Sunday 15 September 2013

எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு சகாப்தத்தின் முடிவு!



'பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்' என்று சொல்வார்கள். பரணியில் பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைத் தரணியை ஆளத்தான் செய்தார். நான்மாடக்கூடலிலே தோன்றி எட்டுத் திக்கும் தமிழோசை பரவச் செய்த இசை இமயம் டிசம்பர் மாதம் 12ம் தேதி அதிகாலையில் உலகை விட்டு நீங்கியது.


கடும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.


தேனினும் இனிய காந்தக் குரலால் கோடானுகோடி ரசிகப்பெருமக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்ற நாதஜோதி அணைந்துவிட்டது. இசைவானிலும், திரைவானிலும் சுடர்விட்டுப் பிரகாசித்த அந்த ஒளி இனி ஒலிவடிவில்தான் உலா வரும்.


ராகம், தானம், பல்லவி எல்லோரும் பாடுவார்கள். ஆனால் ராகம் பாடி ஈட்டிய பெருஞ்செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும், சமூகசேவைக்கும் கொடுத்த ஒரே இசைக்கலைஞர் எம்எஸ். சுப்புலட்சுமிதான். இதற்காகத்தான் இவருக்கு மாக்சேசே விருது தரப்பட்டது.


1916ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் சண்முக வடிவு அம்மாளுக்கும் சுப்பிரமணிய அய்யருக்கும் மகளாகத் தோன்றியவர் எம்.எஸ். தாயார் புகழ்பெற்ற வீணைக் கலைஞர். எம்.எஸ்.ஸின் முதல் குரு அவர்தான். ஆரம்ப காலத்தில் அம்மாவின் வீணைக் கச்சேரிகளில் பாடி வந்தார் எம்.எஸ். 1926ல் வெளியிடப்பட்ட ஒரு எல்.வி. இசைத்தட்டில் 'மரகத வடிவும் செங்கதிர் வேலும்' என்னும் பாடலில் சண்முகவடிவின் வீணையும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாட்டும் இணைந்து வெளிவந்தது. தி ட்வின் ரிகார்டிங் கம்பெனி இதை வெளியிட்டது. இதுதான் இவரது முதல் இசைத்தட்டு.
எம்.எஸ்.ஸிற்கு சக்திவேல் பிள்ளை என்ற அண்ணனும், வடிவாம்பாள் என்று ஒரு தங்கையும் இருந்தனர். மதுரை சக்திவேல் பிள்ளை ஒரு மிருதங்கக் கலைஞர். தங்கை எம்.எஸ்.ஸின் கச்சேரிகளுக்குப் பலமுறை இவர் மிருதங்கம் வாசித்திருக்கிறார். 


புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை மிருதங்கத்தில் ஜாம்பவான். எம்.எஸ்.ஸின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களுள் அவரும் ஒருவர். 1935ல் தட்சிணாமூர்த்தி அவர்களின் மணிவிழாவில் எம்.எஸ்.ஸின் கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிதான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது எம்.எஸ்.ஸுக்கு. 


அதே ஆண்டு மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன், எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியது அவரது மிகச் சிறந்த கச்சேரிகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது. இதன் பிறகுதான் தென்னிந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் எம்.எஸ்.ஸிற்கு அழைப்பு வரத் தொடங்கிற்று. 

அரங்கேற்றம் 

 

மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி அரங்கில் சண்முகவடிவு அம்மாள் வீணைக் கச்சேரி செய்து கொண்டிருந்தார். வாசிப்பை திடீர் என நிறுத்திவிட்டு அருகில் இருந்த தனது மகள் 10 வயது சிறுமி சுப்புலட்சுமியை அழைத்தார் அம்மா சண்முகவடிவு ('குஞ்சம்மாள்' என்று அழைப்பார் அவர்) அருகில் மகளை அழைத்த அம்மா ''குஞ்சம்மாள் நீ பாடு'' என்று சொல்ல, உடனே சிறுமி குஞ்சம்மாள் மேடைக்கு விரைந்து வந்து ஹிந்துஸ்தானி மெட்டில் அமைந்திருந்த 'ஆனந்த ஜா' என்னும் மராட்டிப் பாடலைச் சிறிதும் அச்சமின்றிப் பாடி வந்திருந்தோரின் பாராட்டைப் பெற்றார். இதுதான் இவரின் முதல் இசைக்கச்சேரி. அன்று எம்.எஸ்.ஸின் அரங்கேற்றம் நடைபெற்றபோது அப்பள்ளியில் அப்போது ஆசிரியராக பணிபுரிந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் இளைய சகோதரர் ஸ்ரீனிவாசனும் அங்கிருந்தார். 

இசை ஆசிரியர்கள்


அம்மாவைத் தொடர்ந்து சேத்தூர் சுந்தரேச பட்டர் என்பவரிடம் பல வருடங்கள் இசை பயின்றார் எம்.எஸ். திருமணத்திற்குப் பிறகு செம்மங்குடி சீனிவாச அய்யர். எம்.எஸ்.ஸின் பிரதான குருவாக திகழ்ந்தார். கடையநல்லூர் வெங்கட்ராமன் அவரது கடைசி குரு. அன்னமாச்சரியா கீர்த்தனங்களை டி. பசுபதி, நேதநூரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் கற்றுக் கொண்டார். தோடி ராக ஆலாபனை மட்டும் டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையைக் கேட்டுக் கற்றுக் கொண்டார். அதுபோல் முத்துசாமி தீட்சதரின் கீர்த்தனைகளை உச்சநீதிமன்ற நீதிபதி டி.எல். வெங்கட்ராம ஐயரிடம் கற்றுக் கொண்டார். பாபநாசம் சிவனும், மைசூர் வாசுதேவாச்சாரும் தாங்கள் இயற்றிய பாடல்களைத் தாங்களே எம்.எஸ்.ஸுக்கு கற்றுக் கொடுத்தனர். 

வெள்ளித் திரைத் தாரகை


இயக்குநர் கே. சுப்பிரமணியம் (பிரபல நாட்டியமணி பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) அவர்களின் 'சேவா சதனம்' என்னும் திரைப்படத்தில் முதன்முதலில் பாடி நடித்தார் எம்.எஸ். 1938ல் இப்படம் வெளியானது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு 'சகுந்தலை' என்னும் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். மிகப்பெரிய வெற்றிப் படமான இதை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கினார். 

