Sunday 6 October 2013

களஞ்சியம் இலவச அகராதி!


இணைய இணைப்பு இல்லாமல், சிறிய பைல் ஒன்றினை இயக்குவதன் மூலம், ஆங்கிலம்- தமிழ், ஆங்கிலம்- ஆங்கிலம் மற்றும் தமிழ்-தமிழ் எனப் பல்முனை அகராதி ஒன்றை நம் டெஸ்க் டாப்பில் வைத்துப் பயன்படுத்தும் வகையில், மென்பொருள் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் ""களஞ்சியம் அகரமுதலி''. இதற்கான மூல கோப்பு கிடைக்கும் தள முகவரி 


www.ekalai.com/kalanjiyam/dowload/.
 


இந்த தளத்திற்குச் சென்றவுடன் அகராதிக்கான கோப்பாக KalanjiamDictionarySetup என்ற கோப்பு கிடைக்கிறது. இதன் அளவு ஏறத்தாழ 189 எம்.பி. ஆகும். இதனை டவுண்லோட் செய்து, பின்னர் அதன் மீது டபுள் கிளிக் செய்திட, அகராதி நம் கம்ப்யூட்டரில் பதியப்படுகிறது. அகராதியைப் பயன்படுத்த, கண்ட்ரோல் + டில்டே(கீ போர்டில் எண் 1 கீக்கு முந்தைய கீ) (Ctrl+~) கீகளை அழுத்த வேண்டும். பயன்படுத்திய பின்னர், அகராதிக் கட்டம் தாண்டி, திரையில் கிளிக் செய்தால், டாஸ்க்பாரில் அகராதி சென்று அமர்ந்துவிடும். மீண்டும் தேவை எனில், டாஸ்க் பாரில் கிளிக் செய்து பெறலாம். அல்லது மீண்டும் மேலே குறிப்பிட்ட இரு கீகளை அழுத்த வேண்டும்.


இதனைக் கணிப்பொறியில் இயக்கி வைத்துள்ள நிலையில், எந்த அப்ளிகேஷன் புரோகிராமில் உள்ள சொல்லையும் தேர்ந்தெடுத்து, உடன் கண்ட்ரோல் + டில்டே கீகளை அழுத்தினால், அகராதி திரையில் தரப்பட்டு அதற்கான பொருள் தரப்படுகிறது. எந்த நேரத்திலும், இதே கீகளை அழுத்தினாலும், அகராதியில் பொருள் தேடும் கட்டம் விரிகிறது. 



வழக்கமான இரு மொழிகளுக்கிடையேயான அகராதியாக இல்லாமல், மேலே குறிப்பிட்டபடி, பலமுனை அகராதியாக இது அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ 2 லட்சம் தனிச் சொற்கள் இருப்பதாக, இதனைத் தரும் இணைய தளம் அறிவித்துள்ளது. அத்துடன், இணைப்பு சொற்களாக, 40 லட்சம் சொற்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. 



இந்த அகராதியை இயக்கியவுடன், இதனைப் பயன்படுத்தக் கிடைக்கும் இடைமுகம் மிகவும் எளிதாகச் செயல்படும்படி அமைக்கப்பட்டுள்ளது. முதலில் எந்த அகராதியைப் பயன்படுத்தப் போகிறோம் என்பதனைத் தேர்ந் தெடுக்க வேண்டும். முன்பே குறிப்பிட்டபடி, ஆங்கிலம்-தமிழ், தமிழ்-தமிழ் மற்றும் ஆங்கிலம்- ஆங்கிலம் என மூன்று வகையான அகராதிகள் கிடைக்கின்றன.



இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பின்னர், சொல் அமைக்கும் கட்டத்தில், சொல்லை அமைக்க வேண்டும். தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் தேவை எனில், Type in Tamil என்பதில் டிக் கிளிக் செய்து, Look up என்பதற்கு அருகே உள்ள கட்டத்தில் சொல்லை அமைக்கலாம்.



 தமிழ்ச் சொற்களை உள்ளீடு செய்திட அஞ்சல்/போனடிக் எனப்படும் ஒலி சார்ந்த கீபோர்ட் முறை பயன்படுத்தப்படுகிறது. பின்னர் தேடு (Search) என்ற கட்டத்தில் கிளிக் செய்தால், கீழே உள்ள கட்டத்தில் சொல்லுக்கான அனைத்து நிலை பொருளும் தரப்படுகிறது. சொல் இலக்கணப்படி எந்த வகையைச் சேர்ந்தது (Verb/ Noun/Adjective.) எனக் காட்டப்பட்டு பொருள் தரப்படுகிறது. வலது பக்கம் உள்ள கட்டத்தில், அந்த சொல் சார்ந்த சொற்களும் தரப்படுகின்றன. 


எடுத்துக்காட்டாக, Computer என்ற சொல்லைத் தந்த போது Compute, Key, laptop, monitor, mouse, processor, type, usb ஆகிய சொற்கள் அக்கட்டத்தில் காட்டப்பட்டன.இந்த சொற்களில் ஏதேனும் ஒன்றுக்குப் பொருள் பெற விரும்பினால், இந்தக் கட்டத்தில் அதன் மீது கிளிக் செய்தால் போதும். பொருளைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெறலாம். இரண்டும் வெவ்வேறு வண்ணத்தில் தரப்படுவது, முதல் முறையாகப் பொருளைப் படிப்பவருக்கு கூடுதல் வசதியைத் தருகிறது. 


பொருள் தரும் கட்டத்தின் கீழாக, Image, Nearest, Synonyms, Antonyms என்று நான்கு டேப்கள் அமைக்கப்பட்டு ஒரு கட்டம் கிடைக்கிறது. இதில் Image என்பது தேர்ந்தெடுக்கப்பட்டால், சொல்லுக்கான படம் காட்டப்படுகிறது. 3,000க்கும் அதிகமான படங்கள் இந்த அகராதியில் தரப்பட்டுள்ளன. மேலும், ஒரு நாட்டின் பெயரை, சொல் தேடும் கட்டத்தில் அமைத்துத் தேடினால், கீழாக, அந்த நாட்டுடன் உலக வரைபடம், நாட்டின் வரைபடம், அதன் தேசிய கொடி ஆகியவை காட்டப்படுகின்றன. இது பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான ஒன்றாகும்.


இதே போல, தொழில் நுட்ப சொற்களைத் தந்தால், அது வழக்கமான அகராதியிலிருந்து தரப்படாமல், Glossary என்ற பகுதியிலிருந்து அதற்கான பொருள் தரப்படுகிறது. எடுத்துக் காட்டாக, கணிப்பொறி இயல் துறையில் வழங்கப்படும் WYSIWIG என்ற சொல்லைக் கொடுத்துப் பாருங்கள். தனியே அதற்கான விளக்கமும், தமிழில் பொருளும் கிடைக்கும்.



Nearest என்ற கட்டத்தின் கீழாக, பொருளை ஒட்டிய மற்ற சொற்களும், Synonyms என்பதன் கீழ் அதே பொருள் தரும் சொற்களும் மற்றும் Antonyms என்ற பிரிவில், எதிர்ப்பதங்களும் தரப்படுகின்றன. 



இதே போல, வினைச்சொல் ஒன்றைத் தந்தால், வலதுபுறம் கீழாகத் தரப்பட்டுள்ள கட்டத்தில், அந்த வினைச்சொல்லுக்கான இறந்த, நிகழ், எதிர்கால வினை குறிக்கும் சொற்கள் தரப்படுகின்றன. 



தமிழ்ச் சொல்லை உள்ளிட, ஒலி அடிப்படையிலான அஞ்சல் கீ போர்ட் செயல்முறை தரப்பட்டுள்ளதால் எளிதாகவும், விரைவாகவும் அனைவரும் சொல்லை இட முடிகிறது. தமிழ்ச் சொல்லைத் தந்துவிட்டு, ஆங்கிலம்- தமிழ் அகராதிப் பிரிவைத் தேர்ந்தெடுத்தால், அதற்கான ஆங்கிலச் சொற்களுடன் விளக்கம் தரப்படுகிறது. தமிழ்-தமிழ் என்ற அகராதிப் பிரிவினைத் தேர்ந்தெடுத்தால், பொருளும், சார்ந்த தமிழ்ச் சொற்களும் தரப்படுகின்றன. 



எடுத்துக் காட்டாக, கிணறு என்ற சொல்லைத் தந்த போது, தமிழ்-தமிழ் அகராதியில், அசும்பு, உறவி, குழி, கூபம், கூவல், பூவல் மற்றும் கேணி என்ற வகையில் பொருட் சொற்கள் தரப்படுகின்றன. அதே நேரத்தில், சார்ந்த ஆங்கிலச் சொற்களும் தனிக் கட்டத்தில் கிடைக்கின்றன.


ஆங்கிலம்- ஆங்கிலம் அகராதியைத் தேர்ந்தெடுத்து சொல் ஒன்றுக்குப் பொருள் பார்க்கையில், பொருளுடன், அந்தச் சொல்லை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என எடுத்துக் காட்டு வாக்கியங்கள் தரப்படுகின்றன.



எந்த சொல்லைக் கொடுத்தாலும், தேடல் கட்டத்தின் வலது மூலையில் உள்ள அம்புக் குறியினைக் கிளிக் செய்தால், சார்ந்த சொல் பட்டியல் கிடைக்கிறது. பட்டியலில் உள்ள சொல்லையும் கிளிக் செய்து பொருள் பெறலாம்.




இந்த அகராதியின் இன்னொரு தனிச் சிறப்பு என்னவெனில், நாம் உள்ளிடும் சொல்லை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கும் உள்ள வசதியினைக் கூறலாம். சொல்லை அமைத்துவிட்டு, அருகே உள்ள ஸ்பீக்கர் ஐகானில் கிளிக் செய்தால், சொல் உச்சரிக்கப்படுகிறது. தமிழ்ச் சொற்களும் சற்று வித்தியாசமாக உச்சரிக்கப்படுகின்றன. 



புதியதாக ஓர் சொல்லை இந்த அகராதியில் தேடுகையில் கிடைக்கவில்லை எனில், அதன் பொருளைத் தேடி அறிந்து, இந்த அகராதியில் உள்ளீடு செய்திடும் வசதி கொடுக்கப்பட்டிருப்பது இதன் இன்னொரு சிறப்பு. மிகச் சிரமப்பட்டு உருவாக்கி, இலவசமாக, தமிழ்ச் சமுதாயத்திற்கு, இந்த அகராதியினைத் தந்திருக்கும் கம்ப்யூட்டர் வல்லுநர் சேகர் பாராட்டுக்குரியவர். 



இவர் தன் முறையான கல்வியை 10ஆம் வகுப்போடு முடித்துக் கொண்டவர். கணிப்பொறி இயலில் ஆர்வம் இருந்ததன் காரணமாக, தானே கணிப்பொறி மொழிகளைக் கற்று, இப்படி ஒரு படைப்பினைத் தந்துள்ளார். ஆர்வம் இருந்தால், யாரும் எதனையும், கல்வி நிலையங்கள் செல்லாமலேயே படிக்கலாம் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு. நன்றியும் வாழ்த்துக்களும் சேகர்.

ஸ்ரீரங்கம் கோயில் ரகசியங்கள்!



பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது.  11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம். மற்ற திவ்யதேசங்களில் 9ஆழ்வார்களுக்கும் குறைவாகவே பாடியுள்ளனர். 108 வைணவ திருத்தலங்களில் இரண்டு, இந்நிலவுலகில் இல்லை. ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல். ஸ்ரீரங்கம் பெருமாள், பிரம்மலோகத்தில் பிரம்மதேவனால் தினமும் பூஜிக்கப்பட்டு வந்த திருவாராதன விக்ரமான பெருமாள். பூலோகத்தில் சூரிய வம்சத்தில் வந்த இட்சுவாகு என்ற மன்னன் பிரம்மன் குறித்து கடும்தவம் இருந்தான். தவத்தை மெச்சிய பிரம்மன், இட்சுவாகு வேண்டுகோள்படி தான் தினமும் பூஜித்தவந்த திருவாராதன விக்ரமான பெருமாளை வழங்கினார்.

இந்த பெருமாள் இட்சுவாகு மன்னன் முதல் ராமபிரான் வரை சூரிய குலமன்னர்கள் வழிபட்டு வந்த குலதெய்வம். திரேதா யுகத்தில் ராமாவதாரம் எடுத்த திருமால், ராவணனை அழித்தபின் அயோத்திக்கு பட்டம் சூட்ட தன்னோடு அழைத்து வந்த விபீஷணனுக்கு விடைகொடுத்து அனுப்பும்போது முன்னோர் பூஜித்த பெருமாள் விக்ரகத்தை விபீஷணனுக்கு அன்பாக கொடுக்கிறார். அதை தலையில் சுமந்தவாறு  இலங்கை புறப்பட்ட விபீஷணன் களைப்பால் ஸ்ரீரங்கத்தில் தரையில் வைக்கிறார். பின்னர் விக்ரகத்தை எவ்வளவு முயன்றும் அங்கிருந்து எடுக்கமுடியவில்லை. அப்பகுதியை ஆண்ட சோழமன்னன் தர்மவர்மன் பெருமாளையும் தொழுதுவிட்டு விபீஷணருக்கு ஆறுதல் கூறி இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் தர்மவர்மன் பெருமாள் விக்ரகத்தை சுற்றி சிறிய கோயில் எழுப்பி வழிபட்டார். பின்னர், காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோயில் மணலால் மூடி இருந்த இடம் தெரியாமல் போனது. தர்மவர்மனுக்கு பின் அவரது வழியில் வந்த கிள்ளிவளவன் காடாக இருந்த ஸ்ரீரங்கத்தில் வேட்டையாட வந்தபோது ஒரு மரத்தின் நிழலில் தங்கி இருந்த போது மரத்தில் இருந்த கிளி ஒன்று கோயில் இருந்த இடம் இது தான் என்று தெரிவிக்கிறது. அந்த கிளியின் சேவையை நினைவு கூறும் வகையில்  கோயிலில் கிளி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

கிள்ளிவளவன் பெருமாளை தொழுது மதில்சுவரும், கோபுரமும் கட்டினான். கிள்ளிவளவனுக்கு பின் வந்த சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள்,ஆழ்வார்கள், ஆச்சார்யார்களின் தொடர்பணியால் தற்போது இருக்கும் நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் உயர்ந்தோங்கி நிற்கிறது. வைணவத்தின் மையத் தலைமைச்செயலகமாக ஸ்ரீரங்கம் திகழ்ந்தது. ஸ்ரீராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் நெறிக்கு ஸ்ரீரங்கமே நிலைக்களம். சிலப்பதிகாரம், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் இக்கோயில் குறித்த வர்ணனைகள் உள்ளன. கோயில் தோன்றிய விதத்துக்கு  ஆதாரத்துடன் கூடிய கல்வெட்டு எதுவும் இல்லை. இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. கோயிலை சுற்றி 21 கோபுரங்கள் உள்ளது.

ஸ்ரீரங்கத்தில் 1961-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கின்படி 42 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்து உள்ளனர். தற்போது மக்கள் தொகை 3 லட்சத்தை எட்டி உள்ளது. கோயிலின் நாழிக்கேட்டான் வாயிலில் வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள்  உள்ளனர். உள்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி மகாவிஷ்ணுவுக்கு  உரியவனாய் முறையே சங்கு, தாமரை வடிவங்களில் சங்கநிதி, பதுமநிதி உருவங்கள் இருபக்கங்களிலும் உள்ளன. மூலஸ்தானம் மேற்கே உள்ள மேடையில் விஜயரங்கசொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை அளவில் செய்து, வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளது.

மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண்பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை. அதற்கு பதில் கோயில் பணியாளரை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோயில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம் பூசப்பட்டு(தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு  மெருகூட்டப்படுகிறது.


இத்தலத்தில் ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

கோயில் கருவறை மேலே தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. ஆண்டுதோறும் துலா மாதத்தில்(ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தப்படுகிறது. துலாமாதம் 30 நாட்களும் மூலவருக்கும், உற்சவருக்கும் சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும். கோயில் தல விருட்சம் புன்னை மரம்,  மூலவர் ஸ்ரீரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்கநாச்சியார்.

கோயில் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது திருமேனி 5வது திருச்சுற்று எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.

ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமைக்குரியது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். உயரம் 236 அடி.  13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது. 1987ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தெற்கு ராய கோபுரமே பிரதான நுழைவாயில். கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாதிருந்த தெற்குராயகோபுரம் முன்பு மொட்டை கோபுரமாக இருந்தது.  ராயர் கோபுரத்தில் திருஷ்டிபரிகாரத்திற்காக முனிக்கு அப்பனான ஸ்ரீனிவாசனை எழுந்தருள செய்தனர். நித்ய வழிபாடுகள் இன்று நடந்து வருகிறது. இந்த ராஜகோபுர வாசலை முனியப்பன் கோட்டை வாசல் எனவும் அழைக்கின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை தான் பெருமாளும், தாயாரும் பங்குனி உத்திரதினத்தன்று தாயார் சன்னதியில் உள்ள சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 2ம் பிரகாரத்தின் நடுவில் பரமபதவாசல் கோபுரம் உள்ளது. இக்கோபுர வாயில்கள் ஆண்டு முழுவதும் மூடப்பெற்றே இருக்கின்றன. வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் இதன் கதவு திறக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவை தான்.  ராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோயில் பெரிதென்பதால் பெரிய கோயில் ஆயிற்று. 7மதில்களும், எண்ணற்ற மண்டபங்களும் பெரிது.

கோபுரம் ஆசியாவிலேயே பெரிது.இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர். திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். இங்கு செய்யப்படும் தளிகைக்கு பெரிய அவசரம், வாத்தியத்திற்கு பெரிய மேளம், பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.

ஸ்ரீரங்கம் கோயில் நகைகளின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரம் தூண்கள் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டு இருக்கும். மீதமுள்ள 49 தூண்கள் வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களாக கணக்கிடப்பட்டு விழா நடைபெற்று வருகிறது.

மைசூர் தசரா திருவிழா – ஒரு பார்வை!

மைசூரில் 403-ஆவது தசரா விழா சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் சந்திர சேகரகம்பாரா இந்த விழாவைத் தொடக்கிவைத்தார்.10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, மைசூரில் அமைந்துள்ள சாமுண்டி மலை, பாரம்பரியக் கட்டடங்கள், அரண்மனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், நினைவுச் சின்னங்கள், கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சதுக்கங்கள், பூங்காக்கள், சாலைகள் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.


6 - mysore dasara
 


நவராத்திரி என்றால், மைசூர் தசரா விழாவை நினைவுக்குக் கொண்டு வராமலிருக்க முடியாது. அத்தனை உலகப் புகழ் பெற்ற பெருங் கொண்டாட்டம் இது! மைசூரில் ஆண்டுதோறும் தசரா கோலாகலமாகக் கொண்டாடப்படுவதற்கான ஆரம்பம் என்ன? 1573ம் ஆண்டு மைசூரை நான்காம் சாமராஜ உடையார் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒருநாள் இவர் தனது குல தெய்வமான சாமுண்டி தேவியை தரிசிக்கச் சென்றார். தரிசித்து முடிந்ததும் பல்லக்கில் ஏறி மைசூருக்குப் புறப்பட்டார். சிறிது தொலைவு சென்ற பின் திடீரென இடி, மின்னல், மழை என்று இயற்கை சீற ஆரம்பித்தது. 


பாதுகாப்புக்காக ஒரு பெரிய மரத்தின் அடியில் பல்லக்கை வீரர்கள் நிறுத்தினார்கள். ‘‘நாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப அருள்புரிவாய் அம்மா’’ என்று அந்த மரத்தடியிலிருந்தே சாமுண்டிதேவியை வேண்டியபடி அன்னை கோயில் கொண்டிருந்த மலையுச்சியைப் பார்த்தார். 


மழை ஒரு திரையாகி ஆலயம் தெரியாதபடி மறைத்தது. சரி, சற்றுத் தொலைவு சென்று பார்க்கலாம் என தன் வீரர்களுடன் சில அடி தூரம் மன்னர் நகர்ந்தபின், அவர் அதற்கு முன் பாதுகாப்புக்காக தங்கியிருந்த மரத்தில் இடி விழுந்து மரம் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காப்பாற்றவே அந்த இடத்திலிருந்து தேவி கோயிலைத் தெரியாமல் செய்திருக்கிறாள் என உணர்ந்த சாமராஜ உடையார், அதற்கு நன்றிக் கடனாக மைசூரின் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் கோயில் தெரியும் வண்ணம் சாமுண்டீஸ்வரிக்கு ஆலயம் எழுப்பினார். 


மகிஷாசுரனை வதம் செய்து மண்ணுலக மாந்தரைக் காத்த தேவி, இங்கு ஐம்பத்தோரு சக்தி பீட தேவிகளுள் ஒருவளாக காட்சிதருகிறாள். மகிஷன் வாழ்ந்தது இன்றைய மைசூரைச் சுற்றியுள்ள இடங்களில்தான். 


சாமுண்டி மலையில் அருளும் சாமுண்டீஸ்வரி விஜயதசமி அன்று அவனை வதம் செய்தாள். அதனால் மகிஷாசுர என்பது மறுவி மைசூர் ஆயிற்று. அதனால் தான் மைசூரில் தசரா பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில், நாகரஹோளே வனப்பகுதியிலிருக்கும் யானைகள் 70 கி.மீ. நடந்துவந்து பங்கேற்கும்.


 பலராமன், அபிமன்யு, கஜேந்திரா, கங்கா, அர்ஜுனா, சரளா, மேரி என்ற பெயர் கொண்ட யானைகள் வழக்கமாக தசராவில் கலந்து கொள்ளும். அந்த யானைகளுக்கு மக்கள் மகத்தான வரவேற்பளிப்பர். தசரா இந்திரவிழா போன்று கொண்டாடப்படுகிறது. எப்போதும் பொலிவிழக்காத மைசூரின் தசரா திருவிழா கர்நாடக கலைஞர்களுக்கும் கலைகளுக்கும் முக்கியத்துவம் தரும் பெருவிழாவாக போற்றப்படுகிறது.


இதன் முக்கிய அம்சமாய் இடம்பெறுவது ஜம்புசவாரி எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவற்றின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுகளும்தான். பலராமா எனும் மூத்த யானைக்கு தங்க முகபடாம் அணிவிக்கப்படும். 900 கிலோ எடையுள்ள தங்கக் கவசம் அணிந்து, பலராமா கம்பீரமாகக் காட்சியளிக்கும். தசரா வைபவத்திற்காக காட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட யானைகள் நகரத்தின் நெரிசல்களுக்கிடையே தினமும் 6 கி.மீ. பாகன்களின் கட்டளைக்கேற்ப நடந்துகொள்ளும். அப்போது மைசூர் வீதிகளில் ‘மைசூரு தசரா எஷ்டந்து சுந்தரா!’ (மைசூரின் தசராதான் எத்தனை அழகு!) என்ற பாடல் வீதிகளில் ஒலிக்கிறது. தசரா துவங்கும் முன் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள்.



