Showing posts with label சினிமா!. Show all posts
Showing posts with label சினிமா!. Show all posts

Sunday, 5 January 2014

``அப்பா`` ஆன “விக்ரம்``...!



ஷங்கர் இயக்கத்தில் “விக்ரம் “நடித்துள்ள படம் “ஐ”. இந்த படத்துக்காக கடந்த இரண்டு வருடங்களாக கடினமாக உழைத்து வந்த விக்ரம், தற்போதுதான் அந்த மேக்கப்பை கலைத்து விட்டு, புதிய படங்களுக்காக கதை கேட்டு வருகிறார்.

தாண்டவம், ராஜபாட்டை உள்பட சில படங்கள் தோல்வி காரணமாக இப்போது ரொம்பவே உஷாராகி வருகிறார் விக்ரம். அவர் சில நாட்களாக நடித்த “கரிகாலன்” படமும் கிடப்பில் போடப்பட்டதால், இனி அதுபோன்ற பிரச்னைகள் தனக்கு ஏற்படக்கூடாது என்றும் கவனமாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் மற்ற மொழிகளிலும் வெளியான தரமான கதைகளாக இருந்தாலும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கும் விக்ரம், சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடித்த “த்ரிஷ்யம்” படத்தை பார்த்து அசந்து விட்டார். மோகன்லாலின் நடிப்பும், படத்தின் கதையும் அவருக்குள் ஏறபடுத்திய தாக்கம் காரணமாக அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் கமல் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றொரு கருத்தும் கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது விக்ரமே முன்வந்திருப்பதால், அப்படத்தின் தமிழ் ரீமேக்கில் மோகன்லால் வேடத்தில் விக்ரம் நடிப்பதற்கு சாத்தியங்கள் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் அஜித்துடன் மோதும் சத்யராஜ்..!



நக்கல் மன்னன் சத்யராஜ் நடித்துள்ள கலவரம் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

சத்யராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் கலவரம் திரைப்படத்தை எஸ்.டி.ரமேஷ்செல்வம் இயக்கியுள்ளார். ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இக்கதை இருக்குமென்றும் கூறப்படுகிறது. யுனிவர்சல் புரொடக்சன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

பொங்கல் கொண்டாட்டங்களை முன்னிட்டு இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித்தின் முறையே ஜில்லா மற்றும் வீரம் ஆகிய திரைப்படங்கள்
வெளியாகவிருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதும், ஏற்கெனவே இப்படங்களுக்கான முன்பதிவு தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து சத்யராஜின் கலவரம் திரைப்படமும் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பொங்கல் வெளியீடாக இப்படம் பொங்கல் தினமான ஜனவரி 14ல் வெளியாகுமா அல்லது ஜனவரி 10 லேயே வெளியாகுமா என்பது சரியாகத் தெரியவில்லை.

கஹானி இந்தி ரீமேக்கில் நடிக்கும் நயன்தாராவுக்கு விருது கிடைக்கும்: டைரக்டர் சேகர்முல்லா



இந்தியில் வெற்றிகரமாக ஓடிய கஹானி படம் தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

இந்தியில் வித்யாபாலன் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். காணாமல் போன கணவனை தேடும் கர்ப்பிணி பெண் வேடத்தில் அவர் வந்தார். தமிழ், தெலுங்கு பதிப்பில் வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா நடிப்பை பார்த்து வியந்து இப்படத்துக்கு தேர்வு செய்தார்களாம். சேகர்முல்லா இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

இதில் நயன்தாராவும், கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால் படக்குழுவினர் அதை மறுத்தனர். புதிதாக திருமணமான பெண் காணாமல் போன தனது கணவனை தேடி அலைவது போன்று கதையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து டைரக்டர் சேகர்முல்லா கூறும்போது, கஹானி இந்திப் படம் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டு விட்டதால் அந்த படத்தை அப்படியே படமாக்கினால் ரசிகர்களிடம் வரவேற்பு இருக்காது. எனவேதான் கதையில் மாற்றங்கள் செய்துள்ளேன். அனாமிகா படத்தில் நயன்தாரா சிறப்பாக நடித்து இருக்கிறார். அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்றார்.

அனாமிகா படத்தில் பசுபதி, வைபவ் போன்றோரும் நடித்துள்ளனர். விரைவில் ரிலீசாக உள்ளது.

மன்சூர் அலிகானின் அடுத்த ‘அதிரடி’ ஆரம்பம்



சினிமாவில் எதையாவது வித்தியாசமாக செய்வது மன்சூரலிகானின் வாடிக்கை. பூனையை குறுக்கே விடுவது. ராகுகாலத்தில் படபூஜை போடுவது என்பது இவரது முந்தைய செயல்படுகள்.

அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் சார்பில் ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட... என்ற நீளமான பெயர் கொண்ட படத்தை எடுத்தார். வாழ்க ஜனநாயகம் என்ற அரசியல் கிண்டல் படம் எடுத்தார். இவர் எடுத்த படங்கள் பிளாப் ஆனாலும் அடுத்தடுத்து படம் எடுப்பது அவரது தன்னம்பிக்கை.

இன்று காலை ஆர்கேவி ஸ்டூடியோவில் 50 முட்டைகளை விழுங்கி, வயிற்றில் பாறாங்கல்லை உடைத்து, தனது குழந்தைகளுடன் பாட்டுபாடி என பல அதிரடி வேலைகளை செய்து படத்தை துவக்கினார். விழாவுக்கு வந்திருந்தவர்கள் மிரண்டு ஓடாத குறையாக இருந்தது அவரது அதிரடிகள்.

விஜய்க்கு கிடைத்த இணையதள பெருமை..?



ஜில்லா’ வெளியாகப் போகும் உற்சாகத்தில் இருக்கும் விஜய்க்கு, இந்த புத்தாண்டில், அவரின் உற்சாகத்தை, மேலும் அதிகரிக்கும் வகையிலான செய்தி கிடைத்துள்ளது.

 கடந்தாண்டில், இந்தியாவில், இணையதளங்கள் மூலம், அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில், விஜயின் பெயரும் இடம் பிடித்துள்ளது. ஆனாலும், இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எதிலும், விஜய் பங்கேற்கவில்லையாம்.

புத்தாண்டை, முழுக்க முழுக்க, தன் குடும்பத்தினருடன் மட்டுமே செலவிட்டாராம். ‘ஜில்லா’ படம் வெளியாகும் வரை, வேறு எந்த படப் பிடிப்பிலும் பங்கேற்காமல், ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம், விஜய். படம் வெளியான பின், முருகதாஸ் இயக்கத்தில் உருவாகப் போகும் படத்தில், நடிக்கவுள்ளார்.

உதயநிதியின் “நண்பேன்டா“...



உதயநிதி ஸ்டாலின் நண்பேன்டா படத்தின் லோகோவை வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பாளராக இருந்து நடிகராக மாறியுள்ள உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் சந்தானத்துடன் 'நண்பேன்டா' என்ற தனது சொந்தப் படத்தில் இணைகின்றார்.

இயக்குனர் ராஜேஷின் இணை இயக்குனரான ஜெகதீஷ் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.

ராஜேஷ் இயக்கி நடிகர் ஆர்யா நடித்து வெளிவந்த 'பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தில் சந்தானம் பேசி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற 'நண்பேன்டா' என்ற வசனமே இந்தப் படத்தின் தலைப்பாக மாறியுள்ளது.



தற்போது இணையதளத்தில் இந்த லோகோவை வெளியிட்டுள்ள உதயநிதி, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உதயநிதி, சந்தானம் மற்றும் நடிகை காஜல் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் பொறுப்பினையும், பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவையும் ஏற்றுள்ளனர்.

தொடரும் வெற்றிப்பட ஃபார்முலா...