1941ல் வெளியான 'சாவித்திரி' என்கிற படத்தில் எம்.எஸ். நாரதராக நடித்ததும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்பு 1945ஆம் ஆண்டில் தீபாவளியன்று வெளியானது 'மீரா'. மீரா படத்தையும் சகுந்தலை படத்தைத் தயாரித்த நிறுவனமே தயாரித்தது. இப்படத்தில் எம்.எஸ். பாடிய அனைத்துப் பாடல்களும் பெரிய வெற்றி பெற்றன. 'காற்றினிலே வரும் கீதம்...' கேட்டவர்களை உருக வைத்தது. படத்திற்கான வசனத்தை எழுதியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியும், பாடல்களைப் பாபநாசம் சிவனும் எழுதியிருக்கிறார்.
மீரா இந்தியில் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. எம்.ஜி.ஆரும், எம்.எஸ். சுப்புலட்சுமியும் சேர்ந்து நடித்த ஒரே படம் மீரா ஆகும். அதுமட்டுமல்ல, மீராதான் எம்.எஸ். நடித்த கடைசிப்படமும்கூட.

திருமணம்

'சேவா சதனம்' படப்பிடிப்பு கிண்டியில் ஒரு ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு அடிக்கடி வருவார் டி.எஸ். சதாசிவம். எம்.எஸ்.- சதாசிவம் சந்திப்பு இங்கே தொடங்கி, திருமணத்தில் முடிந்தது. 1940ல் சென்னையிலுள்ள திருநீர்மலை கோயிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. 

கல்கியின் விமர்சனம்

அக்காலத்தில் ஒரு திரைப்படத்தைப் பற்றி கல்கி அவர்கள் பாராட்டி விமர்சனம் எழுதினால் அந்தப் படம் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். அவரது எழுத்துக்களுக்கு மகத்தான சக்தி இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் சத்தியாகிரகம் செய்து கல்கி மாயவரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனந்தவிகடன் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக அப்பேது கல்கி பணியாற்றி வந்தார். மாயவரம் சிறையிலிருந்த ஜாமீனில் வெளிவந்த கல்கியை அழைத்துச் சென்று 'சகுந்தலை' படத்தைப் பார்க்க சதாசிவம் ஏற்பாடு செய்தார். அந்தப் படத்திற்கான விமர்சனத்தைக் கல்கி எழுதினார். அது எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் ஒரு படிக்கல்லாக அமைந்தது முக்கியமானது. 

தமிழ் இசைவளர்ச்சியில் எம்.எஸ்.ஸின் பங்கு

ராஜாஜி, டி.கே. சிதம்பரநாத முதலியார், ராஜா சர். அண்ணாமலை செட்டியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர். கே. சண்முகம் செட்டியார் போன்றோரால் தொடங்கப்பட்ட தமிழ் இசை இயக்கத்திற்குப் பக்கபலமாக நின்றவர்கள் சுப்புலட்சுமி - சதாசிவம் தம்பதியினர். 

மகாகவி சுப்பிரமணிய பாரதியார், சுத்தானந்த பாரதியார், வள்ளலார், ராமலிங்க அடிகளார், பாபநாசம் சிவன் போன்ற எண்ணற்ற அருளாளர்களின் தமிழ்ப் பாடல்களை மேடைதோறும் பாடி, ரசிகர்கள் மனதில் பதியவைத்த பெருமை எம்.எஸ். சுப்புலட்சுமியைச் சாரும். 

சென்னை தமிழ் இசைச் சங்கம், எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு 'இசைப் பேரறிஞர்' பட்டம் சூட்டி கெளரவித்தது. இவர் பாடிப் பிரபலமடைந்த தமிழ்ப் பாடல்களுள் 'வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்', 'குறையொன்றுமில்லை', 'நீ இறங்கா எனில் புகலேது', 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா', 'வாழிய செந்தமிழ்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

ஐக்கிய நாடுகளில் பாடிய குயில்

1966ஆம் ஆண்டு அக்டோ பர் 23ம் தேதி ஐ.நா. சபையில் எம்.எஸ் பாடினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலக அமைதியை வலியுறுத்தி மூதறிஞர் ராஜாஜி எழுதிய 'மே தி லார்ட் பர்கிவ் அவர்சின்ஸ்' என்னும் ஆங்கிலப் பாடலை எம்.எஸ். சுப்புலட்சுமி ஐ.நா. சபையில் பாடினார். இப்பாடலுக்கு ஹாண்டல் மேனுபல் இசையமைத்துள்ளார். 

காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஐ.நா. நிகழ்ச்சிக்காகப் பிரத்யேகமாக இயற்றிய 'மைத்ரீம் பஜத' என்ற உலக நன்மைக்கான பிரார்த்தனை ஸ்லோகத்தையும் எம்.எஸ். பாடினார். அந்நிகழ்ச்சிக்கு வி.வி. சுப்ரமணியம் வயலின், டி.கே. மூர்த்தி மிருதங்கம், டி.எம். வினாயகராம் கடம் வாசித்தனர். 

மகாத்மா காந்தி முதல் அப்துல் கலாம் வரை அத்தனை தேசத்தலைவர்களும் எம்.எஸ். அவர்களின் ரசிகர்கள். 

மகாத்மா காந்தியின் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு பலமுறை பஜனைப் பாடல்களை எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியுள்ளார். இன்றைக்கும் அகில இந்திய வானொலியில் காந்தி அஞ்சலிக்கு முன்னால் ஒலிக்கும் 'வைஷ்ணவ ஜனதே' மற்றும் 'ரகுபதி ராகவ ராஜாராம்' போன்ற மகாத்மா காந்திக்குப் பிடித்த பாடல்கள் எம்.எஸ். அவர்களால் பாடப்பட்டவையே. 

சுப்ரபாதம்

வேங்கடேச சுப்ரபாதம் திருப்பதி திருமலையில் தினமும் கோவில் நடை திறக்கும் போது பாடப்படுகிறது. இறைவனைத் துயில் எழுப்பும் இந்த தெய்வீகப் பாடலை 'பிரதிவாதி பயங்கரம்' அண்ணங்கராச்சாரியார் என்னும் வைணவப் பெரியவரின் குரலில்தான் திருப்பதி கோயிலில் ஒலிபரப்பி வந்தனர். 

எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய வேங்கடேச சுப்ரபாதம், ஆதிசங்கரரின் பஜகோவிந்தம், முத்துசாமி தீட்சதரின் 'ரங்கபுர விஹாரா' என்னும் கீர்த்தனை ஆகியவற்றை எச்.எம்.வி. நிறுவனம் இசைத்தட்டாக வெளியிட்ட போது அது உலக அளவில் பிரபலமாயிற்று.

முதலில் எம்.எஸ்.ஸின் சுப்ரபாதத்தை அங்கீகரிக்காமல் இருந்த திருப்பதி தேவஸ்தானம், 1975லிருந்து இதனை ஒலிபரப்ப ஆரம்பித்தது. 

கணவரின் மறைவு

1997ம் ஆண்டு நவம்பர் மாதம் சதாசிவம் மரணம் அடைந்தார். அதன்பிறகு எம்.எஸ். கச்சேரிகள் செய்வதை நிறுத்திக்கொண்டார். கடந்த ஏழு வருடங்களாக அவர் மேடைக் கச்சேரிகள் செய்யவில்லை. 2002ம் ஆண்டு சென்னை மியூசிக் அகாதெமி இவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கியது. உடல்நல குறைவால் அவ்விரதை எம்.எஸ். நேரே சென்று பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் எம்.எஸ். அவர்களின் வீட்டிற்கே நேரிடையாகச் சென்று விருதை அவருக்கு அளித்து கெளரவப்படுத்தினார். 

1997ம் ஆண்டு ஜுன் மாதம் சென்னை மியூசிக் அகாதெமியில் எம்.எஸ். பாடினார். அதுதான் அவர் கடைசியாகப் பாடிய கச்சேரி!
அவரது குரலும், இனிய இசையும் இந்தப் பார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் நிலைத்து நிற்கும் அமரத்துவம் பெற்றவை என்பதில் ஐயமில்லை! 

இந்திய மொழிகள் அத்தனையிலும் இவர் பாடியுள்ளார் என்பதும் ஒரு சரித்திரம். இதற்கு முன் யாரும் இதைச் செய்ததில்லை.
செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்று மகாகவி பாரதி பாரதமாதாவிற்குப் பாடினானே, அந்த வரிகள் எம்.எஸ்ஸுக்கும் பொருந்தும் அல்லவா! 

செப்டம்பர்19-இல் நடிகை டி.பி.ராஜலட்சுமி நூற்றாண்டு விழா: முதல்வர் உத்தரவு



தென்னிந்தியாவின் முதல் நடிகை மற்றும் பெண் இயக்குநர் டி.பி. ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழாவை செப்டம்பர் 19-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் 1911-ஆம் ஆண்டு பிறந்தவர் டி.பி.ராஜலட்சுமி. தனது இளமைக்காலம் முதலே நாடக்குழுவில் நடித்து வந்த ராஜலட்சுமி, எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "பவளக்கொடி', "கோவலன்' ஆகிய நாடகங்களில் கதாநாயகியாக நடித்து பேரும் புகழும் பெற்றார். தனது 18-ஆம் வயதில்  "கோவலன்' என்னும் திரைப்படத்தில் மாதவி வேடத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் முதன் முதலாக கால் பதித்தார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான "காளிதாஸ்' திரைப்படத்தில் டி.பி.ராஜலட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜம் டாக்கீஸ் என்ற தனது சொந்த பட நிறுவனம் மூலம் "மிஸ் கமலா' என்ற திரைப்படத்தை தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். 


தன்னுடன் திரைப்படங்களில் நடித்த டி.வி.சுந்தரம் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 20 ஆண்டுகாலம் திரைப்படத்துறையில் புகழ் பெற்று விளங்கிய இவர் 1964- ஆம் ஆண்டு காலமானார். ஒரு நடிகையாக மட்டுமின்றி இயக்குநர், எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரராக விளங்கும் டி.பி.ராஜலட்சுமிக்கு செப்டம்பர் 19-ஆம் தேதி நூற்றாண்டு விழா நடத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

எச்.ஐ.வி.,யை அழிக்க புதிய மருந்து: அமெரிக்க ஆய்வாளர்கள் சாதனை!






அமெரிக்க ஆய்வாளர்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும், புதிய மருந்துப் பொருளை, கண்டுபிடித்து உள்ளனர்.


எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான, எச்.ஐ.வி., வைரசை அழிப்பதில், மருத்துவர்களும், மருந்துப் பொருள் தயாரிப்பாளர்களும், இன்னும் தங்கள் ஆய்வில், 100 சதவீத வெற்றியை அடையவில்லை என்றே கூறலாம். அமெரிக்காவில் உள்ள, மின்னிசோட்டா பல்கலைக்கழக மருந்துப்பொருள் தயாரிப்புத் துறை ஆய்வாளர்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும் மருந்துப் பொருளைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் ஆராய்ச்சியின் பலனாக, எச்.ஐ.வி.,யைக் கட்டுப்படுத்தும், இரு திரவ மருந்துகளின் கலவையில் புதிய மருந்துப் பொருளைக் கண்டுபிடித்து உள்ளனர்.


ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ளதாவது: புற்று நோயைக் கட்டுப்படுத்த, "டெசிடேபைன், கெம்சிடேபைன்' என்ற இரு திரவ மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துப் பொருட்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளன. இந்த மருந்துகள், நோயாளிகளுக்கு, ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இதனால், பெரும் நேர விரயமும், பொருட் செலவும் ஏற்படுகிறது.




 இந்த சிகிச்சை பெறும் நோயாளிகள், சிகிச்சை முடியும் வரை, எவ்வித வேலையிலும் ஈடுபட முடியாமல், படுக்கையிலேயே இருக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால், இந்த இரு மருந்துப் பொருட்களையும் ஒன்றாக்கி, மாத்திரை வடிவில் புதிய மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், நோயாளிகளின், பொருள் மற்றும் நேரம் மிச்சப்படுத்தப்படும். எனினும், முதற்கட்ட சோதனைகளுக்குப் பின்னரே, நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படும். புதிதாக உருவாக்கப் பட்டுள்ள மருந்து, சோதனையில் வெற்றி பெற்றால், எய்ட்ஸ் நோய்க்கான மருந்துப் பொருள் தயாரிக்கும் ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல் கல்லாய் அமையும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

‘தமிழக அரசு பாட்டில் குடிநீர் விற்பனை முயற்சியை கைவிட வேண்டும்!’ – பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை!



