் நிலைதான்.


தினமும் ஒரே மாதிரியான பிரச்னைகள்; அவற்றை தனி ஒருத்தியாக தீர்க்க முடியாத சூழ்நிலை. தானாகவே முடிவெடுத்துச் செயல்படுத்த முடியாத நிலையில், வேதனைக்கு ஆளாகி, தன் சுய சிந்தனையை இழந்து, வீட்டிலும், அலுவலகத்திலும் தனது முழுத்திறனை வெளிக்காட்ட முடியாமல் தவியாய் தவிக்கிறாள்.


இப்படிப்பட்டவர்களிடம் நல்ல மனநிலையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் எங்கே எதிர்பார்ப்பது?

ஆனால், அது தான் முக்கியம். வேகமாக ஓடிப் போய்விட்ட 10 ஆண்டு கால இடைவெளியில், அவளையும் அறியாமல், அவளது உடல் ஆரோக்கியத்தை முற்றிலுமாய் தொலைத்து விட்டு, மெதுவாய் தன் நிலைக்கு திரும்ப வரும் நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு, அதற்காகவே கவலைப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இதிலிருந்தெல்லாம் மீள்வது எப்படி? எப்போதும் சந்தோஷமும், ஆரோக்கியமுமாய் இருப்பது எப்படி? உங்கள் முடிவுகள் மீது மற்றவர் கருத்துக்களைத் திணிக்க இடம் கொடுக்காதீர்கள்.


இந்த அறிவுரையுடன், வேறு சில விஷயங்களை நீங்கள் நனைவில் கொள்ள வேண்டும். பிறந்த வீட்டின் மரியாதையைக் காப்பாற்றுவது, புகுந்த வீட்டின் அன்பைப் பெறுதல், சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நிலைநிறுத்திக் கொள்ளுதல், சிறந்த நிர்வாகத் திறனுடன் செயல்படுதல், குழந்தைப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் என்பதுவரை திருமணத்தின் போதே தீர்மானித்து வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் வளரும்போது, மணவாழ்க்கையின் வேறு பரிணாமத்தைப் பார்க்கும் காலம் துவங்கி விடும்.


இந்த கால கட்டத்தில் அதிக பொறுப்புகள் சேரும். அவற்றோடு சேர்ந்து நம் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் நாம் ஆரோக்கியத்தைக் கோட்டை விட்டால், மீளவே முடியாத நிலை ஏற்படும்.


ஆரோக்கியமான மனநிலையை வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டியது:


* நன்றாக, திருப்தியாகச் சாப்பிடுங்கள். காலை உணவு தொடங்கி, இரவு சாப்பாடு வரை அனைத்தும் திருப்தியாய் அமைவதாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.


* சத்தான உணவு வகைகளைச் சாப்பிடுவது அவசியம்.


* மனதுக்கு தெம்பும், தைரியமும் அளிக்கும் நில்ல புத்தகங்களை, இதிகாசங்களை, பிரச்சனையிலிருந்து உங்களை மீட்டும் தன்னம்பிக்கைத் தொடர்கள் கொண்ட புத்தகங்களைப் படியுங்கள்.


* சுய பச்சாதாபத்தைத் தூக்கி எறிந்து விட்டு, உங்களை நம்பி உங்கள் குடும்பத்தினர் உள்ளனர் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.


* உங்கள் உணர்வுக்கு யாரும் மதிப்பு கொடுப்பதில்லை என்ற வீணான கற்பனைகளுக்கெல்லாம் மூட்டை கட்டிவிடுங்கள். ஏனெனில், உங்கள் முகத்தில் ஓடும் சந்தோஷம் தான் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அமைதியாக வாழ வைக்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.