சந்தேகமே வேண்டாம். தெலுங்கு சினிமாதான் ஒரே பாடம். தென்னிந்திய கமர்ஷியல் சினிமாவில் கால் பதிக்க நினைக்கும் அனைவரும் கசடற கற்க வேண்டிய பால பாடங்கள் ஆந்திராவில்தான் தயாராகின்றன.

ஆக்ஷனா... இந்தா பிடி என கொடுக்கிறார்கள். லோ பட்ஜெட் கொத்து பரோட்டாவா... எடுத்துக்கோ என பரிமாறுகிறார்கள். நெகிழ வைக்கும் குடும்பச் சித்திரங்களா... வாங்க வாங்க என அழைக்கிறார்கள். த்ரில்லரா... இந்த பயம் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என அலற வைக்கிறார்கள். மொத்தத்தில் எல்லா ஜானரையும் நீக்கமற கொடுக்கிறார்கள். க்ளாமருக்கான எல்லைக்கோட்டை பிரமாதமாக வரையறுக்கிறார்கள்.

1980களில் தமிழ்ச் சினிமா இப்படித்தான் இருந்தது என்பது கடந்தகால வரலாறானது நமது துர்பாக்கியம்.

இதெல்லாம் இட்டுக்கட்டிய கதைகள் என முஷ்டியை உயர்த்துபவர்கள் ரூம் போட்டு சென்ற ஆண்டு வெற்றிப் பெற்ற தெலுங்குப் படங்களை ஒரு பார்வை பார்த்துவிடுவது நல்லது.

அது வேற வாய்... இது வேற வாய்... என்று நக்கலடிக்க முடியாத அளவுக்கு இந்த ஆண்டும் ரவுண்டு கட்டி அடிக்க சுந்தரத் தெலுங்கு திரையுலகம் தயாராகிவிட்டது. அதை முரசடித்து அறிவிக்கும் விதமாகத்தான் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த நிநொக்கடினே (1) படம் சங்கராந்தியை (பொங்கலை) ஒட்டி வெளியாகிறது. ஆர்யா புகழ் சுகுமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர். இந்தப் படத்துக்காக மகேஷ் பாபு சிக்ஸ் பேக் ஆக மாறியிருப்பது படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. ஒளிப்பதிவு வேறு ரத்னவேலுவா... படம், ஸ்டைலிஷ் ஆக இருக்கும் என்று கூரை மீதேறி வசூல் அம்மன் கூவ ஆரம்பித்துவிட்டார். போதும் போதாததற்கு இந்தப் படத்தை முடித்துவிட்டு இயக்குநர் சீனு வைட்டாலா படத்தில் மகேஷ் பாபு நடிக்கப் போகிறார். தூகுடு மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு இருவரும் இணைகிறார்கள். ஸ்கிரிப்ட் ஒர்க் முடிந்துவிட்டது. அநேகமாக இந்தப் படம் ஆண்டு இறுதியில் வெளியாகும்.

இப்படி மகேஷ் பாபு குறித்து ஆர்ப்பாட்டமாக சொல்லிவிட்டு அவருக்கு சமமாக தெலுங்கு திரையுலகை ஆட்சி செய்யும் பவன் கல்யாண் குறித்து குறிப்பிடாவிட்டால் அலுவலகம் தேடி வந்து அடிப்பார்கள். காரணம், சம பலத்துடன் மோதிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள் இருவரும்தான். இருவரும் கதாநாயகனாக அறிமுகமாகி இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறார்கள். தவிர, கபார் சிங், கேமராமேன் கங்கா தோ ராம்பாபு, அதாரின்டிகி தாரென்டி என தொடர் வெற்றிப் படங்களை கொடுத்துவிட்டு சிம்மாசனத்தில் ஜம்மென்று பவன் கல்யாண் அமர்ந்திருக்கிறார். ஸோ, அதை தக்கவைக்கவும் மகேஷ் பாபுவுக்கு சவால் விடவும் தன் சார்பில் ஒரு படத்தை இந்த ஆண்டும் கொடுக்கிறார். அதுதான் கபார் சிங் 2. நடிப்பதுடன் இந்தப் படத்தை தயாரிப்பதும் பவன்தான்.

இந்தி சினிமாவை புரட்டப் போகிறேன் என்று சென்ற ஆண்டு சூளுரைத்த ராம் சரண், இப்போது பெட்டிப் பாம்பாக அடங்கிவிட்டார். இருப்பதை தக்க வைத்துக் கொண்டால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருப்பவர், சென்ற ஆண்டே தயாராகிவிட்ட எவடு பட வெளியீட்டுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார். ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான பிருந்தாவனம் படத்தை எழுதி, இயக்கிய வம்சி பைடபள்ளிதான் எவடுவை இயக்கியிருக்கிறார். அதனால் எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இதோ வருகிறது கோச்சடையான் கீதம்...

இதோ வருகிறது கோச்சடையான் கீதம்...


கோச்சடையான் படத்தின் இசை பிப்ரவரி 15ம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘கோச்சடையான்' திரைப்படத்தின் ஓடியோ ரிலீஸை ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ம் திகதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட விழாவாக நடத்த ஏற்பாடு நடந்து வந்தது.

குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தின் வேலைகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படுவதால் டிசம்பர் 12 ம் திகதி வெளியாகவிருந்த ஓடியோ வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கோச்சடையான் படத்தின் இசை உரிமையை வாங்கியிருக்கும் சோனி நிறுவனம், பிப்ரவரி 15ம் திகதி இசை வெளியிடப்படும் என்று தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறது.

தற்போது பிப்ரவரியில் இசை வெளியீடு முடிந்து, படத்தை ஏப்ரலில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

நாட்டில் முதன்முறையாக 3டி அனிமேசன் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை கே. எஸ். ரவிக்குமார் ஏற்றுள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 6: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் – சிறப்பு பகிர்வு

 ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் – சிறப்பு பகிர்வு


ஏ.ஆர்.ரஹ்மான், 1966ஜனவரி 6-ல் சென்னையில் பிறந்தார்.இவரின் அப்பா சேகர், பல்வேறு மலையாள, தமிழ்ப் படங்களின் இசைக் குழுவில் பணிபுரிந்து இருக்கிறார். ரொம்பக் குட்டிப் பையனாக இருக்கும்பொழுதே, அப்பாவின் அருகில் உட்கார்ந்து இசைக் கருவிகள் மற்றும் இசை அமைக்கும் விதம் ஆகியவற்றை அறிந்துகொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது அவர் பெயர் திலீப் குமார்.

அப்பா தனியாக இசை அமைத்த முதல் மலையாளப் படம் வெளிவந்த நாளிலே, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். குடும்பத்தைக் காக்க, பள்ளிப் படிப்பை பாதியில் முடித்துக்கொண்டு, முழு நேரம் இசை உலகிற்குள் நுழைந்தார் ரஹ்மான்.

எலெக்ட்ரானிக் பொருட்களின் மீது விருப்பம் அதிகம். கணினி பொறியியல் படிக்க வேண்டும் என்பது இளமைக்கால ஆசை. பள்ளிக் கல்வி இல்லாமல் போனாலும், தனது இசைப் புலமையால்… லண்டன் இசைக்கல்லூரியான டிரினிட்டி கல்லூரியின் ஸ்காலர்ஷிப் பெற்றார்.

ஆரம்ப காலங்களில் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியாத காலங்களில் கார் ஒட்டவும் கற்றுக்கொண்டார். ஒருவேலை இசை கைகொடுக்காவிட்டால் டிரைவர் ஆகிவிடலாம் என்கிற எண்ணம் தான் காரணம்.

