Tuesday, 1 October 2013

இவர் யார்? உனக்குத் தெரியுமா?


மகாத்மா காந்தி பிறந்த தினம் (அக்.2- 1869)


மகாத்மா காந்தியின் இயற்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. இவர் 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

மோகன்தாஸ் காந்தி 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13-ம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார்.

பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16-வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.

பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18-ம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது.

இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார். இச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி.

தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. அங்குள்ள நாட்டல் மாகாணத்தின் டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார்.

பிறகொரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால்  ரெயில் நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இதுபோன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.

தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பிறகு 1894-ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார். 1906-ம் ஆண்டு ஜோகார்னஸ்பர்க் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார்.

அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.

தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார். 1921-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார். உப்பு சத்தியாகிரக தண்டியாத்திரை (மார்ச் 1930) பிப்ரவரி 1930-ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது.

இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார்.

மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இதுபோல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இதுபோல் நடந்தது; காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

காந்தி- ஜின்னா (காங்கிரஸ்-முஸ்லீம்லீக் பேச்சுவார்த்தை) காந்தியடிகளுடன் முகமது அலி ஜின்னா வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.

1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார். இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.

காந்தி ஜெயந்தி என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஐ குறிக்கும் நாளாகும்.

இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2-ல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜூன் 15, 2007-ல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி இந்நாள் அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 

ஒரே மரத்தில் 250 வகை ஆப்பிள்கள் காய்க்கும் அதிசயம் ஜெர்மனி தோட்டக்காரர் சாதனை!



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper





ஜெர்மனியில் ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்களை காய்க்க செய்யும் வினோத மரத்தை வளர்த்து தோட்டக்காரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.ஜெர்மனியில்  உள்ள வெஸ்ட் சஸ்சக்ஸ் பகுதியில் சித்ஹாம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பவுல் பார்னெட் (வயது 40). இவரது தோட்டத்தில் வினோத மரம் ஒன்றை வளர்த்துள்ளார். அதில் உலகில் உள்ள பல்வேறு வகையான 250 ரக ஆப்பிள்கள் ஒரே மரத்தில் காய்க்கின்றன. இந்த மரம் தற்போது ஜெர்மனியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இதுகுறித்து பவுல் பார்னெட் கூறுகையில், நான் ஆரம்பத்தில் ஒரு நர்சரியில் தோட்டக்காரனாக பணி புரிந்தேன்.



அந்த நர்சரி பல ஏக்கர் பரப்புடைய நிலப்பரப்பில் அமைந்திருக்கும். அதில் ஒரு வரிசையில் சுமார் 90 ஆப்பிள் மரங்கள் நடப்பட்டிருக்கும். அப்போதிருந்தே நான் ஆப்பிள் மரங்களை வளர்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவ்வளவு மரங்களை வளர்ப்பதற்கு ஏற்ற பரந்த நிலபரப்பு என்னிடம் இல்லை. எனவே எனது வீட்டின் தோட்டத்தில் இருக்கும் ஆப்பிள் மரத்தையே பல்வேறு ரகங்களை கொண்ட ஆப்பிளை காய்க்கும் மரமாக வளர்க்க திட்டமிட்டேன். 




கடந்த 20 வருடங்களாக மிகவும் கவனத்தோடு பல்வேறு ரக ஆப்பிள் மரங்களின் ஒட்டு ரகங்களை வைத்து எனது ஆப்பிள் மரத்தை வளர்த்து வருகிறேன். தற்போது 20 அடி உயரம் வளர்ந்துள்ள எனது ஒரே ஆப்பிள் மரத்தில் சமையலுக்கு பயன்படும் அமெரிக்க ஆப்பிள் முதல் 1883ம் ஆண்டு ரகத்தைச் சேர்ந்த வித்திங்டன் பில்பாஸ்கெட், 1908ம் ஆண்டைச் சேர்ந்த எட்டீஸ் மேக்னம் போன்ற பல்வேறு ரகங்களும் எனது மரத்தில் காய்த்து குலுங்குகின்றன என்கிறார் பெருமையுடன்.  இவரது மரத்தில் காய்க்கும் ஆப்பிள்களை பொதுமக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்து வாங்கி சுவைத்து நன்றாக இருப்பதாக பாராட்டுகின்றனர்.



அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1,000ஐ நெருங்கலாம்!





சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருக்கும் கிரகங்களை ஆராய ஆராம்பித்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன, தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1,000ஐ நெருங்கலாம் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கிரகங்களின் எண்ணிக்கை பற்றி சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ தெரியலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுவரை 900க்கும் மேற்பட்ட அன்னிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள கோள்கள் பற்றிய  அட்டவணை கண்டுபிடிப்புகளை ஐந்து முக்கிய தரவுத்தளங்களாக பிரித்து, அதில் 900க்கும் மேற்பட்ட புதிய உலகங்கள் நமது உலகுக்கு வெளியே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றும் அதில் இரண்டு முக்கிய தரவுத்தளங்களின் கணக்குப்படி 986 புதிய உலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.



1992ம் ஆண்டில் முதல் முறையாக பல்சார் அல்லது நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வருவது ஆகிய 2 கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல்சார் கிரகம், பூமியிலிருந்து 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலான தொலைவில் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி அதிகமாக புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. ஏற்கனவே இந்த கெப்ளர் தொலைநோக்கி பூமிக்கு அப்பால் உள்ள 3588 புதிய கிரகத்தில் இருந்து அடையாளம் காட்டியுள்ளது. ஒப்பந்தம் முடிவடைய இன்னும் குறைந்தது 90 சதவீதம் இருக்கும் என்று விஞ்ஞானிகள்  நம்புகின்றனர்.