தசரா கண்காட்சி வளாகம் அருகே, தேவராஜ அர்ஸ் மல்யுத்தப் போட்டி வளாகம் உள்ளது. மாநில அளவில் இங்கு போட்டி நடக்கும். கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆண், பெண் வீராங்கனைகள் கலந்து கொள்வர். இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படும். போட்டியின் இறுதி நாளன்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. தசரா பண்டிகையின் போது மைசூர் அரண்மனையை அலங்கார விளக்குகளால் ஜொலிக்க செய்வார்கள். மொத்தம் 98,260 பல்புகள் அலங்கார ஒளி பரப்பி ஆனந்தப் பரவசப்படுகின்றன. 



இதற்காக ஒரு மணிநேரத்திற்கு 1 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் மின் தட்டுப்பாடு நிலவுவதால், இந்த அலங்கார பல்புகளை ஒளிர செய்ய ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். 


இதன்படி டைனமோக்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய, 10 சைக்கிள்கள் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இந்த சைக்கிள்களை ஓட்டி, மின்சார உற்பத்திக்கு உதவுகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் அரண்மனையில் உள்ள எல்லா அலங்கார பல்புகளையும் ஒளிர வைக்க முடியாதுதான். 


ஆனால் குறிப்பிட்ட சில பகுதிகளை ஒளிரச் செய்ய முடியும். தினமும் அரண்மனைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் இந்த திட்டம் சுற்றுலா பயணிகள் இடையே வரவேற்பை பெறுகிறது. தசராவின்போது மைசூர் மகாராஜா கொலுதர்பாரில் அமர்ந்து அனைவரையும் ஆசிர்வதிப்பார். இனம், மதம் கடந்து மக்கள் மகிழ்வுடன் கொண்டாடும் பண்டிகை, மைசூர் தசரா. தசரா விழாவின் கடைசிநாளான விஜயதசமியன்று கண்கவரும் யானை ஊர்வலம் நடைபெறும். இதனால், மைசூர் நகரைச் சுற்றிப் பார்ப்பதற்கும் தசரா விழாவைக் கண்டுகளிப்பதற்கும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தசரா விழாக் குழுவினர் சிறப்பு ஏற்பாடு களைச் செய்கிறார்கள்.


விதவைகள் அர்ச்சகர்களாக நியமனம்: கர்நாடகாவில் அதிரடி!

மங்களூரு மாவட்டம் குத்ரோலி கோகர்நாதேஸ்வரா கோவிலில் தசரா விழாவை முன்னிட்டு கணவனை இழந்த பெண்கள் இந்திரா சாந்தி, லட்சுமி சாந்தி ஆகிய இருவர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.


7 _LADY WIDOW PRIESTS

 


கோவிலுக்குள் நுழைந்த பின் அன்னபூர்ணேஸ்வரி, ஹனுமான், நவக்கிரகங்கள், கிருஷ்ணர், சாரதா விக்ரகங்களுக்கு அவர்கள் பூஜை செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கினர். இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு மாதங்களாக பூஜை செய்யும் முறைகள் அனைத்தும் கற்றுக் கொடுக்கப்பட்டன.


இதற்கு காரணமான முன்னாள் மத்திய அமைச்சர் ஜனார்த்தன் பூஜாரி கூறுகையில், “மாறி வரும் காலத்திற்கேற்ப நாமும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். பெண்களை பூமா தேவியாக மதிக்கும் நம் நாட்டில் அவர்கள் கணவனை இழந்து விட்டால் எந்த நல்ல காரியத்திலும் பங்கு கொள்ள அழைக்காமல் புறக்கணிப்பது மூட நம்பிக்கையின் அடையாளம். இந்த வழக்கம் நாட்டிலிருந்து ஒழிய வேண்டும்,” என்றார்.மேலும் இந்த நியமனத்தை கர்நாடகாவிலுள்ள பல பெண்கள் அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.



Two widow priests perform pooja at Kudroli Temple

****************************************


For the first time in the history of any temple of the region, Sri Gokarnanatha Temple at Kudroli has appointed two widows as priests. They performed pooja to the Lord at the temple on October 6, Sunday on the auspicious occasion of Navaratri.


ஆடைக கட்டுபாட்டைக் கண்டித்து நிர்வாண போராட்டம் நடத்தும் மாணவிகள் – ஹங்கேரி நியூஸ்!

ஹங்கேரி நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஜீன்ஸ், குட்டை பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் பேராசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.



6 - hungary_naked_students
 


ஹங்கேரியில் புடாபெஸ்ட் நகரில் இருந்து 170 கிமீ தொலைவில் உள்ளது கசோபோவார் நகரம். இங்கு உள்ள பல்கலைக்கழக நிர்வாகம் மாணவ, மாணவிகளுக்கு புதிய ஆடை கட்டுபாடு விதித்தது. அக்டோபர் 1ம் தேதி முதல் வகுப்பறைகளுக்கு மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், மினி ஸ்கர்ட், டீ ஷர்ட் அணிய கூடாது. அதிக மேக் அப் போட்டு கொள்ள கூடாது உள்பட பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. பல்கலை நிர்வாகத்தின் இந்த புதிய உத்தரவுக்கு மாணவ, மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தங்களது பேராசிரியை தலைமையில் ஆடை கட்டுபாட்டை கண்டித்து வகுப்பறைக்கு நிர்வாணமாக வந்து பாடம் படித்தனர். நிர்வாகம் தனது விதிகளை தளர்த்தும் வரை இந்த போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதனால் பல்கலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


மேலும் மாணவ, மாணவிகள் நிர்வாணமாக வகுப்பறைகளில் பங்கேற்ற புகைப்படங்கள் உள்ளூர் நாளேடுகளில் வெளியானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எதிர்ப்பு பெரிதானதை அடுத்து மாணவர்களுடன் பல்கலை நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.


Students strip down to underwear to protest university dress code

*****************************************


 Students and a professor at a university in southern Hungary have attended class naked to protest a new dress code introduced by the institution’s president.


'பேராசை பெரு நஷ்டம் ' (நீதிக்கதை)




 
 
கந்தன் என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் குடிசையில் வாழ்ந்து வந்தான்.வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாததால்...அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.


இந்நிலையில் ஒரு நாள் அவன் ஆண்டவனை நோக்கி ...'இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்...இது இப்படியே நீடித்தால்....வறுமை தாங்காது...நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை' என வேண்டினான்.


உடன் இறைவன் நேரில் தோன்றி....அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார்.உடன் அந்த வாத்து ஒரு பொன் முட்டை இடும் என்றும்...அதை அன்றன்று அவன் விற்று தன் வாழ்நாளைக் கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.


வாத்து தினம் முட்டையிட ...அவர்கள் வாழ்வு தினமும் இனிதாகக் கழிந்தது.


ஒரு நாள் கந்தனின் மனைவி அவனிடம் 'தினம் தினம் இது பொன் முட்டையிட்டு அதை விற்று நாம் பிழைக்கிறோம்.அதற்கு பதில் இதை அறுத்து அதன் வயிற்றில் உள்ள மொத்த பொன் முட்டைகளையும் எடுத்து விற்று நாம் பெரிய பணக்காரராக ஆகிவிடலாமே' என்றாள்.


கந்தனும் அவளது பேச்சைக் கேட்டு..அந்த வாத்தை பிடித்து அதன் வயிற்றைக் கிழித்தான்.ஆனால் அதன் வயிற்றில் ஏதும் இல்லை....மற்ற வாத்துக்களைப் போலவே இருந்தது.


முட்டாள் கந்தனும்,மனைவியும் தினமும் அடையும் லாபத்தை விட்டு ஒரே நாளில் பணக்காரராகும் பேராசையுடன் செயல்பட்டதால் இருந்ததையும் இழந்தனர்.


' பேராசை பெருநஷ்டம் '.
 

நிம்மதியான வருமானத்துக்கு வழிகாட்டும் நீளப்புடலை!!





காய்கறி சாகுபடி என்றாலலே மூட்டைக் கணக்கில் ரசாயன உரத்தையும், லிட்டர் கணக்கில் பூச்சிக்கொல்லிகளையும் கிடைக்கும் என்று விவசாயிகள் பலரும் எண்ணி வருகின்றனர். அதிலும் பந்தல் காய்கறிகள் என்றால் சொல்லவே வேண்டாம். ‘அதுக்கெல்லாம் யாரு பண்டுதம்  பார்க்கறது”  என்று ஒதுங்கிப் போகும் விவசாயிகள்தான் அதிகம்.


இந்நிலையில் இயற்கை இடுபொருட்களைக்கூட தயாரித்து உபயோகப்படுத்தாமல் எரு, கடலைக்கொடி, கொளுஞ்சி ஆகியவற்றை மட்டுமெ பயன்படுத்தி புடலை சாகுபடி செய்து மனம் நிறைவான மகசூலை எடுத்து வருகிறார். மயிலாடு துறைக்கு அருகே உள்ள சிங்கான் ஒடையைச் சேர்ந்த பாஸ்கரன்.


“ ஆரம்பத்துல நான் கடலை வியாபாரம்தான் பாத்துக்கிட்டு இருந்தேன். அதுல பெருசா வருமானம் கிடைக்காததால விவசாயம் பண்ணிப் பாக்கலாம்னு 100 குழி (33 சென்ட் ) நிலத்தை குத்தகைக்கு எடுத்து, புடலங்காயை நட்டு வெச்சேன். ஒரளவுக்கு வருமானம் கிடைக்கவே, புடலங்காய் விவசாயத்தையே தொடர ஆரம்பிச்சுட்டேன். விவசாயத்துக்கு வந்து இப்ப பதினாறு வருஷமாச்சு, குத்தகை நிலத்துல விளைஞ்ச புடலங்காயை வித்துக் கிடைச்ச வருமானத்துல, கொஞ்சம் கொஞ்சமா சேத்து வெச்சு ஆறு வருசத்துக்கு முன்ன ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன்.


நான் வாங்கின நிலம் கடலுக்குப் பக்கத்துல இரக்கறதால, ஒரு குளத்தை வெட்டி அதுல ஊறுற தண்ணியைத்தான் பாசனத்துக்காகப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். இது மணல் பாங்கான நிலம். வருஷம் முழுக்க நிலத்தை சும்மா போடாம, இந்த நிலத்துக்கேத்த, வருஷம் முழுக்க நிலத்தை சும்மா போடாம, இந்த நிலத்துக்கேத்த, கடலை, வெள்ளரி, கொத்தவரை, பாகல், நீளப்புடலைனு மாத்தி மாத்தி வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். ரெண்டு வருஷமாதான் இயற்கை விவசாயத்தக்கு மாறியிருக்கேன். ஆனா, பஞ்சகவ்யா, அமுதக்கரைசலனு எதையும் தயாரிச்சுப் பயன்படுத்தறது இல்லை. எரு கடலைக் கொடி, கொளுஞ்சிச் செடி இது மூணை மட்டுமே வெச்சுதான் முழு வெள்ளாமையும் செய்றேன். புடலையில் காய்ப்பு ரொம்ப நல்லாவே இருக்குது. எப்பவும் சித்திரைப் பட்டத்துல அரை ஏக்கர்லயும், தை பட்டத்துல கம்மியாவும்தான் சாகுபடி செய்வேன்” என்று முன்னுரை கொடுத்த பாஸ்கரன் பத்து சென்ட் நிலத்தில்புடலை சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்த பாடத்தை ஆரம்பித்தார்.