“பன்னிரெண்டு வயதில் முதுமையடைந்து விட்டேன் நான் ; இப்பொழுது தான் இளைஞனாகிக் கொண்டிருக்கிறேன் !” என்று பொறுப்புகள் அழுத்திய இளமைக்காலத்தை பற்றி குறிப்பிட்டார்


ஒரு லட்சம் பேர் கொல்கத்தாவில் இவரின் இசை நிகழ்வை காணக்கூடினார்கள். ரங்கீலா படத்தில் இசையமைத்த பொழுது தமிழர்கள் ஹிந்தியில் கோலோச்ச முடியாது என்பதை உடைத்து இவர் பெயர் வந்தாலே கைதட்டி கூத்தாடுகிற மாயத்தை அங்கே செய்தது அவரின் இசை.

இளம் வயதில் ‘சினிமா பாரடைஸோ’ படத்தைப் பார்த்து, அந்தப் படத்தின் இசையைப் போல ஒரே ஒரு படத்திற்காவது இசை அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பி.எம்.டபிள்யு கார்களில் விருப்பம் உண்டு. இசையமைப்பதை தாண்டி வீடியோ கேம்ஸ்களில் ஆர்வம் அதிகம்.

தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கு இசை அமைக்க ஆரம்பித்தார். அப்போதுதான், இயக்குனர் மணிரத்னம் மூலம் ‘ரோஜா’ பட வாய்ப்பு வந்தது. அதற்காகக் கிடைத்த சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அந்த பணத்தை சில மணிநேரங்களில் விளம்பரங்களில் ரஹ்மானால் சம்பாதித்திருக்க முடியும் என்றாலும் அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்.

சின்ன சின்ன ஆசை பாடலை இசையமைத்து அன்னையிடம் போட்டு காண்பித்தார். அவர் கண்ணீர் விட்டு அழுதார் ,”பிடிக்கலையா அம்மா ?” என்று கேட்டார் ரஹ்மான். பிடிக்கலையா அம்மா ?” என்று ரஹ்மான் அதிர்ந்து கேட்க ,”ரொம்ப நல்லா இருக்கு,என்னமோ பண்ணுது இந்த பாட்டு என்னை எல்லாருக்கும் இது பிடிக்கும் பாரு கண்டிப்பா !”என்று சொன்னார் அவரின் அம்மா“காதல் ரோஜாவே பாட்டை அதிகாலை மூன்று மணிக்கு கேட்டுவிட்டு சவுண்ட் இன்ஜினியர் கண்ணீர் விட்டு அழுதது மறக்கவே முடியாத அனுபவம் ” என்றும் பதிவு செய்திருக்கிறார்.



ரோஜா’ படத்துக்கு இந்தியாவின் சிறந்த இசை அமைப்பாளர் விருதை மத்திய அரசு வழங்கியது. அமெரிக்காவின் டைம் பத்திரிகை, கடந்த நூற்றாண்டின் உலகின் தலை சிறந்த 10 இசைக் கோர்வைகளில் ஒன்றாக ‘ரோஜா’வை அறிவித்தது. ‘மெட்ராஸின் மொசார்ட்’ எனவும் பட்டம் சூட்டியது.

‘பம்பாய்’ படத்தின் பாடல் கேசட்டுகள், அப்போதே 120 லட்சம் பிரதிகள் விற்றன. படத்தின் தீம் இசை, மூன்று வெவ்வேறு படங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சாதனை உலகின் வேறு எந்தப் படத்திற்கும் இல்லை.

1997-ல் இந்தியாவின் விடுதலைப் பொன் விழாவுக்காக உலகப் புகழ் பெற்ற சோனி நிறுவனம், ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது. அப்படி உருவானதுதான் ‘வந்தே மாதரம்’ இசை ஆல்பம்.

ரஹ்மானுக்கு பழையதை மறக்கிற பழக்கம் கிடையாது.எவ்வளவோ முன்னேறினாலும் தான் முதலில் உபயோகித்த கீபோர்டை இன்னமும் வைத்து இருக்கிறார் .இன்னமும் தன் பள்ளிக்கால நண்பர்களை சந்திக்கிற பழக்கம் உண்டு.

இளம் வயதில் வறுமையில் வாடிய நினைவுகளின் அடையாளமாக இன்னமும் தானாக நகைகளை அணிய மாட்டார்

ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவதற்கு முன் எப்படி உணர்கிறீர்கள் என கேட்டபொழுது “எனக்கொரு அன்னை இருக்கின்றாள்” என்றார்.அதாவது நான் இந்த விருதை வென்றாலும் அல்லது வெல்ல முடியாமல் போய் விட்டாலும் என் அன்னையின் அன்பு மாறப்போவது இல்லை .அது போதும் எனக்கு என்றார் ரஹ்மான்

‘அடுத்து ஆஸ்கர்தான்’ என 10 வருடங்களுக்கு முன்பே இயக்குனர் சுபாஷ் காய் சொன்னார். பிறகு, உலக அளவில் பம்பாய் ட்ரீம்ஸ் எனும் இசை நிகழ்ச்சி, மைக்கேல் ஜாக்சனோடு இணைந்து, ‘மைக்கேல் ஜாக்சன் அண்ட் ஃப்ரெண்ட்ஸ்’, சீன மற்றும் பிரிட்டிஷ் படங்களுக்கு இசை எனப் பல வாய்ப்புகளை வெற்றிகளாக மாற்றினார். அப்படி வந்ததுதான், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’. ஒரே ஒரு மின் அஞ்சலில் ரஹ்மானை புக் செய்தார், இயக்குனர் டோனி பாயல். ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்கு ஆஸ்கர்கள் குவிய, ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ எனப் பணிவோடு ஆஸ்கர் மேடையில் அன்னைத் தமிழில் பேசினார்.

அமைதி மற்றும் தனிமை விரும்பி. அமைதி ஆழ்மனதின் குரலை இன்னும் தெளிவாக கேட்க வைக்கிறது ; எரிச்சல்படுத்தும் சத்தம் உண்டு செய்யும் பலர் இருக்கும் உலகில் அமைதி தான் ஒரே இன்பம் என்பது ரஹ்மானின் எண்ணம்
‘வெறுப்புக்குப் பதிலாக நான் அன்பு வழியைத் தேர்ந்து எடுத்தேன்’ என்பார். எல்லோரையும் அன்பு செய்யுங்கள் எனும் சூஃபி தத்துவத்தில் ஈடுபாடுகொண்டவர். உலக அமைதிக்காக ‘வி ஆர் தி வேர்ல்டு’ எனும் இசைப் பாடலை மைக்கேல் ஜாக்சன் இசை அமைக்கச் சொன்னார். அந்தப் பாடலைக் கேட்பதற்குள், அவர் மரணமடைந்தது சோகமான நிகழ்வு.

ரஹ்மான் நன்றாக மிமிக்ரி செய்வார், வைரமுத்து போல மிமிக்ரி செய்வதில் விருப்பம் அதிகம். பெரும்பாலும் இரவு நேரங்களில் இசை அமைப்பார். வீட்டில் பிள்ளைகள் தூங்கும் வரை அவர்களோடு இருந்துவிட்டு, பிறகு இசை அமைக்கப்போகிற ஸ்வீட் அப்பா. குழந்தைகள் மீது பெரிய அன்பு. ஒரு சுவாரசியமான செய்தி. இவருக்கும் மகன் அமீனுக்கும் ஒரே தேதியில்தான்
பிறந்த நாள்.

ரஹ்மான் லதா மங்கேஷ்கரின் பெரிய விசிறி. “லதாஜி என்னுடைய இசையமைப்பில் பாடினால் கேட்டுக்கொண்டே இருப்பேன் அது என்னுடைய இசை என்பதற்காக இல்லை ! அவர் பாடியிருக்கிறார் என்பதால் அதில் மூழ்கிப்போவேன்” என்று சொன்னார் இசையை… ஏழை மற்றும் திறமைசாலி மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு, பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இசைப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். ”இந்தப் பள்ளியில்தான் என் கனவுகள் உள்ளன. இங்கே இருந்து சிறந்த பல இளைஞர்கள் வரவேண்டும் என்பதே என் ஆசை” என்பார்.