“தண்ணீருக்கு விலை வைப்பது என்பது, நம் உயிரை விலை பேசுவது போன்றது. எனவே, தமிழகத்தில் தண்ணீர் விற்பனையை அனைத்து வகைகளிலும் தடை செய்து, தண்ணீர் பொதுச்சொத்து என்று சமூகஉரிமையை நிலைநாட்டி தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும்.”என்று பூவுலகின் நண்பர்கள் குழு கேட்டுக் கொண்டுள்ளது.


இது குறித்து அக்குழு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில்,”மனிதனின் அடிப்படைத் தேவைகளில் தண்ணீரும் முதன்மையானது, உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. ஆரோக்கியமான, சுத்தமான தண்ணீர் மழையாய் பொழிந்து, ஆறுகளின் வழியாக காலம்காலமாக நமக்குக் கிடைத்து வருகிறது. வரலாற்றில் நாகரிகங்கள் தோன்றி வளரக் காரணமாக இருந்தது பெரும் நதிகள்தான்.


நம் நாட்டில் எதிரி வீடுகளுக்குச் சென்றாலும்கூட, முதலில் நமக்குக் கொடுத்து உபசரிப்பது ஒரு குவளை தண்ணீர்தான். மேலும், ஒருவரிடம் ஒரு குவளை தண்ணீர் வாங்கிக் குடித்தாலும், அவருக்கு நாம் நன்றிக் கடன் பட்டவர்களாகி விடுகிறோம்.

sep 15 amma mineral water spot

 


காலங்காலமாக தண்ணீர் பந்தல் அமைத்தும், வீட்டின் முன்புறம் மண்பானை வைத்தும் தண்ணீரை இலவசமாக தந்தது நமது பண்பாட்டின் பெருமைமிகு அடையாளம். சுவாசிக்கும் காற்றைப் போல பெரும்பாலான அடிப்படைத் தேவைகள் பொதுச்சொத்தாக, அனைவருக்கும் இலவசமாக கிடைத்து வருவது போலவே தண்ணீரும் கடந்த நூற்றாண்டு வரை இலவசமாகவே கிடைத்து வந்தது. ஆனால், தண்ணீர் இன்றைக்கு விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டுவிட்டது.


பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர்தான் பாதுகாப்பாக, சுகாதாரமாக இருக்கும், அதற்கு 20 ரூபாய் கொடுப்பது தப்பில்லை என்றொரு மனப்பான்மை வலிந்து திணிக்கப்பட்டுவிட்டது. ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு ரூபாய்க்கும் குறைவான காசில் அரசிடம் இருந்து வாங்கி, அதை 10 ரூபாய், 20 ரூபாய் என்று விற்கும் மிகப் பெரிய பகல் கொள்ளை நிகழ்ந்து வருகிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக தமிழக அரசே பாட்டில் குடிநீரை விரைவில் அறிமுகப்படுத்தப் போகிறது.


கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட தேசிய தண்ணீர் வரைவு கொள்கையும் (2012) தண்ணீரை விற்பனைப் பண்டமாக முன்னிறுத்துகிறது. மக்களின் உழைப்பு, அறிவை பயன்படுத்தி நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு நேர்மாறாக, மீண்டும் உருவாக்க முடியாத இயற்கை ஆதாரங்களை கூறுபோட்டு விற்பதையே மத்திய, மாநில அரசுகள் செயல்திட்டமாகக் கொண்டுள்ளன. காற்று, தண்ணீர், காடுகள் போன்ற அனைத்தும் மக்களின் பொதுச் சொத்து, இவற்றை மத்திய, மாநில அரசுகள் விற்பனைப் பண்டமாக்கி விற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக, தண்ணீரை விற்பனைப் பண்டமாக மாற்றுவது மிகப் பெரிய ஆபத்து.


அனைவருக்கும் சுகாதாரமான தண்ணீரை வழங்க வேண்டியது அரசின் கடமை. வீட்டு குடிநீர் இணைப்புக்கு ஏற்கெனவே நாம் பணம் செலுத்தி வருகிறோம். ஆனால், எல்லா நாளும் தண்ணீர் விநியோகிக்கப்படுவதில்லை. அப்படியே விநியோகிக்கப்பட்டாலும், அந்தத் தண்ணீர் தரமானதாக இல்லை.
இதற்குக் காரணம் கழிவுநீரை சுத்திகரிப்பது, கால்வாய்களைக் கட்டி நகர்ப்புற கழிவுநீரை வெளியேற்றுவது போன்ற செயல்களை மேற்கொள்ளாமல் நம் வாழ்வின் ஆதாரமாக இருக்கும் ஆறுகளை மாசுபடுத்தி, சுற்றுச்சூழலும் நீராதாரங்களும் அழிந்து போக அரசே நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருப்பதுதான்.


தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னையில் அனுமதி பெறாமல் செயல்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை சில மாதங்களுக்கு முன் மூடியபோது, தமிழ்நாடு பேக்கேஜ்டு குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் ஒட்டுமொத்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை 3 நாள்களுக்கு மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை முறைப்படுத்துவதற்கு எதிராகத்தான், அந்த அமைப்பு செயற்கையான ஒரு குடிநீர் பஞ்சத்தை உருவாக்கி, தன் வலிமையைக் காட்டியது. இதன்மூலம் தெரிய வருவது என்னவென்றால், இவர்கள் நினைத்தால் எதிர்காலத்தில் நமக்குத் தேவையான தினசரி குடிநீரை தடுக்க முடியும், நினைத்த விலையை வைத்து விற்க முடியும், எப்படி வேண்டுமானாலும் நம்மை பிளாக் மெயில் செய்ய முடியும்.


தண்ணீரை விற்பனைப் பண்டமாக்குவதன் மூலம், நிலத்தடி நீர் கண்மண் தெரியாமல் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் சரியும். ஏற்கெனவே, விவசாயம், வீட்டுப் பயன்பாடுகளுக்கு பெருமளவு ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டுவிட்டதால், நிலத்தடி இயற்கை ஊற்றுகள் வற்றி விட்டன, நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிட்டது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நம் நாட்டில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் விவசாயிகள், பெருமளவு மக்கள் ஏழைகள். ஏற்கெனவே பணவீக்கம், விலைவாசி ஏற்றம் போன்றவற்றால் இவர்கள் வாழ்க்கை நடத்துவது கடினமாக உள்ள சூழ்நிலையில், தண்ணீர் போன்ற அடிப்படை தேவையை விற்பனைப் பண்டமாக்கி, காசுக்கு விற்பனை செய்வது அவர்களை கூடுதல் நெருக்கடியிலேயே தள்ளும்.