பொதுவாக, நீளப்புடலையின் வயது ஏழு மாதம். சில இடங்களில் மண் வாகைப் பொறுத்து வயது மாறுபடலாம். உப்பு மற்றும் காரத்தன்மை அதிகமில்லாத, தண்ணீர் வளம் உள்ள எல்லா நிலமும் புடலைக்கு ஏற்றது. புடலையை சித்திரை மற்றம் தை பட்டம் இரண்டிலும் நடவு செய்யலாம். பத்து சென்ட் நிலத்தையும் களைகள் நீங்கும்படி ஒரு அடி ஆழத்துக்கு கொத்திவிட்டு, 21 அடி நீளம் 7 அடி அகலத்தில் பாத்தி எடுக்க வேண்டும். பாத்தியை ஒட்டி நீளவாக்கில் ஒன்றரை அடி அகலத்தில் வாய்க்கால் எடுக்க வேண்டும்.



ஒவ்வொரு பாத்தியின் மையத்திலும் நேர் வரிசையில் மூன்று மூன்று குழிகள் எடுக்க வேண்டும். நீளவாக்கில் குழிக்கு குழி 7 அடி இடைவெளி விட்டு எடுத்தால் சரியாக அமையும். குழியின் அளவு ஒன்றரை அடி சதுரம் ஒன்றரை அடி ஆழம் இருக்க வேண்டும். பத்து சென்டில் நிலத்தின் வாகைப் பொறுத்து அறுபது குழிகள் வரை எடுக்க முடியும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கூடை எரு, அரைக் கூடை மேல் மண் ஆகியவற்றைக் கலந்து நிரப்ப வேண்டும். பின், அதில் தண்ணீர்விட்டு ஒரு நாள் முழுவதும் ஆற வைக்க வேண்டும்.



மறுநாள், குழியின் மையத்தில் ஒரு அங்குல ஆழத்தில் ஒரு விதையை விதைத்து, அந்த விதைக்கு நான்கு பக்கமும் அரையடி இடைவெளியில் பக்கத்துக்கு ஒன்றாக நான்கு விதைகளையும் விதைக்க வேண்டும். அதாவது ஒரு குழிக்கு ஐந்து விதை என்ற கணக்கில் விதைக்க வேண்டும். பின் வாழைச் சருகு அல்லது தென்னை மட்டையால் குழியை மூடி வைத்து, தொடர்ந்து மூன்று நாட்கள் பூவாளியால் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன்பிறகு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்ற வேண்டும். பூவாளியால் தண்ணீர் ஊற்றுவது சாத்தியப்படா விட்டால், விதைகள் முளைத்து வரும் வரை, கொஞ்சமாகத் தண்ணீர் கட்டிக் கொள்ளலாம்.


விதைத்த 8-ம் நாள் முளைத்து வரும். அந்த சமயத்தில் மூடாக்கை அகற்றிவிட்டு, ஒரு தண்ணீர் கட்ட வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். 25-ம் நாளுக்கு மேல் கொடி படரத் தொடங்கும். அந்த சமயத்தில் கொடிக்கு இடையூறு இல்லாமல் ஒவ்வொரு குழியிலும் பத்தடி உயரமுள்ள மூன்று சவுக்குக் குச்சிகளை ஊன்றி கொடிகளை இதில் இழுத்துச் சுற்றிவிட வேண்டும். இது கொடி படர்வதற்காக. பிறகு பத்தடி நீளம் உள்ள ஒதியன் மர போத்துக்களை ஏழடிக்கு ஏழடி இடைவெளியில் இரண்டடி ஆழத்துக்கு குழியெடுத்து ஊன்ற வேண்டும். இது பந்தல்காலுக்காக என்பதால் உறுதியாக இருக்க வேண்டும். ஒதியன் மரங்களின் மேல்பக்கத்தை சவுக்குக் குச்சிகளால் குறுக்கும் நெடுக்கமாக இணைத்து, கயிறு அல்லது பனை நார் மூலம் கட்ட வேண்டும். அவற்றின் மேல், ஆற்றில் மண்டிக் கிடக்கும் கட்டுக் கொடியைச் சேகரித்து இரண்டாகப் பிளந்து காய வைத்து, தண்ணீரில் நனைத்து பந்தல் பின்ன வேண்டும். இந்தப் பந்தல் ஒரு வருடம் வரை அப்படியே இருக்கும். இது கிடைக்காதவர்கள், வழக்கமான முறையில் கல்தூண், கம்பிகளை வைத்து பந்தல் போட்டுக் கொள்ளலாம்.


30 ம் நாளுக்கு மேல் பூவெடுக்க ஆரம்பித்த உடன், பக்கவாட்டில் கிளை அடிக்கும் தேவையற்றக் கொடிகளைக் கிள்ளிவிட வேண்டும். 55-ம் நாளில் வேரைச் சுற்றி உள்ள களைகளை அகற்றி, கொடியின் அடிபாகத்தில் இருந்து ஒன்றரை அடி இடைவெளியில் கொடியைச் சுற்றி உரக்குழிக்காக கொஞ்சம் பள்ளம் பறிக்க வேண்டும். அதில் ஒரு குழிக்கு மூன்று கூடை எரு, பத்து கிலோ காய்ந்த கடலைக் கொடி, 10 கிலோ காய்நத கொளுஞ்சி இலை ஆகியவற்றைப் போட்டு மூட வேண்டும். வேறு உரம் எதுவுமே தேவையில்லை. 60-ம் நாளுக்கு மேல் பிஞ்சு எடுக்கும். பிஞ்சு எடுத்த ஐந்தாவது நாளுக்கு மேல் சுருளும் காய்களுக்கு மட்டும் அடியில் கல்லைக் கட்டிவிட வேண்டும். நீளப்புடலையில் பெரிய அளவில் நோய், பூச்சித்தாக்குதல் இருக்காது. அப்படியே வந்தாலும், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. 70-ம் நாளுக்கு மேல் காய்கள் பெரிதாகி அறுவடைக்குத் தயாராகிவிடும்.


சாகுபடி பாடத்தை முடித்த பாஸ்கரன், வருமானத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.


“பறிக்க ஆரம்பிச்சுதுல இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள்னு எழுபது தடவை காய் பறிக்கலாம். அதாவது, 140 நாட்கள் வரை பறிக்கலாம். ஆரம்பத்துல ஒரு பறிப்புக்கு 40-ல் இருந்து 50 காய்கள் வரை கிடைக்கும். அதுக்கப்புறம் படிப்படியா அதிகரிச்சு, அஞ்சாவது பறிப்புக்கு மேல ஒரு பறிப்புக்கு 150 காய்கள் வரை கிடைக்க ஆரம்பிச்சுடும். ஒவ்வொரு காயும் ஏழிலிருந்து பத்தடி வரை நீளமும் ஒரு கிலோ வரை எடையும் பத்தடி வரை நீளமும் ஒரு கிலோ வரை எடையும் இருக்கும். சராசரியா ஒரு பறிப்புக்கு 70 காய்னு வெச்சுக்கிட்டாலே, மொத்தமாக 4,900 காய்கள் வரை கிடைக்கும். ஒரு காய் ஆறு ரூபாய் வரை விலை போகுது. சராசரியாக அஞ்சு ரூபாய்ன வெச்சுக்கிட்டா 24,500 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும். செலவெல்லாம் போகபத்து சென்ட் நிலத்துல 17 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் “. என்றார், மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு
பாஸ்கரன் 
மயிலாடு துறை 
சிங்கான் ஒடை, அலைபேசி: 93645-29720

மருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி!




We used to fry the cabbage plays an important role. We realize that a lot of cabbage, one of the benefits of knowing.



நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி  நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும்  ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது.

இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும். இதில் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும்  மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது.  குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது.  ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும்.

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை அதிகளவு கொண்டுள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை  ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம்  என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில்  குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.



இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.  முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப்  வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.



பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.  நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முட்டைகோஸை நீரில்  போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும்.  இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

ஆனந்த ரயில்கள் - சுற்றுலாத்தலங்கள்!


    ஆனந்த ரயில்கள்
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
ஆனந்த ரயில்கள்
 
ரயில் பயணம் ஆனந்தமே. பாரம்பரியமிக்க ரயில்களில் பயணம் செய்வது பேரானந்தம். பெருமையும் கூட. இந்தியாவில் அப்படி பெருமைக்குரியவை டார்லிஜிங் இமாலயன் ரயில், நீலகிரி மலைரயில் மற்றும் கல்கா- சிம்லா ரயில்கள். காரணம், இவை மூன்றும் யுனெஸ்கோ அமைப்பால் உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டவை.
 
* டார்லிஜிங் இமாலயன் ரயில்:
 
மேற்குவங்க மாநிலம் சிலிகுரி- டார்ஜிலிங் மலைப்பாதையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இது அழகாக, பொம்மைபோல் இருப்பதால் இருப்பதால் டாய் டிரெய்ன் என்றும் அழைக்கிறார்கள். இமயமலை அடிவாரத்தில் உள்ள சிலிகுரியில் புறப்பட்டு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,200 மீட்டர் உயரத்தில் உள்ள டார்ஜிலிங்கை அடைகிறது. பயணதூரம் 86 கி.மீ.
 
குட்டி குட்டி பெட்டிகளை பழைமை வாய்ந்த நீராவி என்ஜின் இழுத்துச் செல்வதைப் பார்க்கும்போதே பரவசம் தொற்றிக்கொள்ளும். இந்த ரயில்பாதை1879 - 1881ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியதாம். இது முதலில் சரக்குபோக்குவரத்துக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போது சிப்பாய்களையும் ஆயுங்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகே பயணிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
 
சிறப்புக்குரிய டார்ஜிலிங் இமாலயன் ரயில் 1999-ம் ஆண்டில் யுனெஸ்கோவால் இந்தியாவின் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட 2வது ரயில் ஆகும். (முதல் ரயில் ஆஸ்திரியாவின் ஸெம்மரிங் ரயில்).
 
* நீலகிரி மலைரயில்:
 
தமிழகத்தில் கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் நீலகிரி மலைரயில் இயக்கப்படுகிறது. 1845ம் ஆண்டில் ரயில்பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1899ம் ஆண்டில் போக்குவரத்து தொடங்கியது. மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளத்தின் நடுவே பல்சக்கரம் அமைத்துள்ளனர். பல்சக்கரங்களை பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது.
 
மேட்டுப்பாளையம் - குன்னூர் வரை நீராவி என்ஜினும் பின்னர் டீசல் என்ஜினும் பயன்படுத்தப்படுகிறது. பயணதூரம் 46கி.மீ.தான் என்றாலும் பயணநேரம் சுமார் ஐந்தரைமணி நேரமாகும். வழியில் 208 வளைவுகள், 16குகைகள், 250 பாலங்கள் உள்ளன. எங்கு திரும்பினும் பசுமை, நீரோடை, காட்டு மிருகங்கள் என இயற்கைமயம் மனதைத் தாலாட்டும்.
 
நீலகிரி மலைரயில் 2005ம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
 
* கல்கா- சிம்லா ரயில்:
 
இமயமலை அடிவாரத்தில் உள்ள குளுகுளு ஜிலுஜிலு நகரம் சிம்லா. இமாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகர். கல்கா நகரத்தில் இருந்து சிம்லாவுக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டதன் பின்னணி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயருக்கு சிம்லாமீது ஒரு மோகம் உண்டு. காரணம், அங்கு நிலவும் குளுகுளு சீதோஷ்ண நிலை.
 