வெற்றியை தலைக்கு போகவிடமாட்டார். கொஞ்சம் புகழுடைய சாதாரண ,மனிதன் நான் என்பார். ஈகோ என்பதை ‘edging god out !’ என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.வெற்றி மட்டுமே படைப்புத்திறனுக்கு காரணமில்லை. இசையின் ஒருமுகம் மற்றும் அதன் மீதான காதல் தான் என்னை செலுத்துகிறது. இறைவனின் எல்லையற்ற கருணையும் நான் இயங்க முக்கிய காரணம் !” என்பது ரஹ்மானின் வாக்குமூலம்...

ஐ திரைப்படத்தின் கதை இதுதானா..?




அந்நியன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மறுபடியும் ஷங்கர், விக்ரம் இணையும் திரைப்படமாதலால் ‘ஐ’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இயக்குனர் ஷங்கர் ‘ஐ’ திரைப்படத்தைப் பற்றிய எவ்வித தகவல்களையும் வெளியிடாமல் படப்பிடிப்பு நடத்தியதால் ’ஐ’ திரைப்படத்தின் கதை என்று பல கதைகள் பேசப்பட்டன. ஆனால் தற்போதோ ஐ திரைப்படத்தின் கதை இதுதான் என்று அடித்து சொல்கிறது கோடம்பாக்கம். விஷ இரசாயணங்களால் பாதிக்கப்பட்ட 5 நபர்களின் கதை தான் ஐ திரைப்படமாம்.

ஐ திரைப்படத்திற்காக விக்ரம் பல்வேறு கெட்-அப்புகளில் தன்னை மாற்றிக்கொண்டிருந்த படங்களைப் பார்த்த ரசிகர்கள், ஐந்து கதாபாத்திரத்திலும் விக்ரமே நடிக்கிறாரா? அல்லது ஒரே கதாபாத்திரத்திற்கு மாறுபட்ட தோற்றமா? இது தான் ஐ திரைப்படத்தின் கதையா? என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.

வீரத்தை பின்தள்ளிய ஜில்லா..!



தலைவா தடுமாறியதால் ஜில்லாவை விஜய்யும் அவரது இரசிகர்களும் ரொம்பவே எதிர்பார்க்கிறார்கள்.

முந்தைய படம் எதிர்கொண்ட எந்த சிலுவையையும் ஜில்லா சுமக்கக் கூடாது என்பதற்காக அடக்கியே வாசித்தார் விஜய். அப்படியும் பேனர் கட்டக் கூடாது கட்அவுட் வைக்கக் கூடாது என பல்முனை தாக்குதல்கள்.

வீரம் படத்தின் இரண்டு டீஸர்கள் வெளிவந்த பிறகே ஜில்லாவின் ட்ரெய்லரை வெளியிட்டார்கள். காத்திருந்து கண்கள் பூத்திருந்தவர்களுக்கு கூலிங்கிளாஸ் மாட்டியதுபோல் கரைகடந்த உற்சாகம். இதுவரை 10.7 இலட்ங்களுக்கும் மேல் யூ டியூபில் ஹிட்கள் அள்ளியிருக்கிறது ஜில்லா டீஸர்.

ஏற்கனவே இரண்டு டீஸர்கள் வெளிவந்துவிட்டதால் வீரத்துக்கு ஜில்லாவைவிட குறைவான ஹிட்கள். ஜில்லாவில் மோகன்லாலும் இருப்பதால் மலையாளிகளும் ஜில்லா டீஸரை ஆர்வமோடு பார்த்து வருகிறார்கள்.

Saturday, 4 January 2014

‘ஒன்பதுல குரு’ இயக்குனருடன் விஜய்..?




‘ஒன்பதுல குரு’ இயக்குனர் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய்.

ஜில்லா படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாசின் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்,

அதனைத் தொடர்ந்து பி.டி செல்வக்குமார் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் நடிகர் விஜயின் பிஆர்ஓவாக இருந்தவர். ஒன்பதில் குரு படம் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்த அவர் அடுத்து தயாரிப்பாளராவும் அவதாரம் எடுக்கிறார்.

எனினும், படத்திற்கான தலைப்பு, நடிகர்கள் மற்றும் மற்ற விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்த படத்தை பி.டி.செல்வகுமாருடன் சேர்ந்து தமீன் என்பவரும் தயாரிக்கிறார்.

விஸ்வரூபம் 2: கமல் ஒப்பன் டாக்!



விஸ்வரூபம் 2 முதல் பாகத்தை மிஞ்சும் என்று கூறியுள்ளார் உலகநாயகன்.

கமலின் விஸ்வரூபம் படத்தின் வெற்றியும், அந்தப்படம் இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கமும் மிகப்பெரிது. அதனால்தான் சூட்டோடு சூடாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் கமல்.

இந்தப்படத்திற்கு முதல் பாகத்தைவிட எதிர்பார்ப்பு இருமடங்காக இருக்கிறது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் பேஸ்புக் நண்பர்களுக்காக தான் பேசிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்.

அதில், புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியதுடன் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் முதல் பாகத்தைவிட மிக அற்புதமாக வந்திருக்கிறது. மேலும் திகதி இன்னதென்று குறிப்பிட முடியவில்லையே தவிர விரைவில் ‘விஸ்வரூபம்-2’ வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒன்றரை நிமிட காணொளியில் கமல் பேச்சுடன் விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

கடவுள் வேடத்தை விக்ரம் ஏற்பாரா?





டோலிவுட் நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் முக்கிய வேடம் ஏற்க விக்ரமிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது. தெலுங்கில் சோலோ ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருந்தார் வெங்கடேஷ். மகேஷ்பாபு, ராம் சரண் தேஜா போன்ற இளம் ஹீரோக்களின் மவுசால் அவருக்கு வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் சீதம்மா வாகிட்லோ சிறுமல்லே சிட்டு என்ற படத்தில் மகேஷ்பாபுவுக்கு அண்ணனாக நடித்தார். மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சமந்தா நடித்தார். ஆனால் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் மறுத்துவிட்டனர். கடைசியில் அங்காடி தெரு அஞ்சலி ஜோடியாக நடித்தார். இப்படம் ஹிட்டானது.

இதைத் தொடர்ந்து மீண்டும் சோலோ ஹீரோவாக ஷேடோ, மசாலா என 2 படங்களில் வெங்கடேஷ் நடித்தார். அப்படங்கள் தோல்வி அடைந்தது. தற்போது இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஓ மை காட் என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார் வெங்கடேஷ். இப்படத்தில் தனது நெருங்கிய நண்பரான விக்ரமை நடிக்க கேட்டிருக்கிறார் வெங¢கடேஷ். பாலிவுட்டில் ஹிட்டான ஓ மை காட் படத்தில் அக்ஷய் குமார் கிருஷ்ணர் வேடம் ஏற்று நடித்திருந்தார். அதேபோல் கடவுள் வேடத்தில் விக்ரமை நடிக்க கேட்டிருக்கிறார்.

அவர் கால்ஷீட் தந்தால் இப்படத்தை தமிழ், தெலுங்கு இருமொழியிலும் தயாரிக்க உள்ளார். இந்தியில் பரேஷ் ராவல் நடித்த வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். இதே படத்தைதான் தமிழில் ரஜினி நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா இயக்க இருந்தார். ரஜினி மறுத்ததால் ஐஸ்வர்யா இப்படத்தை கைவிட்டார்.

பாட்ஷா 2ம் பாகத்தில் ரஜினி நடிப்பாரா..?