தண்ணீரை விற்பனைப் பண்டமாக மாற்றுவது என்பது, இது போன்ற வேறு பல பெரும் பிரச்சினைகள் உருவாகக் காரணமாக இருக்கும். எனவே, அதை முதல் நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.



ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் குடிநீர் தொட்டியுடன், நீர் சுத்திகரிப்பு கருவியை பொருத்தினாலே போதும், மக்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீர் கிடைத்துவிடும். இதற்கு பெரும் முதலீடும் தேவையில்லை, பணிச் சுமையும் பெரிதாக இருக்காது.


கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தண்ணீர் சேகரிப்புக்கு அது போன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து இப்போது யோசிக்கலாம். இயற்கையாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் பெருமளவு தண்ணீரை சேகரித்து பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராயாமல், பன்னாட்டு, உள்நாட்டு வியாபாரிகளுக்கு தண்ணீர் விற்பனையை திறந்து விடுவதால், நமது தண்ணீர் தேவையும் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகின்றன.


இந்த விவகாரத்தில், நாம் கவனம் செலுத்த வேண்டிய முதல் விஷயம் “தண்ணீர் என்பது பொதுச்சொத்து, அதை விற்பதற்கு அரசுக்கு உரிமையில்லை” என்பதுதான். உலகின் பல நாடுகளில் தண்ணீர் பொதுச்சொத்தாகவே இருக்கிறது. ஐ.நா. சபையும் தண்ணீர் வழங்குவதை, அடிப்படை மனித உரிமையாகக் குறிப்பிட்டிருக்கிறது.


தண்ணீருக்கு விலை வைப்பது என்பது, நம் உயிரை விலை பேசுவது போன்றது. எனவே, தமிழகத்தில் தண்ணீர் விற்பனையை அனைத்து வகைகளிலும் தடை செய்து, தண்ணீர் பொதுச்சொத்து என்று சமூகஉரிமையை நிலைநாட்டி தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும்.


தமிழக அரசு, தனியார் தண்ணீர் விற்பனையை தடைசெய்ய வேண்டும். மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட தேசிய தண்ணீர் வரைவுக் கொள்கை – 2012யை திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு பாட்டில் குடிநீர் விற்பனை முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தமிழ் கலைஞ்ர்களுக்கென தனி அமைப்பு!’ – பாரதிராஜா பரபரப்பு பேச்சு!



“ஆந்திராவில் தெலங்கானா பிரச்னை நடந்து கொண்டிருப்பதால், ஆந்திர கலைஞர்கள், விழாவில் ஆட முடியாது என்று சொல்லி விட்டார்கள். தமிழ் கலைஞர்களால் அப்படி சொல்ல முடியவில்லை. நமக்கு பிரச்னைகள் இல்லையா? ஈழத் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். காவிரிப் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னை தீரவே இல்லை. கச்சத்தீவு பிரச்னை இருக்கிறது. மீனவர்கள் கூட்டம், கூட்டமாக சுடப்படுகிறார்கள். இதெல்லாம் பிரச்னை இல்லையா? தமிழர்களான நாங்களும் பிரச்னையில்தான் இருக்கிறோம். எனவே, சினிமா நூற்றாண்டு விழாவில் எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என்று சொல்ல முடியவில்லை. “என்று பாரதிராஜா வேதனையுடன் குறிப்பிடடத்தை பற்றி கோலிவுட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

sep 17 JK Enum Nanbanin  MINI
 


டிரீம் தியேட்டர் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சேரன் எழுதி, இயக்கியுள்ள “ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா முன்னிலையில் நடிகர் சூர்யா ஒலிப்பேழையை வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.
அந்த விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசும் போது,”டைரக்டர் சேரன் உணர்ச்சிகரமானவர். அற்புதமான கலைஞன். யதார்த்தமாகவும், மண்வாசனையோடும் படம் எடுக்க கூடியவர். அவரது ‘தவமாய் தவமிருந்து’ படத்தை பார்த்தபோது என்னால் இதுபோன்ற ஒரு படம் எடுக்க முடியவில்லையே என்று நினைத்து இருக்கிறேன். வாழ்க்கையை பிழிந்து படம் எடுத்து இருந்தார். 


சினிமாவில் யதார்த்தங்கள் வரவேற்கதக்கதுதான். ஆனால் பாதையை மாற்றக்கூடாது. என் தாத்தா போட்ட ஒத்தையடிப்பாதையை என் தந்தை வண்டிச் சாலையாக்கினார். நான் தார்ச்சாலை போட்டேன். என் பிள்ளை சிமெண்ட் சாலை போடுவான். அது ரப்பர் சாலை ஆகலாம். இப்படித்தான் சினிமாவில் மாற்றம் இருக்க வேண்டும்.


தமிழ் பண்பாடு கலாச்சாரத்தை விட்டு விட்டு படம் எடுக்க கூடாது. அவற்றை சார்ந்தே படங்கள் இருக்க வேண்டும்.ஆனாலும் தமிழ்த் திரையுலகில் இன்று, இளம் இயக்குனர்கள் வித்தியாசமான சிந்தனைகளுடன் படங்கள் இயக்குகிறார்கள். நாம் எந்தக் கதையை வேண்டுமானாலும் இயக்கலாம். 

ஆனால், தமிழ் மண்ணையும், கலாசாரத்தையும், நாகரீகத்தையும், பண்பாட்டையும் மறக்ககூடாது. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழக அரசும் இணைந்து நடத்த இருப்பதை அறிந்தேன். நம் உணர்வுகளை சொல்ல, நமக்கென்று தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை இல்லையே என்று நினைக்க தோன்றுகிறது.
ஆந்திராவில் தெலங்கானா பிரச்னை நடந்து கொண்டிருப்பதால், ஆந்திர கலைஞர்கள், விழாவில் ஆட முடியாது என்று சொல்லி விட்டார்கள். தமிழ் கலைஞர்களால் அப்படி சொல்ல முடியவில்லை. நமக்கு பிரச்னைகள் இல்லையா? ஈழத் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். 