அதனால் பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைக்கால தலைநகராக சிம்லாவை மாற்றிக்கொண்டனர். ராணுவத்தின் தலைமை அலுவலகத்தையும் சிம்லாவில் அமைத்தனர். இதற்காக போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான் கல்கா- சிம்லா ரயில்பாதை அமைக்கப்பட்டது. 1903ம் ஆண்டு முதல் ரயில்போக்குவரத்து தொடங்கியது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,076 மீட்டர் உயரத்தில் உள்ள சிம்லாவுக்கு ரயிலில் செல்வது சுகமான சூப்பரான அனுபவம்.
 
கல்கா - சிம்லா ரயில் 2008ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
 

ஆனந்த ரயில்களில் உங்களது ஆனந்தப் பயணம் எப்போது?

சிங்கமும்..ஈ யும்..(நீதிக்கதை)




ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது.அது தனது பலத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திடம் அடக்கமாய் இருந்து வந்தன.
இந்நிலையில் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.
அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன்..நகங்களால் பிறாண்டுவேன்' என்றது.
அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம்.ஆனால் நான் பயப்பட மாட்டேன்.இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் பிறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.
சிங்கம் கோபத்துடன் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் மூக்கிலும்,முகத்திலும் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.
ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே பிறாண்டிக் கொண்டது.
சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.
அப்போதுதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை சங்கடப் படுத்தி விட்டதே என..உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது என உணர்ந்தது.
இதைத்தான் வள்ளுவரும்..

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து

என்றார்.
(பொருள்- உருவத்தால் சிறியவர்கள் ஆனாலும் யாரையும் கேலி செய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே)

மோடி vs ராகுல்!





பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், திக்விஜய் சிங் உட்பட காங்கிரசின் மூத்த தலைவர்கள் ராகுலின் தலைமையில் பணி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மோடி, ராகுல் இருவரின் பலம், பலவீனம் பற்றிய அலசல்

க்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் இருக்கின்றன. ஆனால் எல்லாக் கட்சிகளும் அதற்குள் வரிந்து கட்டிக்கொண்டு தயாராகத் தொடங்கி விட்டன.  பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்து விட்டது.  அத்வானி உட்பட சில பா.ஜ.க. தலைவர்கள் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் தற்போது பகிரங்கமாகவே மோடியை ஆதரித்துப் பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சியோ, ‘தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் தங்கள் கட்சிக்கு இல்லை’ என்று சொன்னாலும், அதன் பிரதமர் வேட்பாளர் யார் என்று ஊகிப்பது அத்தனை கடினமானதல்ல.

மோடியை பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கும் முன்பே, கடந்த ஆண்டு (2012) டிசம்பர் 10-ஆம் தேதியன்றே 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை ராகுல் வழி நடத்துவார், ‘அவருக்கு வெகு விரைவில் ஒரு முக்கியப் பதவி காத்திருக்கிறது’ என காங்கிரஸ் அறிவித்துவிட்டது. அந்த அறிவிப்பிலேயே  2014 வரை மன்மோகன் பிரதமராகத் தொடர்வார் எனச் சொன்னதன் மூலம் அடுத்த பிரதமராக மன்மோகன் நீடிக்க வாய்ப்பில்லை எனவும் சூசகமாக உணர்த்தியுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்கும் ‘பிரதமர் பதவிக்குப் பொருத்தமான நபர் ராகுல்காந்தி, அவர் தலைமையின் கீழ் பணி செய்ய நான் தயாராகவே உள்ளேன்’ என்று அண்மையில் செப்டம்பர் 8-ஆம் தேதி ரஷ்யாவில் ஜி-2 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு தாயகம் திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். செப்டம்பர் 13-ஆம் தேதி சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றோர் அடுத்த பிரதமர் ராகுல் என்பதைப்போல பேசியிருக்கிறார்கள்.
சுசில்குமார் ஷிண்டே, திக்விஜ சிங் உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ராகுல் பிரதமர் ஆவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளனர். எனவே பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது சொல்லாமலே உணர்த்தப்பட்டு விட்டது.

சரி, பிரதமர் பதவிக்குப் போடியிடவுள்ள நரேந்திர மோடி, ராகுல் இருவரின் பலம், பலவீனம் பிரதமர் ஆவதற்கான தகுதி, பிரதமராவதற்குத் தடையாக உள்ளவை எவை?

நரேந்திர மோடி

கல்வித் தகுதி : அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம்.

பலம் : டீக்கடை பணியாளராக வாழ்க்கையைத் துவக்கியவர் என்பதால் அடித்தள மக்களின் வாழ்க்கையை அனுபவப் பூர்வமாக அறிந்தவர். இளம் வயதிலிருந்தே அமைப்பு சார்ந்து செயல்பட்டு வருவதால், ஒர் அமைப்பைக் கட்டுவது, வளர்ப்பது, வலுப்படுத்துவது போன்ற நுட்பங்களை அறிந்தவர்.  தொடர்ந்து 4 முறை ஒரு மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றிய நிர்வாக அனுபவம். ஊழல் குற்றச் சாட்டுகளுக் குள்ளாகாதது.  மாநில அரசியலில் வளர்ந்ததால் இந்திய அரசமைப்பில் மாநிலங் களுக்குள்ள முக்கியத்துவம் பற்றிய உணர்வு, விரைவாக முடிவெடுக்கும் திறன், மேடைப் பேச்சுக்களால் கூட்டத்தை வசீகரிக்கும் தன்மை, சமூக வலைத்தளங்கள், இணையம், லேசர் காட்சிகள் என நவீனத் தொழில்நுட்பத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சாதுர்யம். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர், அரசியலில் வளர்த்தெடுக்க குடும்பம்/வாரிசு இல்லாதிருப்பது.

பலவீனம் : தன்னிச்சையாக முடிவெடுக்கும் autocratic leader  என வர்ணிக்கப்படுபவர். மத்திய அரசில் இதுவரை ஒரு எம்.பி.யாகக்கூட பதவி வகித்த அனுபவம் இல்லை. ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் கொண்ட ஒரு மாநிலத்தை நிர்வகிப்பதுபோல, பல்வேறு மொழிகள், பொருளாதார வேறுபாடு கொண்ட மாநிலங்கள், ஜாதி, மதம் கொண்ட நாட்டை நிர்வகிக்க முடியுமா என்ற சந்தேகம், தீவிரமான கருத்துக்கள்/செயல்களால் நாட்டில் உணர்வு ரீதியான பிளவை ஏற்படுத்தக் கூடியவர் (Poloariser) திருமணம், குடும்பம் போன்ற விஷயங்கள் மூடுமந்திரமாக இருக்கும் ரகசியம்.

வாய்ப்புகள் : வர்த்தகம், தொழில், ஊடகம், இந்துத்துவா அமைப்புகள் என்று பல்வேறு தரப்பிலும் இருக்கும் ஏகோபித்த ஆதரவு. சமூக வலைத்தளங்களையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதால் இளைஞர்கள் மத்தியில் உள்ள பிரபலம், கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவு, விலையேற்றம், பெருகியுள்ள ஊழல்கள், பரவிவரும் வன்முறை, அயலுறவுகளில் நடந்த சோதப்பல்கள் ஆகியவை காரணமாக ஆளும் கட்சி மேல் ஏற்பட்டுள்ள அதிருப்தி, அந்நிய முதலீட்டை ஈர்க்கும் சக்தி கொண்டவர் என்பதால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை.

தடைகள்: தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடியவர் என்பதால் கூட்டணியை அனுசரித்துப் போவதில் இருக்கும் சிக்கல்; ஒரு மாநிலத்தை திறமையாக நிர்வகிப்பதைப்போல இந்தியா போன்ற பல்வேறு மொழி, இன, கலாச்சாரம் கொண்ட நாட்டை நிர்வகிக்க முடியுமா என்ற சந்தேகம்,  குஜராத் அன்னிய முதலீட்டைப் பெறுவதில் முன்னணியில் இருந்தாலும் மனித வளர்ச்சிக் குறியீடுகளில் (HDI) மற்ற சில மாநிலங்களைவிட பின்தங்கியே இருப்பதால் நிர்வாகத் திறமை மீது ஏற்பட்டுள்ள சந்தேகம். 2002 குஜராத் கலவரம் எழுப்பியுள்ள கேள்விகள், அச்சம், சர்ச்சைகளுக்குள்ளான ஆர்.எஸ்.எஸ்சின் வெளிப்படையான ஆதரவு.

ராகுல் காந்தி

கல்வித் தகுதி : எம்.பில் (M.Phil)

பலம் :  வலுவான, பிரபலமான குடும்பப் பின்னணி, கட்சியினரின் ஏகோபித்த, ஆதரவு,  நாடாளுமன்ற அனுபவம், காங்கிரசின் புதிய முகம் என்பதால் ஏற்படும் வசீகரம்.

பலவீனம் : இதுவரையில் மத்திய அரசில் எந்தப் பொறுப்பையும் ஏற்று செயல்பட்டது இல்லை. எனவே ராகுலின் செயல்திறன் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. உத்தரப்பிரதேசம், பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் ராகுல் தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் இரண்டு மாநிலங்களிலும் படுதோல்வி அடைந்தது. இவரது குடும்பத்து முன்னோர்களைப்போல இவருக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறதா என்றெழுந்துள்ள கேள்வி.

வாய்ப்புகள்: நாடு முழுவதும் அமைப்பு பலம் கொண்ட கட்சியின் ஆதரவு, மோடிக்கு எதிரான மதச் சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர்களின் வாக்குகள்,  செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தாலும் அடித்தள மக்கள் மீது அக்கறை காட்டி அவர்களை வலுப்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து பேசி வருவதால் ஏற்பட்டுள்ள நன்மதிப்பு, உள்கட்சித் தேர்தல்களை ஜனநாயக முறையில் நடத்தக் காண்பித்த ஆர்வம் தந்துள்ள நம்பிக்கை.

தடைகள்: ஆட்சியின் மீ தேற்பட்டுள்ள அதிருப்தி, எம்.பி.யாக இருந்தாலும் நாடாளுமன்ற விவாதங்களில் பெருமளவில் பங்கேற்காதது, தொழில் கூட்டமைப்பினர் முன் பேசிய போது அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேசாதது, ஊடகங்களின் ஆதரவைப் பெற முயற்சிக்காதது, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பும் வாக்காளர்கள், திருமணம் பற்றிய ரகசியங்கள்.


நரேந்திர மோடி  ஏன் பிரதமர் ஆகவேண்டும்?
பத்ரி சேஷாத்ரி

(1) நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு ஒரு வடிவம் கொடுத்து அவற்றைக் கூர்மையாக மக்கள் முன்பு வைத்தல்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது மகாத்மா காந்தி, இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதைத் தெளிவான குறிக்கோளாக்கி, அதை அடைவதற்கான  செயல்திட்டங்களை வகுத்து, அந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தினார். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய இரண்டாம் கட்டத் தலைவர்களையும் உருவாக்கினார். மக்கள் திரண்டெழுந்து  அவர்பின் சென்றனர். ஆனால் சுதந்தரத்துக்குப்பின் அம்மாதிரியான ஒரு திரண்டெழல் இந்தியாவில் நடைபெறவில்லை.

ஒப்பீட்டில், லீ குவான் யூவின் கீழ் சிங்கப்பூர் என்னும் சிறு நாடும் டெங் சியோபிங் தலைமையில் சீனா என்னும் பெரும் நாடும், பொருளாதார அடிப்படையில் பெரும் பாய்ச்சல் நிகழ்த்தி இந்தியாவை வெகுவாகத் தாண்டிச் சென்றுவிட்டன.