பாட்ஷா 2ம் பாகத்தில் ரஜினியை நடிக்க கேட்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. அதற்காக பரபரப்பான ஸ்கிரிப்ட் ரெடியாகிறது. ரஜினி நடித்து சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது பாட்ஷா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இப்படம் அந்த காலகட்டத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

 ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற சூழலையும் ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அந்த பேச்சு அடங்கிப்போனது. ஆனாலும் பாட்ஷா படம் ரசிகர்கள் மனதில் இன்னும் பரபரப்பாக பேசப்படும் படமாகவே இடம்பிடித்திருக்கிறது. இந்நிலையில் பாட்ஷாவின் 2ம் பாகத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என்று கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.

சமீபத்தில் ரஜினியை சந்தித்த சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷா 2ம் பாகம் படத்தை உருவாக்குவதுபற்றி ஆலோசித்தார். ஆனால் அதற்கு ரஜினி சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாட்ஷா 2, உருவானால் அது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிடும். அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப படம் அமையாமல்போனால் பாட்ஷா முதல் பாகத்திற்குள்ள பாப்புலாரிட்டியும் குறைந்துவிடும். இதுபற்றி யோசித்துவிட்டு சொல்வதாக ரஜினி கூறியதாக தெரிகிறது. ரஜினியின் பதில் எதுவாக இருந்தாலும் இப்போதைக்கு ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் சுரேஷ்கிருஷ்ணா.

ஏற்கனவே சந்திரமுகி படத்தின் 2ம் பாகத்தை உருவாக்குவதற்கான ஸ்கிரிப்ட்டை இயக்குனர் பி.வாசு ரெடியாக வைத்திருக்கிறார். ஆனால் அதில் நடிப்பது பற்றியும் ரஜினி இதுவரை முடிவு எடுக்கவில்லை. ரஜினி நடித்தால் தான் சந்திரமுகி 2ம் பாகம் இயக்குவேன் என்று வாசுவும் உறுதியாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவை அலைய விடும் ஹன்சிகா..!






காதல் வந்து விட்டாலே எந்நேரமும் தங்களது ஜோடிகளைப்பற்றிய சிந்தனைதான் காதலிப்பவர்களுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படித்தான் நயன்தாராவை காதலிக்கும்போதும் இருந்தார் சிம்பு. அவர் எந்த ஸ்பாட்டில் நடித்துக்கொண்டிருந்தாலும் அழையா விருந்தாளியாக திடீர் திடீரென்று ஆஜராகி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார். அதோடு, அவர் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்று விட்டாலும், பின்னாடியே தானும் பறந்து விடுவார்.

அப்படிப்பட்ட சிம்பு இப்போது இரண்டாம் கட்டமாக ஹன்சிகா மீது காதல் தொடுத்திருக்கிறார். இந்தமுறையும் அவரது காதல் ரொம்ப உறுதியாக இருக்கிறது. அதனால் முதல் காதலுக்கு எந்த குறைவும் இல்லாமல் இந்த முறையும் ஹன்சிகாவை ஒரு நாளைக்கு ஒரு தடவை பார்க்கா விட்டாலும் துடித்துப்போகிறாராம்.

ஆனால், அவரது காதலின் வேகத்தை தெரிந்து கொள்ளாத ஹன்சிகாவோ, அடிக்கடி அவருக்கு டேக்கா கொடுத்து வருகிறாராம். உள்ளூரில் படப்படிப்பில் இருக்கும்போதும் அவர் ஸ்பாட்டுக்கு வந்து தொந்தரவு செய்வார் என்று போனையே சுவிட்ச் ஆப் செய்து விடுகிறாராம். அதேபோல் அவுட்டோர் செல்லும்போது சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப்பாகி விடுகிறாராம்.

இதனால், காதல் தேவதையை பார்க்க வேண்டும் என்று மனதுக்கு தோன்றி விட்டால், மேற்படி பட நிறுவனத்தை அணுகி விசாரித்துக்கொண்டு அவுட்டோருக்கு சென்று அம்மணியை ஆசைதீர பார்த்து ரசிக்கிறாராம் சிம்பு. இப்படி வந்த இடத்தைகூட தனக்கு சொல்லாமல் டீலில் விடுகிறாரே ஹன்சிகா என்ற கோபம் கொஞ்சம்கூட அவருக்கு வரவில்லையாம்.

அஜித் வழியில் விஜயசேதுபதி..!



தமிழ்சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் விஜயசேதுபதி வளர்ந்துவிட்ட நடிகர்.  நான்கு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து திரையுலகில் தனக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்குமென்றோ, ரசிகர்களின் பேராதரவு கிடைக்குமென்றோ விஜயசேதுபதி எதிர்பார்க்கவில்லை.

ரசிகர்களின் ஆதரவு பற்றி சூதுகவ்வும் திரைப்படம் ரிலீஸான போது விஜயசேதுபதி “ நான் யாருக்கும் தெரியாம லாஸ்ட் சீட்ல உட்கார்ந்து படம் பாத்துகிட்டிருந்தேன். ஸ்கிரீன்ல நான் வந்த அந்த மொக்க எண்ட்ரிக்கு எல்லாரும் கை தட்டுனத பாத்து அப்படியே ஷாக் ஆகிட்டேன்” என்று கூறியிருந்தார்.

இவ்வளவு பெரிய ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா! விஜய சேதுபதியின் ரசிகர்கள் பலரும் ஒன்றுசேர்ந்து ஆங்காங்கு விஜயசேதுபதிக்கு ரசிகர்மன்றங்களை திறந்துவிட்டனர்.

இதையறிந்த விஜயசேதுபதி “ரசிகர்மன்றம் வைத்து வீணாக்கும் நேரத்தை வேறு ஏதாவது உபயோகமான செயலில் செலவழிக்கலாம். இதுபோன்ற செயல்களை நான் ஒருபோதும் ஊக்குவிக்கமாட்டேன்” என்று கூறிவிட்டாராம். 

இருக்கிற பணத்தையெல்லாம் செலவு செய்து தனக்காக தானே ரசிகர் மன்றங்கள் வைத்துக்கொள்ளும் தற்போதைய சூழ்நிலையில், ரசிகர்களாக விருப்பப்பட்டு அமைக்கும் ரசிகர்மன்றங்களை வேண்டாம் என்று விஜயசேதுபதி புறக்கணித்தது அவரது மதிப்பை ரசிகர்களிடையே உயர்த்துகிறதே தவிர துளியும் குறைக்கவில்லை.

டைரக்டர்களை நேர்முகத்தேர்வு செய்யும் சிவகார்த்திகேயன்..!



தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோக்களில் சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் விஜயசேதுபதி தன்னிடம் கதை சொல்ல வருபவர்கள் படங்களில் பணியாற்றிய அனுபவமே இல்லாதவராக இருந்து, குறும் படம் இயக்கியவர் என்றால் நம்பி கால்சீட் கொடுத்து விடுவார். அப்படி அவர் நம்பி நடித்த எந்த படமும் அவரை ஏமாற்றவும இல்லை. அதனால்தான் இப்போது குறும்பட டைரக்டர்களுக்கு கோடம்பாக்கத்தில் வரவேற்பு அதிகரித்திருக்கிறது.

ஆனால், சிவகார்த்திகேயன் அப்படியெல்லாம் எந்த படத்தையும் எடுத்தோம் கவுத்தோம் என்று ஒத்துக்கொள்வதில்லை. ஒருவர் தன்னிடம் கதை சொல்ல முயற்சி எடுக்கிறார் என்றதுமே அவரைப்பற்றிய மொத்த தகவல்களையும் முன்கூட்டியே நேர்முகத்தேர்வு நடத்துகிறார். அப்போது அவர்கள் சொல்லும் பதில்கள் தனக்கு நம்பிக்கை கொடுத்தால் மட்டுமே அடுத்த சிட்டிங்கில் கதை கேட்கிறார்.

இல்லையேல், இன்னும் இரண்டு வருடத்துக்கு கால்சீட் டைரி புல்லாகி விட்டது. அதனால் கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு கதை கேட்போம் என்று நாசுக்காக சொல்லி நழுவிக்கொள்கிறார். இருப்பினும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அவரது அலுவலகத்துக்கு கதைகளுடன் படையெடுககும் இயக்குனர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சூரியின் பெயரில் போலி முகவரி..?