காவிரிப் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னை தீரவே இல்லை. கச்சத்தீவு பிரச்னை இருக்கிறது. மீனவர்கள் கூட்டம், கூட்டமாக சுடப்படுகிறார்கள். இதெல்லாம் பிரச்னை இல்லையா? தமிழர்களான நாங்களும் பிரச்னையில்தான் இருக்கிறோம். எனவே, சினிமா நூற்றாண்டு விழாவில் எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என்று சொல்ல முடியவில்லை. 


தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கிறது. ஆனால், தமிழ் நடிகர்களுக்கு என்று சங்கம் இல்லை. தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் இல்லை. தமிழ் திரைப்பட வர்த்தக சபை இல்லை. எனவே, இதுபோன்ற அமைப்புகள் தொடங்க வேண்டும்” என்று பாரதிராஜா பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார.

கரடியும் இரு நண்பர்களும்............குட்டிக்கதைகள்



இரண்டு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து காட்டுப் பகுதியைக் கடக்க வேண்டியிருந்தது....


அவர்கள் போகும் வழியில் ...எதிரே திடீரென ஒரு கரடி வர..மரம் ஏறத்தெரிந்த நண்பன் மற்றவனை விட்டு விட்டு சட்டென்று பக்கத்தில் இருந்த மரத்தில் தாவி ஏறிவிட்டான்.


என்ன செய்வது என பயந்த மற்றவன் அப்படியே கீழே படுத்து ..மூச்சை அடக்கி செத்த பிணம் போலக் கிடந்தான்.


உயிரற்ற உடலைக் கரடி பார்க்காது என்பதற்கிணங்க ...அக்கரடி அவனிடம் வந்து மோப்பம் பிடித்து விட்டு அகன்றது.


கரடி சென்றதும் மரத்திலிருந்த நண்பன் இறங்கி..'கரடி உன்னை நெருங்கி உன் காதில் என்ன சொல்லிற்று' என்றான்.


அதற்கு மற்றவன்..'ஆபத்து காலத்தில் உன்னை உதறி விட்டு தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள மரம் ஏறிய சுயநலமிக்க நண்பர்களை நம்பாதே என்று சொல்லிற்று' என்றவாறே..அவனை விட்டு
பிரிந்து தனியே நடக்கலானான்.


ஒருவருக்கு ஆபத்து வரும் நேரத்தில் உதவுவது நண்பர்களின் செயலாக இருக்கவேண்டும். 
 

மெமரி கார்டு தன்மை, வகைகள் குறித்த சில தகவல்கள்!


செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் உள்ளன. செக்யூர் டிஜிட்டல் பார்மட் நான்கு வகை கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO. இதோ அதை பற்றி மேலும் நீங்கள் அறியாத பல தகவல்கள்....

எஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை. எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையே இவை சார்ந்திருக்கின்றன. எஸ்.டி. கார்ட்கள் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அவை standard SD (32 x 24 millimeters), miniSD (20 x 21.5 millimeters) and microSD (15 x 11 millimeters). SD, SDHC and SDXC என்று குறிப்பிடுகையில், நாம் எஸ்.டி. கார்ட்களின் எந்த தன்மையைக் கொண்டு வேறுபடுத்துகிறோம்? எஸ்.டி. கார்ட் வளர்ச்சி, கெபாசிட்டி திறன் ஆகியவையே இந்த மூன்றின் வகைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

ஒரு எஸ்.டி. கார்டின் வேகம் அதிகமாக இருந்தால், வீடியோ பதிவின் போது, டேட்டா அதிகமாக கைப்படுத்தப்படும். என்னும் தரத்தில் வேகம் இருந்தால், நொடிக்கு 312 எம்.பி. தகவல்கள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும். இதனால், நிச்சயம் நல்ல தெளிவான வீடியோ பதிவு ஏற்படும். எஸ்.டி. கார்ட் வரையறையில், அதன் உள்ளார்ந்த சி.பி.ஆர்.எம். தொழில் நுட்பம் எதனைக் குறிக்கிறது? இது Content Protection for Recordable Media (CPRM) என்று விரித்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எஸ்.டி. கார்டிலும் இந்த தொழில் நுட்பம் உள்ளது.

இதை மீண்டும் திறந்து இயக்கலாம் என்ற வகையில் உள்ளது. இதை மூடிவிட்டால், எழுதவோ, உள்ளிருப்பவற்றை மாற்றவோ முடியாது. மீண்டும் திறந்து, அழிக்கவும், மேலே எழுதவும் முடியும். எஸ்.டி. (SD) மற்றும் எஸ்.டி. எச்.சி (SDHC) கார்ட்களைக் காட்டிலும், எஸ்.டி. எக்ஸ்.சி. (SDXC) கூடுதல் கெபாசிட்டி திறன் கொண்டது. இதே போல் தான் இவற்றின் மைக்ரோ எஸ்.டி. கார்ட் வகைகளும். மிகச் சிறிய microSDXC கார்ட், microSD and microSDHC கார்ட்களைக் காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டது.

இதில் நாம் பெரிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டில், மைக்ரோ எஸ்.டி. கார்டை செலுத்தி, தகவல்களைப் படிக்க நம்மால் படிக்க அல்லது பார்க்க முடியும். SD Formatter software என்ற சாப்ட்வேர் புரோகிராமின் படி நாம் இதை பார்மேட் செய்ய வேண்டும் ஹார்ட் ட்ரைவிற்கான, டிஸ்க் மேனேஜ்மெண்ட் டூல்களை இதற்குப் பயன்படுத்தலாம். ஆனால், அவை எஸ்.டி.கார்டில் உள்ள காப்பி பாதுகாப்பு தொழில் நுட்பத்தினைக் கெடுத்துவிடலாம். ஒரு எஸ்.டி. கார்டினை எத்தனை முறை எழுதவும் அழிக்கவும் செய்திடலாம் இவற்றைத் தயாரிக்கும் தோஷிபாவின் கூற்றுப்படி, 10,000 சுழற்சிகள் வரை ஒரு எஸ்.டி.கார்டில், டேட்டாவினைப் பதியலாம் மற்றும் அழிக்கலாம். ஒரு கார்டில் ஒவ்வொரு நாளும், ஒரு முறை டேட்டாவினை முழுமையாக அழித்து எழுதினாலும், 10,000 சுழற்சிகள் மேற்கொள்ள 27 ஆண்டுகள் ஆகும்.