அடுத்தடுத்து வந்த இந்தியத் தலைவர்கள் மக்களைத் திரட்டி, பொருளாதாரத்தை வளர்த்து, ஏழைமையைப் போக்கி, வளமான ஒரு நாட்டைக் கட்டியமைக்க வழி காட்டவில்லை. நரசிம்மராவ் காலத்தில் நிகழ்ந்த பொருளாதாரச் சீர்திருத்தத்தின்போதுகூட, அரசுத் தரப்பிலிருந்து சில மாற்றங்கள் நிகழ்ந்தனவே ஒழிய, மக்களுடன் எவ்வித உரையாடலும் இருக்கவில்லை.

ஆனால் நரேந்திர மோடி பொதுமக்களுடன் பேசி, எம்மாதிரியான அரசு வேண்டும், எம்மாதிரியான பொருளாதாரம் வேண்டும் ஆகியவற்றுக்கு வடிவம் கொடுக்கிறார். அதனை இளைய சமுதாயம் வெகுவாகப் பின்பற்ற விரும்புகிறது. இந்த மனநிலை மாற்றம், இந்தியாவை மேலே செலுத்தும் உந்துசக்தியாக இருக்கும்.

(2) உள்கட்சி ஜனநாயகம்

இதுநாள்வரை இந்தியக் கட்சிகளில் இல்லாத உள்கட்சி ஜனநாயகம் மோடியினால் மீண்டெழுந்துள்ளது. இந்தியக் கட்சிகள் அனைத்தும் குடும்ப நிறுவனங்கள் அல்லது சீனியாரிட்டியை மட்டுமே முரட்டுத்தனமாக முன்வைக்கும் அமைப்புகள்.

பாரதிய ஜனதாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் மட்டும்தான் தலைவர் பதவிகள் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும். பாரதிய ஜனதாவில் கடந்த இரண்டாண்டுகளில் மோடி மேலெழுந்து வந்தது முக்கியமானதொரு வரலாற்று நிகழ்வு. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு தொண்டரின் ஆதரவையும் பெற்று, பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநில முதல்வர்களின் ஆதரவைப் பெற்று, கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்களின் ஆதரவையும் பெற்று, கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக முதலில் நியமனம் பெற்று, அதன்பின் அத்வானி போன்ற மூத்த தலைவர்களின் எதிர்ப்பை லாவகமாகக் கையாண்டு, தற்போது கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்ற இடத்தை மோடி கைப்பற்றியுள்ளார்.

இதற்கு இந்திய அரசியலில் முன்னுதாரணமே கிடையாது.

மோடி, ஆர்.எஸ்.எஸ்ஸால்தான் புகுத்தப்பட்டவர் என்பது நியாயமற்ற கூற்று. ஆர்.எஸ்.எஸ். விரும்பாத ஒருவர் பாஜகவில் எளிதில் பிரதமர் வேட்பாளர் ஆகமுடியாது. ஆனால் அதே நேரம் ஆர்.எஸ்.எஸ்ஸையும் தன்னை ஏற்கும்படி மோடிதான் வலியுறுத்தினார் என்பதைக் கவனிக்க வேண்டும். தங்களுக்கு மிகவும் ஏற்புடைய நிதின் கட்கரி என்பவரை ஆர்.எஸ்.எஸ்ஸால் பாஜக  கட்சித் தலைவராகத் தக்கவைக்க முடியவில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

மோடியின் இந்தச் சாதனை காரணமாக, குறைந்தபட்சம் பாஜகவிலாவது உள்கட்சி ஜனநாயகம் பெருகும் என்பது நம்பிக்கை.

(3) கவர்ச்சி அல்ல; வளர்ச்சிதான் பிரதானம்

இந்திய அரசியலில் பொதுவான அம்சம்,  கவர்ச்சிகரமான கோஷங்களையும் இலவசங்களையும் அள்ளி வீசுவதன் மூலம் ஆட்சியைப் பிடிப்பது. ‘ஏழைமையைஒழிப்போம்’ என்று இந்திரா காந்தி கூறினார். எப்படி ஒழிப்பீர்கள் என்று யாரும் கேட்கவில்லை; ஏன் ஒழிக்கவில்லை என்றும் யாரும் கேட்கவில்லை.

‘அளக்கக்கூடிய வெளிப்பாடு’ என்பது பற்றி நம் அரசியல் கட்சிகள் ஒருபோதும் பேசுவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்குள் அரசின் வருமானத்தை இவ்வளவு பெருக்குவேன்; அரசின் நிதிப் பற்றாக்குறையை இந்த அளவுக்குக் குறைப்பேன்; மக்களின் சராசரி வருமானத்தை இந்த அளவுக்கு அதிகரிப்பேன்; நாட்டின் உற்பத்தியை இத்தனை சதவிகிதம் அதிகரிப்பேன்; உள்நாட்டுத் தொழில்களை ஊக்குவித்து வர்த்தக ஏற்றுமதி-இறக்குமதி வித்தியாசத்தை இந்த அளவுக்குக் குறைப்பேன்; கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை இந்த அளவுக்கு அதிகரிப்பேன் என்று தெளிவான கொள்கைகளை யாருமே முன்வைப்பதில்லை.

நரேந்திர மோடி ஒருவர் மட்டுமே இதுபோன்ற தகவல்களைப் பொதுமக்களிடம் பகிர ஆரம்பித்துள்ளார். இவை அனைத்தும் தெளிவான வகையில் தேர்தல் அறிக்கையில் வரும்போதுதான் ஒரு நாடே ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கிச் செல்ல முற்படும். இல்லாவிட்டால் திக்குத் தெரியாமல் அடர்கானகத்தில் அலைவது போலத்தான் ஆகிவிடும்.

(4) அனைவரும் சமம்

தமிழகமும் இந்தியாவும் பொதுவாகப் பார்த்துள்ள அரசியலில், குறிப்பிட்ட வாக்கு வங்கிகள் குறிவைக்கப்படுகின்றன. அவர்களுக்கு சலுகைகள் தரப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு, அவர்களுடைய வாக்குகள் அனைத்தும் மொத்தமாக வேட்டையாடப்படுகின்றன.

இறுதியாக, கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா அல்லது தரப்பட்ட சலுகையால் உண்மையிலேயே சம்பந்தப்பட்ட சமூகங்களுக்கு நன்மை ஏற்பட்டதா என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆதாயத்தைப் பங்குபோட்டு அதில் அதிகப் பங்கை ஒரு சமூகத்துக்குத் தருவதாகச் சொல்கிறார்களே தவிர, ஒவ்வொருவருக்கும் நியாயமான பங்கு என்ற கருத்து முன்வைக்கப்படுவதே இல்லை. நாங்கள்தான் உங்களுக்கு அதிகம் செய்கிறோம், எனவே நீங்கள் எங்கள் பக்கம்தான் இருக்கவேண்டும் என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. தனக்கு ஒருவர் ஏன் அதிகம் தருவதாக ஆசை காட்டுகிறார் என்று அந்தச் சமூக மக்களும் கேட்பதில்லை. அதிகம் நிஜமாகவே கிடைத்துள்ளதா என்று ஆராய்வதும் இல்லை.

நரேந்திர மோடிதான் இந்திய அரசியலிலேயே முதல் முதலாக, இந்த ஆசை காட்டும் செயலை அறவே விட்டொழித்துள்ளார். அனைவருக்கும் வளர்ச்சி சமமாக வரும் என்று நியாயமான வார்த்தைகளை முன்வைக்கிறார்.

மற்ற எல்லாவற்றையும்விட, இவை காரணமாகவே நரேந்திர மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்."

அறிந்தவர்கள் சொல்கிறார்கள்

கடந்த 2008-ஆம் ஆண்டு முதன்முறையாகவும் அதன்பின் கடந்த ஜூலையில் இரண்டாவது முறையும் குஜராத் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த பத்திரிகையாளர் சந்திரமௌலி: 
நான் நேரில் பார்த்துத் தெரிந்துகொண்டதில் முதன்மையான விஷயம், அரசின் எந்தத் திட்டமானாலும் அதன் பலன் அடிமட்டம் வரை சென்று சேர்வதற்கான எல்லா சாத்தியங்களையும் ஏற்படுத்தி இருப்பது (Efficient delivery) system. பூஜ் பகுதியில்  10 ஆண்டுகளுக்கு முன் பூகம்பம் ஏற்பட்டது. அந்தக் கட்ச் பகுதியில் மட்டும் 12 ஆயிரம் பேருக்குமேல் இறந்து போனார்கள். நூற்றுக்கணக்கான கிராமங்கள் தரைமட்டமாயின, இடிந்த கட்டிடங்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும்மேல். வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள் எல்லாம் தகர்ந்து போயின. இன்று பார்த்தால் அங்கு அந்தப் பூகம்பத்தின் சுவடே தெரியாத அளவிற்கு உள்கட்டமைப்பு உள்ளது. பூகம்பத்தின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்வதற்காக ஒரே ஓர் ஆயுர்வேத மருத்துவமனையை மட்டும் பூகம்பம் பாதித்த நிலையிலேயே விட்டு வைத்திருக்கிறார்கள். இயற்கைப் பேரிடர் மேலாண்மைப் பள்ளி, கல்லூரிகளில் பாடமாக உள்ளது. பூகம்ப  ஆராய்ச்சிக்காக உலகத் தரம் வாய்ந்த நிறுவனம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

குஜராத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள கட்ச் வளைகுடா ஆண்டிற்கு 400 மி.மீ. மட்டுமே மழை பெய்யும் வறட்சியான பகுதி. ஆனால் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் ஆண்டிற்கு 1,500 மி.மீ. மழை பொழிகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வறட்சி பாதிக்கும் பகுதிகளும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகளும் சமமாக குஜராத்தில் உள்ளன. அதிகமாக வெள்ளப் பகுதியில் உள்ள நீரை வறட்சியான பகுதிகளுக்குக் கொண்டு செல்ல கால்வாய்கள், கிளைக் கால்வாய்களை ஏற்படுத்தி எல்லா இடங்களுக்கும் தேவையான நீர் கிடைக்கச் செய்திருக்கிறார்கள். எந்த விஷயத்தையும் பன்முகப் பயன்பாட்டிற்காகச் செய்வது மோடியின் பாணி."

ராகுல் காந்தி ஏன் பிரதமராக வேண்டும்?
பேராசிரியர் க. பழனித்துரை

இந்திய நாடு என்பது எத்தன்மையது என்பதைப் புரிந்துகொண்டால், இந்த நாட்டை வழிநடத்த எப்படிப்பட்ட தலைவர் வேண்டும் என்று நாம் எளிதாக தீர்மானம் செய்துவிடலாம். இந்தியா மொழியால், கலாச்சாரத்தால், இனத்தால், ஜாதியால், மதத்தால், பண்பாட்டால், எல்லை இல்லா வித்தியாசங்களைக் கொண்ட ஒரு நாடு. இதற்கு மேலாக சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிக அளவில் கொண்ட நாடு இந்தியா. இவ்வளவு வேறுபாடுகளையும்
வித்தியாசங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட நாட்டில் மக்களாட்சி செயல்படுவது என்பதே பலருக்கு ஆச்சரியம். ஆகையால்தான், ‘இந்தியப் புதிர்’ என்று இந்தியாவை அழைப்பார்கள் மேற்கத்திய அறிஞர்கள். பிரதமர் பதவிக்கு இந்த வேறுபாடுகள், வித்தியாசங்கள் அனைத்தையும் கடந்து இந்திய நாட்டு ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் சகிப்புத்தன்மையையும் அனைவரையும் அரவணைத்து உள்வாங்கும் மனோபாவமும் கொண்ட ஒரு மனிதர் தேவை.