நகைச்சுவை நடிகர் சூரியின் பெயரில் ட்விட்டரில் தொடங்கப்பட்டிருப்பது போலி ஐடி என்று செய்திகள் பரவிவருகின்றன.

பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை நேராகத் தனது ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் சேர்ப்பதற்கு சமீபகாலங்களில் சமூக வலைத்தளங்கள்
பெருமளவில் உதவிபுரிகின்றன. பெரும்பாலான பிரபலங்கள் இச்சமூக வலைத்தளங்களில் இணைந்து தங்களது கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் எவ்வாறு பிரபலங்களுக்குத் தங்களின் கருத்துக்களைப் பகிர உதவுகின்றனவோ அதைப் போலவே அவர்களின் பெயரில் போலி உருவாக்கப்படும் போலி அக்கவுண்ட்களால் பிரச்னைகளாகவும் உருவெடுத்துவருகின்றன.

ட்விட்டர் மற்றும் பேஸ்புக் சமூக ஊடகங்களில் பிரபலங்களின் பெயரில் அனேக போலி ஐடிக்கள் தொடங்கப்படுகின்றன. இதன்மூலம் அதிக பாலோவர்களைப் பெறலாம் என்ற ஆசையே இந்த போலி அக்கவுண்ட் தொடங்குபவர்களின் நோக்கமா இருக்கிறது. அந்த வகையில் நடிகர் சூரியின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள @im_actor_soori என்ற டிவிட்டர் ஐடியும் போலி என்று சமீபமாகத் தெரியவந்துள்ளது. இது குறித்து சூரி விளக்கமளித்தால் மக்கள் ஏமாறமாட்டார்கள்.

ஸ்டார்களைத் துரத்தும் ஹீரோக்கள்..!




புத்தகமே வாசிக்க தெரியாத காலத்திலிருந்து, முகப்புத்தகத்தில் கைகலப்பு நடத்தி சட்டையை கிழித்துக் கொள்ளும் இந்த காலம் வரைக்கும் ரசிகர்களின் உலகம் சினிமாதான்! தமிழகத்தை பொருத்தவரை சினிமாவும் அரசியலும் பின்னி பிணைந்திருந்தாலும், சினிமாவிற்குள் காலகாலமாக ஒரு அரசியல் யுத்தம் நடக்கிறது. அது ஆணானப்பட்ட பாகவதர் காலத்திலிருந்தே துவங்கி, ‘அழகுராஜா’ கார்த்தி காலம் வரைக்கும் தொடர்வதுதான் ஒரு ஆக்‌ஷன் படத்தைவிடவும் விறுவிறுப்பான சமாச்சாரம்.
நாடகத்தில் கிட்டப்பாவின் மார்க்கெட்டை ஷேக் பண்ண ஒரு தியாகராஜ பாகவதர் வருகிறார். சினிமாவில் பாகவதரின் மார்க்கெட்டை ஷேக் பண்ண ஒரு சின்னப்பா வருகிறார். இவர்களை காலி பண்ண ஒரு சிவாஜியும் எம்.ஜி.ஆரும் வருகிறார்கள் என்று எப்போதும் ஒருவித ‘கரண்ட்’ பாய்ச்சலிலேயே இருந்திருக்கிறது நமது சினிமாவுலகமும் அதற்கு முந்தைய நாடக உலகமும்.

அதன் நீட்சியாக கமல், ரஜினி, அஜீத், விஜய் என்று பரபரப்பாகி இதோ- விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் வரைக்கும் ஒரு மவுன யுத்தம் நடந்து கொண்டேயிருக்கிறது கோடம்பாக்கத்தில். (நடுவில் வந்த விஜயகாந்த், மோகன், கார்த்திக், ராமராஜன் போன்றவர்கள் யாராலும் ரஜினி- கமல் இடத்தை பிடிக்கவே முடியவில்லை. அஜீத்-விஜய்யை தவிர. இந்த அஜீத் விஜய்யின் இடத்தை பிடிக்கத்தான் இப்போதிருக்கும் நடிகர்கள் பெரும் பிரயத்தனம் செய்கிறார்கள். சரி, அதுபற்றி பின்னால் பார்ப்போம்) பாகவதரின் ஹரிதாஸ் படம் மூன்று தீபாவளிகளை கடந்து ஓடியதாக கூறுகிறது சினிமா வரலாறு. அவரைத் தங்கத்தட்டில் சாப்பிட வைக்கிற அளவுக்கு பாகவதர் காலத்தை பொற்காலமாக்கினார்கள் ரசிகர்கள். ஒருமுறை நேரு தமிழகத்திற்கு வந்திருந்தார். அவர் போகிற இடங்களில் எல்லாம் நேருவை வரவேற்க திரண்டிருந்தது கூட்டம். பாகவதர் வீட்டை கடக்கும்போது மட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு குழுமியிருக்க, இங்கு மட்டும் ஏன் இத்தனை கூட்டம் என்றாராம் நேரு. அது உங்களை பார்க்க வந்த கூட்டமல்ல, பாகவதரை பார்க்க வந்த கூட்டம் என்றார்களாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். அப்படியென்றால் அவரை காங்கிரசில் சேரச் சொல்லுங்களேன் என்று நேரு கொக்கி போட, காமராஜரே பாகவதரிடம் சென்று காங்கிரசில் சேர அழைத்ததாக கூறுகிறார்கள்.

ரஜினி கமலுக்கு இருந்த அதே ஜாக்கிரதை உணர்வு அப்போதே இருந்திருக்கிறது பாகவதருக்கு. அந்த அழைப்பை அவர் நாசுக்காக மறுத்தும் இருக்கிறார். இவருக்கு போட்டியாக பிற்பாடு வந்த பி.யூ.
சின்னப்பாவையும் காங்கிரஸ் விடவில்லை. கட்சியில சேருங்களேன் என்று அன்பு அழைப்பு விடுக்க, அந்த விஷயத்தில் பாகவதரையே பின்பற்றினாராம் அவரும். பாகவதருக்கும் கிட்டப்பாவுக்குமான போட்டியை இப்போது படித்தாலும் ஒரு துப்பறியும் நாவலை போல விறுவிறுப்பாக இருக்கிறது. பாகவதரின் பவளக்கொடி நாடகம் கொடி கட்டி பறந்த காலத்தில், அப்படியென்ன அந்த நாடகத்தில் இருக்கிறது என்று மாறுவேடத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு போய் ரசித்தாராம் கிட்டப்பா. பாகவதருக்கு முன்பு தமிழ்சினிமாவை ஆண்டு அனுபவித்தவர் அல்லவா?

கிட்டப்பாவின் மனைவிதான் கே.பி.சுந்தராம்பாள். பாகவதர் மீது கிட்டப்பா எந்தளவுக்கு கோபம் கொண்டிருந்தார் என்பதற்கு ஒரு சம்பவமே சாட்சி. அதே பவளக்கொடி நாடகத்தை கணவருக்கு தெரியாமல் பார்த்து ரசித்தார்  கே.பி.சுந்தராம்பாள். இதில் கோபமுற்ற கிட்டப்பா, மனைவி என்றும் பாராமல் அவரை  சுடுசொற்களால் ஏச, வருத்தத்தோடு கிட்டப்பாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் சுந்தராம்பாள். ‘என்னை நடத்தை கெட்டவள் என்று நீங்கள் ஏசியிருக்கிறீர்கள். உங்களுக்கு நரகம்தான் மிஞ்சும்’ என்று அவர் கிட்டத் தட்ட சாபமே கொடுத்திருக்கிறார் அந்த கடிதத்தில். (ஆதாரம்- கே.பி.சுந்தராம்பாள் கடிதங்கள்).