மந்தாரையின் மருத்துவ பயன்பாடு!

In big cities like Chennai ORCHID ikkukal leaves along the stitch used to eat rice.



சென்னை போன்ற பெரு நகரங்களில் மந்தாரை இலைகளைச் சேர்த்து ஈக்குகளால் தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு  சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச்  சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன. 

இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை  காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது.  மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும்  இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். 

மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரணத்தால்  வரும் பேதி நின்று உடல் நலம் பெறும். முக்கியமாக மந்தாரை கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள்,  ஆகியவற்றிக்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரித்து பயன்படுத்தலாம். 

மந்தாரை இலைகள் வாதநோய், கால்வலி, தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதயநோய், படபடப்பு,  ஆகியவற்றை  குணப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது. மேலும் வயிற்றுபோக்கு படுக்கையில் சிறுநீர்கழித்தல், அதிக பித்த நீரால் ஏற்படும் மலேரியா காய்ச்சல்,  பொடுகு, முடி உதிர்வதை குறைத்தல், மூலநோய் போன்ற அனைத்திற்கும் ஊமத்தையின் இலை பெரிதும் பயன்படுகிறது.    
In big cities like Chennai ORCHID ikkukal leaves along the stitch used to eat rice.

எண்ணெய் வயல் முதல் ஏடிஎம் வரை உளவு பார்க்கும் அமெரிக்காவின் ‘பறக்கும் பன்றி’ ‘மவுன நாய்க்குட்டி’


 வெளிநாடுகளின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் ஊடுருவி, ரகசிய தகவல்களை சேகரிக்கவில்லை என்று அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவாதம் கொடுத்தாலும், அதன் உளவு அமைப்பு, பிரேசில் நாட்டின் எரிவாயு கம்பெனிகளின் கம்ப்யூட்டர்களில் இருந்த ரகசிய ஆவணங்களை ‘திருடியிருப்பது’ பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 
   அமெரிக்காவின் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு ஏஜென்சி, வெளிநாடுகளுடன் ‘சைபர்’ போர் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. 

பல ரகசிய ஆவணங்களை, அந்தந்த அரசுகளின் சீக்ரட் கம்ப்யூட்டர்களில் ஊடுருவி ‘திருடுகிறது’ என்று எட்வர்ட் ஸ்னோடென் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்.  அமெரிக்க உளவு ஏஜன்சியின் முன்னாள் அதிகாரியான இவர் இப்படி ரகசிய தகவல்களை வெளியிட்டதால், அவரை நாட்டை விட்டு துரத்தியது மட்டுமின்றி, அவரை கைது செய்ய துடித்தது அமெரிக்கா. ஆனால், அவர் பல நாடுகளில் அலைந்து கடைசியாக ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார். 

  அவர் இப்போது மீண்டும் ஒரு ரகசிய ஆவணத்தை வெளியிட்டுள்ளார். பிரேசில் நாட்டின் எண்ணெய் வளங்களை சாமர்த்தியமாக சுரண்டும் வகையில், கம்பெனிகள் ஏலம் தொடர்பான சில ரகசிய ஆவணங்களை அந்த நாட்டு அரசின் ரகசிய கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் ஊடுருவி, அமெரிக்கா எடுத்து விட்டதாக ஸ்னோடென் கூறியிருந்தார். 

  லண்டனை சேர்ந்த குளோப் டிவியில் கடந்த ஞாயிறன்று,  கார்டியன் பத்திரிகையாளர் கிளென் கிரீன்வால்டு இந்த ரகசிய தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரேசில் பிரதமர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் அவரின் அமைச்சர்கள், எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பாக பெட்ரோப்ராஸ் என்ற நிறுவனம் ஆகியவற்றின் கம்ப்யூட்டர்களில் ஊடுருவி,  ஏலம் தொடர்பான  ஆவணங்களை அமெரிக்க ஏஜென்சி ‘திருடி’யிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

 ஏன் நடக்கிறது:  பிரேசில் நாடு, அமெரிக்காவுக்கு பிடிக்காத  நாடு. எண்ணெய் வளம் மிக்க நாடு. இதன் லிப்ரா எண்ணெய் வயலில் 1200 கோடி பேரல் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. அமெரிக்காவின் 2 ஆண்டுக்கான  எல்லா எண்ணெய் தேவைகளுக்கும் இது போதுமானது. இதுபோல, பெட்ரோப்ராஸ் என்ற நிறுவனம் ஏலம் விடப்பட உள்ளது. அதை தனக்கு வேண்டியவர்கள் கையில் பெற்றுத்தருவதே அமெரிக்க உளவு  அமைப்பின் எண்ணம். இதனால் தான் முக்கிய ஆவணங்களை கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் ஊடுருவி  எடுத்துள்ளது என்று புகார் எழுந்துள்ளது. 

பிரேசிலின் மொத்த எண்ணெய் வளம் 10 ஆயிரம் கோடி பேரல்கள். மேலும் புதிய எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை தன் வசம் கொண்டு வருவதே அமெரிக்காவின் நோக்கம் என்று பிரேசில் குற்றம்சாட்டுகிறது. அதற்காக, தன் உளவு வேலை மூலம், பிரேசிலில் ஏலம் எடுக்க சிலரை தயார் செய்கிறது  என்றும் அது சந்தேகிக்கிறது. 

இது தொடர்பாக பிரேசில் பிரதமர் லுலா கூறுகையில், அமெரிக்கா  மறைமுக ‘சைபர் போர்’ துவங்கியுள்ளது. பிரேசில் மட்டுமின்றி, சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் இப்படி ‘சைபர்’ போரை துவங்கி உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. எந்த ஒரு ஆவணங்களும் ரகசியமானவை என்று கூற முடியாத நிலை உள்ளது. இதை உடனே கூட்டாக எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். 

பறக்கும் பன்றி:  


அமெரிக்க உளவு  அமைப்பு மட்டும் இந்த வேலையில் இறங்கவில்லை. அதற்கு முழு துணை நிற்பது, பிரிட்டனின் ஜிசிஎச்கியூ என்ற உளவு அமைப்பு. அமெக்காவின் இந்த சைபர் உளவு வேலையில் இப்போது இரு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றுக்கு பெயர் பறக்கும் பன்றி. இன்னொன்றின் பெயர் மவுன நாய்க்குட்டி. இந்த திட்டங்களில் ஈடுபட சில தனியார் நிறுவனங்களையும் அமெரிக்க உளவு அமைப்பு நியமித்துள்ளது. 