பரந்துபட்ட இந்தியாவில் மாற்றங்களைக் கொண்டுவர எல்லா நிலைகளிலும் தலைவர்கள் வேண்டும். கிராமப் பஞ்சாயத்திலிருந்து இந்தியக் குடியரசு வரை தலைவர்கள் வேண்டும். எல்லோரும் இணைந்து பணியாற்றித்தான் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். நான் பிரதமரானால் அனைத்தும் மாறி விடும், மாற்றி விடுவேன். ஆகவே, என்னைப் பிரதமராக்குங்கள் என்று கூறுவது மக்களாட்சியில் மக்களை அரசிடமிருந்து வேறுபடுத்தி அரசு சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்குத்தான் பயன்படுமேயன்றி, ஒரு கூட்டுத் தலைமையை உருவாக்கி, அந்தக் கூட்டுத் தலைமையின் செயல்பாட்டில் நிறுவனங்களையும், அமைப்புகளையும் வலுப்படுத்தி மக்களுக்கு சேவை செய்யப் பயன்படாது.

மகாத்மா காந்தி நான் சுதந்திரம் வாங்கித் தருகிறேன், நான் இந்தியாவை மாற்றுகிறேன் என்று, என்றும் கூறியது கிடையாது. ஒரு நாட்டின் தலைவிதியை தலைவன்தான் நிர்ணயிக்க முடியும் என்று ஓர் அரசியல் கட்சித் தலைவர் நம்பினால் அது அவர் மக்கள்மேல் எந்த நம்பிக்கையும் வைக்கவில்லை என்பதைத்தான் காட்டும்.

மக்களாட்சி நடைபெறுகின்ற நாட்டில், நாட்டின் தலைவிதியை அந்த நாட்டு மக்கள்தான் தீர்மானிப்பார்கள். மக்களாட்சியில் மக்கள் மூலமாக மாற்றத்தையடைய நமக்குத் தேவை மக்கள் தலைவர்கள். அவர்கள் மக்களுடன் சேர்ந்து, மக்களுக்கு வழிகாட்டி செயல்படுவதுதான் ஒரு மக்களாட்சி நாட்டில் நடைபெற வேண்டிய பிரதானச் செயல்பாடு.

எந்த ஒரு தலைவருக்கும் ஒரு பார்வை இருக்கும். அந்தப் பார்வை என்பது ஏழைகளிலிருந்து துவங்க வேண்டும். இன்றையச் சூழலில் சந்தையும் தோற்றது, அரசும் தோற்றது என்ற நிலையில் ஏழைகளைக் காப்பதும் அவர்களது வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்வதும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை சட்டத்தின் மூலம் உறுதி செய்வதையும் அவர்களை அதிகாரப்படுத்துவதையும் முன்னிலைப்படுத்தும் ஒரு தலைவர்தான் இன்று நமக்குத் தேவை. மக்களை மதத்திற்குள்ளும், ஜாதிக்குள்ளும் பிரித்தாள்வோர் வளர்ச்சியைக் கொண்டுவர முடியாது.

இந்தியா என்பது ஒரு சாதாரண நாடு அல்ல. தனது செயல்பாடுகளின் வழி, உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு மிகப்பெரிய நாடு. இந்த நாட்டு அரசாங்கத்தின் தலைவர்  என்பவர் சர்வதேச நாடுகளின் நம்பிக்கையைப் பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் உலக நாடுகளின் கண்டனங்களுக்கு ஆளாகாமல் உள்ளவராகவாவது இருக்க வேண்டும். அந்தத் தலைவருக்கு வயதோ, கல்வித் தகுதியோ தலைமையை நிர்ணயிக்காது. இந்த நாட்டில் வாழும் கோடான கோடி ஏழை மக்களுக்கு நம்பிக்கையைத் தரும் உள்ளம் கொண்டவராக இருப்பதே ஒப்பற்ற தகுதியாகும்.

இந்த நாட்டை ஆங்கிலேயரிடமிருந்து விடுவிப்பதற்கு நம் மக்களுக்கு வழிகாட்டி, மக்களுடன் போராடிய தலைவர்களின் அப்போதைய வயதை எண்ணிப் பார்த்தால் யாரும் வயதானவர்கள் கிடையாது, அனைவரும் இளைஞர்களே. ஆகவே வயதோ, கல்வித் தகுதியோ தலைமையை நிர்ணயிக்காது.

இந்திய நாட்டின் பிரதமராக வரக்கூடியவர் மக்களை இணைக்கக்கூடியவராக இருக்க வேண்டுமேயன்றி பிரிக்கக்கூடியவராக இருக்கக்கூடாது. மக்களை வாக்குக்காக வாக்காளராகப் பார்க்கும் தலைவராக இல்லாமல் மக்கள் இந்த நாட்டின் மதிப்புமிகு குடிமக்கள், பொறுப்புள்ளவர்கள் என்று எண்ணிச் செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டின் தலைவராக வருபவருக்கு மிக முக்கியமாக, கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் மற்றவர் கருத்துக்களை மதிக்கும் பக்குவமும் இருக்க வேண்டும். நான் சொல்வதுதான் இறுதியானது, உறுதியானது, முடிவானது, எனக்குத் தெரியும் என்ற மனோபாவம் கொண்டவராக இருக்கும் எந்தத் தலைவராலும் இந்தியாவை முன்னேற வைக்க முடியாது.

மக்களைக் கவர்வதற்காகவும் தன் புகழை வளர்ப்பதற்காகவும் பொதுத்தொடர்பு வியாபார நிறுவனங்கள் மூலம் விளம்பரம் தேடி, பதவியைப் பிடிக்க அலைகின்ற சூழலில் மக்களிடம் வேலை செய்து, மக்களிடம் அன்பையும் நம்பிக்கையையும் பெற்று பதவிகளுக்கு வருவதுதான் சிறந்தது எனக்கூறி, இதற்காக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லும் ஒருவர்தான் நமக்கு இன்று பிரதமராக வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் நான் பிரதமராவது கடினம் என்று பதவி வெறியுடன் அலையும் எவரும் அந்தப் பதவிக்கு வருவதற்குத் தகுதியற்றவர்கள்.

உலகமயமான பொருளாதாரச் சூழல் ஊழலை உலகமயமாக்கும்போது ஊழலை நியாயப்படுத்தாமல் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு ஊழல் நிரூபணமானால் தண்டிக்கப்படல் வேண்டும் என்று சொல்வதுடன் தன் கட்சியைச் சார்ந்த யாரையும் ஊழல் என்று குற்றம் சாற்றப்பட்டுவிட்டால் அவர்கள் வகித்த பதவியைத் தொடர அனுமதிக்கக் கூடாது என்று சொல்லும் துணிச்சலும், அதன்மேல் நடவடிக்கை எடுக்கும் திடமும் வேண்டும்.

மேற்கூறிய அடிப்படைகளையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது ராகுல் காந்திக்கு மேற்சொன்ன அத்தனை தகுதிகளும் இருக்கின்றன. அவர் ஒரு ஜனநாயகவாதியாக, எதார்த்தத்தை ஒப்புக்கொள்பவராக, நான் என்று சொல்லாமல் நாம் என்று சொல்பவராக, உண்மை வெல்லும் என்பதில் நம்பிக்கை கொண்டவராக, மக்களை நினைப்பவராக, பதவி என்பதை செயலிலிருந்து பெறவேண்டுமேயல்லாமல் கம்பெனி விளம்பரத்தின் மூலம் பெறக்கூடாது என்பதில் திண்ணம் உள்ளவராக, உலக அரங்கில் கண்டனங்களைப் பெறாதவராக, ஜாதி, மதம், பிராந்தியம் என்பதைக் கடந்தவராக, தாழ்நிலை உணர்வுக்குத் தீனியிட்டுப் பகைமை அரசியலை வளர்க்காமல் அரசியல் பண்பாடு பேணும் தலைவராகத் தெரிகிறார்."

அறிந்தவர்கள் சொல்கிறார்கள்
தில்லியில் ராகுல் காந்தியின்கீழ் இளைஞர்  காங்கிரசில் பணியாற்றிய ஜோதிமணி:

குஜராத்தின் வளர்ச்சி குறித்து எவ்வளவுதான்  பேசினாலும் அவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட  பிரிவினர் மட்டுமே பயனடைவதாக உள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சியாக இருந்தால்தான் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைய முடியும். அதற்கான தெளிவான பார்வை ராகுல் காந்தியிடம்தான் உள்ளது. உட்கட்சி ஜனநாயகம் இருக்க வேண்டும். தனிநபர் சார்ந்து அரசியல் கட்சிகள் இருக்கக் கூடாது என்பதற்காக உழைப்பவர் ராகுல். மாற்றம் உடனடியாகத் தெரியாது. ஆனால் அவரின் அணுகுமுறை வலுவான அடித்தளத்தை நாட்டிற்கு ஏற்படுத்தித் தரும்". மேலும், ராகுல் அடித்தள மக்களிடம் குறிப்பாக குழந்தைகள், இளைஞர்களிடம் பேசும்போது அவர் முகத்தில் ஆர்வம் ஒளிரும். அவர்கள் முன்னேறினால்தான் இந்தியா முன்னேறும், அவர்கள் முன்னேற வேண்டுமானால் அவர்களுக்கு ஒரு கனவு இருக்க வேண்டும், அந்தக் கனவை நாம் விதைக்க வேண்டும் என்பது அவரது அணுகுமுறை."

பிரபலமான பிரதமர் வேட்பாளர் யார் என்ற கருத்துக்கணிப்பில்

நரேந்திர மோடியை 55 சதவிகிதம் பேரும் ராகுல் காந்தியை 18 சதவிகிதம் பேரும் தேர்வு செய்து உள்ளார்கள். மன்மோகன் சிங்கிற்கு ஆதரவாக 39 சதவிகிதம் பேரும் சுஷ்மா ஸ்வராஜிற்கு 2 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

வீட்டிற்கு வரும் இலவச DVD- Updated!!


 
 
 
 
வீட்டிற்கு வரும் இலவச DVD.. நம்பினால் நம்புங்கள்...
நான் பெற்றவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். பதிவு செய்து இரு வாரங்களில் உலகின் எப்பாகத்திற்கும் வீடு தேடி வரும்... இங்கு நான் குறித்த தளங்களின் முகவரியையும் உள்ளடக்கத்தையும் குறிப்பிடுகிறேன்.. நீங்களும் முயன்று பாருங்கள்.. படங்களை பாருங்கள். இவற்றில் சில புதிதாக இணைத்து உள்ளேன்.


  1.  தமிழ் மென்பொருள் கருவி.
இது தமிழ் நாட்டில் இருந்து இலவசமாக அனுப்பபடுகிறது.  9 வகையான தமிழ் மென்பொருட்கள் அடங்கி இருக்கின்றன ( Tamil Fire fox, Thunderbird, open office etc..)



     2. HEART 
இது ஒரு பயிற்சி இறுவட்டாகும். முதலுதவி சம்பந்தமானது.




    3. இலவச பைபிள் பாடம் 


   4.அணு ஆயுத தடுப்பு சம்பந்தமான விவரண படம் 


    5.உள நலம் சம்பந்தமானது ஆவணப்படம்
இலவசமாக பெற உள் நுழைக

   6. 30000 இலவச புத்தகங்கள் PDF
இலவசமாக பெற உள் நுழைக

  7.மனித உரிமை தொடர்பான ஆவண படம் உயர் தரம் (HD Video)
 இலவசமாக பெற உள் நுழைக

  8.குபுண்டு open source os
  இலவசமாக தபாலில் பெற முடியாது. முன்பு வாரி வழங்கினார்கள்.