சிறுவயதிலேயே கிட்டப்பா இறந்தாலும், வாழ்நாள் முழுக்க வெள்ளைச் சேலை கட்டி இறந்து போனார் சுந்தராம்பாள். இத்தனைக்கும் இவர் கிட்டப்பாவின் தாலி கட்டாத மனைவி.
பாகவதரின் சிவப்பழகை ஒரு கருப்பழகு வந்து காலி பண்ணிய அதிசயமும் இங்கே நடந்தது. பாகவதர் சிவப்பு, நளினம் என்றால் அவரை காலி பண்ண வந்த பி.யூ.சின்னப்பா கருப்பு, முரடு! குட்டையாக இருந்தாலும், சற்றே தெனாவட்டானவரும் கூட! ‘இவன் ஆம்பிளைடா’ என்கிற பாடி லாங்குவேஜ் அவருக்கு. எந்நேரமும் பீடி வலிக்கும் பழக்கமும் இருந்ததாம். அஞ்சலிதேவி எழுதிய ‘எனது சினிமா காதலர்கள்’ புத்தகத்தில் இவரது பீடி நாற்றம் பற்றி வர்ணித்திருக்கிறார் அவர். அருகில் வந்தாலே அவர் மீது பீடி நாற்றம் அடிக்கும் என்று அஞ்சலிதேவியே குறிப்பிட்டிருந்தாலும், இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அளவில்லாதது.

பாகவதரின் ‘ஹரிதாஸ்’ மூன்று தீபாவளிகள் ஓடியது என்றால் இவரது உத்தமபுத்திரன் படமும் மூன்று தீபாவளிகளை பார்த்தது. அப்படத்தில் இவருக்கு டபுள் ரோல். இவரது படங்கள் வரிசையாக ஓட ஆரம்பித்தது. சொந்த ஊரான புதுக்கோட்டையில் இவர் சொத்துக் களாக வாங்கி குவித்தாராம். இனி புதுக்கோட்டையில் இவருக்கு நிலம் விற்கக் கூடாது என்று அரசே உத்தரவு போடுகிற அளவுக்கு வாங்கி குவித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதற்கப்புறம் எம்.ஜி.ஆர் வந்த காலம் வசன காலம்.

பார்ப்பதற்கு பாகவதர் போல அழகாக இருப்பதால் மட்டுமல்ல, தோற்றத்திலும் அவரைப்போலவே ஹேர் ஸ்டைல் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.  சின்னப்பாவை போலவே அடிப்படையில் சண்டைப்பயிற்சிகள் அத்தனையும் எம்.ஜி.ஆருக்கு அத்துப்படி. பாகவதரை மறந்த ரசிகர்கள், சின்னப்பாவை போலவே வீரமான எம்.ஜி.ஆரை ரசிக்க ஆரம்பித்தார்கள். இவர் நடித்த மலைக்கள்ளன் படத்திற்கு முதன் முறையாக ஜனாதிபதி விருது கிடைத்தது. அந்த படத்தை ஐந்து மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். மலைக்கள்ளன், மதுரை வீரன் என்று மன்னர் கால படங்களில் எம்.ஜி.ஆரின் அழகும், அவரது வாள்வீச்சும், திரண்ட தோள்களும், தித்திக்கும் சிரிப்பும் ரசிகர்களை கொள்ளை கொண்டது. அப்போதுதான் அதுவரை அரச சபையை முன்னிறுத்தி வந்த படங்களில் இருந்து மாறுபட்டு வந்தது பராசக்தி. தமிழ்சினிமாவை புரட்டிப் போட்ட முதல் சமூகப்படம்.

ஒருமுறை சிவாஜி, இனி வாள் சண்டைக்கு வேலையிருக்காது. எம்ஜிஆர் என்ன செய்வாரோ என்று பேசியதாகவும் கூறுகிறார்கள் பழங்கால நிருபர்கள். எம்.ஜி.ஆர் சும்மாயிருப்பாரா? திருடாதே என்கிற முதல் சமூகப்படம் எம்.ஜி.ஆரையும் வாரி அணைத் துக் கொள்ள இருவரும் சமமாக டிராவல் செய்ய ஆரம்பித்தார்கள். பின்னர் காங்கிரசில் சேருகிறார் சிவாஜி. அதற்கப்புறம் இவர்களின் படங்களை கட்சி முத்திரையோடு பார்க்க தயாராகிறார்கள் ரசிகர்கள். எம்.ஜி.ஆரை தி.மு.க தொண்டர்களும், சிவாஜியை காங்சிரஸ் தொண்டர்களும் ஆராதனை செய்ய, அவர்கள் படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் இருவரது  கட்சிக் கொடிகளும் பட்டொளி வீசி பறக்க ஆரம்பிக்கின்றன.

நடுவில் டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் இருவரும் சேர்ந்தே ஒரு படத்தில் நடிக்கிறார்கள். அதுதான் கூண்டுக்கிளி. இப்பவும் இந்த படத்தை தியேட்டர்களில் பார்க்க முடியாது. காரணம், இந்த படத்தை எங்கும் திரையிட வேண்டாம் என்று    சேர்ந்தே முடிவெடுத்தார்களாம் எம்.ஜி.ஆரும் சிவாஜியும். ஏன்? அதுதான் பயங்கரம். இந்த படம் மதுரையில் ஒரு தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தது. வெறிபிடித்த சிவாஜி ரசிகர் ஒருவரை எம்.ஜி.ஆர் ரசிகர் ஒருவர் குத்தி கொலையே செய்துவிட்டார். அப்போது எடுத்த முடிவுதான் இது.  சிவாஜிக்கு பார்த்த பெண்ணை, அவர்தானென்று தெரியாமல் எம்.ஜி.ஆர் திருமணம் செய்து கொள்வார். அவள் நினைவிலேயே சுற்றி திரியும் சிவாஜி பல காலம் கழித்து எம்ஜிஆர் வீட்டுக்கு வரும்போது அவளை பார்த்துவிடுவார். அவள் எம்ஜிஆரின் மனைவி என்றே தெரியாமல் கையை பிடித்து இழுக்க, அது போதாதா ரசிகர்களுக்கு? படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் அடிதடி. ஆனால் ஒன்று. எம்ஜிஆருக்கும்  சிவாஜிக்குமான தனிப்பட்ட செல்வாக்கை உலகத்திற்கு அறிவித்த படம் கூண்டுக்கிளிதான்.

இருவரது ரசிகர்களும் வெட்டு குத்து என்று வெறிபிடித்து திரிந்தாலும், எம்ஜிஆரும் சிவாஜியும் உற்ற நண்பர்களாக இருந்தார்கள். அதற்கு ஆயிரம் உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். சிவாஜி நடித்த சாந்தி என்ற படத்தின் கருத்திற்கு ஆட்சேபணை தெரிவித்த தணிக்கை குழு, அப்படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் தரவில்லையாம். இது குறித்து அப்போதைய முதல்வர் காமராஜரிடமும், தணிக்கை குழுவிடமும் சாந்தியை வெளியிட உதவும்படி கேட்டுக் கொண்டது யார் என்று நினைக்கிறீர்கள்? சிவாஜிக்கு தொழில் போட்டியாளராக இருந்த எம்.ஜிஆர்தான். அப்படியிருந்தது அவர்களின் சினிமாவை தாண்டிய நட்பு.

இவர்களின் சினிமா சகாப்தம் மெல்ல மெல்ல சரியும் நேரத்தில் உள்ளே வந்தவர்கள்தான் கமலும் ரஜினியும். எம்.ஜி.ஆர்- சிவாஜி போல அரசியல் பின்புலத்தை கொண்டிருக்கவில்லை இவர்கள். ரஜினியை போலவே ஒருத்தர் வந்துருக்கார். நடிப்பும் சூட்டிகை என்று பாராட்டப்பட்ட விஜயகாந்த், கடைசிவரைக்கும் போராடியது ரஜினியின் இடத்தை பிடிக்கதான். நடிக்கிற எல்லா படங்களும் ஹிட். கமல் மாதிரியே இருக்கார்ப்பா... என்று கொண்டாடப்பட்ட மைக் மோகன் பிடிக்க நினைத்தது கமலின் இடத்தை. ஆனால் காலம் ஒருவருக்கு செய்த நாற்காலியை இன்னொருவருக்கு கொடுப்பதில்லை.