இந்த தனியார் நிறுவனங்களுக்கு ‘சைபர்’ தில்லுமுல்லுகளில் இறங்க முழு அதிகாரம் அளித்துள்ளது. எந்த நாட்டின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளில் ஊடுருவி தகவல்களை எடுக்க வேண்டும், எந்த தகவல்கள் வேண்டும் என்று அமெரிக்க அமைப்பு சொல்லி விடும். அவற்றை இந்த தனியார் நிறுவனங்கள் சேகரித்து தரும். 

  இந்த இரு திட்டங்கள் மூலம், 212 நாடுகளின் 10,000 வங்கிகளின் ரகசிய ஆவணங்களை சேகரிப்பது முக்கிய நடவடிக்கை. ஏடிஎம்களில் பணம் எடுக்கும் தகவல்கள் போன்றவையும் இதில் அடங்கும். இந்த நாடுகளில் இந்தியாவும் உண்டு. தனிநபர் ஏடிஎம் கணக்கு வழக்குகளும் கூட இந்த ரகசிய நடவடிக்கை மூலம் அமெரிக்க உளவு அமைப்புக்கு போகிறது என்கிறார் கிரீன்வால்டு. 

ஏன் செய்கிறது அமெரிக்கா? 

* அமெரிக்காவுக்கு ‘எண்ணெய் பசி’ உண்டு. அதனால், பல நாட்டு  எண்ணெய் வளங்களை தன் வசம் வைக்கவே அதில் உளவு வேலை பார்க்கிறது. 
* அடுத்து, நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், தூதரக அதிகாரிகளின் இமெயில்கள், ரகசிய கணக்குகள். அதிலும் உளவு பார்க்கிறது. 
* இன்னொரு பக்கம், நிதி நடவடிக்கைகளை முடக்கும் உளவு வேலை. பங்கு சந்தை, நிதி நடவடிக்கைகள் தொடர்பான எல்லாவற்றையும் கண்காணிக்கிறது. 
* ஏடிஎம்களில் பணம் புழக்கம் போன்றவற்றையும் அமெரிக்க உளவு ஏஜென்சி கண்காணிக்கிறது. 
* எண்ணெய் வளம், நிதி வளம் எல்லாவற்றிலும் தன் ‘கை’ இருந்தால் எந்த நாடும் தைரியமாக எதிர்க்காது  என்பதற்காகவே இப்படி ‘சைபர்’ போரில் இறங்கியிருக்கிறது  என்பது ஸ்னோடென் குற்றச்சாட்டு. 
* பிரேசிலில் உளவு பார்த்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால், அமெரிக்கா மவுனம் சாதிக்கிறது. ஐநா தலையிடுமா என்பதே இப்போதைய கேள்வி.

நண்பனாகும் தகுதி...................குட்டிக்கதைகள்




சுண்டெலி ஒன்று .....தவளை ஒன்றுடன் ஒட்டிக் கொண்டிருந்தது.தவளையோ பெரும்பாலும் தண்ணீரிலேயே வசித்து வந்தது.....அது ஒரு நாள் சுண்டெலிக்கு ...தான் நீச்சல் கற்றுக் கொடுப்பதாகக்கூறி ...சுண்டெலியின் காலை தன் காலுடன் ஒன்று சேர்த்து கயிற்றால் கட்டிக் கொண்டது.


அப்போது மேலே பறந்த பருந்து ஒன்று இவற்றைப் பார்த்து கொத்த வந்தது.


உடனே தவளை ...சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது.தண்ணீரில் சுண்டெலி மூழ்கி மூச்சு திணறி இறந்தது...அதன் உடல் மேலே மிதந்தது...ஆனால் கால்கள் இன்னமும் தவளையுடன் சேர்த்து
கட்டப்பட்டிருந்தது....


அந்த சமயம்...தண்ணீரில் செத்த சுண்டெலி மிதந்ததைப் பார்த்த பருந்து கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது.

 
அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது.பருந்து தவளையையும் கொன்று தின்றது.

 
நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன்..அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும்.இல்லையேல் தவளைக்கு ஆன கதியே!
 

கோச்சடையானில் 2 நாளுக்கு ரூ.3 கோடி வாங்கிய தீபிகா படுகோனே...!


ரஜினியின், கோச்சடையான் படத்தில் இரண்டே இரண்டு நாள் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம் நடிகை தீபிகா படுகோனே. ரஜினியின் இளையமகள் செளந்தர்யா, தனது அப்பா ரஜினியை வைத்து இயக்குநராக அவதரித்துள்ள படம் கோச்சடையான். 3டி அனிமேஷனாக மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் படங்களான அவதார், டின் டின் பட பாணியில் தயாராகியுள்ளது இப்படம். சமீபத்தில் இப்படத்தின் முதல் டீசர் வெளியிடப்பட்டது. வெளியான இரண்டு நாளில் சுமார் 2 மில்லியன் பேர் இந்த டீசரை பார்த்து மகிழ்ந்துள்ளனர். ரஜினி இந்தபடத்தில் முற்றிலும் வித்தியாசமாக தோன்றுகிறார், அதுவும் இ‌ளமையாக காட்சியளிக்கிறார். 

இதற்கிடையே இப்படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படு‌கோனே நடித்துள்ளார். படத்தில் இவருக்கு ‌கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் ரூ.3 கோடி என தகவல் வெளியாகி இருக்கிறது. இத்தனைக்கும் இவர் நடித்தது என்னவோ வெறும் இரண்டு நாட்கள் தானாம். இருந்தும் அவர் இவ்வளவு சம்பளம் பெற்று இருக்கிறார். 
மாதகணக்கில் கால்ஷீட் கொடுத்து நடிக்கும் நடிகைகள் பலரே கோடிக்கும் குறைவாகத்தான் சம்பளம் பெறுகின்றனர். அதிலும் தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் அனுஷ்கா, சமந்தா, நயன்தாரா போன்ற நடிகைகளே ரூ.1 முதல் ரூ.1.5 கோடி தான் சம்பளம் பெறுகின்றனர். அப்படி இருக்கையில் இரண்டு நாளுக்கு, தீபிகாவுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்து இருப்பது நம்மூர் நடிகைகளை வாயடைக்க செய்துள்ளது.