  9.The Stories of School.
ஆவுஸ்ரேலியா இல் உள்ள கருப்பின மக்களின் வாழ்க்கை, பாடசாலை பற்றிய விவரண காணொளி.

 இலவசமாக பெற உள் நுழைக


இன்னும் இரு வாரங்களில் உங்கள் அஞ்சல் பெட்டி நிறைய போகிறது, இவை அனைத்தும் சட்ட பூர்வமானவை . பயப்பட தேவை இல்லை.

 இவற்றால் என்ன பயன்? ஒன்றும் இல்லை என்று இல்லை .
  1. HD video பார்க்க ஒரு சந்தர்ப்பம்.
  2. ஆங்கிலம் உச்சரிப்பை ஆங்கிலமாகவே  பழகலாம் 


வந்த பின் இங்கு சொல்லுங்கள்............................................
 
 

மின்னலில் இருந்து செல்போனுக்கு சார்ஜ் – பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை!


மின்னலில் உள்ள சக்தியின் மூலமாக செல்போனில் சார்ஜ் ஏற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


பிரிட்டனிலுள்ள செüத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.



6 - cell lightning. mini


இக்கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான நீல் பால்மர்விடம் இது குறித்து கேட்ட போது,”நோக்கியா நிறுவனமானது இத்தகைய சவாலை எங்களிடம் ஒப்படைக்கும்போது நாங்கள் உற்சாகமானோம். முதலாவது மின்மாற்றியின் மூலமாக மின்னல் சக்தியை ஒத்த 2,00,000 வோல்ட்ஸ் மின்சாரத்தை 300 மில்லி மீட்டர் இடைவெளியில் செலுத்த வேண்டும்.
அந்த சமிக்ஞைகளை இரண்டாவது மின்மாற்றி மூலமாக செல்போனுக்கு சார்ஜ் ஏற்றும் அளவிலான மின்சாரமாக மாற்றினோம்.இதன் மூலமாக இயற்கை சக்திகளை மனித பயன்பாட்டுக்கு கொண்டுவர இயலும் என்று கண்டறியப்பட்டுள்ளது: என்று பால்மர் தெரிவித்தார்.



இதற்கிடையில் இபபோதெல்லாம் எல்லோரது கைகளிலும் செல்போன் தவழ்கிறது. அழகழகான வடிவங்களில், விதவிதமான வசதிகளுடன் செல்போன்கள் கிடைக்கின்றன. அழைப்புகள், முகம் பார்த்து பேசும் வசதி, எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்., விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என ஏராளமான வசதிகள் இருப்பதால் அனைவருக்கும் செல்போன்கள் அத்தியாவசியமாகி விட்டன. அவை நீண்ட காலம் பயன்தர வேண்டுமா?


***


பேட்டரியின் ஆயுளில் கவனம் செலுத்தினால் செல்போன்களும் நீண்டகாலம் உழைக்கும். பேட்டரியின் ஆயுளை காக்க எப்போது பேட்டரி சார்ஜ் தீர்கிறதோ அந்த நேரத்தில் சார்ஜ் செய்யத் தொடங்கினால் போதுமானது. ரெட் சிக்னல் காட்டியபின் அதிக நேரம் கழித்து சார்ஜ் செய்வதையும், நீண்ட நேரம் (விடியவிடிய) சார்ஜ் செய்வதும் கூடாது. இடையில் நிறுத்தி விடாமல் முழுவதும் சார்ஜ் ஏறிய பிறகுதான் உபயோகப்படுத்த வேண்டும்.


***
`

புளூடூத்’ மெனு உள்ள செல்போன்களில் `புளூடூத்` உபயோகித்து முடித்ததும் அதை ஆப் செய்து விட வேண்டும். இது கதிர்வீச்சு முறையில் அருகில் உள்ள செல்போன்களை தொடர்பு கொள்ளும் வசதி என்பதால், அதிக சக்தியை பயன்படுத்திக் கொள்ளும். எனவே தேவையான நேரங்களில் பயன்படுத்திவிட்டு இணைப்பை துண்டிப்பது பேட்டரி சார்ஜை சேமிக்கும். புளூடூத் வழியாக வைரஸ்களும் பரவ வாய்ப்பிருப்பதால் அதை ஆப் செய்து வைத்திருப்பது செல்போனுக்கும் நல்லது.


***


தேவையற்ற சத்தங்களையும், வைப்ரேஷன் அதிர்வையும் எப்போதும் `ஆன்’ செய்து வைத்திருக்க வேண்டாம். உதாரணமாக `கிபோர்டு டோன்’, `ஸ்டார்ட் அப் டோன்’ ஆகியவை மிக அவசியமானவை அல்ல. எனவே இவற்றை குறைவாக பயன்படுத்தலாம். அதேபோல வைப்ரேஷன் அதிர்வு மீட்டிங் நேரத்திலும், சத்தம் நிறைந்த தியேட்டர் போன்ற இடங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டிய வசதி. இதை எப்போதும் `ஆன்’ செய்து வைத்திருப்பது பேட்டரி சார்ஜை வீணாக்கும்.


***


`பவர் சேவர் லைட்’, `பேக் லைட்` ஆகியவற்றை அணைத்து வைத்திருப்பது பேட்டரியின் ஆற்றலை மிச்சப்படுத்தும். `பேக் லைட்’ என்பது கீபோர்டின் பின்புறம் ஒளிரும் லைட் ஆகும். `டோன்’கள் உபயோகத்தில் இருக்கும்போது இதுபோன்ற `லைட்’கள் அவசியமில்லைதான். இரவு நேரத்தில் மட்டும் தேவைப்படுபவர்கள் `ஆன்’ செய்து பயன்படுத்தி பேட்டரியின் ஆயுளை காக்கலாம். `டிஸ்பிளே செட்டிங்ஸ்’-இல் இந்த ஆப்ஷன்கள் இருக்கும்.


***


பயோகப்படுத்தும் ஆப்ஷன்களை மட்டும் எப்போதும் `ஆக்டிவ்’-இல் வைத்திருக்க வேண்டும். எப்போதோ உபயோகிக்கும் ஆப்சன்களையும், தேவையில்லாத ஆப்சன்களையும், `ஆப்’ செய்து வைத்திருப்பது பேட்டரி ஆயுளை நீடிக்கும். இது செல்போனுக்கு மட்டுமல்லாது அனைத்துவிதமான எலக்ட்ரானிக் டிவைஸ்களுக்கும் பொருந்தும்.


***


ம்ப்யூட்டர், செல்போன்களில் உள்ள வேடிக்கை நிறைந்த எலக்ட்ரானிக் விளையாட்டுகள் எல்லோரையும் கவர்ந்த ஒன்று. அதனால்தான் சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும் சிறுவர்களும், இளைஞர்களும் `கேம்ஸ்`களில் மூழ்கி விடுகிறார்கள். நிஜத்தில் விளையாடுவது எப்படி உடலில் அதிகப்படியான கலோரிகளை எரிக்குமோ, அதுபோலவே செல்போனில் விளையாடுவது அதிக அளவில் பேட்டரி சார்ஜை காலியாக்கி விடும். பேட்டரி நலன் கருதினால் குறைவாக விளையாடுங்கள்.


***


தேவையற்ற ஆப்ஷன்களை எப்படி `ஆன்’ செய்து வைக்கக்கூடாதோ, அதுபோலவே பயன்படுத்தாத நேரங்களில் செல்போன்களையும் `ஆன்’ செய்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய பேர் செல்போன்களை அணைத்து வைப்பதே கிடையாது. அவசர உதவி எண்கள் போல எல்லா நேரத்திலும் ஆனிலேயே இருக்கிறது. இதுவும் பேட்டரி சார்ஜை வீணாக்கும் செயல் தான். குறைந்தபட்சம் தூங்கும் நேரத்திலாவது அணைத்து வைக்கலாமே!


***


வர்ச்சிகரமாக தோன்றுவதற்காக ஸ்கிரீன் சேவர், மூவிங் வால்பேப்பர் ஆகியவற்றை பயன்படுத்துவதை பலரும் விரும்புகிறார்கள். இவை அதிகமாக சார்ஜ் உறிஞ்சுபவை. சாதாரண படங்களை வால்பேப்பருக்கு பயன்படுத்துவதன் மூலம் அதிக சார்ஜை மிச்சப்படுத்தலாம். அதேபோல `டவர்’ குறைவாக உள்ள இடங்களில் போன்களை உபயோகித்தால் நிறைய பேட்டரி ஆற்றல் வீணாகும். அப்போது `ஆப்’ செய்து வைக்கலாம்.


***


நீண்ட நேரம் நிலைத்து நிற்கக்கூடிய பேட்டரிகள் கொண்ட நவீன செல்போன்கள் நிறையவே கிடைக்கின்றன. எளிதாக சார்ஜ் செய்யும் வசதிகளுடைய போன்களும், பயன்படுத்தாத, தேவையற்ற ஆப்ஷன்களை தானாக ஆப் செய்துகொள்ளும் நவீன மொபைல்களும் கூட விற்பனைக்கு கிடைக்கின்றன. எனவே விலை குறைவாக இருக்கிறது என்று எண்ணி தரமற்ற செல்போன், பேட்டரிகளை வாங்கி விட்டு அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்.


Now, Nokia lays Frankenstein to rest, says charge a cell phone via lightning

************************************* 


Thunder power! In a Frankensteinian breakthrough, powered by beleguered Nokia, scientists have for the first time charged a cell phone using lightning bolt.Famous English author Mary Shelley in her gothic novel ‘Frankenstein’ used lightning to breathe life into the Frankenstein monster, some 200 years ago.

பேஸ்புக் மூலம் தன் பட விநியோகத்தை விரிவுபடுத்தும் சேரன்!


இப்போதெல்லாம் பேஸ்புக் மூலம் எதையும் செய்யலாம் என்றாகி விட்டது. அந்த வகையில் புதிய சினிமா தயாரிபாவ்ர்கள் பலரும் தங்கள் பட டைட்டிலில் ஒரு பேஜ் ஆரம்பித்து பப்ளிசிட்டி பண்ணுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சேரன் தன சொந்த படமான் ‘ ஜேகே’திரைப்படத்தை பேஸ்புக் உதவியுடன் உலகின் பல நாடுகளில் விநியோகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்

.
6 - JK-Enum-Nanbanin-Vaazhkai.j


இது குறித்து சேரன் தன பேஸ்புக் பக்கத்தில்,


ஜே.கே படத்தின் வெளிநாடுகளில் வெளியிடும் முயற்சியில் இருக்கிறேன்.. தமிழர்களும் தமிழ் உறவுகளும் உலகம் முழுக்க பரவி கிடக்கிறது… எங்கெல்லாம் திரையிட முடியும் என்றும் யார் யார் இதற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என்றும் விவரங்கள் சேகரிக்கிறேன்… 


தாங்கள் வாழும் நாடுகளில் இடங்களில் என்னுடைய படத்தை திரையிட விருப்பமுள்ள நண்பர்கள் எனக்கு தொடர்பு கொள்ளலாம்…

 இது வியாபாரமே… அதற்கான தொகையையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்… 


சில நாடுகளில் மட்டுமே இப்போது திரையிடப்படுகிறது…. 


இம்முயற்சியில் புதியவர்களையும் எதிர்பார்க்கிறேன்… 


படம் தீபாவளி கழித்து இரண்டு வாரங்களில் திரைக்கு வரும்…


இதை படிக்கும் நண்பர்கள் மற்றவர்களும் உங்கள் நண்பர்களும் படிக்க இந்த செய்தியை பகிரவும்…… நன்றி…”


 என்று தெரிவித்துள்ளார்.