ஆனாலும் ரஜினியும் கமலும் எப்படி? கமல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தபோது வில்லனாக உள்ளே நுழைந்தவர் ரஜினி. பதினாறு வயதினிலே படத்தில் நடிக்க கமலை தேடிப் போகிறார் பாரதிராஜா. அதில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று பாரதிராஜாவை தேடி வருகிறார் ரஜினி. ‘அப்பல்லாம் ரஜினி எங்க தங்குவாருன்னு கூட எனக்கு தெரியாது. எனக்கு மட்டும் ஒரு ரூம் கொடுத்திருந்தாங்க’ என்கிறார் கமல். ‘நானும் ரஜினியும் நினைத்தாலே இனிக்கும் ஷுட்டிங் நேரத்தில் ஒருவர் முதுகில் மற்றவர் சாய்ந்து கொண்டு உறங்குவோம்’ என்று கமல் சொல்கிற போது, இருவருக்குமான நட்பு எந்தளவுக்கு பரிசுத்தமானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவர்களையும் தொழில் போட்டி போட்டு தாக்கியதை எப்படி இல்லையென்று மறைக்க முடியும்?

நாம சேர்ந்து நடிச்சா ஒரு 100 ரூபாய் நோட்டை ரெண்டா கிழிச்சு கொடுப்பாங்க. அதே தனித்தனியா நடிச்சா, அந்த நோட்டு ரெண்டு பேருக்குமே முழுசா கிடைக்குமே என்று ரஜினிக்கு வியாபார வித்தைசொல்லிக் கொடுத்தார் கமல். காலத்தை தாண்டி சிந்திக்கிற கலைஞனாச்சே ? அவர் நினைத்ததுதான் நடந்தது. அதற்கப்புறம் இருவரும் தனித்தனியாக நடித்த படங்கள் பெரிய வெற்றி பெற்றன. இருவரும் நண்பர்களாக இருந்தாலும், ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள். அதை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டது வியாபாரிகள்தான்.

ஒரு படத்தில் ரஜினியை போலவே தோற்றம் கொண்ட நளினிகாந்த் என்பவரை கமல் நையப் புடைப்பதைப் போல காட்சிகள் வைக்கப்பட்டன. இந்த சதிக்கு ரஜினியும் துணை போனார். இவர் படங்களிலும் கமல் சீண்டப்பட்டார். ஒரு கால கட்டத்தில் கமல் பாணியில் எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் ரஜினியை நடிக்க வைத்தார்கள். அந்த நேரத்தில்தான் தற்போது அமரர் ஆகிவிட்ட அனந்துவின் அட்வைஸ் கை கொடுத் தது ரஜினிக்கு. கமல் பாணியில் ரஜினி நடித்தாலோ, ரஜினி பாணியில் கமல் நடித்தாலோ வெகு விரைவில் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும். இருவரும் தனித்தனி பாதையை தீர்மானித்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்று அவர் அறிவுறுத்த ரஜினியின் பாணி அதற்கப்புறம் முற்றிலும் வேறானது.

எழுபது எண்பதுகளில் வெளிவந்த அமிதாப்பச்சன் படங்களின் ரீமேக்குகள் ரஜினிக்கு கைகொடுத்தன. கதை விஷயத்தில் ரஜினி உள்ளே வருவதேயில்லை. அண்ணாமலை ஹிட்டுக்கு பிறகுதான் அவர் கதைக்குள் நுழைத்து கருத்து சொல்ல ஆரம்பித்ததாக கூறுகிறார்கள். கமல் அப்படியல்ல. படத்தில் எறும்பு ஊர்ந்து போனாலும் அது கமலுக்கு முன்பே தெரிந்தாக வேண்டும். இது இருவருக்குமான வித்தியாசம் என்றாலும், கமலின் படங்களை ரஜினி உன்னிப்பாக கவனிப்பதும், ரஜினியின் படங்களை கமல் உன்னிப்பாக கவனிப்பதும் இன்றளவும் நடந்து வருகிறது.

ஒருமுறை ஒரு மிக்சிங் தியேட்டருக்கு வந்தாராம் கமல். அங்கு ரஜினி நடித்த வேறொரு படத்தின் புகைப்படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்ததாம். அதை நின்று கவனித்த கமல், ‘முன் பக்கம் இன் பண்ணியிருக்கார். பின் பக்கம் ஷர்ட்டை வெளியில் விட்டிருக்கார். இந்த படம் ஹிட்’ என்று கூறிவிட்டு சிரித்தபடியே நகர்ந்தாராம். 

ரஜினி கமல் காலத்தில் அவர்களுக்கு இருந்த சவால்களை விட பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது அஜீத்துக்கும் விஜய்க்கும்.

வேடிக்கை என்னவென்றால் பந்தயத்தில் இப்போதும் பலமான குதிரையாக இருக்கிறார்கள் ரஜினியும் கமலும். சைடில் ஓடி வரும் குட்டி குதிரைகளும் அவ்வப்போது குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் அதையும் சமாளிக்க வேண்டிய நிலைமை இவர்களுக்கு. விஜய்க்கு அவரது அப்பா எஸ்.ஏ.சி. என்கிற படகு எல்லா மழைக்காலங்களிலும் கை கொடுக்கிறது. ஆனால் அஜீத்திற்கு அப்படியல்ல. படகில்லாத நேரத்தில் நீச்சல். கை ஓயும் நேரத்தில் கர்ணம் என்று சுயமான ஓட்டம்தான். இவர்கள் இருவரின் கவனமுமே ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலி மீதுதான். அதற்கான வித்தையை அவரிடமே கேட்டுத் தெளிகிற அளவுக்கு இருக்கிறார்கள் இவர்கள்.

இமயத்தில் என் கொடி பறந்தால் உனக்கென்ன? என்று அஜீத் விஜய்யை நோக்கி சவால் விட்டதும், ஒரு படத்தில் அஜீத்தின் தொப்பையை விஜய் கிண்டலடித்ததும் இறந்த காலமாகிவிட்டது. காலம் தந்த பக்குவமா, அல்லது திடீர் போட்டியாளர்களின் சலசலப்பா, தெரியவில்லை. இருவரும் ஒன்றாகிவிட்டார்கள். நேரம் கிடைக்கும்போது குடும்பத்தோடு செலவிடுகிறார்கள். ஆனால் இவர்களின் ரசிகர்கள்தான் இப்போதும் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் சட்டையை கிழித்துக் கொள்கிறார்கள்.

ரஜினியின் இடத்திற்காக அஜீத்தும் விஜய்யும் போராடிக் கொண்டிருக்க, இவர்களின் இடத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கு பின் வந்த நடிகர்கள். சூர்யாவாகட்டும், விக்ரமாகட்டும், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என்று ஒரு கூட்டமே அஜீத் விஜய்யின் மார்க்கெட்டை தாண்டிவிடுகிற வேகத்தில் ஓட நினைத்தாலும், இந்த பந்தயத்திலிருந்து அஜீத்தும் விஜய்யும் விலகினாலொழிய அது நடக்காது போலிருக்கிறது. ஏனென்றால் ஹீரோ என்பது வேறு. ஸ்டார் என்பது வேறு.

ரஜினி, கமல், அஜீத், விஜய் இவர்கள் மட்டும்தான் ஸ்டார்கள்! துரத்துகிற மீதி அத்தனை பேரும் இந்த நேரம் வரைக்கும் ஹீரோக்கள் மட்டுமே!