Tuesday 10 September 2013

செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்க இந்தியர்கள் 20 ஆயிரம் பேர் விண்ணப்பம்!



செவ்வாய் கிரகத்துக்குச் சென்று, அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக, இந்தியாவைச் சேர்ந்த, 20 ஆயிரம் பேர், விண்ணப்பித்து உள்ளனர்.

செவ்வாய் கிரகத்துக்கு, அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், சில விண்கலங்கள் மூலம் ரோபோக்களை அனுப்பி, பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றன."செவ்வாய் கிரகத்தில், தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதால், அந்தக் கிரகத்தில் உயிர் வாழ முடியும்' என, சில விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர். றஇதற்கிடையே சில நிறுவனங்கள், செவ்வாய் கிரகத்திற்குச் சுற்றுலா அழைத்துச் செல்லவும், அங்கே குடியிருப்புகளை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளன.நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த, "மார்ஸ் ஒன்' என்ற, செவ்வாய் கிரகப் பயணத் திட்ட நிறுவனத்தின் தலைவர், பாஸ் லேன்ஸ்டார்ப், 2023ம் ஆண்டுக்குள், சிவப்பு கிரகத்தில், மக்கள் குடியேற்றத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து, லேன்ஸ்டார்ப் கூறியதாவது:செவ்வாய் கிரகத்துக்கு பயணம் மேற்கொள்வதற்காக, இதுவரை, 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள், ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். அதிகபட்சமாக, 48 ஆயிரம் அமெரிக்கர்களும், அடுத்த படியாக இந்தியர்கள், 20 ஆயிரம் பேரும் விண்ணப்பித்து உள்ளனர்.வரும், 2015ம் ஆண்டிலிருந்து, நான்கு பேர் கொண்ட, 60 குழுக்கள் அமைக்கப்பட்டு, செவ்வாய் கிரகத்தில் தங்குவதற்கான பயிற்சி அளிக்கப்படும். இது முடிய, ஏழு ஆண்டுகள் ஆகும். இதன் மூலம் அவர்கள் விண்வெளியில் பயணிக்கவும், செவ்வாய் கிரகத்தில் உள்ள சீதோஷ்ண நிலைகளை சமாளிக்கவும் முடியும்.இவ்வாறு, லேன்ஸ்டார்ப் கூறினார்.

"செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை நடத்துவதற்குரிய சூழல் உள்ளதா என்பது, இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், பூமியிலிருந்து, மக்களை அங்கு குடியமர்த்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது' என, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

0 comments:

Post a Comment